search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband escaped"

    ஆத்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவர் அவரை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். (வயது 65). இவர் பெத்தாம்பட்டி டோல்கேட் அருகே உள்ள மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சிங்காரத்தின் பழக்கம்- வழக்கம் சரியில்லை என்பதை தெரிந்து கொண்டும் அவரது சந்தேக டார்ச்சர் காரணமாக முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து சிங்காரம் 2-வதாக வெள்ளையம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்காரத்தின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அதனை தாங்க முடியாமல் வெள்ளையம்மாள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் சிங்காரம் 3-வதாக சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு தங்கம், வேலு, சக்தி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    சுமதி வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இந்த பசுமாடுகளிடம் பால் கறந்து அதனை தினமும் பால் பண்ணை மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கொடுத்து விற்பனை செய்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குழந்தைகளின் படிப்பு செலவை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் சிங்காரம் தனது மனைவி சுமதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஊர்மக்கள் சமாதானம் செய்து வைத்தும் சிங்காரம் கேட்கவில்லை என தெரிகிறது.

    நேற்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த சிங்காரம், இனிமேல் தனது மனைவியை விட்டு வைக்கக் கூடாது. அவரை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக நேரம் பார்த்து தூங்காமல் காத்திருந்தார்.

    இன்று அதிகாலை சுமதி எழுந்து வீட்டில் வெளியே மாட்டுகொட்டகையில் கட்டியிருந்த பசுமாடுகளிடம் பால் கறப்பதற்காக வழக்கம் போல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.

    அப்போது மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த சிங்காரம் ஒரு பெரிய செங்கல்லை எடுத்துக்கொண்டு, பின்பக்கமாக வந்து சுமதியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அதே இடத்திலேயே சுமதி சுருண்டு விழுந்தார். தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தன் கண்முன்னே மனைவி துடித்து கொண்டிருப்பதை கண்டு மனம் இரங்காமல் சிங்காரம் ஈவு, இரக்கமின்றி வெறித்தனத்துடன் சம்மட்டி கம்பால் சுமதி தலையில் சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

    சுமதி இறந்து விட்டதை உறுதி செய்த சிங்காரம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    காலையில் நீண்ட நேரமாக தாயார் வீட்டிற்கு வராததால் மகன் வேலு, அம்மாவை தேடி மாட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தார். அங்கு தாய் சுமதி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து ஊர் மக்கள் அங்கு கூடி ஆத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தாயார் உடலை பார்த்து 3 குழந்தைகளும் அம்மா, அம்மா என கதறி அழுதனர். இதை கண்டு அங்கு கூடி நின்ற மக்கள் சோகம் அடைந்தனர். தாயை இழந்து தவித்து நின்ற குழந்தைகளுக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சிங்காரத்தின் சொந்த ஊர் ஆறகளூர் பகுதியாகும். எனவே, இவர் ஆறகளூர் பகுதிக்கு தப்பி சென்று பதுங்கி இருக்கலாம் என கருதி தனிப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் பிடியில் சிங்காரம் சிக்கினால் தான் சுமதியின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அவரை கொலை செய்து விட்டு 4-வது திருமணத்திற்கு திட்டமிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

    அதுமட்டுமின்றி பிரிந்து சென்ற முதல் மனைவி எங்கு இருக்கிறார்? அவர் என்ன ஆனார்? 2-வது திருமணம் செய்வதற்காக அவரையும் சிங்காரம் கொலை செய்தாரா? என்பன போன்ற பல்வேறு முடிச்சுகள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன.
    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக மின்வாரிய பெண் ஊழியரை கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலத்தை அடுத்துள்ளது கரட்டூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). எல்.ஐ.சி.ஏஜண்டாக உள்ளார்.

    இவரது மனைவி பெயர் ஜோதிமணி (35). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் கிடையாது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வீட்டின் மற்றொரு பகுதியில் ஜோதிமணி தனியாக வாழ்ந்து வந்தாராம்.

    பணி காரணமாக ஜோதிமணி பல்லடம் மற்றும் காங்கயத்தில் இருந்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் மட்டும் சிவகிரி அருகே கரட்டூருக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோதிமணி ஆயுத பூஜை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவர் தமிழ்மணி மனைவி ஜோதிமணியிடம் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவோம் என்று கூறுவாராம். ஆனால் அதற்கு ஜோதிமணி விவாகரத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டேன். உங்களிடம்தான் உங்கள் மனைவியாகத்தான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் இதேபோல் கணவன் மனைவி இடையே விவாகரத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி மனைவி ஜோதிமணியை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் கிடந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் ஜோதிமணியின் ஒரு கை துண்டானது. மேலும் தலை மற்றும் உடலில் வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்ததும் கணவர் தமிழ்மணி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    தலைமறைவான தமிழ்மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    காஞ்சீபுரத்தில் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விமல். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பெண் வெல்லா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் வேளச்சேரியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் வெல்லா காஞ்சீபுரம் அருகே வெள்ளைக்கேட் பகுதியில் ஆடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக போதையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெல்லாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    போதை தெளிந்த பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் விமலுக்கும், வெல்லாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விமல் வீட்டிலேயே போதை பொருள் பயன்படுத்தி வந்ததாலும் தற்போது வேலையில்லாமல் இருந்ததாலும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

    சம்பத்தன்று இருவரும் போதையில் இருந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த விமல் காரில் வெல்லாவை வெளியே அழைத்து சென்று இருக்கிறார். காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் பகுதியில் சென்றபோது காரில் இருந்து வெல்லாவை கீழே தள்ளி விட்டு சென்று விட்டார்.

    அங்கு போதையில் சுற்றிய வெல்லாவை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் அவரை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல்பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அவரை காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் அருகே விட்டு சென்றுள்ளனர்.


    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பகுதி மக்களிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் போலீசுக்கு தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் வெல்லாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு விமல் இல்லை. வீடு காலியாக இருந்தது.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சீபுரம் போலீசார் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 ஆட்டோ டிரைவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கணவர் விமலையும் தேடி வருகிறார்கள்.

    வெல்லாவை கிழக்கு கடற்கரை சாலை அருகே பனையூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
    சென்னை அண்ணாநகரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    அண்ணாநகரில் கிழக்கு நியூகாலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (34). கூலி தொழிலாளி.

    இவருக்கு அம்மு (25) என்ற மனைவியும் மோகன கிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர். மகன் அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

    சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வருவார். அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவும் கணவன், மனைவி இடையே தகராறு நடந்தது.

    இதையடுத்து சீனிவாசன் அவசர போலீஸ் போன் நம்பர் 100-க்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனது வீட்டு விலாசத்தை போலீசாரிடம் தெரிவித்து தன்னிடம் மனைவி தகராறு செய்வதாக தெரிவித்துள்ளார்.

    உடனே டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீசாருடன் அங்கு விரைந்துள்ளார். வீட்டுக்குள் சென்ற அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சீனிவாசனின் மனைவி அம்மு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை சீனிவாசன் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இதையடுத்து டி.பி.சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தொழிலாளி சீனிவாசனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திண்டிவனம் அருகே குடும்ப தகராறு காரணமாக சத்துணவு அமைப்பாளரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் வளர்குமார். இவரது மனைவி பூங்கொடி (வயது 38).

    இவர் கொணக்கம்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    பூங்கொடிக்கும், கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த வாலிபரை வளர்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் இந்த புகார் வாபஸ் பெறப்பட்டது.

    இந்த நிலையில் பூங்கொடிக்கும், கணவர் வளர்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வளர்குமார், மனைவி பூங்கொடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    மனைவி இறந்து விட்டாள் என்று நினைத்த வளர்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வளர்குமாரை தேடிவருகின்றனர்.
    ×