என் மலர்
நீங்கள் தேடியது "Online fine"
- நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
- லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.
நாமக்கல்:
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.
இந்நிலையில் லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிகபாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் கமிஷனர்களிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கின்றனர்.
இதனை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் லாரி, டிரெய்லர், டேங்கர், மினி லாரி, மணல் லாரி, தண்ணீர் டேங்கர் லாரி உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இது அடையாள உண்ணாவிரதப் போரட்டம் தான். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் டாக்டர் சண்முகப்பா ஆலோசனையின் பேரில், காலவரையற்ற லாரி நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளா ளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
- டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.
சேலம்:
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.
டிரைவர்கள், கிளீனர்கள், பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர்.
இந்தநிலையில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் டிரைவர், கிளீனர் தட்டுப்பாட்டால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து போலீசார் விதி முறைகளை மீறி விதிக்கும் ஆன்லைன் அபாராதத்தால் லாரி தொழில் மேலும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இதனால் விரைவில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறுகையில், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து லாரிகளும் ஆண்டுதோறும் எப்.சி. காட்டி தான் சாலையில் ஓட்டுகிறோம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.
மேலும் லோடு, ஏற்றி இறக்கும் போதும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். இதுதவிர வணிக நிறுவனங்கள் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளுக்கு சில நேரங்களில் வாரத்திற்கு இரு முறை கூட ஒரே லாரிக்கு போக்குவரத்து போலீசார் ஏதாவது காரணம் கூறி ஆன்லைனில் அபராதம் விதித்து வருகிறார்கள். இது சென்னையில் தான் அதிக அளவில் நடக்கிறது.
இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடமும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் லாரிகளில் உள்ள ஒளிரும் பட்டைகள் நல்லபடி இருந்தாலும் அடிக்கடி மாற்றும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.
புதிதாக டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் போது அன்று மாலையே லைசன்ஸ் எடுப்பவரிடம் புதிய லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது லைசன்ஸ் எடுப்பவரின் ஆவணங்களில் உள்ள முகவரிக்கு தான் லைசன்ஸ் செல்கிறது . அதற்கு ஒரு வாரம் ஆகிறது. இதனால் காலவிரயம் ஆகிறது.
லாரிகளை ஒரு வாரம் இதனால் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. எனவே முன்பு போல லைசன்சை உடனடியாக அவர்களிடமே போக்குவரத்து அதிகாரிகள் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை வலியுறுத்தியும் நிறைவேறவில்லை.
இதனால் ஒரு லாரிக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
இனி வரும் காலங்களிலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






