search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhavani amman"

    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.
    • பூஜையில் மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடிமாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    சிறப்பு பாலாபிஷேகம்

    தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிமாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 18 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன.
    • தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்.

    குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன. பிராணாயாமம் ஒரு வழி. இறைவனிடம் தூய்மையான பக்தி செலுத்துபவர்களுக்கும் குண்டலினி சக்தி எழும்பும். பரிபூரண நிலை அடைந்த முனிவர்கள், ஞானிகள் குருமார்க்கள் தயவினால் எழுப்பப்படும். தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்,.

    குண்டலம் என்றால் வளையம், நம்மிடம் உள்ள ஓஜஸ் என்ற சக்தி பாம்பு போல சுருண்டு வளையம் போலத் தேங்கிக் கிடப்பதால் அதற்கு குண்டலினி சக்தி என்று பெயர்.

    அந்த சக்தி நம் உடம்பில் மூலாதாரம் என்ற மையத்தில் சுருண்டு கிடக்கிறது. மூலாதாரம் என்பது நம் உடம்பில் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் உள்ள பகுதியாகும்.

    ஆதிசங்கரர் இயற்றிய பவானி புஜங்கம் என்ற நூலின் நான்கு வரிகளிலேயே இந்த குண்டலினி சக்தியைப் பற்றி விளக்குகிறார்.

    விடாதார பங்கேரு ஹாந்தர் விராஜத்

    ஸீஷீம் நாந்தராலேதி

    தேஜோல் ல ஸந்தீம்

    பிரபந்தம் ஸீரதா மண்டலம் தீராவயந்திம்

    ஸீதா மூர்த்தி மீட்ட மஹாநந்த ரூபம்

    `ஆறு ஆதாரங்களென்னும் தாமரை மலரின் நடுவே நன்கு ஒலியுடன் இலங்கும் ஸ¨ஷ¨ம்நா நாடியினுடைய நடுவில், மிகுந்த காந்தியுடன் மிளிருகின்றதும், சந்த்ர மண்டலத்தைப் பெருகச் செய்கிறதும், பெருகி வருகின்ற அமுதத்தை பருகுகின்றதும் பரமானந்த வடிவாயுள்ள அமுதவடிவாம் குண்டலினி சக்தியை, பவானியை, அன்னையை துதிக்கிறேன்.

    அதாவது மலர்ந்த தாமரை மலரின் வடிவம் கொண்ட மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களுக்கு நடுவில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறதும், ஒளியுடன் விளங்குவதுமான ஸ¨ஷ¨ம்நா நாடியின் நடுவில், அளவு கடந்த ஒளியுடன் இலங்குவதும், சிரசிலுள்ள சந்திரமண்டலத்தை பெருகச் செய்கின்றதும் அவ்விடமிருந்து இழிந்து வருகின்ற அமுதத்தை சுவைத்த வண்ணமிருப்பதும், பரமாநந்த வடிவாயமைந்துள்ளதும் அமுதமயமான வடிவம் கொண் டுள்ளதுமான குண்டலினி சக்தியாம் ஸ்ரீ பவானியை நான் துதிக்கிறேன் என்பது இதன் விளக்கமாகும்.

    ஒரு சிறிய சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், இவ்வளவு பெரிய குண்டலினி சக்தியை பற்றிக் கூறியிருப்பது குறித்து ஆராய்ந்து பார்த்தால் விந்தையிலும் விந்தையாக இருப்பதுடன், நமது மனதைக் கவரக் கூடிய வல்லமை பெற்றுள்ளது என்பதும் புலனாகும்.

    • பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
    • அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக காட்சி அளிக்கிறாள்.

    பக்தர்களின் குறைகளை களைந்து, வேண்டும் வரம்களை உடனுக்குடன் வழங்கும் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் ரேணுகா தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இது தொடர்பான புராண கதை வருமாறு:-

    முன்னொரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் தவம் இருந்து வந்தார். அவரது மனைவியே ரேணுகாம்மாள். அவர்கள் ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாசு, பரசுராமர் என்ற நான்கு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுள் இளையவர் பரசுராமர்.

    ஒருநாள் பூஜைக்கு வேண்டிய மலர்களையும், நீரையும் கொண்டு வரச் சென்ற ரேணுகாதேவி, மண்குடத்தில் தண்ணீர் எடுக்கும் போது, வானத்தில் பவனிசென்ற ஒரு கந்தர்வனின் உருவ நிழலை நீரில் கண்டாள். அவனது பேரழகைக் கண்டு சிறிது நேரம் ரசித்தாள். அவ்வளவுதான். மண்குடம் கரைந்து போனது இதனால் செய்வதறியாது தவித்தாள்.

    இதை அறிந்த ஜமத்கனி முனிவர் வெகுண்டெழுந்தார். தன் மகன்களை அழைத்தார் உம் தந்தையின் தவ வலிமையே அழிவுறும் வண்ணம் செய்ய முனைந்த உங்கள் தாயை தலை வேறு உடல் வேறாக வெட்டி எறியுங்கள் என்று கட்டளையிட்டார்.

    மூத்த மகன்கள் 3 பேரும் முடியாது என்று ஒதுங்கினார்கள். அதைக் கண்ட முனிவர் மேலும் கோபம் கொண்டு அவர்களை போதராஜன், காட்டண்ணன், கருப்பண்ணசாமி என்ற தேவதைகளாக உருமாற்றி சாபமிட்டார்.

    பிறகு பரசுராமனை அழைத்தார். நான் சொல்வதை செய்! உன் வாளால் உன் தாயின் கழுத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும்' என்றார் முனிவர்.

    நிலைதடுமாறிய பரசுராமர், தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தார்! மகிழ்வுற்றார் முனிவர். பரசுராமரை பாராட்டியதோடு இரண்டு வரங்களையும் அவனுக்கு அளிப்பதாக கூறினார்.

    பரசுராமர் அந்த வரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

    முதலாவதாக எனது தாயை கண்டு வணங்கி அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதற்கு என் தாய் வேண்டும்'' என்றார்.

    உடனே ஜமதக்கினி முனிவர் மகனிடம் கமண்டல நீரைக் கொடுத்து, வெட்டுண்ட உன் தாயின் தலையையும், உடலையும் ஒன்றாக இணைத்து, அத்தீர்த்தத்தை தெளித்தால் அவள் உயிர் பெறுவாள் என்று கூறினார்.

    ஆவலுடன் அக்கமண்டலத்தைப் பெற்ற பரசுராமர், அவசரத்தில் அவ்விடத்தில் கிடந்த மற்றொரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலும், தலையும் கிடந்ததை சரியாக கவனிக்காமல், அப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை சேர்த்து கமண்டல நீரைத் தெளித்துவிட்டார்.

    ரேணுகாதேவி உயிர் பெற்றெழுந்ததும் முன்போன்ற உடல் இல்லாமல் போய் விட்டதே என்பதை உணர்ந்தாள். பரசுராமரும் அப்போது தான் அந்த தவறை அறிந்து வருந்தினார்.

    இந்நிலையில் ஒருநாள் நாகலோகத்து அரச குமாரன் கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் தம் குமாரர்கள் நூறு பேர்களுடன் புறப்பட்டு வந்து ஜமத்கினி முனிவரிடம் உள்ள காமதேனு பசுவை கொடுக்குமாறு வேண்டினார்கள். முனிவர் மறுத்ததால் அவரைக் கொன்று விட்டு அப்பசுவை இழுத்துச் சென்றார்கள்.

    கணவனுக்கு நேர்ந்த கதியை பார்த்த ரேணுகாதேவி கணவனுக்காக மூட்டிய சிதையில் தானும் குதித்தாள். அப்போது பலத்த மழை பெய்தது.

    இதனால் தீ அணைந்தது மழைநீர் வெள்ளமாகப் பெருகி ஆற்று நீருடன் கலந்து சென்றதால் ரேணுகாதேவியின் தீப்புண் பட்ட உடலும் மிதந்து சென்று ஒரு இடத்தில் கரை ஒதுங்கியது.

    மயக்கம் தெளிந்து பார்த்தாள் ரேணுகாதேவி தீயில் எரிந்து போய், வெற்றுடலில் வெந்த புண்களுடன் தனியே தவித்திருக்கும் அவளது நிலைமையை அளவிட்டுக் கூறிட இயலாது.

    அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளைப் பறித்து ஆடையாக கட்டிக் கொண்டு அந்த வழியே வந்த வயதான முதாட்டியின் தயவால் அவளிடம் அடைக்கலம் புகுந்தாள் தேவி.

    மூதாட்டி தேனும், தினைமாவும் அளித்து, வெந்த புண்களுக்கு, மஞ்சள், வேப்பிலையை அரைத்து வைத்து கட்டி குணப்படுத்தினாள். படிப்படியாக புண்கள் எல்லாம் மறைந்தன.

    பரமனிடமும் பார்வதியிடத்திலும் மாறாத பக்தி கொண்டிருந்த ரேணுகாதேவி சக்தி அம்சங்களைப் படிப்படியாகப் பெற்று விளங்கத் தொடங்கினாள். அத்தேவியே தெய்வமாக மாறி பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மனாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றாள்.

    இத்திருத்தலத்தில் அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக விளங்குகின்றாள். ஐந்து தலைநாகம் தலைக்குமேல் குடை விரிக்க அகிலம் வியக்கும் வண்ணம் அருளாட்சி புரிந்து வருகின்ற இத்தேவியின் திருக்கோவிலில் அருட்பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.

    உலகச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் நாம் கொஞ்சமாவது அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டுமானால், பவானி அம்மன் அன்னை வழிபாட்டை செய்தல் வேண்டும்.

    • பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
    • அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள்.

    தேங்காய் உருட்டும் பிரார்த்தனை

    அங்க பிரதட்சணம் செய்வதை நீங்கள் எல்லா கோவில் களிலும் பார்த்து இருப்பீர்கள். அந்த பிரார்த்தனையை பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் சற்று மாறுபட்டு செய்கிறார்கள்.

    அதாவது தாங்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பதில் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள். இந்த பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள் ஈரத்துணியுடன் பவானி அம்மனை வணங்கி விட்டு தேங்காயை உருட்டி விடுவார்கள். அந்த தேங்காய் உருண்டு செல்லும்.

    எந்த இடத்தில் அந்த தேங்காய் நிற்கிறதோ, அந்த இடத்தில் பவானி அம்மனை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார்கள். இப்படி தேங்காயை உருட்டியபடி கோவிலைச் சுற்றி வருவார்கள். இந்த பிரார்த்தனையை `அடிதண்டம்' என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

    கரகம் பிரார்த்தனை

    நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் பவானி அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகன் கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.

    கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து, தலையில் ஏந்தி கோவிலை சுற்றி வருவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாக கருதுபவர்களும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள்.

    திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை `குடை கல்யாணம்' என்றும் அழைக்கிறார்கள்.

    மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து

    பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம். கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு.

    தற்போது பெரியபாளையத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில்தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள்.

    அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர். அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும். எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது.

    தாலி தரும் பிரார்த்தனை

    பெரியபாளையத்தம்மன் ஏழைகளின் வீட்டு தெய்வமாவாள். குறிப்பாக மீனவ சமுதாய மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து, அம்மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருகிறாள்.

    பொதுவாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் அலை, சூறைக்காற்று போன்றவைகளை எதிர்கொண்டு சமாளித்து மீன்பிடித்து வரவேண்டும். மீன்வளம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கழித்தே கரை திரும்புவார்கள்.

    இப்படி கடலுக்குள் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று மீனவப் பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.

    ஆடி மாத விழா காலத்தில்தான் மீனவப் பெண்கள், இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை மீனவப் பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு.

    இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும். வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது.

    சென்னையில் காசிமேடு பகுதி மீனவர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்துக்கு வந்து இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள். வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பெரியபாளையத்தம்மனை குலதெய்வமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    • தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்து கிறார்கள்.
    • பாளையம் என்றால் படை வீடு என்று பொருள்.

    பாளையம் என்றால் படை வீடு என்று பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள்.

    பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனை வழிபாடு செய்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தியுடன் அம்மனின் பெயரைக் கூறி வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது.

    இங்கு மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு ஒன்று உண்டு. அது அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான்.

    பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப் பதாகதத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.

    உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளை யத்து அம்மனை நினைத்தப் படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய்பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்து கிறார்கள்.

    இப்படி பெரியபாளையத்து அம்மன் பெருமைகளை சொல்லிக் கொண்டே பொகலாம்.

    ஜலமூர்த்தி அவதாரம்

    பெரியாபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அஷ்ட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார்.

    வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ளது தண்ணீர். தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வாழ்வினை அளிப்பவள் என்று கருதப்படுகிறார்.

    இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா பொன்ற கொள்ளை நோய்களில் இருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப் பட்டுள்ளதால், பக்தர்கள் ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    • புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
    • சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

    பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் வளையல் விற்பதற்காக சென்னைக்கு வருவார்கள். வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து செல்வார்கள்.

    பெண்களின் கையில் வளையல் பொட்டு விட்டவுடன் மங்களகரமாக வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இதற்காகவே அவர்கள் பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.

    ஒரு சமயம், ஒரு வளையல் வியாபாரி, சென்னையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடை பயணமாக ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி ஆறு பகுதி வந்ததும் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார்.

    சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கும் இங்கும் தேடினார். வளையல் மூட்டை கிடைக்கவில்லை.

    அப்பொது அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது.

    ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நீண்டநேரம் பொராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை.

    அதற்கு மேலும் அங்கு நிற்க துணிவு இல்லாத அவர் ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த பொது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பவானி அம்மன் தோன்றினாள்.

    `நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா. அங்கு வந்து என்னை தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு' என்று உத்தரவிட்டாள்.

    திடுக்கிட்டு விழித்த வளையல்காரருக்கு வியர்த்துக் கொட்டியது. மறுநாளே வளையல், மஞ்சள், குங்குமம் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டார்.

    பெரியபாளையம் வந்ததும், அந்த புற்றைப் பார்த்தார். அந்த பகுதி ஊர் மக்களை அழைத்து, அம்மன் கனவில் உத்தரவிட்டதை கூறினார்.

    அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக, அந்த புற்றை அகற்றிவிட்டு, அதில் வயல் உண்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். வளையல் வியாபாரி சொன்னதும் கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற தொடங்கினார்கள்.

    பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.

    அதோடு புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து பொனது.

    இதைப் பார்த்து அந்த பகுதி மக்களுக்கு கூடுதல் பயம் வந்துவிட்டது. நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்தனர். அதற்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதன் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது.

    உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று போனது.

    இதையடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

    தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம். இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பெரிய பாளையத்து பவானியம்மன், தன்னை நம்பி, நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரம் களை வாரி, வாரி வழங்கி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாள்.

    • தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும்
    • பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.

    1. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.

    2. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் கோவிலில் எப்போதும் நன்கு காற்றோட்டமாக உள்ளது.

    3. பாவனி அம்மன் இத்தலத்தில் அகண்ட பரிபூரண ஆனந்த ஜோதியாய், வழிபடும் அடியார்களின் வல்வினை போக்கும் வண்டார் குழலியாய், 7 அவதாரங்களில் ஒன்றாகிய சங்கு, சக்கர பேருருவாய் கோவில் கொண்டு எழுந்துருளியுள்ளாள்.

    4. ஆடி திரவிழா அம்மன் தலங்களில் 4 அல்லது 5 வாரம்தான் நடைபெறும். ஆனால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் மட்டும் 14 வாரங்கள் ஆடிப்பெருவிழா நடைபெறும்.

    5. பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மன் சுயம்புவாக தோன்றியுள்ளாள்.

    6. அபிஷேக நேரம் தவிர மற்ற நேரங்களில் சுயம்பு உருவை அம்மன் தலை கவசத்தால் மூடி விடுவார்க்ள.

    7. பஸ்சில் வரும் பக்தர்கள்தான் கோவில் நுழைவாயிலுக்கு எளிதாக வர முடியும். கார், பைக்கில் செல்பவர்கள் ஆலயத்தின் பின் பகுதி வழியாகத்தான் உள்ளே வர முடியும்.

    8. ஆலயத்தின் இடது பக்கத்தில் சித்புத் விநாயகர் மற்றும் மாதங்கி சன்னதிகள் உள்ளன. அந்த இரு சன்னதிகளிலும் வழிபட்ட பிறகே பவானி அம்மனை சென்று வணங்க வேண்டும்.

    9. மூலவரை சுற்றியுள்ள பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.

    10. இத்தலம் அருகிலேயே மிகப்பெரிய புற்றுக்கோவில் உள்ளது. தகர கூரை வரை உயர்ந்து அந்த புற்று வளர்ந்துள்ளது.

    11. இத்தலத்தில் ஆங்காங்கே பாம்பு நடமாடுவது சகஜமான ஒன்று. ஆனால் அந்த சர்ப்பங்கள் யாரையும் தீண்டியதே இல்லை.

    12. புற்று கோவிலில் இருந்து தினமும் இரவு பவானியம்மன் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு வந்து செல்வதாக சொல்கிறார்கள்.

    13. தினமும் காலை பூஜைக்காக கருவறை கதவை திறக்கும் முன்பு 4, 5 தடவை கதவை தட்டி விட்டு சிறிது நேரம் கழித்தே அர்ச்சகர்கள் நடையைத் திறப்பார்கள். சர்ப்பம் உள்ளே இருந்தால் சென்று விடும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.

    14. பவானி ஆலய நாகவழிபாட்டை வலியுறுத்தும் வகையில் கோவில் பிரகாரங்களில் சர்ப்பம் சிலைகளும் நாகதேவதை சிலைகளும் செதுக்கப்பட் டுள்ளன.

    15. பெரியபாளையம் ஆலய வழிபாடுகளில் மிக முக்கியமானது வேப்பஞ்சேலை பிரார்த்தனை வழிபாடுதான். நூற்றுக்கு 50 பக்தர்கள் வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்கிறார்கள்.

    16. செவ்வாய், வெள்ளி என்ற கணக்கு இல்லாமல் தினமும் இங்கு வேப்பஞ்சேலை வழிபாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.

    17. பெரியபாளையம் தலத்தின் விருட்சம் வேப்பமரமாகும். கோவில் உட்பிரகாரத்தில் இத்தல விருட்சம் உள்ளது.

    18. பெரியபாளையம் கோவிலில் கொடி மரம் கிடையாது. அதற்கு பதில் சக்தி மண்டபம் உள்ளது.

    19. மற்ற கோவில்களில் விழா தொடங்கி விட்டால் அதன் அடையாளமாக கொடியேற்றம் நடைபெறும். இந்த தலத்தில் சக்தி மண்டபத்தில் பந்தகால் நாட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    20. பவானி அம்மன் நேர் பார்வையில் நுழைவாயில் அருகே சக்தி மண்டபம் உள்ளது.

    21. சக்தி மண்டபம் அருகில்தான் திருஷ்டி பரிகார பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன.

    22. சக்தி மண்டபம் அருகில் உள்ள மரத்தில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும். தொட்டில் வாங்கி கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    23. இத்தலத்தில் சுயம்புக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணி ஆகிய 3 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது.

    24. கோவில் கருவறை முகப்பில் சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் தங்கையே இங்கு தெய்வம்சமாக இருப்பதால் அப்படி செதுக்கப்பட்டுள்ளது.

    25. இத்தலத்தில் சுயம்பு மீது பூசப்பட்டு எடுத்துத் தரப்படும் மஞ்சளுக்கு அதிக மகிமை உண்டு.

    26. அந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும்.

    27. அந்த மஞ்சளை கொஞ்சம் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, வெளியில் செல்லும் போது பூசிச் சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    28. பெரியபாளையம் அம்மனுக்கு நிறைய மஞ்சள் பூசி பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது என்றால் பிரியம் அதிகம். எனவே அர்ச்சகர் தினமும் அன்னைக்கு நிறைய சந்தனம் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.

    29. பவானி அம்மன் சுயம்பு மஞ்சளை இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் வந்து பெற்று சென்று பயன் அடைகிறார்கள்.

    30. பவானி அம்மனுக்கு தினமும் 3 தடவை அபிஷேகம் முடிந்ததும் மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    31. ஆடி விழாவில் 10-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை சுயம்பு மீது சூரிய ஒளிபடும். அந்த சமயத்தில் மின் விளக்குகளை அனைத்து விட்டு சூரிய ஒளி வழிபாட்டை பக்தர்களை காண செய்கிறார்கள்.

    32. கோவில் வளாகத்தில் துலாபாரம் கொடுக்கும் வசதி உள்ளது.

    33. ஆடி விழாவின் 6-வது, 7-வது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் திரண்டு வந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    34. பெரியபாளையம் கோவிலுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.

    35. விழா நாட்களில் பவானி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும்.

    36. உண்டியலில் பணம் மட்டுமின்றி தாலியையும் பெண்கள் கழற்றி போடுகிறார்கள். கை, கால் போன்ற வெள்ளி உறுப்புகளையும் வாங்கி செலுத்து கிறார்கள்.

    37. முகூர்த்த நாட்களில் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு வசதியாக கோவில் வளாகத்துக்குள்ளேயே திருமண மண்டபம் உள்ளது.

    38. இத்தல தீர்த்தம் சக்தி வாய்ந்தது. எனவே வர முடியாத நோயாளிகளுக்காக இத்தல தீர்த்தத்தை பாட்டில்களில் வாங்கி செல்கிறார்கள்.

    39. இத்தல தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    40. இத்தலம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

    41. ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். அன்று எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.

    42. ஆடி மாதம் விழாவின் 14-வது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.

    43.பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் மிகச் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமின்றி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

    44. ஆடி விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி கட்டி, தொலை தூரங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வரும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.

    45. பவானி அம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்கள் பெரியபாளையத்தில் குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடு செய்கிறார்கள்.

    46. ஆரணியாற்றில் குடில் அமைத்து தங்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை படையலிட்டு சாப்பிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    47. ஒரு குடும்பத்தில் உள்ள சகோதர- சகோதரிகள் அனைவரும் ஒன்றாக பெரியபாளையத்தம்மனை வணங்க வருவதால் இங்கு குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    48. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழிபாதை தலங்களில் ஒன்றாக பெரியபாளையம் இருந்துள்ளது.

    49. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    50. தைப்பூசம் தினத்தன்று ஆரணியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    • உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார்.
    • பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்

    பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் பவானி அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புற்றுக்குள் சுயம்புவாக தோன்றி விட்டாள். அந்த இடத்தை மூலமாக கொண்டு கோவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சி பெற்றுள்ளது.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த கோவில் கருவறை மற்றும் ஒரு மண்டபத்துடன் மட்டுமே இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை பெருக, பெருக கோவிலும் வளர்ச்சி அடைந்தது. கோவிலை சுற்றி மிக அழகான பிரகார மண்டபம் கட்டி உள்ளனர்.

    கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் சித்திபுத்தி விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும்.

    அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்' தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.

    இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம்.

    அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும். கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று கோவில் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும்.

    பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    கோவில் மூலஸ்தானம் மீதும், முன் பகுதியிலும் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. என்றாலும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் பிரமாண்ட ராஜகோபுரம் இருந்தால் பக்தர்கள் மனம் மகிழ்ச்சி பெறும்.

    கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள நடைபாதை கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிக்காதபடி வேறொரு இடம் கொடுத்து விட்டு அங்கு மிக உயரமான ராஜகோபுரம் கட்டினால் பாளையத்தம்மன் கோவிலுக்கு அது ஒரு முத்திரையாக இருக்கும்.

    பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்!

    சென்னைவாசிகளுக்குப் பெரியபாளையத்தை பற்றித் தெரியாமல் இருக்காது. அருள்மிகு பவானி அம்மன் என்னும் சக்தி வாய்ந்த நாயகி, இங்கே குடி கொண்டு தன் அரசாட்சியை செலுத்தி வருகிறாள்.

    மஞ்சளின் மணம் துலங்க... வேப்பிலையின் வாசம் விளங்க... இவள் குடி கொண்டிருக்கும் பெரிய பாளையம் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும்... அருள் மழை சுரக்கும்.

    பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிப்பதற்கு அவள் சந்நிதியை நாடி நித்தமும் வரும் பக்தர்கள் ஏராளம். தன் அருளுக்குப் பாத்திரமாகும் அடியவர்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு, அவர்களைக் குறை இல்லாமல் வாழ வைத்து வருகிறாள் பவானி அம்மன்.

    சாதாரண நாளில் கூட பக்தர்களின் கூட்டம் இங்கு விழி பிதுங்கும் என்றால், ஆடி மற்றும் தை முதலான விசேஷ காலங்களில் இங்கு கூடும் கூட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு, பவானி அம்மனுக்குத் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

    பவானி அம்மன் கோயில் கொண்ட இந்த பெரிய பாளையத்தில் விசேஷமான சிவாலயம் ஒன்றும் இருக்கிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்கள் எவருக்கும் தெரியாது என்பது துரதிர்ஷ்டமே! இத்தனைக்கும் சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள், இந்த சிவாலயத்தை தாண்டித்தான் அம்மனின் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைக்க முடியும்.

    ஆனால், இந்த சிவாலயம் அமைந்திருக்கும் விவரம் பலருக்கும் தெரியாது. ஓரளவு நல்ல பராமரிப்பிலேயே இந்த ஆலயம் இருந்து வருவது, பாராட்டத்தக்கது.

    பவானி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் முன்பாக, பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூர்ணாம்பா சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். அருமையான சிவாலயம். இந்த தலத்து இறைவனை புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர்.

    புண்ணிய நதியாம் ஆரணி நதிக்கு அந்த பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், இந்த பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில்.

    சிறியது என்றும் சொல்ல முடியாது. பெரியது என்றும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கச்சிதமான ஆலயம். ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள், ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவ தலம்.

    உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் மெயின் ரோடு அமைந்திருக்கும் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விசேஷ நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.

    இந்த ஐமுக்தீஸ்வரர் லிங்க வடிவத்தை மாபெரும் தவ சிரேஷ்டரான வால்மீகி முனிவர், பிரதிஷ்டை செய்து வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. பாரத தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார்.

    பொங்கிப் பிரவாகிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைந்து தவம் புரிந்தார். மாபெரும் முனியின் மாதவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார்.

    வால்மீகி முனிவர் மகிழ்ந்தது. 'யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவா... எனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

    எம்பெருமானும் மனம் கனிந்தார். லிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, 'வால்மீகி ஆசிரமம்' என்ற பெயரும் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.

    தவிர, பஞ்சபூதங்களான ப்ருத்வி (மண்), நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் 'ஐமுக்தீஸ்வரர்' என இறைவன் அழைக்கப்பட்டாராம்.

    மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமானை நேரில் கண்டு வணங்குவதற்காக ஒரு முறை கயிலாயம் சென்றனர். அப்போது, கயிலயங்கிரியைக் காவல் காத்து வரும் நந்திதேவரின் முறையான அனுமதி பெறாமலேயே ஐந்து பேரும் உள்ளே நுழைந்து விட்டார்கள்.

    நந்திதேவரின் கோபத்துக்கு ஆளான தங்களுக்கு உள்ளே சாபம் காத்திருக்கிறது என்பது தெரியாமலேயே கயிலைவாசனின் முன்னால் போய் பயபக்தியுடன் நின்றார்கள்.

    அது- கயிலை வாசன் கடும் தவத்தில் இருக்கும் நேரம்... அந்த வேளையில் எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறினால் அவ்வளவுதான்! பாவம், பஞ்சபூதங்களுக்கு இந்த விவரம் தெரியாது போலும்!

    ''இறைவா... கயிலைவாசா... நீலகண்டா... எம் பெருமானே... உன்னைத் துதித்து உன் அருள் பெற வேண்டியே, பஞ்சபூதங்களாகிய நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். எங்களுக்கு இரங்கி, அருள் புரிந்து எங்களைக் காத்தருள்வாய் காலகண்டா'' என்று தொழுதார்கள்.

    அருளை எதிர்பார்த்துச் சென்றவர்களின் வாழ்வில் இருள்தான் படர்ந்தது. சில விநாடிகள் கழித்துக் கயிலை வாசன் கண் திறக்கும்போது, அந்த உக்கிரத்தை பஞ்சபூதங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவனின் கோப முகத்தைப் பார்த்து ஏகத்துக்கும் நடுங்கி விட்டனர். தாங்கள் ஏதோ தவறு இழைத்து விட்டோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

    இறைவன் அவர்களைப் பார்த் துத் திருவாய் மலர்ந்தருளினார்: ''பஞ்சபூதங்களே... தவறு புரிந்து விட்டீர்கள். நந்திதேவரை அலட் சியம் செய்து, அவரின் அனுமதி இல்லாமல் என்னைத் தரிசிக்க வந்ததே தவறு.

    என்னைத் தரிசிக்க வேண்டிய காலம் அல்லாத வேளையில் உள்ளே புகுந்து என் பணிக்கு இடையூறு விளைவித்து விட்டீர்கள். அனுமதி இல்லாமல் குரங்குகள் போல் கயிலாயத்தில் நுழைந்த நீங்கள் குரங்கு வடிவிலேயே பூலோகத்தில் அலைவீர்கள்'' என்று சபித்தார்.

    பஞ்சபூதங்கள் அதிர்ந்து போனார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த குரலில், ''இறைவா... எங்களின் தவறை நாங்கள் உணர்ந்து விட்டோம். நந்தி தேவரின் அனுமதி இல்லாமல் முறை தவறிய வேளையில் கயிலாயத்துக்குள் புகுந்தது எங்களின் பிழை.

    இதற்காக வருந்துகிறோம். எங்களின் விதிப்படி தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொள்கிறோம். பூலோகத்தில் குரங்குகளாகவே திரிகிறோம்.

    என்றாலும், இந்த சாபம் எங்களுக்குச் சற்று கடுமையாக இருக்கிறது. எனவே, குறுகிய காலத்திலேயே நாங்கள் பழைய உருவை அடைய ஒரு விமோசனத்தையும் தந்தால் நன்றி உடையவர்களாக இருப்போம்'' என்றனர். பஞ்சபூதங்களின் பரிதவிப்பில் மனம் இரங்கினார் இறைவனார்.

    'தொண்டை நாட்டிலே உத்தர வாகினியாக ஆரணி நதி பாயும் பிரதேசத்தில், வால்மீகி முனிவர் பூஜித்த சுயம்பு லிங்க வடிவம் தாங்கிய திருக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு வந்து என்னை வழிபடுங்கள். சாபம் நீங்கும்!'' என்றருளினார்.

    சாப விமோசனம் பெற்ற திருப்தியில் கயிலாயத்தை விட்டுப் புறப்பட்ட பஞ்சபூதங்கள் பூலோகத்துக்கு வந்தனர். இறைவனார் அருளியபடி, ஆரணி நதிக் கரை வந்து, அங்கு வால்மீகி முனிவர் வணங்கிய சுயம்பு வடிவத்தை வணங்கி, சாபம் நீங்கப் பெற்றனர்.

    பஞ்சபூதங்கள் இங்கு குரங்கு வடிவில் தங்கி இருந்து, இறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட நிகழ்வை விளக்கும் சுதைச் சிற்பம் ஒன்று ஆலயத்துக்குள் காணப்படுகிறது. அதாவது, லிங்க பாணத்தில் நெற்றிப் பகுதியில் ஐந்து குரங்குகள் காணப்படுகின்றன.

    இதே நிகழ்வை விளக்கும் விதமாக ஒரு லிங்க வடிவமும் (சிலா) ஆலயத்துக்குள், அம்பாள் சந்நிதிக்கு அருகில் தரிசனம் தருகிறது. பல்லவ ராஜாக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தை கட்டி யதாகச் செய்தி. இதைக் கடந்ததும் கொடி மரம், பலிபீடம், நந்திதேவர் மண்டபம். கடந்து உள்ளே போனால் ஐமுக்தீஸ்வரர் மற்றும் அன்ன பூர்ணாம்பாவை தரிசிக்கலாம்.

    பிராகார வலத்தில், ஐயப்பன் சந்நிதி, பலிபீடம்- மயில் வாகனத்துடன் கூடிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகனார் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி, யாகசாலை மண்டபம்... இப்படி நீள்கிறது பிராகார வலம். தவிர பிராகார வலத்தின்போது ஐமுக்தீஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் துர்கை, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு, தல விருட்சமான வில்வத்தையும் காணலாம்.

    இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்தடுத்து சந்நிதிகள். மேற்குப் பார்த்தவை. இரு தெய்வங்களுக்கும் பொதுவான மகா மண்டபம். இங்கே ஆலய வாகனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மூஞ்சூறு, மயில், ரிஷபம், பிரதோஷ ரிஷபம் என்று வாகனங்கள் பளிச் சென்று காணப்படுகின்றன.

    ஈசன் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப் பக்கமாக ஒரு மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவாலயத்துக்கு உண்டான அனைத்து விக்கிரகங்களும் இங்கு தரிசனம் தருகின்றன.

    • ஆடித்திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
    • பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில், பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.

    இந்த 3 மாத காலக்கட்டத்தில் 15 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இந்த கிழமைகளில் ஒவ்வொரு வகை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

    இது தவிர பெரியபாளையம் கோவிலில் 15 ஞாயிற்றுக்கிழமையும் அம்மனின் ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இது பெரியபாளையம் கோவிலில் மட்டுமே நடைபெறும் பிரத்தியேக ஆடி சிறப்பு வழிபாடாகும்.

    பாளையத்தம்மனை ஜோதி ஒளியில் வழிபடுவதே இதன் முக்கிய அம்சமாகும். அந்த சமயங்களில் பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சிக் கொடுப்பதாக ஐதீகம்.

    ஆடித் திருவிழாவின் சனிக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு இந்த ஜோதி தரிசன நிகழ்ச்சித் தொடங்கும். முதலில் பாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

    அதன்பிறகு திரையிடப்பட்டு அம்மனை அலங்கரிப்பார்கள். வித, விதமான பூக்களால் புஷ்ப அலங்காரம் செய்வார்கள்.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்ததும் ஜோதி தரிசனம் தொடங்கும்.

    அம்மனுக்கு மொத்தம் 16 வகை தீபாரதனைகள் காட்டப்படும். ஒவ்வொரு தீபராதனையின் போதும் பாளையத்தம்மன் ஒவ்வொரு விதமாக ஜொலித்து நமக்குக் காட்சி கொடுப்பாள். அந்த திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

    16 வகை தீபாரதனை முடிந்ததும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மீண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.

    அத்துடன் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இறுதியில் வந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை இவை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஜோதி தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் இது பெரியபாளையம் கோவிலில் ஆடி பெருவிழா நடக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். மற்ற மாதங்களில் இத்தகைய தரிசனம் கிடையாது.

    எனவே இந்த ஆண்டு ஜோதி தரிசனத்தை தவற விட்டு விட்டால், இனி அடுத்த ஆண்டு வரும் ஆடிப் பெருவிழாவில்தான் பாளையத்தம்மனை ஜோதியாக தரிசனம் செய்ய முடியும்.

    சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கியமை அதிகாலை 3 மணி வரை ஜோதி தரிசன பூஜைகள் நடக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து பெரியபாளையத்துக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொண்டு வருவது நல்லது.

    கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ஜோதி தரிசன வழிபாட்டுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது தொடர்பான மேலும் தகவல்களை கோவில் அலுவலகத்தை 044-27927177 மற்றும் 9444487487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    • தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள்.
    • சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது.

    வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்து கிறார்கள்.

    இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப்பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள்.

    4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீது படும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.

    வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டு பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.

    மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.

    பரசுராமர் பாவம் தீர வழிபட்ட தலம்

    முனிவர் ஜமத்கனி உத்தரவை ஏற்று தன் தாய் ரேணுகாதேவியை பரசுராமர் வெட்டி கொன்ற தகவலை முன்பக்கங்களில் படித்து இருப்பீர்கள். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.

    இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந் துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது. இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.

    பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.

    சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.

    இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

    தோஷம் போக்கும் சென்னை ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்

    சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மாரியம்மன் ஆலயங்கள் ஆங்காங்கே உள்ளன.அதில் ஒன்று சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகாதேவி ஆலயம், மின்ட் சாலையும் என்.எஸ்.ஜி. போஸ் சாலையும் இணைக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் 250 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். அதற்கு காரணம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும் ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டுமே பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.

    அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஓளியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல படைவீடு தலத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயமும் மிகவும் புகழ் பெற்றதாகும்.

    • கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார்.
    • அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள்.

    சுயம்பு மூர்த்தி யான பவானி அம்மன் கவசம் பெற்று முன்புறம் அமர்ந் திருக்கிறாள். பின்புறம் சிலை வடிவில் சுதையில் அவள் அழகான உருவம் வடிவமைக் கப்பட்டதைக் காணலாம்.

    ஐந்து தலைநாகம் திருக்குடை கவிழ்க்க அன்னை சந்நிதி கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.

    பட்டுப்புடவை பளபளக்கும் மேனி, பரந்தமுக அழகில் எடுப்பான மூக்கு, அதில் மின்னித் துடிக்கும் மூக்குத்தி, எழிலார்ந்த சிரிப்பு நம் இதயத்தை அப்படியே கொள்ளை கொள்ளும். நம்மையெல்லாம் காக்கும் கருணைக் கடலாகிய அவளுக்கு நான்கு கரங்கள்.

    வலது முன்புற கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம். இந்த கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

    பெரியபாளையத்தமன் உருவம் அமைந்திருக்கும் விதம் மிகவும் அலாதியானது. அரை உருவுடன் சங்கு சக்கர தாரிணியாக அமர்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் அருள் பாலிக்கும் அமுத கலசமும் கொண்டு தோற்றமளிக்கும் அன்னையின் திருக்கோலத்தை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது.

    கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார். அன்னையின் மடியருகே அமைந்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் சுயம்புவின் தோற்றம் காலத்தில் மிகமிகத் தொன்மை வாய்ந்ததாகும்.

    அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் நின்று பெரிய பாளையத்தில் அருளாட்சி செய்து வருகிறாள் பவானி என்னும் இந்த பெரிய பாளையத்தமன். இந்த சக்தியின் சக்தியை சக்தியால் உணர்ந்து சக்தியும் பெற்றோர் பலர்.

    கவி காளிதாசனுக்கு அருட்கவி பாடிட அருளிய வளும், அலையும் மனத்தால் அமைதி இழந்து நின்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், காளிதாசருக்கும் அமைதி வழிகாட்டி ஞானம் தந்தவளும் அன்னை பவானியே!

    ஓங்கார வடிவம் கொண்ட அன்னை பவானி ஆங்காரம் கொண்டோரையும், முறை தவறி அறநெறி பிறழ்வோரையும் வதம் செய்து அடக்கி மோன நிலையில் இருக்கிறாள்.

    நோயுற்று அல்லலுறுபவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்தால் அவர்கள் நோயும், பாவமும் நிச்சயம் அகலும். தீமையைப் போக்கி நன்மையை நிலைநாட்டும் அன்னை தன் அருட்பார்வையாலும், தான் அணிந் திருக்கும் மஞ்சளாலும், தன்மேல் பட்ட தண்ணீராலும், தீர்க்க முடியாத பல நோய்களை எல்லாம் தீர்த்து அருள்கிறாள்.

    கோழி சுற்றி விடும் பிரார்த்தனை

    பெரியபாளையத்தம்மன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளில் "கோழி சுற்றி விடும் பிரார்த்தனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது "இது உயிருக்கு உயிர் கொடுக்கும்'' பிரார்த்தனை ஆகும்.

    வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அல்லது விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக பெரியபாளையத்தம்மனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். உடல்நலம் சரியானதும் மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒன்றை கோவிலில் விட்டு விடுவார்கள்.

    கோழி என்றால் தாயே இந்த உயிரை ஏற்றுக் கொள் என்று சுற்றி விடுவார் கள். ஆடு, கோழிகளை சுற்றி விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு என்றே பரசுராமர் சன்னதி அருகில் தனி இடம் உள்ளது. அங்கு விடப்படும் ஆடு, கோழிகள் பவானி அம்மனுக்கு சொந்தமானதாக மாறி விடும்.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியபாளையம் கோவிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. ரத்தம் ஆறாக ஓடும் வகையில் கூட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. உயிர்ப்பலி தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.

    அதற்கு பரிகாரமாக கோவில் சார்பில் ஒரு கோழியை உயிருடன் சுற்றி விட்டனர். அதைப் பார்த்து பக்தர்களும் ஆடு, கோழிகளை சுற்றி விடத் தொடங்கி விட்டனர். ஆடி மாத சிறப்பு நாட்களில் இங்கு ஏராளமானவர்கள் கோழி சுற்றி விடுவதை காணலாம்.

    • பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடியில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை 1008 பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் மாலை 6:30 மணியளவில் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன் பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×