search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "receive"

    4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி படிப்பு அங்கீகாரம் பெற சேலம், நாமக்கல் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்வி அமைச்சகம் அழைப்பு
    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி அமைச்சகம் தேசிய கவுன்சில் வகுத்துள்ளபடி ஆசிரியர் கல்விக்கான 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில்  இணைய கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் .,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பரிசார்த்த அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில்  சேருவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.

    கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. 

    இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.

    கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021-ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே மாதம் 1 -ம் தேதி முதல் மே மாதம் 31 -ந்தேதி (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்  பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    பள்ளியின் உரிமையாளருக்கு முன்னாள் மாணவர் ஒருவர் பரிசுபொருளாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat #SchoolOwner #SurpriseGift #ParcelBomb
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லட்டா நகரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் உரிமையாளர் வித்தல் டொபாரியாவுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அது பரிசுப்பொருள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    அனுப்பியவர் முகவரியில், முன்னாள் மாணவர் என்றும், பள்ளி உரிமையாளருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அனுப்பி இருப்பதாகவும் எழுதப்பட்டு இருந்தது. பள்ளிக்கூட உரிமையாளர் டொபாரியா, அந்த பார்சலை திறந்தார். உள்ளே இருந்த பொருட்களை பார்த்து சந்தேகம் அடைந்து, அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் ஸ்விட்சை பயன்படுத்தி, குண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை கண்டனர். அந்த குண்டை ஒதுக்குப்புறமாக எடுத்துச் சென்று, வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர். பார்சல் வெடிகுண்டு அனுப்பிய முன்னாள் மாணவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. #Gujarat #SchoolOwner #SurpriseGift #ParcelBomb 
    தூத்துக்குடி கலவர வழக்கில் கைதாகி பாளை சிறையில் மர்மமாக இறந்த‌ வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்த பரத்ராஜா (வயது36) என்பவர் தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, பாளை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இவர் கடந்த 23-ந் தேதி நடைபெற இருந்த அவரது தம்பி தனசேகரன் திருமணத்துக்காக 7 நாட்கள் பரோலில் வெளி வந்திருந்தார்.

    இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலைக் கெதிரான போராட்டத்தில் பரத்ராஜா ஈடுபட்டதாக கூறி 23-ந்தேதி போலீசார் கைது செய்து அழைத்து சென்ற‌னர். அங்கு விசாரணை என்கிற பெயரில் பரத்ராஜாவை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பரத் ராஜாவை பாளை சிறையில் அடைத்தனர்.

    போலீசார் தாக்கியதில் பரத்ராஜா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த 30-ந்தேதி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்த‌னர். இதையடுத்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

    பரத்ராஜா சாவில் சந்தேகம் உள்ளது. போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கேட்டு அவரது உறவினர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இன்று 5-வது நாளாக பரத்ராஜாவின் உடல் வாங்கப்படவில்லை. தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.

    அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்க‌ளும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ள‌னர்.

    ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்றும் வாங்கவில்லை. அவர்களின் உறவினர்கள் யாரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை 2 பேரின் உடல்களையும் வாங்கப்போவதில்லை என 2 பேரின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மறுபிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×