search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molestation complaint"

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவசர காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையிலான இந்த அலுவலகம், 24 மணிநேரமும் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில், சரண்யா என்பவர் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    தீக்காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அப்போதைய மாவட்ட கலெக்ட‌ராக இருந்த கருணாகரன், கருணை அடிப்படையில் இந்த தற்காலிகப் பணியை வழங்கியிருந்தார். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் தாசில்தாரான திருப்பதி என்பவர், சரண்யாவுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவுகொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சரண்யா கூறியதாவது:‍-

    நான் செங்கோட்டையில் வசித்துவருகிறேன். என் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால், உடலில் தீவைத்துக்கொண்டதில் காயம் ஏற்பட்டது. பின்னர், என்னுடைய இரு குழந்தைகளையும் காப்பாற்ற வழியின்றித் தவிப்பதை அப்போதைய மாவட்ட கலெக்டர் சுட்டிக் காட்டியதால், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தட்டச்சராகப் பணி வழங்க நடவடிக்கை எடுத்தார்.

    இந்த பிரிவில் தாசில்தாராக உள்ள திருப்பதி என்பவர், கடந்த சில தினங்களாக என்னிடம் தவறான நோக்கத்தில் பழக ஆரம்பித்தார். விடுமுறை நாட்களில் எனக்கு வேலை கொடுத்து வரவழைக்கும் அவர், அருகில் அமர்ந்துகொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    ஒருகட்டத்தில் அவரது சேட்டைகள் அத்துமீறியதால் கண்டித்தேன். இதனால் அவர் என்னை மிரட்டினார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்திருந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட தாசில்தார் என்னை பணியில் இருந்து நீக்கியதாக கூறி வேறு நபர்களை பணியில் அமர்த்தி உள்ளார்.

    அதன் பின்னரே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் உதவியை நாடினேன். போலீசிலும் புகார் செய்தேன். ஆனால் இதுவரை யாரும் எந்த விசாரணையும் செய்யவில்லை. தாசில்தார் திருப்பதி மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்கு இரு பெண்குழந்தைகள் இருக்கும் நிலையில், மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை தாசில்தார் கந்தசாமி அந்த பெண் ஊழியர் சரண்யாவிடம் விளக்கம் கேட்பதற்காக வந்தார். இதனிடையே சரியாக வேலைக்கு வராததால் கண்டித்ததாகவும், அதன்காரணமாக அவர் பாலியல் புகார் கூறியதாகவும் தாசில்தார் திருப்பதி தரப்பில் கூறப்பட்டது.

    மேலும் அவர் கூறுகையில், பெண் ஊழியரை வேலையில் இருந்து நீக்கவோ, வேலையில் சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்றார். பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் தற்போது வெளியாகி வருகிற நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #tamilnews
    பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் சென்னையை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் மைதிலி, புனிதா பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் 5 பேர் குழு கடந்த மாதம் 24-ந் தேதி திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் விசாரணை நடத்தியது.

    கல்லூரி முதல்வர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வீடியோக பதிவு செய்தனர்.

    பின்னர், விசாரணை அறிக்கையை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமியிடம் சமர்பித்தனர். முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட மாணவியை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைத்தது.

    அப்போது, மாணவி நீதிமன்ற அனுமதிபெற்று விசாரணையில் பங்கேற்பதாக தெரிவித்தார். இதனால், மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக மாணவிக்கு 31-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு சம்மன் அனுப்பியது.

    நீதிமன்ற அனுமதி பெற்று மாணவி நேற்று மதியம் 1 மணிக்கு வேளாண் கல்லூரி வளாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.30 மணிவரை சுமார் 4 மணி நேரம் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணை முழுவதும் ஒழுங்கு நடவடிக்கை குழு வீடியோவில் பதிவு செய்தது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து மாணவி விரிவாக விளக்கமளித்தார். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை வேந்தரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தனது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தார். அப்போது, வகுப்பறையில் இருந்த சக மாணவ, மாணவிகளை பேராசிரியைகள் ‘வாருங்கள் வெளியே போகலாம். அந்த மாணவி மட்டும் தனியாக இருக்கட்டும்’ என்று கூறி அனைவரையும் வெளியே அழைத்து சென்றனர்.

    இதேபோல் மற்ற வகுப்புகளில் இருந்த மாணவ, மாணவிகளையும் பேராசிரியைகள் வெளியே அழைத்து செல்வதாக கூறினர். மாணவி மட்டும் தனது வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்தார். பாலியல் புகார் கூறிய மாணவியை வகுப்பறையில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் உள்ளே வருவோம் என்று பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கூறினர்.

    இதையடுத்து, மாணவி வலுகட்டாயமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், அவருடைய படிப்பு கேள்வி குறியாகியுள்ளது. மாணவி கூறியபோது, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையறிந்த வாழவச்சனூர் கிராமமக்கள் ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக கல்லூரி முன்பு திரண்டனர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    மத்திய பிரதேசத்தில் செக்ஸ் புகார் வாபஸ் பெற மறுப்பு தெரிவித்த தலித் மாணவி தலையின் மீது பாராங்கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சியோனியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த தலித் மாணவி படித்து வந்தார்.

    அந்த மாணவியின் ஊரைச்சேர்ந்த அணில் மிஸ்ரா (வயது 38) என்பவர் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மாணவி, அணில் மிஸ்ரா மீது போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரை வாபஸ் வாங்கும்படி மாணவியை அணில் மிஸ்ரா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் மாணவி அதை கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாணவி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். சியோனியில் பஸ் நிலையத்தில் இறங்கி கல்லூரிக்கு அவர் நடந்து சென்றார்.

    அப்போது அணில் மிஸ்ரா மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். மாணவி அருகே வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றார்.

    அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை தள்ளிவிட்டு விட்டு மாணவியை ரோட்டு ஓரமாக இழுத்து சென்று கீழே தள்ளினார். பின்னர் அங்கிருந்த பாராங்கல்லை எடுத்து மாணவியின் தலையில் தூக்கி போட்டார்.

    இதில் மாணவியின் தலை நசுங்கி ரத்தம் கொட்டியது. உடனே அணில் மிஸ்ரா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயத்துடன் கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அணில் மிஸ்ராவை தேடிவருகிறார்கள்.
    சோழவந்தானில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவரது தாயார் மற்றும் தங்கை மார்க்கெட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் தென்னை ஓலை வாங்க வந்த அதே ஊரைச் சேர்ந்த விஜயன் (40) என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி கூச்சல் போட்டதும் அவர் தப்பி விட்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த தாயாரிடம் அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி கதறி அழுதார்.

    இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கேரளாவில் பாதிரியாரின் பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி கன்னியாஸ்திரியை மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பிரான்கோ முல்லக்கல்.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆயராக இருக்கும் பிரான்கோ முல்லக்கல், கோட்டயம், குரு விலங்காடு பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கோட்டயம் போலீசில் அந்த கன்னியாஸ்திரி புகார் கொடுத்தார். அதில் தன்னை ஆயர் பிரான்கோ முல்லக்கல் 13 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் எனக்கூறியிருந்தார்.

    இது தொடர்பாக கோட்டயம் போலீசார் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக ஜலந்தர் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான நடவடிக்கைகளை கோட்டயம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் கன்னியாஸ்திரி கொடுத்த புகார் குறித்த ஆதாரங்களையும் திரட்டி வந்தனர்.

    இந்நிலையில் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீதான புகாரை வாபஸ் பெற வைக்கும் நடவடிக்கைகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போலீசில் சாட்சியம் அளித்த கன்னியாஸ்திரிகளை மிரட்டி புகாரை வாபஸ் பெறவைக்கும் முயற்சிகளும் நடந்தன.

    இதில் அனுபமா என்ற கன்னியாஸ்திரியை ஆயரின் ஆதரவாளரான பாதிரியார் ஒருவர் மிரட்டும் ஆடியோ பேச்சு நேற்று மலையாள ஊடகங்களில் வெளியானது.

    11 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில் பேசும் பாதிரியார், வழக்கை வாபஸ் பெற்றால் கன்னியாஸ்திரியின் குடும்பத்திற்கு 10 ஏக்கர் நிலமும், புதிய கான்வென்ட் கட்டிடமும் கட்டி தரப்படும் என ஆசைவார்த்தை கூறுகிறார்.

    மேலும் வழக்கை வாபஸ்பெறாவிட்டால் கன்னியாஸ்திரி பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அசாம், ஒடிசா மாநிலங்களுக்கு அவர் மாற்றப்படுவார் எனவும் பாதிரியார் எச்சரிக்கிறார்.

    ஆனால் கன்னியாஸ்திரி, பாதிரியாரின் மிரட்டலுக்கு பயப்படபோவதில்லை எனக்கூறியதோடு, வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்.

    இது பற்றி பாலியல் புகாரை விசாரிக்கும் தனிப்படை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது பற்றி கூறும் போது, இந்த விவகாரம் வழக்குக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்படும், என்றனர். #tamilnews
    தனக்கு எதிராக பாலியல் புகார் செய்த மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர் குமாரவேல். இவர், அவரது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த மாணவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் பேராசிரியரிடம் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குமாரவேல் கல்லூரி தலைவரிடம் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில், அந்த மாணவி தனக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்று தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். இதை எதிர்த்து குமாரவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் தந்தால் விசாரணை மேலும் தாமதமாகும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார்.

    பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘புகார் கொடுத்த மாணவியை கல்லூரியைவிட்டு வெளியே செல்ல தடை விதிக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார்.

    எனவே, மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை புதுச்சேரி மாநில சட்டப்பணி ஆணைக்குழுவிடம் 2 வாரத்துக்குள் செலுத்தவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    ×