search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mills"

    • கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது.
    • சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மங்கலம்:

    திருப்பூர், கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் சந்தித்து வரும் தொடர் நஷ்டத்தினை தவிர்க்க தென் இந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 15-ந் தேதி முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இவர்கள் கடந்த மே மாதம் முதல் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம் செய்திருந்த நிலையில் 15-ந்தேதி முதல் முழு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதும், அதனால் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவைவிட விற்பனை விலை மிகக்குறைவாக உள்ளதுமே நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் என தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பின் கெளரவ செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு கிலோ பருத்தியின் கொள்முதல் விலை ரூ.152 முதல் ரூ.194 ஆக உள்ளது. இந்த பருத்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 40ம் நம்பர் (40's Count) தரத்திலான நூல் விலை கிலோ ரூ 235க்கு விற்கப்படுகிறது. கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது. ஆனால் அந்த நூலை உற்பத்தி செய்வதற்கான ஆள் கூலி, மின் கட்டணம், வரி உள்ளிட்ட செலவினங்களை சேர்த்து ரூ.80 வரை செலவாகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.40க்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது.

    சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் அதிகம் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் மக்கள் மத்தியில் தேவையில்லாததால் நூல்களுக்கான விலை கிடைப்பதில்லை.

    இந்தியாவில் தேவையை விட இருப்பு அதிகம் இருப்பதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கு காரணம், இந்தியாவில் உற்பத்தி செய்யும் நூல்களின் விலை, ஏற்றுமதி செய்வதற்காக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இல்லை. ஏற்கனவே உள்ள உற்பத்திச்செலவைத்தாண்டி 11 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதால், ஏற்றுமதி செய்வதற்கும் உகந்த சூழல் இல்லை என்கிறார் ஜெகதீஷ்.

    தமிழ்நாட்டில் சுமார் 600 நூற்பாலைகளில், 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அவர் , எஞ்சியுள்ள நூற்பாலைகளும் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சூழல் எப்போது மாறும் என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் நிலைமை சீரானால், மூடப்பட்டுள்ள நூற்பாலைகள் மீண்டும் திறந்து தொழில் செய்ய முடியும், இரண்டு மாதங்களுக்கு மேலானால், அவர்கள் நிரந்தரமாக மூடுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது உற்பத்தியை நிறுத்தியிருக்கும் எங்களைப்போன்ற சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் நிலையும் அதுதான் என்றார்.

    இந்நிலையில் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, கழிவுப் பஞ்சை மூலப் பொருளாகக்கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட்(ஓஇ) ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் 300 ஆலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 ஆலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறு குறு நடுத்தர நூற்பாலைகளைப்போலவே, ஓபன் எண்ட் ஆலைகளும் நஷ்டத்தில் இயக்க முடியாமல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறுகையில், மின்சாரத்திற்கான தேவை அதிகம் இருக்கும் நேரங்களில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிக மின் கட்டணம் என்பது சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மட்டுமின்றி, ஓபன் எண்ட் ஆலைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. பெரிய நிறுவனங்களால் சொந்தமாக காற்றாலை அமைத்து அதன் மூலமாகவோ, அல்லது சூரிய ஆற்றல் மூலமாகவோ மின்சாரம் சேமித்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், சிறு குறு நிறுவனங்கள் முழுக்க முழுக்க அரசின் மின்சாரத்தையே நம்பியிருக்கிறோம். அதேவேளையில், நாங்கள் 24 மணிநேரமும் செயல்படும் ஆலைகளாக உள்ளோம். அதனால் சுதந்திர இந்தியாவில் நாங்கள் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது நஷ்டத்திற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம்.

    இந்தியா ஒரே நாடாக இருந்தாலும், மாநிலத்திற்கு மாநிலம் ஜவுளிக்கொள்கைகள் வேறுபடுவதால், மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும், அதில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சல் மிகவும் குறைவு. சில காலங்களில் பருத்தி விளைச்சலே இருக்காது. ஆனால், இங்குள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறனால், மற்ற மாநிலங்களில் விளையும் பருத்தியைப் பெற்று, இங்கு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எந்தெந்த மாநிலங்களில் பருத்தி விளைகிறதோ அங்கேயே ஜவுளி உற்பத்தி தொழில் துவங்க பல்வேறு மானியங்களை அந்தந்த மாநில அரசுகள் தருவதால் அந்த மாநிலத்தில் இருப்பவர்களால் லாபகரமாக இயங்க முடிகிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் சந்தையில் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பருத்தி கொள்முதல் விலையும், நூல் உற்பத்தி செய்வதற்கான செலவும், நூல் விற்பனை விலையும் ஒன்றுதான். ஆனால், ஜவுளித்தொழிலுக்கு ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு வகையில் மானியங்கள் கொடுப்பதால், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களால் லாபகரமாக இயக்க முடிகிறது. அதாவது அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அவர்கள் பெறும் மானியத்தின் மூலம் ஈடு செய்து லாபம் ஈட்டுகிறார்கள்.இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

    பருத்தி விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், நாம் ஒரு ஹெக்டேருக்கு 350 கிலோ முதல் 450 கிலோ பருத்திதான் விளைவிக்கிறோம். ஆனால் இதே சர்வதேச அரங்கில் நம்முடன் போட்டியிடும் நாடுகளில், ஹெக்டருக்கு 750 கிலோ முதல் 1000 கிலோ வரை விளைவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பருத்தி விலை முதல் நூல் விலை வரை, அனைத்தும் குறைவானதாகவும் சர்வதேச சந்தையில் போட்டிபோடும் வகையிலும் உள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தவிர்க்க உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ள நிலையில் செய்வதறியாது தவிக்கின்றனர் திருப்பூர், கோவை மாவட்ட நூற்பாலைகளில் பணியாற்றும் நூற்பாலைத் தொழிலாளர்கள்.

    கொரோனா காலத்தில் வாங்கிய கடன்களையே தற்போதுதான் திரும்பச் செலுத்தி வந்தோம். தற்போது, ஆலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்து வரும் நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.

    தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்தில் உள்ள நூற்பாலை தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 350 முதல் ரூ.500 வரை கூலியாக வழங்கப்படுகிறது. ஒருவர் 10 வருடத்திற்கு மேல் வேலை செய்திருந்தால்தான் ரூ .500 கூலி கொடுப்பார்கள். இல்லையென்றால் ரூ .350ல் முதல் ரூ. 400 வரைதான் கூலி கிடைக்கும். இந்த கூலி உற்பத்தி காலத்தில் வழங்கப்படுவது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பளத்தை குறைத்து கொடுக்கிறார்களா அல்லது சம்பளமே இல்லை என சொல்லப்போகிறார்களா என்பது அவர்கள் மாதச்சம்பளம் கொடுக்கும்போதுதான் தெரியும் என்கின்றனர் தொழிலாளர்கள்.

    தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கேட்ட போது, தொழிலாளர்களின் நலனை தொழில் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் . அதிக நஷ்டத்தில் இயக்கிய காலத்திலேயே, தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுத்துள்ளோம். தற்போது உற்பத்தி நிறுத்தத்தால் அவ்வளவு நஷ்டம் இல்லை என்பதால் அவர்களுக்கு தேவையானதை நாங்கள் எப்போதும் பார்த்துக்கொள்வோம் என நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே நூற்பாலை பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    வடமதுரை அருகே நள்ளிரவில் மில்லில் இருந்து இளம்பெண்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வடமதுரை:

    வடமதுரை அருகே நாடுகண்டனூர் பிரிவு பகுதியில் பண்ணாரி அம்மன் மில் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு மில்லில் இருந்து சுவர் ஏறி குதித்து 2 இளம்பெண்கள் தப்பி ஓடினர். காவலாளி அவர்களை பிடிக்க முயன்றும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று மறைந்தனர்.

    விசாரணையில் தப்பி ஓடியது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த பிச்சை முத்து மகள் சந்தியா (வயது 28), முத்துப்பாண்டி மகள் சரண்யா (18) என தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய இளம்பெண்களை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    வறுமை காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை உள்ளிட்டவைகள் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறியே. மேலும் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சினையில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து மில் வளாக விடுதியிலேயே ஒரு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தார்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மில் வேலைக்கு செல்லும் இளம்பெண்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வறுமை காரணமாக வேறு வழி இல்லாமல் அவர்கள் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இருந்தபோதும் வேலைப்பளு மற்றும் பாலியல் தொல்லை காரணமாக அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதி மில்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×