search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramesh Bidhuri"

    • ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்
    • பாராளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.டேனிஷ் அலியை தகாத வார்த்தைகளால் தெற்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதூரி விமர்சித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் அவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரி எம்.பி. பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு அவைத்தலைவருக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு, அந்த வார்த்தைகளை ஏற்கனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டதாக அவையை நடத்திய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார்.

    எனினும் ரமேஷ் பிதூரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

    இந்த விவகாரத்தில் ரமேஷ் பிதூரிக்கு எதிராக சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா கேள்வி எழுப்பினார். இதையடுத்து, "இனிமேல் இதுபோல் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ரமேஷ் பிதூரிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.

    ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த விவகாரத்தை பாராளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கூறும்போது, "எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சபாநாயகர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிடில் அவைக்கு வராமல் இருப்பது குறித்து யோசித்து வருகிறேன். ஏனென்றால் இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

    இந்நிலையில் மக்களவையில் பேசியது தொடர்பாக ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ.க. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுரைப்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்.
    • சமூக வலைதளத்தில் சிலர் கட்டுக்கதைகளை வெளியிட்டு புகழை கெடுக்க முயற்சி.

    பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி எதிர்க்கட்சி எம்.பி.யான இஸ்லாமியரை பார்த்து தீவிரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளையும் பாராளுமன்றத்திலேயே பேசிய போது அருகில் உட்கார்ந்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தற்போது தனக்கு சரியாக கேட்கவில்லை என மழுப்பி உள்ளார்.

    இது குறித்து பா.ஜ.க. எம்.பி. ஹர்ஷவர்தன் தனது வலைதளத்தில், "எக்ஸ் தளத்தில் எனது பெயர் டிரெண்டிங் ஆவதை பார்த்தேன். இரண்டு எம்.பி.க்கள் அவையில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்திய விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி இருப்பது பொருத்தமற்ற செயல். எங்களின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்."

    "சமூக வலைதளத்தில் எனக்கு எதிராக எழுதி வரும் இஸ்லாமிய நண்பர்களுக்கு, ஒரு சமூகத்திற்கு எதிராக அத்தகைய மொழியாடல் உபயோகிக்கப்படும் போது நான் அவ்வாறு செய்திருப்பேன் என்று நம்புகிறீர்களா? அரசியல் சூழ்ச்சி காரணமாக சமூக வலைதளத்தில் சிலர் இதுபோன்ற கட்டுக்கதைகளை வெளியிட்டு எனது புகழை கெடுக்க முயற்சிக்கின்றனர்."

    "எனது 30 ஆண்டு கால பொது வாழ்க்கையில், நான் லட்சக் கணக்கான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடன் எனது தொகுதி மட்டுமின்றி வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் பழகி இருக்கிறேன். எனது சிறுவயதில் இஸ்லாமிய நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன். என்னை பற்றி நன்கு அறிந்து கொண்டிருக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அவர்களை பற்றி நான் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறேன் என்று நன்றாகவே தெரியும்."

    "சாந்தினி சௌக் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருப்பதில் நான் பெருமகிழ்ச்சியாக உணர்கிறேன். அனைத்து சமூகத்தினரின் ஆதரவின்றி, இது சாத்தியமாகி இருக்காது."

    "இந்த விவகாரத்தில் எனது பெயர் தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து நான் வருத்தமடைகிறேன். அங்கு நடந்த களேபரத்தில், அங்கு என்ன பேசிக் கொண்டனர் என்றே எனக்கு சரியாக கேட்கவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கென சொந்த கொள்கைகள் உள்ளன," என்று தெரிவித்து உள்ளார்.

    • பிதூரியின் கருத்துக்களுக்கு எதிர்கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • பிதூரிக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கியது. இன்றுடன் (செப்டம்பர் 22) இந்த சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், கூட்டத் தொடரின் போது பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி பி.எஸ்.பி. தலைவர் தனிஷ் அலிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்த சம்பவம், அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சந்திரயான் 3 திட்டம் குறித்த விவாதத்தின் போது பேசிய தெற்கு டெல்லி எம்.பி. பிதூரி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உடனடி உத்தரவு பிறப்பித்தார்.

     

    தனிஷ் அலிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்த சமயம், மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் சிரித்துக் கொண்டு இருந்தார். பிதூரியின் கருத்துக்களுக்கு எதிர்கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா, பிதூரியிடம் பேசியதாகவும், அப்போது பிதூரி பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவையில் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்று பிதூரியிடம் சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா பிதூரிக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். மேலும், முஸ்லீம்கள் மற்றும் ஒ.பி.சி.-யினரை இழிவுப்படுத்துவது பா.ஜ.க. கலாசாரத்தில் உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ×