என் மலர்
நீங்கள் தேடியது "Small business women"
திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால், திருமணத்திற்கு பின் அந்த வேலையை தொடர்வது சிரமமாக உள்ளது. திருமணமான பெண்களுக்கு வேலை செய்வது என்பது கடினம் கிடையாது. அலுவலகத்திற்கு சென்று வருவதுதான் கடினம். இதுவே திருமணமல்லாமலும் குடும்ப சூழ்நிலைகளால் சிலரால் தினசரி அலுவலங்களுக்கு சென்று பணியாற்ற முடியாது. சூழ்நிலையால் வேலை இல்லாமல், வேலைக்கு செல்ல இயலாமல் இருக்கும் பெண்கள் வீட்டிலேயே சிறுதொழில் தொடங்கலாம். உங்களுக்கு உகந்த நேரம், அதாவது நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குழந்தைகளை கவனித்து விட்டு மீதமிருக்கும் நேரத்தில் பிடித்த தொழிலை செய்யலாம். அதற்கான சில யோசனைகளை இங்கே காணலாம்.
ஊறுகாய்
சமையல் தெரிந்த பெண்கள் ஊறுகாய் தொழில் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். முதலில் ஒரு சிறிய முதலீடு, அதாவது ரூ. 10 ஆயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்து பாருங்கள். வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மகளிர் பலரும் இதனை வாங்கி பயன்படுத்துவர். இதற்கு ஊறுகாயை ஆன்லைன் மூலம் விற்கவேண்டும். அப்படி ஆன்லைன் வேண்டாம் என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைகளில் முதலில் கொஞ்சம், கொஞ்சம் போடுங்கள். ஊறுகாய் நன்றாக இருந்தால், அடுத்தடுத்து உங்களிடம் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊறுகாயை மொத்த சந்தை, சில்லறை சந்தை எனப் பல்வேறு வழிகளில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம். உங்கள் ஊறுகாய் நன்கு விற்பனையானால் பின்னர் முதலீட்டை அதிகமாக்குங்கள்.
கேட்டரிங்
சிலருக்கு கைப்பக்குவம் நன்றாக இருக்கும். அவர்கள் எல்லாம் கேட்டரிங் தொழிலை தொடங்கலாம். பெரிய பெரிய கல்யாணம், விழாக்கள் அப்படி இல்லையென்றாலும் வீடுகளுக்கு அதாவது படிக்கும் அல்லது வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலருக்கும் உணவு செய்து தரலாம். அப்படி இந்த தொழிலை ஆரம்பித்தால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் கொடுத்தால் போதும். மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வீட்டு சாப்பாட்டை விரும்பி உங்களிடம் ஆர்டர் கொடுப்பார்கள். இதில் நல்ல லாபம் கிடைக்கும். மூன்று வேலைகளிலும் சமைக்க இயலாது என்றாலும், மதிய அல்லது இரவு உணவு மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

கைவினைப்பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது
அழகுசாதனப் பொருட்கள்
இப்போதெல்லாம் பெண்கள் பலரும் ரசாயனங்கள் கலந்த அழகுப் பொருட்களைவிட இயற்கையாக தயாரிக்கும் பொருட்களையே விரும்புகின்றனர். ஆகையால் கற்றாழை ஜெல், குளியல் சோப்புகள், எண்ணெய் போன்றவற்றை வீட்டிலேயே செய்து விற்கலாம். முதலில் தெரிந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி நம்பிக்கை பெற்றபின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் விற்கலாம். வரவேற்பை பொறுத்து பின்னர் கடைகளிலும் விற்கலாம்.
ஆரி வொர்க்
இப்போதெல்லாம் பெண்கள் பலரும் டிசைனிங் அதிகம் உள்ள ஆடைகளைத்தான் விரும்புகின்றனர். நீங்கள் கடையில் துணியை மெட்டீரியலாக வாங்கி அதில் மணி, முத்துகள், ஜரிகைகள் வைத்து தைத்து விற்கலாம். இல்லையென்றால் நூலை வைத்தும் எம்ப்ராய்டரிங் செய்யலாம். இந்த துணிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தையல் தெரிந்தவர்களுக்கு இது எளிதாக இருக்கும். இதுபோல இன்னும் நிறைய சிறுதொழில்கள் உள்ளன. நிதி சுதந்திரம் என்பது மகளிருக்கு அவசியமான ஒன்று. இதுபோன்ற சிறுதொழில்கள் மூலம் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்.
- உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும்.
- நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு.
தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை அவசியமாக பின்பற்ற வேண்டிய பொருளாதார நிலைகளில் சிக்கனமும், சேமிப்பும் முக்கியமானவை. அதிலும் சிறுதொழில் செய்யும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில நிதி சார்ந்த ஆலோசனைகள் இங்கே...
சிறு தொகையைக்கூட வீணாக்காமல் சேமித்து வைப்பது, எதிர்காலத்தில் உண்டாகும் அவசர தேவைகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். ஆகையால் பெரிய அளவு சேமிப்பை உருவாக்க உதவும். ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தை பெண் தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அடிக்கடி நிதி நெருக்கடியை சந்திக்கும் பட்சத்தில், முதலில் உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும். உங்களுடைய வருமானத்தில் அடுத்தக்கட்ட முதலீட்டுக்கு தேவையான பணத்தை தவிர, மீதி இருக்கும் தொகையை சேமிப்பில் செலுத்துவது நிதி நெருக்கடியை சிரமம் இல்லாமல் கையாள உதவும்.
தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், உங்களுக்கான வரைமுறைகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுவது முக்கியமானது. உங்களுடைய லாபம் பெருகாமல் இருக்கும்போது, முதலீட்டின் அளவை எந்த காரணத்துக்காகவும் அதிகரிக்கக் கூடாது. இது பணம் விரயமாவதை தடுப்பதோடு, எதிர்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கும் உதவும்.
நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு, பங்குச்சந்தை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்யலாம். அதற்கான வல்லுனரின் ஆலோசனையின்படி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். வங்கி, பங்குச்சந்தை என எதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தாலும், நீண்டகால முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. இது எதிர்காலத்தில் நிதி பற்றாக்குறை இல்லாமல் பயணிக்க உதவும்.
பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், அதை பெருக்குவதும் முக்கியமானது. அதிக தொகை கொண்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாதவர்கள், உங்களுடன் சேர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையானவர்களின் தொழிலுக்கு முதலீடு செய்யும் பங்குதாரராக செயல்படலாம். இது உங்களுக்கு மற்றொரு முறையில் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகுப்பதோடு, உங்கள் தொழிலில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் உதவும்.
சேமிப்பை போலவே சிக்கனமும் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும். தொழில் சார்ந்த கடன்கள் அதிகரிக்க நேர்ந்தால், முடிந்தவரை குறைந்த வட்டி விகிதம் இருக்கும் கடன் திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இது கடனை அடைப்பதற்காக சேமிப்பு பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க உதவும். நீங்கள் செய்யும் தொழிலில் எப்போது வேண்டுமானாலும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு பணத்தை எடுத்து சமாளிப்பது. உங்களுடைய எதிர்கால திட்டங்களை பாதிப்பதோடு. தொழிலில் நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.






