search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tejas Train"

    • குருவாயூர் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது.
    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு குருவாயூர் செல்லும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்.16127) பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22671) பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். திருச்சி-மதுரை இடையிலான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், அன்றைய தினம் தேஜஸ் ரெயில் (எண்.22672) மாலை 5 மணி 5 நிமிடத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்று வருவது தேஜஸ் விரைவு ரெயில்
    • இந்த விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்றுசெல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 26-ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்புக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய மந்திரி அஸ்வின் வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்தார்.

    • தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிறுத்தப்படுமா? என்பதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதில் தெரிவித்தார்.
    • தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

    மதுரை

    மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது திண்டுக்கல், திருச்சி ஆகிய 2 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    இந்த நிலையில் தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். அதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் தேஜஸ் ரெயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • தேஜஸ் ரெயில் ரெயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
    • தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மக்கள் போக்குவரத்துக்கு பஸ் வசதியை விட ரெயில் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் மத்தியில் ரெயில் பயணம் மீது கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலான தேஜஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த ரெயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மதுரைக்கு செல்லும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை செல்லும்.

    இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். 6.30 மணி நேரத்தில் இந்த ரெயில் இலக்கை சென்றடைவதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் ரெயில்வே வாரியம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தேஜஸ் ரெயிலில் 2019 முதல் 2022 ஆண்டு ஏப்ரல் வரை (கொரோனா ஊரடங்கு காலம் தவிர) மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின என்பது உள்பட பல கேள்விகளை கேட்டிருந்தார்.

    அதன்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த விபரத்தில் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் ரெயிலின் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 56 இடங்களும், ஏ.சி. சேர்காரில் 856 இடங்களும் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 22.69 சதவீத இடங்களும், ஏ.சி. சேர்காரில் 41.86 சதவீத இடங்களும் காலியாக இயக்கப்பட்டது.

    2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 29.04 சதவீத இடங்களும், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 42.26 சதவீத இடங்களும், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 50.06 சதவீத இடங்களும், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.76 இடங்களும், ஏப்ரல் மாதத்தில் 5.63 சதவீத இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்துள்ளன.

    அதேபோல் ஏ.சி. சேர்காரில் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 35.05 சதவீத இடங்களும், டிசம்பர் மாதத்தில் 21.71 சதவீத இடங்களும், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 45.87 சதவீத இடங்களும், ஜனவரி மாதத்தில் 39.69 சதவீத இடங்களும், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.07 சதவீத இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்தது.

    மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக இடங்கள் நிரம்பாமல் இருந்துள்ளது. இதன் மூலம் ரெயில்வேக்கு மாதம் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே வருவாய் இழப்பை தவிர்ப்பதோடு தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயிலை நிறுத்த ரெயில்வே வாரியத்துக்கு 2019-2020 காலக்கட்டங்களில் 6 முறை பரிந்துரை கடிதங்களை அதிகாரிகள் அனுப்பினர். அதற்கு ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விவரம் பெற்ற பொறியாளர் தயானந்தகிருஷ்ணன் கூறும்போது, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் சொந்த ஊர் பயணத்திற்கு தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தாம்பரத்தில் தேஜஸ் ரெயில் நிறுத்துவது தொடர்பாக ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ரெயில்வே வாரியம் முடிவு எடுக்கும் என்றார்.

    தேஜாஸ் சொகுசு ரெயிலில் மிக மோசமான பராமரிப்பின் காரணமாக பெட்டியில் துர்நாற்றம் வீசுகிறது என்று தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் கூறினார்.
    சென்னை:

    சென்னை எழும்பூர்-மதுரை இடையே தேஜாஸ் சொகுசு ரெயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயில் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10-30 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது.

    ஏ.சி.சேர்கார், பிசினஸ் கிளாஸ், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு என 3 வகையான கட்டணம் இதில் விதிக்கப்படுகிறது. உணவு, செய்திதாள், டீ, காபி போன்றவை வழங்கப்படுகிறது.

    இந்த சொகுசு ரெயிலில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுவதற்காக கட்டணம் கூடுதலாக விதிக்கப்படுகிறது.

    டி.வி. விளையாட்டு சேனல், விசாலமான இருக்கை, தூய்மை பணி போன்றவற்றிற்காக கட்டணம் அதிகம் செலுத்தியும் இவை எதுவும் முறையாக வழங்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.

    தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த ரெயில் இப்போது மிகவும் மோசமான நிலையில் ஓடுகிறது.

    ரெயில் பெட்டிகளில் டி.வி. ஸ்கிரீன் பெயருக்கு தான் உள்ளது. அது செயல்படவில்லை. அதேபோல் ஒவ்வொரு இருக்கையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள டி.வி. ஸ்கிரீன் எதுவும் இயங்கவில்லை. எல்லாம் காட்சி பொருளாகவே உள்ளது. பயணிகள் இருக்கைக்கு பின்னால் உணவு சாப்பிடக்கூடிய ஸ்டேண்ட் எதுவும் சுத்தம் செய்யப்படுவது இல்லை. உணவு கழிவுகள் அதில் அப்படியே இருப்பதால் பயணிகள் அதில் வைத்து சாப்பிட விரும்பவில்லை.

    இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:-

    தேஜாஸ் ரெயிலில் நான் பயணம் செய்த அனுபவம் மறக்க முடியாது. பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தருவதற்காகத்தான் இந்த ரெயிலில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் மிக மோசமான பராமரிப்பின் காரணமாக பெட்டியில் துர்நாற்றம் வீசுகிறது. உணவு கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் வழியில் கொட்டப்பட்டுள்ளது. பயணிகள் சாப்பிட்ட உணவு பொருட்களின் கழிவுகள் பெட்டியில் அப்படியே கிடக்கிறது.

    பெட்டியில் சிதறி கிடக்கும் உணவு கழிவுகளால் கரப்பான் பூச்சி நடமாடுகிறது.

    சாதாரண பயணிகள் ரெயிலை விட மோசமாக பராமரிக்கப்படுவதால் மக்கள் பயணம் செய்ய தயங்குகிறார்கள்.

    அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும்போது அதற்கான வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்யாதது ஏன்? இதுபோன்ற ரெயில்களில் பயணிகளிடம் இருந்து கருத்து கேட்க வேண்டும். குறை-நிறைகளை பதிவு செய்யும் வசதி இருந்தால் தான் அதனை சரி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    சென்னை- மதுரை இடையே 7 மணி நேரத்தில் பயணம் செய்யும் தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. #TejasTrain #Madurai #Chennai
    சென்னை:

    சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற் சாலையில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    தேஜஸ் ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி. டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளது.

    ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

    இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் இருக்கிறது.

    ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.



    முதலாவதாக தேஜஸ் ரெயில் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. அந்த ரெயில் மும்பை- கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    2-வது தேஜஸ் ரெயில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இது சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படுகிறது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில் மதுரைக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.

    சென்னை- மதுரை இடையே தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

    சராசரியாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தேஜஸ் ரெயில் சென்னை- மதுரை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும்.

    தற்போது வைகை எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்திலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரத்திலும் மதுரை செல்கின்றன.

    தேஜஸ் ரெயிலில் சேர் கார் கட்டணம் ரூ.1,140-ல் இருந்து ரூ.1,200 வரைக்குள் நிர்ணயிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்பு ரெயில் பெட்டி கட்டணம் ரூ.2,135-ல் இருந்து ரூ.2,200 வரை இருக்கும். தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.

    விழுப்புரம், திருச்சி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். #TejasTrain #Madurai #Chennai
    ஏசி, வை-பை, சிசிடிவி, தானியங்கி கதவு, சொகுசு இருக்கை வசதிகளை கொண்ட தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ. பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். #Tejastrain #Chennai #Madurai
    சென்னை:

    சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் சாதாரண ரெயில் பெட்டிகள் தவிர அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசான ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.

    இதற்கு ‘தேஜஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது.

    இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு தேஜஸ் ரெயில் பயணத்துக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து 2-வது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ஐ.சி.எப். ஈடுபட்டது. இந்தப் பணி முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    2-வது ‘தேஜஸ்’ ரெயில் பெட்டிகள் டெல்லியை தலைமையிடமாக கொண்ட வடக்கு ரெயில்வேக்கு கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரெயில்வேயில் சென்னை-மதுரை இடையே கூடுதல் ரெயில்கள் தேவைப்படுவதாலும், இந்த வழித்தடம் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாலும் தேவையை கருத்தில் கொண்டு தற்போது தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ரெயில் ஓடத் தொடங்கும். முதலில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்படும், விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



    இந்த ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளது.

    சதாப்தி ரெயில் போன்று முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட் டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

    இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.

    இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ. பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை செல்ல 8 மணி நேரமும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது.

    தேஜஸ் ரெயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரை போய்ச்சேரும்.

    தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.

    தற்போது தேஜஸ் ரெயில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து புறப்பட்டு வில்லிவாக்கம் ‘யார்டு’ ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூடுதலாக சொகுசு ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே வரவேற்பை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #Tejastrain #Chennai #Madurai


    ×