search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Primary Health Centers"

    • அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லை. பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
    • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்

    திருப்பூர்:

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிசியோதெரபிஸ்ட்டுகளை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:-

    மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறைகளில் பிசியோதெரபி மருத்துவம் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சிகிச்சையில் உடலுக்கு வெளியில் பாதிப்பு உள்ள பகுதியில் மட்டும் சிகிச்சை அளிப்பதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லை. பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட்டுகளை, இதுவரை நியமிக்கவில்லை.

    இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்ட்டுகளே உள்ளனர். இதனால், அனைத்து நோயாளிகளுக்கும், தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    இப்பிரச்னைக்கு தீர்வாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக பிசியோதெரபிஸ்ட்டுகளை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும், பயிற்சி பிசியோதெரபிஸ்ட்டுகளை ஊக்க ஊதியத்துடன், தற்காலிகமாக பணியில் அமர்த்த வேண்டும்.ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க, போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில், பிசியோதெரபி சிகிச்சையை சேர்க்க வேண்டும். இதன் வாயிலாக ஏழை மக்களுக்கு இச்சிகிச்சை எளிதில் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது.
    • பாளை பர்கிட்மாநகர் மற்றும் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளது.

    நெல்லை:

    மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது. இதற்காக மாநில அளவிலான ஆய்வு குழுக்கள் ஆண்டுதோறும் ஆரம்ப சுகாதார நிலையங் களை ஆய்வு செய்யும்.

    ஊக்கத்தொகை

    இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த ரொக்க விருதில் 25 சதவீதம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    4-வது ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு குழு, தேசிய தர காப்பீட்டு சான்றிதழுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சான்றிதழை புதுப்பித்தல் மற்றும் உயர் உதவிக்காக ஆய்வு செய்யும்.

    தரக்குழு ஆய்வு

    அதன் அடிப்படையில், கடந்த மாதம் 19 மற்றும் 20-ந்தேதிகளில் தர காப்பீட்டு குழுவானது நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் அருகே உள்ள பர்கிட் மாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தது. தொடர்ந்து அதே மாதத்தில் 28 மற்றும் 30-ந்தேதிகளில் நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அந்த குழுவினர் அங்கு உள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் அங்குள்ள ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை கூடங்கள், மருந்தகம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கூடங்களை ஆய்வு செய்தனர்.

    70 சதவீதம் மதிப்பெண்

    ஆய்வுக்கு பின்னர் நெல்லை மாவட்ட தர நிர்ணய மருத்துவ அலுவலர் பிரவின் குமார் கூறியதாவது:-

    பாளை பர்கிட்மாநகர் மற்றும் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளது. இதனால் அவை இரண்டும் தேசிய தர காப்பீட்டு சான்றிதழை பெற தயாராக உள்ளன. எதிர்காலத்தில் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே போன்ற ஆய்வுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

    தற்போது பர்கிட் மாநகருக்கு ரூ.7 லட்சமும், கல்லூர், திசையன்விளைக்கு தலா ரூ.10 லட்சமும் கிடைத்துள்ளது. இப்போது கிடைக்க உள்ள தரச்சான்றிதழ் மேலும் வசதிகளை சேர்க்க கூடுதலாக ரூ.3 லட்சம் கிடைப்பதை உறுதி செய்யும்.

    வைராவிகுளம், ரெட்டியார்பட்டி, பணகுடி, கீழநத்தம், வன்னிகோனேந்தல், நவ்வலடி, கல்லிடைக்குறிச்சி, ஏர்வாடி மற்றும் மன்னார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதேபோல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தொடங்கப்படவுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஜெகதளாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் புதிய நலவாழ்வு மைய தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மையத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அந்த நாடு ஆரோக்கியம் நிறைந்த நாடாக இருக்க வேண்டும். உடல் நலத்தை பேணி காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக ஆரோக்கியத்தில் உலகளவில் நமது இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை உணவு, உடை மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு செலவு செய்வதைவிட எதிர்பாராத வகையில், உடல்நலத்தை பேணிகாப்பதற்காக அதிகளவில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 6 கோடி கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளிலேயே 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

    இதேபோல் சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், புகையினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை போக்கும் வகையிலும், 8 கோடி ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2-ந் தேதி அன்று பிரதமரால் ஆயுஸ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 1.50 லட்சம் மக்கள் நலவாழ்வு மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 10,487 மையங்கள் உள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் தொடங்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேர சேவைகள் வழங்கப்படும். இதன்படி அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களை நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுகிறது.

    இந்த நலவாழ்வு மையங்களில் தாய் சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் நலம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம், குடும்ப நலம், தொற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, தொற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை சிகிச்சை, பல் சிகிச்சை, மன நலம், முதியோர்கள் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை அவசர முதல் உதவி சிகிச்சை ஆகிய சேவைகள் அளிக்கப்படும்.

    அனைவருக்கும் இலவசமாக சுகாதார சேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே நலவாழ்வு திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, நோய் நீக்கம், மறுவாழ்வு ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களும் அவர்களது தகுதிபாராமல் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். இந்த அரிய திட்டத்தின் முதற்படியாக குன்னூர் வட்டாரத்திலுள்ள ஜெகதளா துணை சுகாதார நிலையம், “நலவாழ்வு மையமாக” தொடங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நலனை கருத்தில கொண்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டும்”

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா என்று திமுக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அனகா புத்தூர், பொழிச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என்று பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) துணைகேள்வி எழுப்பினார்.

    அனகாபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 400 சதுரடியில் 6 படுக்கை வசதியுடன் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். இதே போல பொழிச்சலூர் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர்.

    இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இட வசதியின்றி சிறிய கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என கேட்டார்.

    இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், “இ.கருணாநிதி எம்.எல்.ஏ. குறிப்பிடும் ஆரம்ப சுகாதார நிலையங்களை இரண்டு முறை பார்வையிட்டேன். உறுப்பினர் சொல்வது உண்மைதான்.

    சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×