என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Constitution Day"

    • ஆண்டுதோறும், நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் என கொண்டாடப்படுகிறது
    • பல வழக்கறிஞர்கள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்

    இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2004 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாறிய அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்திய அரசியல் சாசனத்தை 299 பேர் இணைந்து உருவாக்கி, அமல்படுத்திய நாள் இன்று
    • இந்தியாவால் ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக நாடாகச் செயல்பட முடியுமா என்று உலகநாடுகள் ஐயப் பார்வை பார்த்தன.

    இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

    அரசியலமைப்பு தினத்தை ஒட்டி நடிகரும் மக்கள்நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "75 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வரலாற்றில் மறக்க இயலாத அத்தியாயம் எழுதப்பட்டது. நம்மை 'இந்தியப் பிரஜைகளாகிய நாம்' ஆட்சி செய்வதற்கு வழிகோலும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களும் பெண்களுமாக 299 பேர் இணைந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அயராத சிந்தனையின் விளைவாக உருவாக்கி, அமல்படுத்திய நாள்.

    அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறையாண்மையின் குறியீடாக, ஜனநாயக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒரு பெரும் நல்நோக்கத்தோடு இணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள்.

    ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது, முன்னுதாரணமில்லாத பெரும் சவால்களை நாடு எதிர்கொண்டிருந்தது. தேசப்பிரிவினையின் போது ஏற்பட்ட மதக் கலவரத்தால் மனித குல வரலாற்றிலேயே இல்லாதபடி லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்கூட்டமாக இடம்பெயர நேர்ந்தது. எல்லைப் பகுதிகளில் யுத்தம் அடர்த்தியாயிற்று. புதிதாகப் பிறந்த நாடு, பல்வேறு மொழி பேசுபவர்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களையும், மாறுபட்ட கலாசாரங்களோடு வாழ்ந்தவர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டிய பெரும்செயலை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவால் ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக நாடாகச் செயல்பட முடியுமா என்று உலகநாடுகள் ஐயப் பார்வை பார்த்தன.

    ஆனால், அரசியல் சாசனத்தை உருவாக்கிய தேசபக்தர்கள் இதைச் சவாலாகப் பார்க்காமல், வாய்ப்பாகவே அணுகினார்கள். இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் மனப்பூர்வமாகவும் ஒன்றுபட்டும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாற்றில் முதன் முறையாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, உலகுக்கே ஒரு பொருள்பொதிந்த தருணமாகத் திகழ்ந்தது.

    இந்தியாவின் புராதனக் கலாசாரம், சுதந்திரப்போரின் குறிக்கோள்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணத்தை அவர்கள் உருவாக்கினர். அது சட்டம் தொடர்பான வெறும் சாசனம் மட்டுமல்ல; பிரஜைகளாக நாம் யார், நாம் எதை விழைகிறோம், ஒவ்வொரு பிரஜையின் உரிமையையும் மரியாதையையும் நாம் எப்படிப் பேணிக்காக்கப் போகிறோம் என்பதற்கான பிரகடனம் அது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய பெருமக்கள், ஆள்வதற்கான திட்டவரைவை மட்டும் தரவில்லை; சுதந்திரமான, ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான தீர்க்கதரிசனத்தையும் கொடுத்தனர்.

    அரசியல் சாசனத்தின் அந்த மகத்தான வார்த்தைகள் இந்திய வரலாற்றின் பாதையை மாற்றியதோடு நின்றுவிடவில்லை;

    சுதந்திர இந்தியாவில் இன்று நாம் வாழ்வதற்கும் சுவாசிப்பதற்குமான அந்த குறிப்பிடத்தக்க வார்த்தைகள் இந்தியாவின் வரலாற்றின் போக்கை மாற்றியது மட்டுமல்லாமல், இன்று ஒரு பெருமைமிக்க, சுதந்திரமான இந்தியாவில் நாம் வாழவும் சுவாசிக்கவும் காரணமாக இருக்கிறது; ஜனநாயகப் பாதையை உலகம் பின்பற்றுவதற்கான கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து பிரகாசித்துவருகிறது.

    தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், நிலைநிறுத்தவும், இந்தியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவும், இந்த சாசனத்தை உருவாக்கியவர்களின் எண்ணத்தைப் பெருமைப்படுத்தவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இன்று அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், இந்த சாசனத்தில் அடங்கியிருக்கும் லட்சியங்களை மனதில் கொள்வோம்; இதை உருவாக்கிய அந்த 299 பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இன்னும் நிறைவேறாத புதிய இந்தியாவுக்கான கனவுகளை நனவாக்க உழைப்போம்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    ×