search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kachchativu"

    கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். #Fishermendeath

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரும், கருப்பையா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்ததாக கூறி 28 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மீனவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

    அப்போது கருப்பையா படகில் இருந்த முனியசாமி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை காப்பாற்ற கடலில் குதித்தனர். ஆனால் பலனில்லை.

    இதற்கிடையில் முனியசாமியின் உடல் யாழ்பாணம் அருகே கரை ஒதுங்கியது. இந்த தகவலை இலங்கை அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

    இந்திய அதிகாரிகள் ராமேசுவரம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் இலந்தை கூட்டத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இன்று காலை சண்முகப்பிரியா, அவரது கணவர் சண்முகநாதன் மற்றும் உறவினர்கள ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு உதவி இயக்குநர் யுவராஜிடம், இலங்கையில் கரை ஒதுங்கிய தனது தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். #Fishermendeath

    கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் உருவானது. #Fishermen #SriLankaNavy #TNFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது இரும்பு பைப், கற்களை வீசி தாக்கினர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் ஒரு படகில் ‘டமார்’ என வெடி சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. மீனவர்கள் உடனடியாக அதனை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.

    கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று அவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்தது. இதே நிலை நீடித்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர். #Fishermen #SriLankaNavy #TNFishermen

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர் கடலில் தவறி விழுந்தார். அவரை கடலுக்குள் தள்ளி விட்டதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #Fishermen #Srilankanavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்ககூடாது என மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகில் சோதனை செய்வதாக கூறி ஏறினர்.

    அப்படி ஏறும்போது கடற்படை வீரர் ஒருவர் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடலில் விழுந்த வீரரை, இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடினர்.

    ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்த சம்பவத்தால், மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு, மீனவர்கள் மாலையிலேயே ராமேசுவரம் துறைமுகம் திரும்பி விட்டனர்.

    அவர்கள் கூறுகையில், கடற்படை வீரர் கடலில் விழுந்ததால் இலங்கை கடற்படையினர் ஆத்திரம் அடைந்தனர். கச்சத்தீவு தலைமன்னார் உள்ளிட்ட கடல் பகுதிகளை வலம் வந்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, எங்களை (மீனவர்களை) விரட்டியடித்தனர்.

    இதனால் உயிர் பயத்தில் நாங்கள், பாதியிலேயே மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பி விட்டோம். இதுவரை கடலில் விழுந்த கடற்படை வீரரை மீட்டதாக தெரியவில்லை.

    எனவே இலங்கை கடற்படையினர் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள். நாங்கள் அடுத்தமுறை மீன் பிடிக்கச் செல்லும்போது எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்களோ? என்ற அச்சம் உள்ளது. மத்திய மாநில பாதுகாப்புத் துறையினர், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையில் இலங்கை கடற்படையில் இருந்து இந்திய கடற்படைக்கும், மீன்வளத்துறையினருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அதில் கச்சத்தீவு அருகே டி.என்.10 எம்.எம்.364 என்ற பதிவு எண் கொண்ட தமிழக விசைப்படகு நேற்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அந்த படகில் 7 மீனவர்கள் இருந்தனர். அவர்கள், படகிற்குள் சோதனைக்கு சென்ற எங்கள் வீரரை (இலங்கை கடற்படை வீரர்) கடலுக்குள் தள்ளி விட்டனர். இது குறித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு மீனவர்கள் விரட்டியடிப்பு, கடலில் விழுந்த வீரரை தேடும் பணி போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #Fishermen #Srilankanavy

    இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை இந்திய எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இந்த பகுதியில் மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உடனே செல்லுங்கள் என மிரட்டல் தொணியில் கூறினர்.

    அந்த சமயத்தில் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கினர். இதையடுத்த மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல டீசல், கூலி என ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் எங்களால் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றனர்.

    இதனிடையே பாம்பனையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் வானிலை மையமும் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறை முகம் வெறிச்சோடியது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். #Rameswaramfishermen #fishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று விசைப் படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 30-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.

    இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனக்கூறி மிரட்டியதோடு உடனே இங்கிருந்து செல்லுங்கள் என விரட்டினர்.

    மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தீர்வு காணவேண்டும் என்றனர். #Rameswaramfishermen #fishermen

    நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.

    நேற்று ராமேசுவரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 600 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 7 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற் படையினர் வந்தனர்.

    அவர்கள் தங்கள் படகை, விசைப்படகுகளின் மீது மோதுவது போல் வந்ததால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இங்கு மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசரம் அவசரமாக புறப்பட்டனர். அப்போது அவர்களது வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து எறிந்து சேதப்படுத்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது தாக்குதல் ஆகும்.

    இதனால் எங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க முடியாத நிலையிலும் வலை உள்ளிட்ட உடமைகளும் சேதப்படுத்தப்பட்டதால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.

    ×