search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivasailam"

    • தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.
    • இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.

    தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.

    இந்த மலை அடிவாரத்தில் ஆதி மூலமான மகா விஷ்ணு குடி கொண்டிருந்தார்.

    அவர் குடி கொண்டிருந்த இடம் அழகான மிக நெருக்கமான பூக்கள் நிறைந்த இடம்.

    எனவே அந்த இடத்தினை மொய்மாம் பூம்பொழில் என்று அழைத்தனர்.

    பாண்டிய மன்னன் இந்திர துய்மன் பெருமானின் பக்தன்.

    இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.

    அங்கு வந்து தினமும் தன்னை மறந்து வணங்கி நின்றான்.

    இவனின் பக்தியை கேள்விப்பட்டார் அகத்திய மாமுனிவர்.

    தான் வாழ்ந்த பொதிகை மலையை விட்டு மொய்மாம் பூம்பொழில் நோக்கி வந்தார்.

    அந்த மகாபக்தனை பார்த்து அவனுக்கு பாராட்டு தெரிவிக்க வந்த மாமுனிக்கு அவனை பார்த்தவுடன் கோபம் வந்தது.

    முனிவர் வந்தது கூட தெரியாமல் பாண்டிய மன்னன் பக்தியில் தன்னை மறந்த நிலையில் பெருமாளுடன் ஐக்கியமாகி இருந்தார்.

    இதைக்கண்டு வெகுண்டமுனிவர் தான் நேரில் வந்தும் கூட இந்த மன்னன் அகந்தையால் தன்னை மதிக்கவில்லையே என கோபம் கொண்டார்.

    நீ யானையாக போக கடவது என்று பாண்டிய மன்னனை நோக்கி சபித்தார்.

    மறுநிடமே அரசன் யானையாக மாறிவிட்டார்.

    அகத்தியர் அதன்பின் தன் யோக நெறியால் நினைத்துப் பார்த்தபோது மன்னனின் தவறு இல்லாத நிலையை உணர்ந்தார்.

    அரசன் மீது கருணை கொண்டு கஜேந்திரா என்று அழைத்து ஆசி கூறினார்.

    இதற்கிடையில் தாமிரபரணி நதியில் மேலே நின்று தவம் செய்துகொண்டிருந்தார்.

    தேவலன் என்ற முனிவர்.

    இவரை வான் வழி சென்ற கந்தர்வன் என்பவன் விளையாட்டாய் பார்த்து சிரித்தான்.

    அவரை கேலி செய்யும் பொருட்டு ஆற்று நீர் வழியாக முனிவரின் காலை பிடித்து இழுத்து விளையாடினான்.

    இதனால் மிரண்டு போன முனிவர் அவன் மீது கோபம் கொண்டார்.

    கந்தர்வனை முதலையாக போவது என்று சபித்தார்.

    அந்த சபிக்கப்பட்ட கந்தர்வன் முதலை மொய்மாம் பூம்பொழிலில் வாழ்ந்து வந்தது.

    கஜேந்திரன் யானையாக இருந்தாலும் பல ஆண்டுகளாக சாபத்தினால் யானை கூட்டத்தோடு கூட்டமாக அரசனாக வாழ்த்து வந்தார்.

    ஆனாலும் தினமும் பகவானை பூஜை செய்ய மட்டும் தவறுவதில்லை.

    ஒரு நாள் பொழிந்த நாதரை வழிபட தாமரை மலரை பறிக்க பூம்பொழினுள் யானை இறங்கும் போது

    அங்கு முதலையாய் வாழ்ந்து வந்த கந்தர்வன் கஜேந்திரன் காலை பற்றினான்.

    உயிர் போகும் நிலையில் கதறினார் யானை உருவத்தில் இருந்த அரசன்.

    அப்போது அவருக்கு முற்பிறவி நினைவுக்கு வந்தது.

    தன்னிலை உணர்ந்து ஆதி மூலத்திடம் உதவி கேட்டார்.

    இவரின் அபயக்குரல் மகாவிஷ்ணுவின் காதுக்கு கேட்டது.

    உடனே மகாவிஷ்ணு கருடன் மீதேறி தனது சக்கரத்தை ஏவினார்.

    பின் அவர்தாமிரபரணி நதியில் திருவலஞ்சுழியில் வந்து இறங்கினார்.

    பின்பு அங்கு கோவில் கொண்டுள்ள சிவ பெருமானின் அருள் பெற்று, யானையின் காலை பிடித்த முதலையை சக்கரம் மூலம் தலையறுத்தார்.

    இதனால் கந்தர்வனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

    அதன் பின்பு யானையான கஜேந்திரனை தன் கரத்தால் தூக்கி விட்டார்.

    பகவான் கரம் பட்டதும் கஜேந்திரன் அஞ்ஞான பந்தம் அகன்று மகாவிஷ்ணு மூலம் பழைய உருவமான அரசன் ஆனான்.

    கஜேந்திரனான அத்தியை (யானையை) பகவான் ஆட்கொண்டதால் இவ்வூருக்கு அத்தி+யாள+நல்லூர் என்று பெயர் பெற்றது.

    அதுவே மருவி அத்தாளநல்லூர் ஆனது.

    இங்கு கஜேந்திர வரதன் என்ற திருநாமத்துடன் ஆதிமூலம் திருக்கோவில் கொண்டுள்ளார்.

    புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவை நடைபெறும்.

    பக்தர்கள் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை இந்த கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து வேண்டும் வரம் பெற்று பலன் பெறுகிறார்கள்.

    இந்த கோவில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

    இந்த கோவிலுக்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்தும், சேரன் மகாதேவி மற்றும்

    நெல்லை சந்திப்பில் இருந்தும் டவுண் பஸ் வசதி உள்ளது.

    இல்லையென்றால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துகளில்

    நாகர்கோவில் வள்ளியூர் பாபநாசம் தென்காசி செல்லும் பேருந்துகளிலும் சேரன் மகாதேவி

    அல்லது வீரவநல்லூரில் இறங்கி வந்து அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

    முக்கூடல் வந்தால் கூட ஆட்டோவில் செல்லலாம்.

    • பங்குனி மாதத்தின் கடைசி நாளில் தேரோட்டம் நடைபெறும்.
    • சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் பவனி வருவார்கள்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு, அம்பாளுக்கு என்று இரு தனித்தனி தேர்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் கடைசி நாளில் கோலாகலமாக தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டம் இந்த கோவிலில் நடக்காது. தேர்கள் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளன. அங்குதான் தேரோட்டம் நடைபெறும்.

    கொடியேற்றம் மட்டும்தான் சிவசைலம் கோவிலில் நடைபெறும். கொடியேற்றம் முடிந்ததும் அன்றே சிவசைலநாதரும், பரமகல்யாணி அம்பாளும் அங்கிருந்து ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழாவின் பிற உற்சவங்கள் அனைத்தும் அந்த கோவிலிலேயே நடைபெறும்.

    விழாவின் 11-வது நாள், அதாவது பங்குனி மாதத்தின் கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும். அன்று காலை சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் நான்கு வீதிகளிலும் பவனி வருவார்கள்.

    அம்பாள் பரமகல்யாணியின் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துவந்து நிலையத்தில் சேர்ப்பது இதில் தனிச்சிறப்பாகும்.

    இந்த தேர்த்திருவிழாவில் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தேரோட்டம் முடிந்த மறுநாள் அதாவது `சித்திரை விசு' (தமிழ்ப் புத்தாண்டு) அன்று சுவாமியும், அம்பாளும் மறுபடியும் சிவசைலம் கோவிலுக்கு எழுந்தருளுவார்கள். அங்கு கோவிலை அடைந்ததும், கடனாநதியில் தீர்த்தவாரி நடத்தப்பட்டு சுவாமியும் அம்பாளும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    இதேபோல் தைப்பூச திருநாள் அன்று தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவும் ஆழ்வார்குறிச்சியில்தான் நடக்கும். இதற்காக சுவாமியும், அம்பாளும் சிவசைலத்தில் இருந்து அழைத்து வரப்படுவார்கள்.

    • இந்திரன் ஒருமுறை சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகிறான்.
    • நந்திகேசுவரருக்கு ஒரு தனி வரலாறு உள்ளது.

    எல்லா சிவன் கோவில்களிலும் கர்ப்பகிரகத்துக்கு எதிரே இறைவனை நோக்கியபடி நந்திகேசுவரர் (நந்தி) எழுந்தருளியிருப்பதை காணலாம். அதேபோல் இந்த கோவிலிலும் கர்ப்பகிரகத்தின் எதிரே கொடிமரத்துக்கு முன் பெரிய நந்தி சிலை உள்ளது. இங்கு எழுந்தருளிய நந்திகேசுவரருக்கு ஒரு தனி வரலாறு உள்ளது.

    தேவலோகத்தின் தலைவனான இந்திரன் ஒருமுறை சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகிறான். இதனால் சாபவிமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி தவம் இருக்கிறான். அவனது தவ வலிமையை கண்டு மனம் இறங்கிய இறைவன், திரிகூடபர்வத கடம்ப வனப்பகுதியில் சுயம்புவாக தான் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் ஆலயத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை முழங்கிடச் செய்யும் வகையில் ஒரு நந்தியை (நந்திகேசுவர்) நிறுவுமாறும், அப்படி செய்தால் சாபம் தீரும் என்றும் கூறுகிறார்.

    அதன்படி தேவேந்திரன், பிரம்மதேவனின் மகனும், சிற்பக்கலையின் தலைவனுமான மயனை அழைத்து, கடம்ப வனத்தில் உள்ள சுயம்புலிங்கத்தின் முன் ஒரு நந்திகேசுவரரை நிறுவுமாறு பணித்தான். இதைத்தொடர்ந்து மயன் கடம்ப வனம் வந்து கடினமாக பணி செய்து சிற்ப சாஸ்திரங்களின்படி முழுமை பெற்ற ஒரு நந்தியை வடிவமைத்தான்.

    சாஸ்திரங்களின் அடிப்படை விதி எதுவும் மாறாமல் வடிவமைக்கப்பட்டதால், கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி, திடீரென உயிர்பெற்று எழுகிறது. உடனே மயன் தனது தந்தையை மனதில் நினைத்து வேண்டியபடி, கையில் இருந்த சிறிய உளியினால் நந்தியின் பின் முதுகில் அழுத்தி அமரச் செய்து விடுகிறான். இதனால் இங்குள்ள நந்திகேசுவரர் முதுகில் சிற்றுளியால் ஏற்பட்ட சிறிய கீறலுடன் காட்சி தருகிறார்.

    நந்திகேசுவரருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை `நந்திக்களபம்' என்ற விசேஷ பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த நந்திகேசுவரரிடம் மனதார வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த நந்தியை `பிரார்த்தனை நந்தி' என்று அழைக்கிறார்கள். நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.

    முனிவருக்கு சாபம்

    கணங்களின் தலைவனான பிருங்கிரிடி முனிவர் ஒருமுறை சிவசைலநாதரை மட்டும் தரிசித்துவிட்டு, அம்பாளை பிரதட்சணம் செய்யாமல் சென்று விடுகிறார். இதனால் கோபமுற்ற அம்பாள், பிருங்கிரிடியின் சக்திகள் அனைத்தையும் அபகரித்துவிடுகிறார்.

    அத்துடன் பிருங்கிரிடிக்கு சாபமிடுமாறு ஈசனிடம் முறையிடுகிறார். ஆனால் சிவசைலநாதரோ, அம்பாள் சொல்வதை காதில் வாங்காமால் பாராமுகமாய் இருந்து விடுகிறார்.

    இதனால் கோபம் கொண்ட அம்பாள், அங்கிருந்து மேற்கு நோக்கி பயணித்து திரிகூடபர்வதத்தில் உள்ள அத்ரி மகரிஷியின் குடில் அருகே அமர்ந்து கடுந்தவம் செய்யத் தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து சிவசைலநாதர், ``தேவி நீ கோபம் கொள்ள வேண்டாம். எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. நீ கட்டாயம் நமது இருப்பிடம் வரவேண்டும்'' என்று கூறி அம்பாளை சமாதானம் செய்தார்.

    ஈசனின் வேண்டுகோளை ஏற்று அம்பாள் கோபம் தணிந்து மீண்டும் சிவசைலம் எழுந்தருளினார். அன்று முதல் அம்பாள் `பரமகல்யாணி' என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • சைவ வழிபாட்டில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு.
    • மேற்கு நோக்கிய சிவலிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு

    ``கோவில் விளங்க குடி விளங்கும்'' என்றார்கள் நம் முன்னோர்கள். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றபோதிலும், கோவிலுக்கு சென்று அமைதியான சூழலில் கண்மூடி பிரார்த்தித்து, இதயத்தில் உள்ள பாரத்தை சற்று இறக்கி வைத்துவிட்டு வந்தால் மனதும், உடலும் லேசானது போன்ற உணர்வும், நிம்மதியும் கிடைக்கும்.

    பழங்காலத்தில் இருந்து இப்போது வரை கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஓர் அம்சமாகவும், சமுதாய கட்டமைப்பின் முக்கிய அங்கமாகவும் விளங்கி வருகின்றன. இறை நம்பிக்கையும், வழிபாட்டுத் தலங்களும் மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    அந்த காலத்தில் மன்னர்கள் ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளையொட்டியே கோவில்களை கட்டினார்கள். பெரும்பாலான கோவில்கள் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கியே கட்டப்பட்டன. இதற்கு மாறாக சில கோவில்கள் மேற்கு திசையை நோக்கியும் கட்டப்பட்டு இருக்கின்றன.

    சைவ வழிபாட்டில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு. சிவலிங்கம் என்றால் சிவபெருமானின் அடையாளம்-உலகிற்கே தந்தையான ஈசனின் அடையாளம் என்று சொல்வார்கள். பெரும்பாலான சிவன் கோவில்களில் ஈசன் லிங்க திருமேனியாகவே காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவலிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு என்றும், அத்தகைய சிவலிங்கங்கள் அமைந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருச்சி தாயுமானவர் ஆலயம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதசாமி கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் மேற்கு நோக்கிய சிவாலயங்களாக விளங்குகின்றன.

    அப்படிப்பட்ட ஒரு பிரசித்திபெற்ற சிவத்தலம்தான் தென்காசி மாவட்டம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான ஆலயம் கடனா ஆற்றின் தென்கரையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் உற்பத்தியாகும் கடனா, தாமிரபரணியின் முக்கிய உபநதிகளில் ஒன்றாகும்.

    தென்காசி-அம்பாசமுத்திரம் மார்க்கத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கடனா அணைக்கு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும்.

    மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட எழில்மிகுந்த இந்த ஆலயத்தின் மேற்கேயும் தெற்கேயும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகளாக விளங்கும் திரிகூடபர்வதமும், வெள்ளிமலையும், வடக்கே முள்ளி மலையும் உள்ளன.

    கோவிலின் முன்நின்று நோக்கினால் மேற்கேயும், தெற்கேயும் மலையடிவாரம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை போர்த்திய வயல்வெளிகள். அமைதியான சூழ்நிலை, தூய்மையான பொதிகை தென்றல் என்று இயற்கையின் அருட்கொடைக்கு பஞ்சம் இல்லாத பூமி. தென்மேற்கு பருவமழை காலத்தில் குற்றாலத்தின் குளுகுளு சீசனை இங்கேயும் அனுபவிக்கலாம்.

    தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் சிவசைலநாதர் கோவிலின் தூண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. புராண சம்பவங்களை சொல்லும் அழகிய ஓவியங்கள் ஆங்காங்கே வரையப்பட்டு இருக்கின்றன.

    வாருங்கள்... இந்த கோவிலில் ஸ்தல புராணத்தை பார்ப்போம்...

     அம்பாள் கல்யாணியுடன் ஈசன் குடிகொண்டிருக்கும் இந்த சிவசைலம் முன்னொரு காலத்தில் சோலைகள் நிறைந்த கடம்ப வனமாக இருந்தது. சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்த பூமி.

    சிவபெருமானின் திருமண கோலத்தை காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் கைலாய மலைக்கு சென்றதால், பாரம் தாங்காமல் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சரி செய்ய ஈசன், குறுமுனியான அகத்தியரை தென் கோடியில் உள்ள பொதிகைக்கு அனுப்பி வைத்தார்.

    ஈசனின் ஆணையை சிரமேற்கொண்டு அத்ரி மகரிஷியுடன் தென்திசை வந்த அகத்தியர் பொதிகை மலையில் குடிசை அமைத்து தவவாழ்வு மேற்கொண்டார். தனது திருமணம் முடிந்ததும் அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் பார்வதிதேவியுடன் காட்சி அளித்தார். அதாவது, பொதிகை மலையின் அடிவாரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி காட்சி கொடுத்தார்.

    அகத்தியருடன் வந்த மற்றொரு மகரிஷியான அத்ரிமுனிவர் பாபநாசத்தில் இருந்து வடமேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் குடில் அமைத்து மனைவி அனுசூயையுடனும், கோரக்கர் போன்ற சீடர்களுடனும் வாழ்ந்து வந்தார். `சைலலிங்கம்' என்ற திருப்பெயர் கொண்ட லிங்கத்தை அவர் பிரதிஷ்டை செய்து தினசரி பூஜை செய்து வந்தார்.

    ஒரு சமயம் அகத்தியரை தரிசித்துவிட்டு வந்த அத்ரி மகரிஷிக்கு ஒரு மனக்குறை தோன்றியது. ''அகத்தியருக்கு சுயம்புவாக எழுந்தருளி காட்சியளித்த ஈசன் தனக்கு அப்படி காட்சி அளிக்கவில்லையே!'' என்று வருந்தினார். தனது மனக்குறையை அடிக்கடி ஈசனிடம் முறையிடத் தொடங்கினார்.

    அவரது வேண்டுதலுக்கு செவிமடுத்த சிவபெருமான் அசரீரியாக, ``மகரிஷியே சிவசைலர் என்ற பெயருடன் சுயம்புவாக நான் கடனா நதிக்கரையில் வாசம் செய்து வருகிறேன். என்னை வெளிக்கொணர்ந்து நீ பூஜிப்பாயாக'' என கூறி மறைந்தார்.

    இந்தநிலையில் அத்ரி முனிவரின் சீடர்கள் ஒரு நாள் பூஜைக்காக பூப்பறிக்க சென்ற போது, ஓரிடத்தில் பசு ஒன்று தானாக பால் சுரப்பதை கண்டு அதிசயித்து நின்றனர். பின்னர் அந்த இடத்தை அத்ரி முனிவரும் சீடர்களுடம் தோண்டிப்பார்த்த போது அங்கு சுயம்பு வடிவில் லிங்கம் காட்சி அளித்தது. அதை எடுத்து அத்ரி முனிவர் பூஜித்து வணங்கினார்.

    அந்த இடம்தான் தற்போது பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அமர்ந்துள்ள சிவசைலம் ஆகும்.

    சிவசைலத்துக்கு நேராக மேற்கே சற்று தொலைவில் உள்ள திரிகூடபர்வதத்தில் அத்ரி மகரிஷியின் குடில் அமைந்திருந்தது. அவர் தினமும் தன்னை தரிசனம் செய்வதற்காகவே சிவசைலம் கோவிலில் ஈசன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

    அத்ரி மகரிஷி வாழ்ந்த இடத்தில் தற்போது சிறிய கோவில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். கடனா அணைக்கு மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும்.

    அத்ரி முனிவர் வாழ்ந்த இடம் என்பதால் திரிகூடபர்வதம் `அத்ரி மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரம்மனும், இந்திரனும் வழிபட்ட பெருமைமிக்க புண்ணிய தலம் சிவசைலநாதர் கோவில்.

    பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி அளித்த அதிசய சம்பவமும் இந்த திருத்தலத்தில்தான் நடந்தது. இதற்காக ஈசன் ஒரு திருவிளையாடலையே நடத்தினார்.

    மணலூர் என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த சுதர்சன பாண்டியன் என்ற மன்னன் அடிக்கடி சிவசைலநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று வந்தான். அப்படி ஒரு நாள் மன்னன், சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது கடனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மன்னனால் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

    எனவே வடகரையில் நின்றபடியே சிவசைலநாதரை மனதில் நினைத்து வேண்டினான். அவனது வேண்டுதலுக்கு ஈசன் செவிசாய்க்கவே சிறிது நேரத்தில் வெள்ளம் வடியத்தொடங்கியது. வெள்ளம் குறைந்ததும் மன்னன் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு சென்றான்.

    மன்னன் கோவிலுக்கு வருவதற்குள் நடை சாத்தப்பட்டு விட்டது. மன்னனின் `திடீர்' வருகையை கண்டு திடுக்கிட்ட அர்ச்சகர், மன்னனை மகிழ்விக்கும் பொருட்டு, கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக வழங்கி, அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை பெற்று மன்னனுக்கு கொடுத்துவிட்டார்.

    சுவாமியை தரிசிக்க இயலாவிட்டாலும் அவருக்கு சூட்டிய மலர்மாலையையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று மகிழ்ந்த மன்னன் சுதர்சன பாண்டியன், அந்த மாலையை பயபக்தியுடன் வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

    அப்போது அதில் தலைமுடி இருப்பதை கண்டு, அபசகுனமாக கருதிய மன்னன், ''ஈசனுக்கு சூடிய மலர்மாலையில் தலைமுடி எப்படி வந்தது?'' என்று கோபமாக கேட்டான்.

    இதனால் பயந்து போன அர்ச்சகர், ``ஈசனுக்கு சடைமுடி உண்டு. மலர்மாலையில் காணப்பட்டது சுவாமியின் முடிதான்'' என்று ஒரு பொய்யைக் கூறி சமாளித்தார்.

    இதை நம்பாத அரசன், ``அப்படியானால் நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது அந்த சடை முடியை தரிசிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

    இதனால் அர்ச்சகரின் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றி அருளுமாறு சிவசைலநாதரிடம் வேண்டி பிரார்த்தனை செய்தார். அவரது நிலைமையை கண்டு மனமிறங்கிய ஈசன் அசரீரியாக, ''சுதர்சன பாண்டியனை சோதிக்கவே யாம் இவ்வாறு செய்தோம். அவனுக்கு மலர்மாலை பிரசாதம் தந்த உம்மை நிச்சயம் காப்பாற்றுவேன். கருவறையின் மூன்று பக்கங்களிலும் சாரளரங்கள் அமைப்பாயாக'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    இதைத்தொடர்ந்து, கருவறையின் வலது, இடது மற்றும் பின் பக்கங்களில் சிறிய சாளரங்கள் (துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்) அமைக்கப்பட்டன. நாட்கள் உருண்டோடின.

     ஏற்கனவே சொன்னது போல் சில நாட்களுக்கு பின் மன்னன் சுதர்சன பாண்டியன் கோவிலுக்கு வந்தான். அப்போது அர்ச்சகரின் வேண்டுகோளின்படி, கருவறையில் சுவாமிக்கு பின்னால் உள்ள துளையின் வழியே மன்னன், சிவசைலநாதரை தரிசனம் செய்தான். அர்ச்சகர் காட்டிய தீப ஒளியில் ஈசன் ஜடாதாரியாக மன்னனுக்கு காட்சி அளித்தார். இறைவனின் தோற்றத்தை கண்டு மெய்சிலிர்த்த மன்னன், தன் தவறை மன்னிக்கும்படி மனமுருக வேண்டி இறையருள் பெற்றான்.

    இந்த நிகழ்வின் காரணமாகவே, பக்தனுக்கு ஜடாமுடிதாரியாக சிவபெருமான் காட்சியளித்த சிறப்புடைய தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

    இப்போதும் இந்த கோவிலில் கர்ப்பகிரகத்தின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் இருப்பதை காணலாம். பின் பக்கம் அமைந்துள்ள சாளரத்தின் பின்னால் உள்ள கோவிலின் மதில் சுவரில் ஒரு துளை இருப்பதையும் காண முடியும்.

    5 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் சிவசைலநாதருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஈசனின் இடப்பக்கம் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.

    தேவார பாடல் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரம் விளங்குகிறது.

    கோவிலின் வலதுபுறத்தில் மணிமண்டபத்துடன் கூடிய படித்துறையும், அதன் அருகே மூலிகை தோட்டமும் உள்ளது. பக்தர்கள் படித்துறையில் இறங்கி ஆற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    கோவில் அமைந்துள்ள ஆற்றின் தெற்கு கரை பகுதி சிவசைலம் என்றும், வடக்கு கரை பகுதி அம்பாள் பெயரில் கல்யாணிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்யாணிபுரத்தில் இருந்து ஆற்றை கடந்து சிவசைலம் செல்ல பெரிய பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இயற்கை எழில் சூழ்ந்த சோலைவனம் போன்ற பகுதியில் இந்த கோவில் அமைந்து இருப்பதால் கடனா அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கோவிலின் எதிரே திருக்கல்யாண வசந்த மண்டபம் உள்ளது. இங்குள்ள கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

    ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால் அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் 'மணிவிழா'க்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

    கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பக்த பிரமுகர் சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கோவிலுக்கும், ஆற்றுக்கும் இடையேயான வடக்கு பிரகார பகுதியில் சிமெண்டு தரை அமைத்து அதிக ஒளிதரும் மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள் வருவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதியாக இருக்கும் என்று கூறிய அவர், கழிவறைகளை நன்கு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு கட்டிய கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பிறப்பிடமாகவும், கலை பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன. அந்த பொக்கிஷங்களை பேணி பாதுகாப்பது நமது கடமை.

    வேர்களை மறந்தால் விருட்சங்களுக்கு விமோசனம் கிடையாது. வந்த வழி மறந்துவிட்டால், போகும் வழி தெரியாமல் போய்விடும்.

    • கடையம் அருகே சிவசைலம் கோவிலில் வருகிற 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • கொடிமரம் பல்வேறு முன் ஆயத்த பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடையம்:

    கடையம் அருகே அமைந்துள்ள சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் சாமி கோவில் பழமையும், புராண வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். அத்திரி மகரிஷி, கோரக்கர் போன்ற சித்தர்கள், முனிவர்களாலும் வழிபடப்பட்ட ஆலயமாகும். இங்கு உள்ள நந்தி சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகும். மேலும் இது மேற்கே பார்த்த சிவாலயமாகும். இங்கு நடக்கும் பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் கோவிலுக்கான கும்பாபிஷேகம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபூஜைகள் தொடங்குகிறது. 20-ந் தேதி (திங்கட்கிழமை) கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது .

    22-ந் தேதி (புதன்கிழமை) 4-ம் கால யாக பூஜைகள், 5-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. 23 - ந்தேதி (வியாழக்கிழமை) ஆறாம் கால யாக பூஜைகளும், விமான மகா கும்பாபிஷேகம் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

    இதற்கான முன்னேற்பாடாக இங்கு உள்ள வாகனங்கள் மற்றும் கொடிமரம் பல்வேறு முன் ஆயத்த பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர். யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் கோவில் ஸ்தானிகர் நாறும்பூநாதன் பட்டர் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

    ×