search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck owners"

    • லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
    • மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1997 முதல் தனியார் மூலம் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் 34 சுங்கசாவடிகளில் கட்டணம் அமல்படுத்தப்பட்ட நிலையில் 2004-2008 கால கட்டத்தில் சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 63 சுங்கசாவடிகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டிற்கு 2 பிரிவுகளாக ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய நாட்களில் கட்டண உயர்வை அமுல்படுத்தி கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    அதன்படி இன்று நள்ளிரவு முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, ஓமலூர், வைகுந்தம், கரூர் மாவட்டத்தில் வேலன் செட்டியூர், மணவாசி, தர்மபுரியில் பாளையம், ஈரோட்டில் விஜயமங்கலம் மற்றும் விக்கிரவாண்டி, கொடைரோடு, பொன்னம்பலப்பட்டி, சமயபுரம், திருப்பராய்த்துறை, மொரட்டாண்டி, புதூர் பாண்டியபுரம், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திருமாந்துறை, வாழவந்தான் கோட்டை, எலியார்பத்தி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    அதன்படி ஓமலூர் சுங்க சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை சென்று வர பழைய கட்டணம் 90-ல் இருந்து 95 ரூபாய், பல முறை சென்று வர 130-ல் இருந்து 145 ரூபாய், மாத கட்டணம் 2 ஆயிரத்து 600-ல் இருந்து 2 ஆயிரத்து 870 ரூபாய், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 155-ல் இருந்து 165 ஆகவும், பல முறை சென்று வர 230-ல் இருந்து 250 ஆகவும், மாத கட்டணம் 4 ஆயிரத்து 520-ல் இருந்து 5020 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

    கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 300-ல் இருந்து 335, பல முறை சென்று வர 480-ல் இருந்து 500, மாத கட்டணம் 9640-ல் இருந்து 10,040 ரூபாய், 2 அச்சு மிக கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 480-ல் இருந்து 540, பல முறை சென்று வர 750-ல் இருந்து 805 மாத கட்டணம் 15ஆயிரத்து 100ல் இருந்து 16 ஆயிரத்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்பட மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலை வாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    இந்த சுங்க கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள், அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுங்க கட்டண உயர்வால் லாரி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் வாடகை உயரும் அபாயம் உள்ளது. வாடகை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சுங்க கட்ட ண உயர்வை குறைக்க வேண்டும் என்பது அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் கூறியதாவது-

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சம் லாரிகள் இயங்கின. தொடர்ந்து டீசல் விலை ஏற்றம், காப்பீட்டு கட்டண உயர்வு, லோடு கிடைக்காமை, ஆன்லைன் அபராதம், போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி உள்பட பல்வேறு காரணங்களால் 1.5 லட்சம் லாரிகள் தற்போது இயங்கவில்லை.

    4.5 லட்சம் லாரிகள் மட்டும் இயங்கி வருகிறது. இதில் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. மற்ற லாரிகள் தமிழகத்திற்குள் இயக்கப்படுகிறது. லாரி தொழில் லோடு கிடைக்காததால் நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சவாடிகள் உள்பட நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லிக்கு செல்ல அதிக பட்சமாக ஒரு லாரிக்கு 1500 ரூபாயும், சேலம் சென்னைக்கு 300 ரூபாயும், கன்னியாகுமரி-சென்னைக்கு 500 ரூபாய் வரையும் சுங்க கட்டணம் உயருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.

    ஏற்கனவே லாரி வாடகை உயர்வால் லோடு கிடைக்காத நிலையில் மேலும் வாடகையை உயர்த்தினால் லாரி தொழில் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் லாரி வாடகையை உயர்த்தும் எண்ணம் இல்லை. எனவே மத்திய அரசு காலாவதியான சுங்கசாவடிகளை நீக்க வேண்டும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வாகனங்களிலும் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்கள் சாலைகளை பராமரிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள் படி கழிப்பறை, ஓய்வறை, வாகன நிறுத்தம் உள்பட எந்த வசதிகளையும் செய்வதில்லை. தமிழகத்ததில் உள்ள 63 சுங்க சாவடிகளில் 1997-ல் ஏற்படுத்தப்பட்ட 14 சுங்க சாவடிகள் அதன் திட்ட மதிப்பீட்டை தாண்டி மக்கள், வாகன உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தி விட்டன.

    இது குறித்து மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் பார்வைக்கு இந்திய மோட்டார் காங்கிரஸ் கொண்டு சென்ற நிலையில் தன்னிறைவு சுங்க சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த போதும் வசூல் வேட்டை தொடர்கிறது. இந்த நிலையில் சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை அமல் படுத்துவது மோட்டார் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தன்னிறைவு எட்டிய சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், கட்டண அதிகரிப்பை ரத்து செய்ய வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது போல டீசல், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், மாநில அரசு டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அப்போது தான் நலிவடைந்துள்ள லாரி தொழிலை கொஞ்சமாவது பாதுகாக்க முடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே லாரிகளுக்கு போதுமான லோடு கிடைக்காத நிலையில் தற்போது சுங்க சாவடி கட்டணம் உயர்வதால் வாடகை கட்டணத்தை உயர்த்த லாரி உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    • நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
    • லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.

    வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.

    இந்நிலையில் லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிகபாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் கமிஷனர்களிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    மேலும் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கின்றனர்.

    இதனை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் லாரி, டிரெய்லர், டேங்கர், மினி லாரி, மணல் லாரி, தண்ணீர் டேங்கர் லாரி உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

    இது அடையாள உண்ணாவிரதப் போரட்டம் தான். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் டாக்டர் சண்முகப்பா ஆலோசனையின் பேரில், காலவரையற்ற லாரி நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளா ளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
    சேலம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்தது. இதனால் அந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் 4.5 லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

    இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 34 ஆயிரம் லாரிகளும் அடங்கும். இதில் பெரும்பாலான லாரிகள் சேலம் லாரி மார்க்கெட் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே போல தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 70 ஆயிரம் மணல் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை.

    வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் துணிகள், இரும்பு கம்பிகள், மஞ்சள், தேங்காய், மரவள்ளி கிழங்கு மாவு, காய்கறிகள், அரிசி, நெல் மூட்டைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாடகை நிர்ணயம் செய்யும் போது டீசல் ஒரு விலையும், பொருட்கள் கொண்டு இறக்கும் போது டீசல் விலை உயர்வும் ஏற்படுவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதோடு 3 மாதங்களுக்கு ஒரு முறை டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 3.25 கோடி முட்டைகள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்படும். முழு அடைப்பு போராட்டத்தில் முட்டை லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளதால் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி உள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரே நாளில் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறி உள்ளார்.
    ×