என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுரைகள்"
- சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார்.
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது.
தமிழ்க் கடவுள் முருகன் பற்றி 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர் அருணகிரி நாதர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது அவர் பாடிய அந்த பாடல்கள் முருக பக்தர்களால் திருப்புகழாக பாடப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகத்துக்கு இணையான சிறப்புகள் திருப்புகழுக்கு உண்டு.
அருணகிரி நாதர் மறைந்த பின்னர் சுமார் 400 ஆண்டுகள் கழித்து 19-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
இவரை அருணாகிரி நாதரின் மறுபிறப்பு என்றே சொல்வது உண்டு. முருகனும் ஒரு தடவை அருணாகிரி நாதரின் மறுஉருவாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திகழ்வதாக கூறியுள்ளார். அருணகிரி நாதர் எத்தனை முருகன் தலங்களில் பாடி இருந்தாலும் திருச்செந்தூரில் அவர் பாடிய பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதுபோல்தான் அவரது மறுபிறவியாக கருதப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் திருச்செந்தூர் முருகன் மீது பாடிய பாடல்கள் மிக மிக அருமையானவை.
திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களை வரவழைத்து ஆட்கொள்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும் திருச்செந்தூர் முருகன் வரவழைத்து ஆட்கொண்டது வரலாற்று நூல்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 1839-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்தார். பிறந்த ஒரு வாரம் வரை அவர் அழவில்லை. சிரிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் செந்திநாயகம்- பேச்சிமுத்து அம்மாள் கவலைப்பட்டனர்.
அன்று இரவு செந்திநாயகம் கனவில் தோன்றிய முருகன், "உன் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயர் வை" என்று சொன்னார். அதன்படி அந்த குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தை மிக மிக சிறு வயதிலேயே கவிபாடும் அளவுக்கு புலமைமிக்கதாக மாறியது.
9 வயதுக்குள் சங்கரலிங்கம் கல்வியில் சிறந்து விளங்கினான். ஆனால் அந்த பருவத்தில் அவனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் சங்கரலிங்கம் சுரண்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போன அந்த சிறுவன் சீதாராம நாயுடுவிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமை பெற்றார்.
அவரிடம் இருந்த பாடல் இயற்றும் திறமையை கண்ட சீதாராம நாயுடு பாராட்டி "ஓயாமாரி" என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு சமயம் சுரண்டையில் பூமிகாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சிறுவனாக இருந்த சங்கரலிங்கம் ஊர் பெரியவர்களிடம் பூமிகாத்தாள் என்ற பெயர் இந்த அம்மனுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார். ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த அம்மனின் பெயர் வந்த விதத்தை சங்கரலிங்கம் அருமையாக விளக்கி கூறினார். இதை கண்டு சீதாராம நாயுடு பிரமித்துப் போனார். அவர் முருகப்பெருமானின் மந்திரங்களை சங்கரலிங்கத்துக்கு உபசேதித்தார். தினமும் சங்கரலிங்கத்தை வேல் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக சங்கரலிங்கத்துக்கு முருகப்பெருமானை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் சுந்தரம்மை என்ற பெண்ணுக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர்.
அதன் பிறகு சங்கரலிங்கத்தின் கவனம் முழுக்க முருகன் மீது திரும்பியது. முருகனை புகழ்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். முருகனை பாட தொடங்கி விட்டால் அவர் வாயில் இருந்து அருவி போல வார்த்தைகள் கொட்ட தொடங்கி விடும். பெரும்பாலான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. பல பாடல்கள் எழுதாமல் விடுபட்டு விட்டன.

இந்த நிலையில் சங்கரலிங்கம் தல யாத்திரை செல்ல தொடங்கினார். சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆலயங்களில் நீண்ட நாட்கள் இருந்து பாடல்கள் பாடினார். அவையெல்லாம் இன்றும் மிகப்பெரிய பொக்கிஷமான நூல்களாக உள்ளன.
ஒரு முறை தென்காசி அருகில் உள்ள பைம்பொழில் என்று அழைக்கப்படும் திருமலையில் அருள் பாலிக்கும் குமாரசாமி முருகனின் புகழை பாடினார். அப்போது அவருக்கு முருகன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. முருகனை பார்த்து, "அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்தது போல எனக்கும் காட்சி கொடு" என்றார்.
ஆனால் முருகப்பெருமான் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சங்கரலிங்கம் மலையில் இருந்து விழுந்து புரண்டார். அவரது உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களுக்கு வள்ளி வந்து மருந்து போட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன் பிறகு சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார். முதலில் வள்ளியூர் தலத்துக்கு சென்றார். அங்கு தனது உடைகளை கலைந்து விட்டு கோவணம் மட்டும் கட்டிக் கொண்டார். உடம்பு முழுக்க திருநீறு பூசினார். இதனால் அவரை முருக தாசர் மற்றும் தண்டபாணி சுவாமிகள் என்று அனைவரும் அழைக்க தொடங்கினார்கள்.
வண்ணசரபத்தை அதி விரைவாக பாடும் ஆற்றல் பெற்று இருந்ததால் நாளடைவில் அவருக்கு வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த திருநாமத்துடன் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்கு முருகனை பார்த்து வழிபட்டு மனம் உருகினார். திருச்செந்தூர் கோவிலிலேயே தங்கியிருந்து தினமும் முருகனை வழிபட்டு மனம் குளிர்ந்தார்.
அப்போது ஒருநாள் அவரது கனவில் முருகன் தோன்றினார். தண்டபாணி என்னைப் பற்றி 16 நூல்கள் பாட வேண்டும். நீ 11-வது நூல் பாடும் போது நான் உனக்கு கந்தலோகத்து திருநீறும் சிவகண்மணியும் தருவேன்" என்று கூறினார். இதைக் கேட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முருகனை பாடத் தொடங்கினார்.
10 நூல்களை பாடி முடித்த அவர் 11-வதாக கந்தமாலை எனும் பெயருடைய நூலை பாடி முடித்தார். ஆனால் அவருக்கு முருகன் சொன்னபடி திருநீறு கிடைக்கவில்லை. இதனால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது. தன்னால் பாடி முடிக்கப்பட்ட 11 நூல்களையும் கையில் எடுத்தார்.
முருகா, நீ எனக்கு திருநீறு தராததால் இந்த நூல்களை உனக்கு நான் தர மாட்டேன் என்று சொல்லியபடி 11 நூல்களையும் கிழித்து எறிந்து விட்டார். கடற்கரையோரம் சென்று உலாவியபடி இருந்தார். அப்போது அவர் மனதுக்குள் முருகன் மீது பாடிய பாடல்களை கிழித்து போட்டது தவறோ? என்ற கவலை தோன்றியது.
வேதனையோடு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கடலோரத்தில் நடந்து கொண்டே இருந்தார். அப்போது புனித நீர் விட வந்த ஒருவர் மீது முருகப்பெருமான் இறங்கி பேசினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பார்த்து, "தண்டபாணி மீண்டும் என்னைப் பற்றி பாடு. நான் 16 நூல்கள் இயற்ற சொன்னேன். அதில் என்னைப் பற்றி மட்டும் 12 நூல்கள் பாடு. வள்ளிக்கு ஒரு நூல் பாடு. தெய்வானைக்கு ஒரு நூல் பாடு. வீரபாகுவுக்கு 2 நூல்கள் பாடு. மொத்தம் 16 நூல்கள் வந்து விடும். அவற்றை அரங்கேற்றம் செய்" என்று கூறினார்.
திருச்செந்தூர் முருகனின் இந்த அதிரடி உத்தரவுகளை கேட்டதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மெய்சிலிர்த்தார். அன்றே முருகனைப் பற்றி பாட தொடங்கினார். பாடல்கள் வழக்கம் போல தண்டபாணி சுவாமிகளின் வாயில் இருந்து அருவிகளாக கொட்டின. 16 நூல்களையும் பாடி முடித்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் பற்றி அவர் பாடிய 12 நூல்களில் "திருச்செந்தூர் சிேலடை வெண்பா" என்ற நூல் மிகவும் தனித்துவம் கொண்டது. 100 வெண்பா பாடல்களை கொண்ட அந்த நூலை படிப்பவர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளி உள்ளார்.
இத்தகைய சிறப்புடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஏராளமான முருகன் தலங்களுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த பாடல்களை கோபத்தில் கிழித்து போட்டு விடுவார். அவர் முருகன் மீது ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். ஆனால் முருகப்பெருமான் மீது கொண்ட ஊடல் காரணமாக சுமார் 50 சதவீதம் பாடல்களை கடலில் அள்ளி போட்டு விட்டார். சில பாடல்களை தீ வைத்து எரித்து விட்டார்.
மிஞ்சியது 49 ஆயிரத்து 722 பாடல்கள் மட்டுமே.
இப்படி முருகன் மீது உரிமையோடு சண்டை போட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது இறுதிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூருக்கு வந்தார். அங்கு கவுமார மடம் அமைத்து வாழ்ந்தார். இவரை பக்தர்கள் திருப்புகழ்க்காரர், தண்டபாணி பரதேசி, தண்டபாணி அடிகளார், திருப்புகழ் அடிகளார் என்றெல்லாம் போற்றி அழைத்தனர். இவர் தனது பாடல் தரத்தால் முருகப்பெருமானை பல தடவை நேரில் பார்த்து தரிசனம் செய்துள்ளார். 1898-ம் ஆண்டு முக்தி பெற்றார். அவர் அமைத்த திருவாமாத்தூர் மடம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அவர் வழிபட்ட விநாயகரையும், முருகனின் வேலையும் இன்றும் நாம் தரிசிக்கலாம்.
அங்கு பழனி தண்டாயுதபாணி சிலையும் இருக்கிறது. அதை வழிபட்டால் பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மடத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போல முருகனால் நடந்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- அறிவு நல்லது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதன் பணத்தை மட்டும் நல்லது என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?.
- ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி; இருவருக்கும் ஏழாம் பொருத்தம்; ஒருவர் வடக்கே திரும்பி நின்றால், மற்றவர் தெற்கே திரும்பி நிற்பார்.
எல்லாருக்கும் உதவுவதில் எப்போதும் அக்கறை காட்டும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
உதவுவதற்குப் பணமும் நல்ல குணமும் தேவை. ஆனால், 'பணம் இருப்பவர்களிடம் அறிவு இருப்பதில்லை! அறிவு இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை!' என்று இருவேறுபட்டதாக உலகம் எப்போதும் இருக்கிறது என்னும் நம்பிக்கை திருவள்ளுவர் காலம்தொட்டே இருக்கிறது.
''இருவே றுலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு"
வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்லும் இந்தச் செல்வந்தர் குறித்த சிந்தனை, பொத்தம் பொதுவானதே யொழிய, ஒட்டுமொத்தச் செல்வந்தர் இனத்தையும் அறிவில்லாதவர்கள் என்று இழிவுபடுத்திக் காட்டுவது அல்ல. அப்படி இருந்திருந்தால், வரலாற்றில் இவ்வளவு நீளமான வள்ளல்கள் பட்டியலில் இத்தனை பணக்காரர்கள் இருந்திருக்க மாட்டார்கள் இன்றைக்குப் பணம் ஈட்டுவது எப்படி? என்பதைக் கற்பிக்கத், தனிப் படிப்புத் துறைகளும் பயிற்சிகளும் உருவாகிவிட்டன. பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லர். அப்படி அவர்களை முட்டாள்கள் என்று வள்ளுவர் உறுதியாக நம்பியிருந்தால்,
"செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்"
என்று பணம் சம்பாதிக்கச் சொல்லும் கட்டளைக் குறளை அவர் உருவாக்கியிருக்க மாட்டார். திருவள்ளுவர், 'பொருள் செயல்வகை' எனவொரு தனி அதிகாரத்தையே உருவாக்கிச், செல்வத்தின் இன்றியமையாமையையும் அதை ஈட்ட வேண்டியதன் அவசியத்தையும் பத்துக் குறள்களில் வலியுறுத்தியுள்ளார். 'பொருள் என்னும் பொய்யா விளக்கம்' என்று குறிப்பிட்டு, இருளில் தவித்துக்கிடக்கும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியேற்றி வைக்கும் அணையாத விளக்குப் போன்றது பணம் என்கிறார்.
"அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்"
என்னும் குறளில் திருக்குறளின் பாடுபொருளாகிய முப்பொருள் உண்மையில், அறம், இன்பம் ஆகிய வாழ்வின் இரண்டு உறுதிப் பொருள்களையும், பொருள் என்னும் உறுதிப் பொருள்கொண்டு நிச்சயம் அடைந்து விடலாம் என்கிறார்; ஒரே ஒரு நிபந்தனை; அந்தப் பொருள் என்னும் செல்வம் நல்வழியில் ஈட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
அறிவு நல்லது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதன் பணத்தை மட்டும் நல்லது என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?. அறிவின் துணை கொண்டு தீய செயல்களைத் தவறின்றிச் செய்து, மற்றவர்க்கும் உலகிற்கும் துயரமும் கெடுதல்களும் விளைவிக்க முடியும் என்றால் அந்த அறிவும் தீயது தானே!. அறிவோ அல்லது செல்வமோ இரண்டுமே நல்லதுதான். அவற்றை நாம் பயன்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையில் அவை தம்மீது நல்லது அல்லது கெட்டது என முகப்பூச்சுக்களைப் பூசிக்கொள்கின்றன.
எப்படி அறிவு பெறுகிற முயற்சியில் படிக்காதவர், படித்தவர் என்று எவரும் ஈடுபடலாமோ, அதைப்போலப் பணம் சம்பாதிக்கிற முயற்சியிலும் அறிவாளி, முட்டாள் என்று எவரும் ஈடுபடலாம். சேர்க்கின்ற அறிவையோ அல்லது ஈட்டுகின்ற செல்வத்தையோ எப்படி, எந்தெந்தச் செயல்களுக்காகச் சமூகத்தில் பயன்படுத்தப் போகிறோம்? அல்லது செலவு செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாம் புத்தி சாலியா? இல்லையா? என்பது தீர்மானிக்கப் படுகிறது.

சுந்தர ஆவுடையப்பன்
நல்ல குணநலனும், அறிவுவளமும் உடையவனிடத்தில் பணம் இருப்பது, நோய் நீக்கப் பயன்படுகிற மருந்து மரம் ஊருக்கு நடுவுள் எல்லாருக்கும் பயன்படும் வகையில் வளர்ந்திருப்பது போலாகும் என்கிறார் திருவள்ளுவர்; மேலும் ஊர் உண்ணப் பயன்படுகிற ஊருணிக் குளம், நன்னீரால் நிறைந்திருப்பது போலவும் அது ஆகும் என்கிறார். ஊருக்கு நடுவில் கைக்கெட்டும் தூரத்தில், பசியமர்த்தப் பழம் தருகிற பழமரம் காய்த்துச் செழித்திருப்பது போலவும் இது அமையும் என்று வள்ளுவர் பாராட்டுகிறார்.
அறிவுடையார் வசமுள்ள செல்வம் அடுத்தவர்க்கு நிச்சயம் பயன்படுவதாக அமைய வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. சிலரிடம் அளவிட முடியாத செல்வம் குவிந்து கிடக்கும். அவர்களிடம் அவ்வளவு செல்வம் எப்படிச் சேர்ந்தது என்பதையே அறிந்து கொள்ள முடியாத பேதையாகவும் அவர்கள் இருப்பர்; அது மட்டுமல்ல; 'செல்வத்துப் பயனே ஈதல்!' என்கிற பொன்னான வாக்கைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும், புரிந்து கொண்டாலும் செயல்படுத்த மனம் வராத கருமிகளாகவும் அவர்கள் இருப்பர்.
இவர்களிடம் இருக்கும் செல்வம் இவர்களுக்கோ, இவர்களைச் சார்ந்தோருக்கோ எந்த வகையிலும் எந்தக் காலத்திலும் பயன்படப் போவதில்லை என்பது வள்ளுவர் விடுகின்ற நடப்பியல் சாபம்.
"ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை"
ஈட்டிய செல்வத்தை எல்லோருக்கும் உதவும்படியாகக் கையாளத் தெரியாத அறிவிலிகளிடத்தில் பணம் சேர்ந்திருந்தால், அது அவர்களுக்கோ அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கோ பசியாறக் கூடப் பயன்படாது; மாறாக அந்தச் செல்வத்தை அந்த அறிவிலிக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத யார்யாரோ அனுபவித்திருப்பார்களாம்.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி; இருவருக்கும் ஏழாம் பொருத்தம்; ஒருவர் வடக்கே திரும்பி நின்றால், மற்றவர் தெற்கே திரும்பி நிற்பார். எந்தச் செயல் செய்தாலும் ஏட்டிக்குப் போட்டி, ஏடாகூடம். இன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்கள் இப்படித்தானே இருக்கின்றன! இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கலாம். இப்படி இருப்பதும் சில குடும்பங்களில் நன்மையை விளைவிக்கவும் செய்கின்றது.
அந்தக் குடும்பத்தில் மனைவி மகா கருமி; தானாகவும் அடுத்தவர்க்கு எதுவும் தரமாட்டார்; தன் குடும்பத்தைச் சேர்ந்தோரையும் அடுத்தவர்க்கு ஒருபொருளையும் தருவதற்கு விடவும் மாட்டார். ஆனால், அவருடைய கணவரோ தயாள சிந்தனை உடையவர். உதவி என்று வந்து முகம் தெரியாதவர் கேட்டாலும் அடுத்தவர்க்குத் தெரியாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். அவருடைய உதவும் படலம் மனைவிக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் மனைவி, தன் கணவரைப் பார்த்து, "என்கூடத் துணைக்கு வாருங்கள்! என் அம்மா வீடு வரை போய் வருவோம்" என்று அழைத்தார். 'எவ்வாறு செல்வது? ஆட்டோ, கார் ஏற்பாடு செய்யவா? என்று கேட்டால், இதோ பக்கத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற வீட்டிற்கு எதற்கு ஆட்டோ, கார்? அதற்கு வேறு வாடகைக் காசு கொடுக்க வேண்டும்! என்று வழக்கம்போல மறுத்துவிடுவார்' என்பது கணவருக்குத் தெரியும். சரி கிளம்பு என்று மனைவியோடு நடந்து செல்லத் தொடங்கி விட்டார்.
மனைவி வாசலுக்கு வந்ததும் காலில் போட வேண்டிய செருப்புகளைக் கழற்றிக், கையில் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டார்; 'சாலைதான் சுத்தமாக இருக்கிறதே! செருப்பை வீணாகப் போட்டு, அதை ஏன் தேய விட வேண்டும்?. தேய்மானக் கூலியைச் சேமிக்கலாம்' என்கிற சிக்கனம், இல்லை இல்லை கருமித்தனம் அவரிடம்!.
கணவர் ஒன்றும் பேசாமல் மனைவியுடன் நடந்து கொண்டிருந்தார்; அவர் காலில் செருப்பு இருந்தது. நண்பகல் 11 மணி வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது; அதன் எதிரொலியாய்த் தார்ச்சாலையும் வெப்பத்தில் கொதிக்க ஆரம்பித்தது. வெற்றுக் கால்களோடு நடந்து கொண்டிருந்த மனைவியால் சூடு தாங்க முடியவில்லை.
"என்ன சாலை அமைத்திருக்கிறார்கள்?. நடந்து போகிறவர்கள் வெயிலுக்கு ஒதுங்க, சாலையோரங்களில் ஒரு மரமும் இல்லை; மக்கள் ஒதுங்கிக் காத்திருக்க எந்த நிழல் இடங்களும் இல்லை!" என்று திட்டத் தொடங்கி விட்டார். மனைவியின் பரிதாப நிலையைப் பார்த்த கணவர், "நீதான் அளவுக்கு அதிகமாகக் குண்டாக இருக்கிறாயே! அப்படியே நின்று உன் உடம்பின் நிழலிலேயே கால்களின் சூடு போகத் தேய்த்து ஆற்றிக் கொள்ளலாமே!" என்று கூறினார்.
"என்னங்க புரியாமப் பேசுறீங்க?. நம்ம நிழல் எந்தக் காலத்தில நாம ஒதுங்குவதற்கு உதவியிருக்கு?; நம் நிழல் எப்போதும் நமக்கு உதவவே உதவாது!" என்று மனைவி கூறினார். உடனே கணவர் பேசினார், "அருமையாகச் சொன்னாய்!, இதைத்தான் ரொம்பக் காலத்திற்கு முன்பிருந்தே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நான் காத்திருந்தேன்!.
நம்முடைய நிழல்கூட நமக்கு உதவப் போவதில்லை! என்றால், நாம் இதுவரை சம்பாதித்துக், கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துள்ள காசுபணம், வீடுவாசல், நில புலம், நகை நட்டு இவைகள் மட்டும் நமக்கு எப்படி வந்து உதவி செய்துவிடப் போகின்றன; அவற்றை எந்த நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தாமல், தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்தும் உதவாமல், கஞ்சத் தனமாய்ச் சேர்த்து வைத்துச், சேர்த்து வைத்து என்னத்தை அனுபவிக்கப் போகிறோம்!".
செலவழிக்கப்படாத பணம், பூதம் காத்து வைத்துள்ள புதையல் போன்றது; யாருக்கும் கிடைக்காமல் புதைந்து விடப் போவது. யாருக்கும் உதவாத பணம், நாயிடம் அகப்பட்ட தேங்காய் போன்றது; தமக்கும் பயன்படாது; அடுத்தவர்க்கும் உதவிடாது வீணாகிப் போவது.
வாழப் பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை வசதியாக அமைத்துக் கொள்வதற்கு உதவியாக இந்த உலகமும், உலகின் இயற்கைப்படைப்புகளும் படைக்கப் பட்டன. கடவுளின் படைப்பான இந்த
இயற்கைச் சாதனங்களுக்கு அப்பால், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவியே பணம் ஆகும்.
பண்டமாற்று முறை உள்ளவரை பணம் கண்டுபிடிக்கப்படவில்லை; பணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொருள்களுக்கு விலைகள் நிர்ணயிக்கப்பட்டன; பணம், செலவழிக்கப்படாமல் சேமித்து வைக்கப்பட்டது; பணமுள்ளவன் பணக்காரன் ஆனான்; அவனால் எதனையும் விலைகொடுத்து வாங்கிச் சொத்துகள் குவித்து வைக்கமுடியும் என்ற நிலை வந்ததனால் அதிகார பலமும் மிக்கவனாகக் கருதப்பட்டான்.
நம்முடைய செல்வம் நம்மை மட்டுமல்லாமல், நம்முடைய எதிர்காலச் சந்ததியின் பாதுகாப்பிற்கும் உதவும் என்பது ஒருவகையில் உண்மை என்பதால், அதனைச் சம்பாதிப்பதை விடப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதிலேயே மனிதன் அக்கறைகாட்டத் தொடங்கினான்; அதனால் அவனிடத்தில் கருமித் தனமும் அடுத்தவர்க்கு உதவாத சுயநலமும் பெருகிவிட்டது.
'செலவாவதுதான் செல்வம்' என்கிற செல்வத்தின் ரகசியம் புரிந்து கொண்டால் அதனை வீணாக இரும்புப் பெட்டிக்குள் சிறைவைத்திட மாட்டோம். விதைக்கப்படாத விதை விளைச்சலாவதில்லை; ஒன்றை விதைத்தால் அது பலவாகப் பெருகும் என்பதே விதைப்பின் தத்துவம்; இதுவே தருமத்தின் தத்துவமும்கூட. அதற்காகப் பயன்படாத நிலத்தில் யாரும் பயிர் வளர்ப்பதில்லை;
நமக்குக் கிடைக்கிற செல்வம் நாம் ஈட்டிய வரம்!: அவ்வரத்தை விதையாக்கி நமது சக மனிதர்க்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி விளைச்சலைப் பெருகிடச் செய்வதே உண்மையான வாழ்வியல். உதவுவோம்; உதவ உதவ உதவிகள் பெருகிடும்.
தொடர்புக்கு 9443190098
- 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- மாற்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள்காட்டினார்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி நிறுவனங்கள், இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) காரைக்கால் நிதி பங்களிப்புடன் கூடிய சர்வதேச அளவிலான கருத்தரங்கம் எதிர்கால சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த தலைப்பில் நடை பெற்றது.
கருத்தரங்கை ஓ என் ஜி சி நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ராஜசேகரன், நேதாஜி கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், இயக்குநர் விஜயசுந்தரம் , ஆலோசகர் ஜான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன்,ஆராய்ச்சி துறைத்தலைவர் கணேசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் முனைவர் ரகுநாதன் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சுமார் 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த சில முக்கிய பதிவுகளையும் எதிர் காலத்தின் சக்தி அமைப்பின் வரைகோலையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ எம் ஜி சின் பிரதி பொது முகாமை யாளர் ராஜசேகரன் எடுத்துரைத்தார்.
மேலும், மாற்று புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள் காட்டினார்.
மேலும் கல்வி குழுமங்களின் தாளாளர் முனைவர் வெங்கட்ராஜிலு செயலர் சுந்தர்ராஜ் ஆகியோரின் உத்தரபடி விழாவின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கணேசன், அனைத்து துறை சார்ந்த துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது.
- பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும்.
திருப்பூர்:
முத்தமிழ் திருவிழா -2023 மலரில் இடம்பெற தமிழ் இலக்கிய, இலக்கண கட்டுரைகளை 31ந் தேதிக்குள் அனுப்பலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது. ஆன்மிக பெரியோர்கள், ஆதீனகர்த்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.
தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கணங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்தரங்குகள் நடக்கின்றன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகளை பெற்று தொகுப்பு மலர் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை இப்பணியை ஒருங்கிணைக்கிறது.
தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம், தமிழும் பிற மொழிகளும், தமிழின் பண்பாடு, வரலாறு, மாட்சிமைத்திறன், அறிவியல் மற்றும் கல்வி சிந்தனை சார்ந்த பொருளில் கட்டுரைகள் இருக்க வேண்டும்.பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும். கட்டுரைகள், ஏ4 அளவு தாளில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
muthamilthiruvizhakovai2023@gmail.com அல்லது 80726 54314 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் அனுப்பலாம். கட்டுரைகளை ஜூலை 31ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரையாளரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80726 54314, 86103 25998 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.






