என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.
    • இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும்.

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப் பாடல்களின் ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். புராண காலத்தில் பிரம்மபுரம், வேணுபுரம், தோனிபுரம், சிவபுரம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் சுமார் 90 அடி உயரமுள்ள கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒரு முறை திருஞானசம்பந்தர் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது பார்வதி தேவியான திருநிலை நாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த தல வரலாறு நினைவு கூறும் விதமாக திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருமுலைப்பால் விழா அன்று திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருள்வார். அங்கு திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடக்கும்.

    அப்பொழுது மலைக் கோவிலிலிருந்து உமாமகேஸ்வரி சாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் எடுத்துவரப்பட்டு தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருள்வார். இதனை அடுத்து பகல் 12 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும்.

    தொடர்ந்து சிவபெருமானுடன் உமா மகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளிப்பார். அப்பொழுது சாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனை அடுத்து பக்தர்கள் கொண்டுவரப்படும் பாலை சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    32 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குடமுழுக்கு விழா

    சீர்காழி சட்டைநாதர் கோவில் இதற்கு முன்பு 25-வது குரு மகா சன்னிதானம் சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் 23.3.1951 அன்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அதற்கு பின்பு 26 ஆவது குரு மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கடந்த 3.4.1991 அன்று குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடந்துள்ளது. அதற்கான இரண்டு கல்வெட்டுக்கள் மலைக் கோவிலில் உள்ளது.

    சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக பிரம்மாண்ட யாக சாலை

    சீர்காழி சட்டைநாதர் கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி மேற்கு கோபுர வாசல் அருகே மிக பிரம்மாண்டமான யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டு அதில் 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது யாகசாலை முன்புறம் செயற்கையாக கைலாய மலை அமைக்கப்பட்டு இந்த மலையின் வழியாகத்தான் பக்தர்கள் அனைவரும் யாகசாலைக்கு செல்லும் வகையில் பிரம்மாண்டமாக உள்ளது

    குடமுழுக்கிற்காக யானை, ஒட்டகம், குதிரை வரவழைப்பு

    சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கடையூர், திருவையாறு, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நான்கு யானைகள், ஒன்பது குதிரைகள், ஒரு ஒட்டகம், காளை மாடு உள்ளிட்டவைகள் வெளி ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் வியப்போடும், ஆச்சரியத்தோடும் பார்த்துதங்களுடைய செல்போன்களில் செல்பி எடுத்து செல்கின்றனர்.

    அட்டபைரவச் சிறப்புத் தலம்

    காழியின் சிறப்புச் சந்நிதானமாக ஸ்ரீ சட்டைநாதசுவாமி அருளுகின்றபடியாலும், பைரவர்க்குரிய காசி, காழி, நாகை - செங்காட்டங்குடி ஆகியத் தலங்களுள் இதுவும் ஒன்றாகையாலும் பைரவமதம் இங்கே சிறப்புற்று இருந்துள்ளது. சட்டைநாதருக்கு கீழே தென்திசையில் அமைந்துள்ள வலம்புரி மண்டபத்தில் 1.அசிதாங்க பைரவர், 2.குருபைரவர்.3.சண்டபைரவர் 4.குரோதனபைரவர்.5.உன்மத்த பைரவர். 6, கபாலி பைரவர், 7. பீஷண பைரவர், 8, சம்கார பைரவர் என இவ் அட்டபைரவரும் எண் கலையாக விளங்குகின்றனர். சுக்கிர வாரத்திலும் தேய்பிறை அட்டமியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    3 அடுக்குகளை கொண்ட குன்றுக்கோவில்

    இக்கோவில் மூன்று அடுக்குகளைக்கொண்ட குன்றுக்கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச்செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

    நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் 'தோணிமலை' என்கின்றனர்.

    சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.

    இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, "பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே, " எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

    அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே" என்று பாடினார். தந்தை அசந்து போனார்.

    தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

    விஷ்ணுவின் தோலை அணிந்த சட்டைநாதர்

    உலகில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு உண்டு ஏனெனில் இந்த கோவிலில் சிவன் மூன்று வடிவமாக அருள்பாலிக்கிறார். அதாவது லிங்க வடிவமாகவும், விஷ்ணுவின் தோலை சட்டையாக அணிந்து சட்டை நாதர் என்றும், உமா மகேஸ்வரியுடன் தோணியப்பராகவும் அருள் பாலிக்கிறார். இது இந்த கோவிலின் தனி சிறப்பாகும்.

    • சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.
    • ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் நீங்கும்.

    சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது, திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 258-வது தலம் என்ற சிறப்புக்குரியது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படும் இந்த ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    அகத்திய முனிவர் இத்தல இறைவனின் அருளை அறிந்து, இங்கு வந்து தவம் செய்தார். அவருக்கு இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் காட்சி கொடுத்த சிவபெருமான், உலகில் தோன்றியுள்ள நோய்களைத் தீர்க்கும் மருந்துகளைப் பற்றியும், அவற்றை உருவாக்கும் மூலிகைகளைப் பற்றியும், பல்வேறு மூலிகைகளின் தன்மைகள் பற்றியும் அகத்தியருக்கு உபதேசம் செய்தருளினார். எனவே தான் இத்தல ஈசன், 'மருந்தீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயமும் 'மருந்தீசுரம்' என்று பெயர் பெற்று விளங்குகிறது.

    வசிஷ்ட முனிவர், தான் செய்யப்போகும் சிவபூஜைக்காக பசுவின் பாலை எதிர்பார்த்தார். இதை அறிந்த இந்திரன், தேவலோகத்தில் இருந்த காமதேனு பசுவை, கருடன் மூலமாக வசிஷ்ட முனிவரிடம் கொண்டு போய் சேர்த்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த வசிஷ்டர், தன்னுடைய சிவ பூஜையை தொடங்கினார். பூஜை நேரத்தில் காமதேனு, பால் சுரக்காமல் காலதாமதம் செய்தது. இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், காமதேனுவை 'காட்டுப் பசுவாக போவாய்' என்று சாபமிட்டார்.

    இதனால் மனம் வருந்திய காமதேனு, தனக்கான விமோசனத்தை கேட்டு, வசிஷ்டரை வேண்டியது. உடனே அவர், "பூலோகத்தில் வன்னி மரத்தின் அடியில் சுயம்புவாக இருக்கும் சிவனை தினமும் பால் சுரந்து வணங்கி வந்தால், உனக்கு விமோசனம் கிடைக்கும்" என்று கூறினார்.

    இதையடுத்து இந்தத் திருத்தலத்திற்கு வந்த காமதேனு, சுயம்புவாக மண்ணில் புதைந்திருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சுரந்து வழிபாடு செய்து வந்தது. இதன் காரணமாக இத்தல இறைவனுக்கு 'பால்வண்ணநாதர்' என்ற பெயரும் உண்டு. இப்படி பல காலம் பால் சுரந்து வழிபட்டதன் பலனாக, காம தேனுவுக்கு சாப விமோசனம் கிடைத்து, அது தேவலோகம் சென்றடைந்தது.

    கொடூரமாக மக்களை தாக்கி கொள்ளையடித்து வந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு, இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். அப்படி அவர் வந்தபோது, காமதேனு தன்னுடைய சாபம் நீங்குவதற்காக, பாலைச் சுரந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தது. வால்மீகி வந்ததைப் பார்த்த காமதேனு, பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது காமதேனுவின் காலடி பட்டது. அது தழும்பாக மாறியது. இன்றும் இத்தல இறைவனின் சிரசில் இந்தத் தழும்பை காண இயலும். தன்னை வணங்கி மனம் திருந்திய வால் மீகிக்கு, சிவபெருமான் வன்னி மரத்தடியில் காட்சி தந்தார். அவரது பெயரிலேயே இந்த திருத்தலம் விளங்குகிறது.

    ஆலய பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகி ஆகியோருக்கு சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரம் உள்ளது. இந்த இடத்தில் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த நிகழ்வு நடத்தப்படும். இவ்வாலய இறைவனான மருந்தீசுவரர், மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அம்மன் `திரிபுரசுந்தரி' என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் முன்பாக தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்குள் சிறிய தடாகமும், நந்தவனமும் அமைந்திருக்கிறது. ராஜகோபுரம் கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் இருக்கும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் மூன்று விநாயகர்கள், வேதாகம பாடசாலை, நூலகம், திருமுறை மண்டபம் உள்ளன. உள் பிரகாரத்தில் கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், நடராஜர், 108 சிவலிங்கங்கள், கால பைரவர், கேதாரீசுவரர், ராமநாதேசு வரர், சுந்தரேசுவரர், உண்ணாமுலையம்மை, ஜம்புகேசு வரர், 63 நாயன்மார்கள் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, சண்டிகேசுவரர் அருள்கின்றனர். மேற்கு வாசல் வழியாக வருகையில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.

    இந்த ஆலயத்தில் வருடம் முழுவதும் சமய சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. நிறைய பசுக்களைக் கொண்ட ஒரு பசு மடமும் இங்கு இருக்கிறது. இத்தல இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் நீங்கும், பாவம் விலகும். அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்கும், அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.

    மேற்கில் திரும்பிய ஈசன்

    அபயதீட்சிதர் என்ற சிவபக்தர், இத்தல இறைவனை வழிபடுவதற்காக வந்தார். அப்போது கடுமையான மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலயத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த வெள்ளத்தால் அவரால் நீரைக் கடந்து சுவாமியைக் காண ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது, சிவபெருமானின் பின் பகுதிதான் தெரிந்ததாம். இதனால் வருத்தம் கொண்ட அந்த சிவபக்தர், 'உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள்புரிய மாட்டாயா?' என்று வேண்டினார். இதையடுத்து அந்த பக்தருக்காக, சிவபெருமான் மேற்கு நோக்கி திரும்பினாராம். பின்னர் அந்த நிலையிலேயே அருள்பாலிக்கத் தொடங்கி விட்டார்.

    சென்னை பாரீஸ் பஸ் நிலையத்தில் இருந்து, 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவான்மியூருக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பறக்கும் ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் மூலமும் திருவான்மியூரை அடையலாம்.

    • எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
    • குமரி மாவட்டத்தில் உள்ளது சிறப்பு மிக்க இந்த திருத்தலம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க திருத்தலங்களில் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலம் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்கம்பாறை சந்திப்பில் இருந்து அஞ்சுகிராமம் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    நீர்வளமும், நிலவளமும், இயற்கை எழிலும் நிறைந்த சகாயபுரத்தின் மையமாக இடைவிடா சகாய அன்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.

    சகாயபுரம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாவும், விவசாய தினக்கூலிகளாகவும் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பலர் பாறையை பிளந்து கல் உடைத்து எடுப்பது, சிற்பங்கள் செதுக்க கீற்றுக்கல் எடுத்து கொடுப்பது, கல் தூண்கள் செதுக்கி கொடுப்பது, ஆட்டுக்கல், அம்மி கொத்தி கொடுப்பது, சிற்பங்களை செதுக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

    பிரச்சினைகளில் இருந்து விடுதலை

    இங்குள்ள சகாய அன்னையின் திருஉருவ படம் உயிர்துடிப்பும், அருள் ஆற்றலும், கனிந்த பார்வையும், நெஞ்சத்தை ஈர்க்கும் தன்மையும் உடையது. இதை உற்று நோக்குவோர், உள்ளம் உருகி அன்னைக்கு அடிமையாகி ஆழ்ந்து போகிறார்கள். அவரது அருளை பல்வேறு வடிவங்களில் பெற்று செல்கிறார்கள்.

    குறிப்பாக இறைவன்மீது பற்றுதல், இயேசுவை பின்பற்றும் ஆர்வம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, திருமணம், மகப்பேறு வரம், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை போன்றவற்றை பெறுகிறார்கள்.

    மெய்மறந்து மன்றாடுகிறார்கள்

    ஆலயத்தின் உள்அமைப்பும், ஆலய வளாகத்தில் காக்கப்படும் அமைதி சூழலும் பக்தர்கள் கடவுளையும் அன்னையையும் நெருக்கமாக சந்திக்கவும், ஆறுதல் அடையவும் தூண்டுகிறது. இதனால் பலர் தனிமையாகவும், குடும்பத்தோடும் எல்லா நாட்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஆலயத்தில் அமர்ந்து மெய்மறந்து மன்றாடி செல்கிறார்கள். இங்கு புதுமைகள் நடக்கின்றன என்றோ, பலர் அருங்காட்சிகள் காண்கிறார்கள் என்றோ பொறுப்பானவர்கள் பேசுவதோ, அறிவிப்பதோ இல்லை. சகாய அன்னை வழியாக இறைவனிடம் உருக்கமாக, நம்பிக்கையுடன் மன்றாடி வாழ்வின் பல்வேறு நலன்களை பெற்றவர்களே தங்களது அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.

    இதனால் தொடக்க காலத்தில் இருந்தே பெருமளவில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நவநாட்களில் பங்கு பெற்றுள்ளனர்.

    வாகனங்கள் அர்ச்சிப்பு

    இங்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதையும், விண்ணப்பங்கள், நன்றியறிதல்கள் மிகுந்து வருவதையும் புதன்கிழமை நவநாளில் வருவோர் கண்டுகொள்கிறார்கள்.

    புதிதாக வாங்கப்பெற்ற மற்றும் தகுதிச்சான்றிதழ் பெற்ற பலவகைப்பட்ட வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்துகூட அர்ச்சிக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. சகாய அன்னை ஊர்திகளுக்கும், அவற்றில் பயணம் செய்வோருக்கும், உழைப்போருக்கும் பாதுகாப்பு நல்குகிறார் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இதுவும் இந்த திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.

    ஒப்புரவு ஆலயம்

    இந்த திருத்தலத்திற்கு வரும் மக்கள் உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் பாரங்களை சுமந்து வந்து திருத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு அமைதியான மனதோடு திரும்ப செல்கிறார்கள். இதற்கு உதவும் வகையில் அண்மையில் ஒப்புரவு ஆலயம் ஒன்று ஆலயத்தின் வெளியே முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க இருதனி அறைகள் உள்ளன.

    இங்கு நிதானமாக அமர்ந்து தகுந்த தயாரிப்புடனும் மனத்துயருடனும் வழக்கமான தனிப்பாவ மன்னிப்பு பெறவும், உரையாடல் வழி ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை உளவியல் அறிஞருடன் அமர்ந்து கலந்துரையாடி வழிகாட்டுதல், மனத்திடன் பெறும் ஆற்றுப்படுத்தலுக்கு வாய்ப்பு உள்ளது.

    தற்போது புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அருட்பணியாளர்கள், உளவியல் அறிஞர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருத்தலத்துக்கு வருவோர் மனிதரை மனிதர் அன்பு செய்ய தூண்டும், மனித நேயப்பண்புகளை வளர்த்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த திருத்தலம் கோட்டார் மறைமாவட்டத்தின் அங்கமாக இருப்பதுடன், ஒரு தனி பங்காகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பங்குதந்தையாக அருட்பணியாளர் ஜோசப்ரொமால்ட் செயல்பட்டு வருகிறார்.

    • இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும்.
    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும்.

    திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

    லிங்க வடிவில் மலை : திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    தல வரலாறு

    கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோதுமுருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப்பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.

    அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

    பெயர்க்காரணம்

    பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

    இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    சிறப்புகள்

    முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

    லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

    சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார்.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

    கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

    கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.. கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோவில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை,. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன.

    இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோவிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன

    கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோவில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

    பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர். திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோவில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன. இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.

    அமைவிடம்

    தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம் மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    • இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘மதங்கீசுவரர்.’
    • இறைவி பெயர் ‘ராஜமதங்கீசுவரி.’ இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு.

    நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

    இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சமாக, வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இவை ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் உள்ளன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் மதங்கீசுவரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க (யானை வடிவில்) ரூபமாய் தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர், பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார். உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் அவருக்கு பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.

    மதங்கரிடம் நாரத முனிவர், "பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால், அந்தத் தலம் மட்டும் அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை 'பலாச வனம்' என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்" என்றார்.

    நாரதர் சொன்னபடியே இந்த தலத்திற்கு வந்த மதங்க முனிவர் அங்கு தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன்மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை "சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்" என சபித்தார் முனிவர்.

    பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்டினான். உடனே மதங்கர், "நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்" என அருளினார்.

    மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு, மதங்க முனிவருக்கு தரிசனம் அளித்தார். "மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார் மகாவிஷ்ணு.

    அதற்கு முனிவர் "தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு, எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்" என வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

    மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.

    மதங்கர், "நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் 'மதங்கேசர்' என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

    மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டில் இருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேசுவரர் என்ற திருநாமத்தில், ராஜமதங்கீசுவரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.

    காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.

    தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது.

    சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

    இரட்டை நந்திகள்

    வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

    -பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    • இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும்.
    • 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும்.

    திருமண வரம் தரும் சிவாலயங்களில் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவில் உள்ளது.

    கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும் திருமணம் நடைபெறாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவும் மாங்கல்ய பாக்கியம் அருளும் பட்டுக்கோட்டை மங்களாம்பிகா சமேத சந்திர சேகரர் கோவில் முக்கிய பரிகார தலம் ஆகும்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் மேல்பாகம் கோட்டைத் தெருவில் அமைந்துள்ள சந்திரசேகர சுவாமி(சிவன்) கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். ராஜராஜ சோழன் சோழ நாட்டுக்கு சோழமண்டலம் எனப் பெயர் மாற்றம் செய்து அதை 13 வள நாடுகளாக பிரித்தார். அதில் ஒன்றான பரண்டையூர் நாட்டில் இருந்த செல்லூர் என்ற ஊர் தான் இன்றைய பட்டுக்கோட்டையாகும்.

    குபேரன் சிலை

    அக்காலத்தில் மராட்டிய படை தளபதி பாவாஜி பண்டிதர் என்பவர் பட்டுக்கோட்டையில் கோட்டை கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. பட்டுக்கோட்டை சந்திரசேகர சாமி கோவில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றழி கோவிலாகும். இக்கோவிலின் 3 அடுக்கு கோபுரத்தை கடந்து ஆலயத்தின் இடது புறம் பங்குனித் திருவிழா முடிந்து பாதுகாப்பாக நாடியம்மன், அய்யனார் உற்சவர் சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ளன. இடது புற பிரகாரத்தில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன.

    இக்கோவிலில் உள்ள இறைவன் பெயர் பிறைசூடும் தம்பிரானார். பிற்காலத்தில் அதுவே வடமொழி ஆக்கமாக சந்திரசேகரர் என்று சூட்டப்பட்டது. அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. அம்பாள் தெற்கு பார்த்த நிலையில் தனி சன்னதியில் நின்றகோலத்தில் உள்ளார். மூலவர் தரிசனம் செய்து வெளியே வந்தால் இடதுபுற சுவரில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் சிலை புடைப்பு சிற்பமாக உள்ளது.

    பவுர்ணமி பூஜை

    கர்ப்பகிரகத்தின் மூன்று புற கோஷ்டங்களிலும் மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மன் சிலைகள் உள்ளன. வலது பிரகாரத்தில் சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் சிலைகள் உள்ளன. கருங்கற்களால் முழுவதும் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டுகளை தாங்கி வரலாறு கூறி நிற்கும் சிறப்பு பெற்றது.

    இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும். இவற்றில் கலந்து கொள்வதால் நிறைந்த செல்வம், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு, திருவருள் துணை போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சந்திரசேகர சுவாமி கோவிலில் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் முருகன் வள்ளி-தெய்வானையுடனும் உள்ளனர். சோழர் காலத்தில் பெரும் போற்றுதலுக்குரிய ஜேஷ்டா தேவியின் சிலை அபூர்வமாக இங்கு உள்ளது. சிலை சிறியதாக இருந்தாலும் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இருபுறமும் காளை முகமும், குதிரை முகமும் உடைய மாந்தி, குளிகன் என்ற இரு மக்களுடன் உள்ளார்.

    32 தூண்கள்

    இக்கோவில் திருமஞ்சன மண்டபம் 32 தூண்களை கொண்டது. தரை கருங்கற்களால் பரப்பப்பட்டது. தரைக்கல்லில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில் சோழர் காலத்தில் இவ்வூர் தலைவனாக இருந்தவர் ராஜேந்திர சுந்தர தோளுடையான் என்பவர். இவர் காலத்தில் ஒரு நிலம் குறித்த வழக்கு வருகிறது. மன்னரிடம் ஒருவர் நில உரிமை கேட்க நில உரிமைக்கான ஓலையை காட்ட வேண்டும் என்று மன்னர் ஆணை இடுகிறார்.

    நில உரிமை கேட்டவரும் மன்னர் கேட்டபடியே நிலத்துக்கான உரிமை ஓலையைக்காட்ட நிலம் கேட்டவருக்கே என்று தீர்ப்பு கூறப்படுகிறது. இந்த தகவல் கோவில் கல்வெட்டில் உள்ளது. நில உரிமைக்கு அக்காலத்திலேயே உரிமை ஓலை(பத்திரம்) இருந்தது நன்கு விளங்குகிறது.

    1200 ஆண்டுகளுக்கு முன்பு...

    அன்னிய படையெடுப்பின்போது பட்டுக்கோட்டையில் இருந்த கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டது. கோவிலும் தாக்கப்பட்டு சேதம் அடைந்தது. கோட்டை இருந்த இடம் இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் சந்திரசேகர சுவாமி கோவில் நாயக்க மன்னர் காலத்திலும், மராட்டியர் ஆட்சியிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தால் சிறிது தூரத்தில் கிணறு உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவாி மாதம் 10-ந் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். திருமணத்தடை நீக்கும் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    கோவிலுக்்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் பட்டுக்கோட்டைக்கு வர வேண்டும். பின்னர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சாமியார்மடம் பகுதிக்கு செல்லும் பஸ்சில் ஏறி சாமியார்மடத்தில் இறங்கி அங்கிருந்து ½ கி.மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலை அடையலாம். இதேபோல் பஸ் மூலம் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாமியார்மடம் செல்லும் பஸ்சில் ஏறி கோவிலை அடையலாம்.

    • இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
    • திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில்.

    கபாலீஸ்வரர் திருமாலை

    மூலப் பரம் பொருளே முக்கண்படைத்த முழு முதல்வன்

    ஆலக் கணத்தியுள் ஞான சம்பந்தர் அருள் மொழியிற்

    சாலப் புகுந்தவன் பூங்கோதை வாழ்வு தழைவித்தவன்

    காலக் கடவுள் மயிலா புரியிற் கபாலியன்றே

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

    மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோவில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோவில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.

    இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கவுதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த சப்த ஸ்தான சிவாலயங்களின் வரிசையில் ஒரு சிவாலயமாக கபாலீஸ்வரர் கோவில் சிறப்பு பெற்றுள்ளது.

    இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.

    இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ள பகுதி மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

    ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஆண்ட பல்லவர் காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையில் இருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது.

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார்.

    சம்பந்தர் மயிலாப்பூர் வந்த போது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப்பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோவிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய கபாலீசுவரர் கோவிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோவில் இருப்பதைக் காணமுடியும்.

    திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில். திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற திருத்தலம் இது. பெரிய புராணம் போன்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்திற்கான திருப்புகழ் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம் இது.

    பார்வதி அன்னை சிவபெருமானை நோக்கி, மயில் வடிவில் இருந்த நான் உங்களை வழிபட்ட இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வரவேண்டும். மயில் வடிவில் இருந்து இங்கே நான் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு மயில் தீர்த்தம் என்கிற பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வந்தது. மயிலாப்பூர் என்றாகி, மயிலை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பண்டைய புராண வரலாறுகளில் ஒன்று சிவன் பிரம்மாவை சபித்தது.

    பிரம்மாவிற்குக் கோவில் கிடையாது என்றும், பிரம்மனுக்கு உதவியாகப் பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜையில் சேர்க்கக்கூடாது என்றும் கூறிய சிவபெருமான். பைரவரை உருவாக்கி பிரம்மாவின் ஒரு சிரத்தை கொய்யச் சொன்னார். அதனால் ஐந்து தலைகள் பெற்றிருந்த பிரம்மா, நான்கு தலை கொண்டவராக ஆனார். அதன்பிறகு விமோசனம் வேண்டி சிவபெருமானைப் பிரம்மா வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

    இங்கே சிவபெருமானை வழிபட்டு நான்காவது தலையை பெற்றார் பிரம்மா. நான்முகனான பிரம்மா, சிவபெருமானை நோக்கி, இத்தலத்தில் நான் உங்களை வணங்கியதாலும், நீங்கள் பிரம்ம கபாலம் ஏந்தியதாலும் இனி இத்தலத்திற்குப் பிரம்ம கபாலீஸ்வரம் என்றும், உங்களுக்கு கபாலீஸ்வரர் என்கிற பெயரும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அப்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் அருளினார். இத்தலத்தில் பிரம்மாவை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். இத்தலத்தில் சிவபெருமானை வேதங்கள் வணங்கின. ராமபிரான் ஜடாயுவிற்கு இறுதி கடமைகளைச் செய்த பின்பு, இங்கே வந்து கபாலீஸ்வரரை வணங்கினார். ராமபிரான் முடிசூட்டிக் கொண்ட பின்பு மீண்டும் இங்கே வந்து ஐப்பசி திருவோண விழாவில் கலந்துகொண்டு வழிபட்டார்.

    முருகப்பெருமான் தாய் தந்தையரை வழிபட்டு பேறு பெற்றதால் சிங்காரவேலர் என்று போற்றப்படுவது போன்று, எண்ணற்ற சிறப்புகள் இத்தலத்திற்கு உள்ளன. இத்தலத்தில் அருள்கின்ற ஸ்ரீ கற்பகாம்பாள் அன்னை, நாம் கேட்டவைகளை கொடுப்பதோடு, கேட்க மறந்தவைகளையும் கொடுக்கிறாள்.

    இக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் அறுபத்து மூவர் விழா சிறப்பானது.

    அதிலும் நாளை நடைபெறும் அறுபத்து மூவர் வீதி உலா மிக, மிக கோலாகலமானது. ஒரு முறை நேரில் அதை பார்த்து அனுபவித்தால் தான் அந்த மகிமை உங்களுக்கு புரியும்.

    • 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும்.
    • சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் 'பக்தவச்சலப் பெருமாள்'. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார்.

    108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் இந்த சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் இந்த திவ்ய தேசம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தை பராங்குச சோழன் என்ற மன்னன் 3-ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறான். எனவே இவ்வாலயம் சோழசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சோளிங்கபுரம் என்றானது. அதுவே மருவி 'சோளிங்கர்' என்று அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தரிசிக்க, வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் ஆகிய சப்த ரிஷிகளும் விரும்பினர். ஆனால் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த உக்கிர கோலத்தை நீக்கி, சாந்தமாக காட்சியளிக்க வேண்டும் என்று அவர்கள் நரசிம்ம பெருமாளை வேண்டினர். அதற்காக அவர்கள் 7 பேரும் நரசிம்மரை நினைத்து தவம் இருந்த தலம் இதுவாகும். ஒரு காலத்தில் விஸ்வாமித்திர முனிவர், இத்தலத்தில் சிறிதுநேரம் நரசிம்மனை வழிபட்டு, 'பிரம்மரிஷி' பட்டத்தைப் பெற்றார். அதுபோல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சப்த ரிஷிகளும் இந்த தலத்தை தேர்வு செய்து தவம் இயற்றினர். இதையடுத்து சப்த ரிஷிகளின் விருப்பப்படி, நரசிம்மர் தன்னுடைய கோபத்தை தணித்து யோக நிலையில் காட்சி அளித்தார். அந்த கோலத்திலேயே இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்கிறார்.

    சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து இந்த ஆலயத்தை அடைவதற்கு 1,305 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையின் மீது ஒரு ஏக்கர் பரப்பளவில், 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மப் பெருமாளை, திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்று போற்றுகின்றனர். அருகில் தாயார் அமிர்தவல்லி இருக்கிறார். ஊரின் மையத்தில் உற்சவருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் அனைத்தும் அங்குதான் நடைபெறும். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மலை மீதுள்ள யோக நரசிம்மர் ஆலயம்.

    இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே, ஒருவர் முக்தியை அடைவார் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது, நரசிம்மர் அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்று பறைசாற்றிய அவதாரம் இது. அதோடு தன் பக்தர்களுக்காக உடனடியாக காட்சி தந்து அருள்பாலிப்பவர். எனவே நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வரம் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெருமாளுக்கு, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைகள் இருக்கின்றன. சில கோவில்களில் மொட்டை போடுவார்கள், சில கோவில்களில் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். ஆனால் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்தில் இவை எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரே கல்லின் மீது குன்றுபோல் அமைந்த இந்த மலை மீது 1,300 படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலேயே போதுமானது, பக்தர்கள் கேட்கும் வரங்களை அவர் அளித்து விடுவார்.

    இத்தல இறைவனுக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் இத்தல நரசிம்மருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெறும். அப்போது இறைவனை அபிஷேகிக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, ஆகியவற்றை பிரசாதமாக வழங்குகிறார்கள். மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு மலையேறும் பக்தர்கள், மலைப்பாதையின் வழியில், சிறுசிறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் புதிய வீடு கட்டும் யோகம் வாய்க்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதத்தில்5 வெள்ளிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ பூஜைகள் செய்யப்படும். சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, காஞ்சி கருடசேவை, ஆடிப் பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனி உற்சவம், மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம், தை பொங்கல் விழா, மாசியில் தொட்டாச்சாரியா உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் இத்தல மூலவர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியாளர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

    சங்கு, சக்கரத்துடன் ஆஞ்சநேயர்

    யோக நரசிம்மர் அருளும் மலைக்கு எதிரில் 406 படிகளுடன் அமைந்த அழகிய குன்றின் மீது, யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் இருக்கும் இவர் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும், மீதமுள்ள இரண்டு கரங்களில் ஜெபமாலையும் தாங்கி காட்சி தருகிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.

    சப்த ரிஷிகள் இந்த மலையில் தவம் இருந்தபோது, அவர்களுக்கு காலன், யோகன் என்ற இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள், ஆஞ்சநேயரை இத்தலம் சென்று சப்த ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஆணையிட்டார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து, இரண்டு அரக்கர்களுடன் போரிட்டார். ஆனால் அரக்கர்களை வெல்ல முடியவில்லை. இதையடுத்து பெருமாளிடம் இருந்து அவரது சங்கு, சக்கரத்தை வாங்கி, அதனைக் கொண்டு இரண்டு அரக்கர்களையும் விரட்டியடித்து, ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தார். அதன்பிறகுதான் சப்த ரிஷிகளுக்கு பெருமாள், யோக நரசிம்மராக இங்கு காட்சியளித்தார். அந்தக் காட்சியை ஆஞ்சநேயரும் கண்டுகளித்தார்.

    அப்போது நரசிம்மர், "நீயும் இங்கு யோக நிலையில், என்னுடைய சங்கு, சக்கரத்தை ஏந்தி இரு. என்னுடைய பக்தர்களின் குறையை போக்கி அவர்களுக்கு அருள்புரிவாயாக" என்றார். அதன்படியே நரசிம்மர் கோவிலுக்கு அருகில் உள்ள குன்றில், ஆஞ்சநேயரும் யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.

    அமைவிடம்

    வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்திலும், ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும், திருத்தணியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் இருக்கிறது.

    • 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது.

    மணப்பாறை நகரம் வணிக நிலையங்களுக்கும், முறுக்கிற்கும், மாடுகளுக்கும் மிகவும் பெயர் பெற்றதோடு மட்டுமின்றி, புனிதமிகு தெய்வத் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பெயர்பெற்றது என்றால் அது மிகையாகாது. மணப்பாறையின் மையப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கொண்டு தம்மை உளத்தூய்மையோடு வணங்குபவரின் பெருந்துயர் களைந்து, கொடிய நோயகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருபவளே மணவை மாரி.

    புனிதக்கல்

    அடிப்படை வசதிகளேயற்ற பழமையான அக்காலத்தில் மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்பமரமொன்றை சுற்றி மூங்கில் மரங்கள் வான்நோக்கி வனப்போடு புதராய் வளர்ந்தோங்கி நின்றிருந்தன. அதில் மூங்கில் மரமொன்றை ஒருவர் வெட்டிச்சாய்க்க முனைந்தபோது வெட்டரிவாளின் கூரியமுனை வேப்பமரத்தின் அடியைத் தீண்ட, அதில் இயற்கையிலேயே தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    எதிர்பாராத இக்காட்சியால் அரிவாளால் வெட்டியவர் அதிர்ந்து போய் அலறியடித்து ஊரைக்கூட்ட, ஊரார் ஒருங்கே திரண்டு அக்காட்சியை பயபக்தியாய் இறைப்பெருக்கோடு கண்டுகளித்தனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து தான் மகமாயி என்றும், இவ்வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாக குடிகொண்டு இருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால் இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினார். அதனை ஊரார் ஏற்று மாரிக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்தனர்.

    வேண்டிச்செல்லும் காரியங்கள்

    அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது. சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட மாரியம்மனுக்கு காட்டும் புனித தீபாராதனைகள் முதலில் அப்புனித கல்லிற்கு காட்டப்பெறுதலை இன்றும் காணலாம். இவ்வேப்பிலை மாரியினை கண்ணபுரத்தாளாம் சமயபுர மாரியின் அருமை சகோதரி என இறைநெஞ்சங்கள் கூறி மகிழும் தனித்தன்மை வாய்ந்ததாம். மேலும் இம்மாரியை கைகொடுக்கும் மாரி என்றும், கைவிடாத மாரி என்றும், கண்கண்ட மாரி என்றும் அம்மை முத்துக்களை அகற்றிக்காக்கும் முத்துமாரி என்றும், கண் அளிக்கும் மாரி என்றும் போற்றிப் பாராட்டுதலை யாவரும் அறியலாம்.

    இத்தெய்வத் திருமகளை வணங்கி வேண்டிச் செல்லும் காரியங்கள் யாவும் எளிதில் கைகூடுதலை இந்த ஆலயத்திற்கு அலைகடலெனப் பெருகும் இறையன்பர்களின் எண்ணிக்கையை கொண்டே எளிதில் உணரலாம். பெருந்திரளான பெண்களின் கூட்டம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பெருகி வருதலை பலரும் அறிவர்.

    கும்பாபிஷேக விழா

    இக்கோவில் 1979-ம் ஆண்டில் கொடிய தீ விபத்திற்குள்ளானது.

    இதையடுத்து மணவை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி டாக்டர் வி.என்.லெட்சுமிநாராயணனின் சீரிய தலைமையின் கீழ் ஒரு திருப்பணி குழுவை அமைத்து, நன்கொடை திரட்டி புதுமை பொலிவோடு அழகுகொஞ்சும் கோவில் கட்டி கடந்த 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    மேலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கிணங்க இத்திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாததைப் பெருங்குறையாக கருதிய இம் மாநகரத்து ஆன்மிக சான்றோர்கள் திருப்பணி குழுவினர், தமிழக அரசின் மேன்மையான ஒத்துழைப்போடும் பொருளுதவியோடும் மிகச்சிறப்புற அழகுமிகு 3 நிலை ராஜகோபுரத்தை அற்புதமாக கட்டி கடந்த 14.3.1994 அன்று கும்பாபிஷேக விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன.
    • 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். மேலும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் இங்கு அதிகமாக வருகின்றனர். சில பக்தர்கள் மலேசியாவில் இருந்தும் வருகை தருகின்றனர்.

    மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் தருமபுரி பைரவர் கோவிலில் வீற்றிருக்கிறார் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் விரதம் இருப்பது மிக சிறப்பானது.

    பைரவர் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும் படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள் மயமாக்கி ஆட்சி செய்தான்.

    தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களின் கருணையால் அந்தகாசுரன் அழிந்தான். இதுவே பைரவர் அவதரித்த நோக்கம். ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.

    போரில் வென்ற மன்னன்

    9-ம் நூற்றாண்டில் நிறைய இந்து கோவில்கள் அப்போது ஆட்சி புரிந்தவர்களால் இடிக்கப்பட்டன. அப்பொழுது இப்பகுதியை ஆண்ட அதியமான் மன்னரால் எதிரிகளை வெல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கால பைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர்.

    மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்றும் ஜோதிடர்கள் கூறினர். அவர்கள் சொன்னதற்கு இணங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார். இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    • பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது.
    • மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம்.

    பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது. எனவே, இத்தல இறைவன்-இறைவியை வழிபடுவதால் நம் பாவங்கள் கரைந்து நாளும் நலமாய் வாழ்வது நிச்சயமே!. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய்யை எடுத்து, இறைவனுக்குப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக ஒரு புராண வரலாறு உள்ளது.

    பார்வதிக்கு ஒரு நாள் திடீரென்று ஓர் ஆசை உண்டானது. பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே, சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார்.

    பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடிய வில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன், அஸ்தமிக்காது தயங்கி நின்றது. கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும், தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார்.

    தேவியை பசுவாகும்படி சிவபெருமான் சாபமிட்டார். இதையடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின் தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள்.

    சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் 'நீ சுயரூபம் பெற்றுவிட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்' எனச் சொல்லி மறைந்தார்.

    உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனைநல்லூர். இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால், அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள நெய்குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது.

    அன்னை பார்வதி அந்த நெய்யைக் கொண்டு, இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்தத் தலமே நெய்குப்பை திருத்தலமாகும். அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்கு உள்ள ஆலயமே சுந்தரேசுவரர் ஆலயமாகும். பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்தத் தலத்தில் நெய்யாக மாறியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    கூபம் என்றால் கிணறு என்று பொருள். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூடம் என்றாகி, பின்னர் மருவி தற்போது நெய்குப்பை என அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்கு பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது.

    மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது இக்கோவில். பலிபீடம், நந்தி தேவனைக் கடந்து உள்ளே சென்றால் மணிமண்டபம். அம்மன் அருள்மிகு சவுந்திர நாயகி தென்புறம் நோக்கி சாந்தமான முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அடுத்து உள்ளது மகாமண்டபம்.

    வடபுறம் நடராஜர், சிவகாமி அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளது. அடுத்து அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் அருள்மிகு சுந்தரேசுவரர் லிங்கத் திருமேனியில் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

    தேவ கோட்டத்தில் வடபுறம் தட்சிணாமூர்த்தியும் தென்புறம் துர்க்கையும் உள்ளனர். துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் மேற்கில் மும்மூர்த்தி கணபதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, பால கணபதி, சிவபெருமான், ருத்ராபதீஸ்வரர், பைரவர், கஜலட்சுமி, நால்வர் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் எதிரே வெளியே வலஞ்சுழி விநாயகர் தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

    சூரியன் அஸ்தமாகாது தாமதமானதால் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது என்று அவர் சிவபெருமானிடம் கேட்டார்.

    ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரகணங்களால் இத் தலத்தில் பூஜை செய்ய, சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற, சூரியனும் அதன்படி பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு.

    இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

    இத்திருக்கோவிலுக்கு எதிர்புறம் சூரிய தீர்த்தமும், வடக்கே கொள்ளிடம் மற்றும் மண்ணியாறும் அமைந்து ஆன்மிக சிறப்போடு இயற்கை அழகினையும் இனிதே கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது மண்ணியாறாகும். ஆலயத்திற்கு வடக்கே இம்மண்ணியாறு செல்வதால் இதை உத்தரவாஹினி என்றும், முருகப் பெருமானால் ஏற்பட்ட நதி இது என்பதால் சுப்பிரமணிய நதி என்றும் வழங்கப்பட்டது. நாளடைவில் சுப்பிரமண்ணிய என்ற சொல் மருவி இன்று மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலின் தலவிருட்சம் பவளமல்லி. தினசரி இங்கு காலை, சாயரச்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், இங்கே கோவிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளி அமர்ந்து காட்சி தருகிறார். கர்ப்பகிரகமும் நுழைவாசலை விட்டு சற்றே தள்ளி அமைந்திருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தை ஒரு முறை தரிசனம் செய்வோருக்கு சகல சாப பாவ விமோசனங்களை இத்தல இறைவன் தந்தருள்வார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    பிரிந்த தம்பதியர் இந்த ஆலயம் வந்து, இறைவன் இறைவியை அர்ச்சனை செய்து வழிபட்டு, 48 நாட்கள் முடிவில் ஆலயத்தில் மூல மந்திர ஹோமம் நடத்துவதினால், அவர்கள் மீண்டும் சேர்ந்து இனிய இல்லறம் நடத்துவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    அமைவிடம்

    கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இத்தலம் கும்பகோணத்தின் வடகிழக்கில் 29 கி.மீ தொலைவிலும், பந்தநல்லூர் - வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் பந்தநல்லூரில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    -பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

    • காசியை விட பன்மடங்கு சிறப்பு கொண்டது திருவாஞ்சியம்.
    • இந்த கோவிலில் எமனை வழிபடுபவர்களுக்கு எமபயம் இல்லை.

    பாவங்கள் போக்கும் சிவாலயங்களில் காசிக்கு நிகரான புகழ் பெற்ற சிவாலயமாக திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது.

    திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வாஞ்சிஈஸ்வரர் என்றும், வாஞ்சிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை என்றும் மறுவார் குழலி என்றும் அழைக்கப்படுகிறார்.

    எமதர்மன் தனி சன்னதி கொண்டுள்ள இந்த கோவிலில் குப்த கங்கை என்ற தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி எமதர்மராஜாவை வணங்கினால் அனைத்து பாவங்களும் நீங்கி எம பயம் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும் காசிக்கு சென்று வந்த புண்ணியத்தை பெறலாம். இந்த கோவிலில் உள்ள மகிஷாசுர மர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் பயம் நீங்குவதோடு நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

    பாவங்கள் நீங்கும்

    தென்னாட்டில் காசிக்கு நிகராக போற்றப்படும் 6 திருத்தலங்கள் உள்ளன. இவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, திருவெண்காடு, சாயாவனம்(பூம்புகார்), திருவாஞ்சியம். இந்த ஆறிலும் முதன்மையானது திருவாஞ்சியம். காசியில் இறப்பவர்களுக்கு முக்தி கிடைத்தாலும் எம உபாதை பைரவ உபாதை இருக்கும். ஆனால் திருவாஞ்சியத்தில் இறப்பவர்களுக்கு முக்தி கிடைப்பதோடு எம உபாதையும், பைரவ உபாதையும் இருக்காது. எனவே காசியை விட பன்மடங்கு சிறப்பு கொண்டது திருவாஞ்சியம்.

    கலியுகத்தில் பாவம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் பாவம் செய்தவர்களில் பலர் காசிக்கு சென்று கங்கையில் நீராடி தங்களின் பாவங்களை போக்கிக் கொண்டதால் கங்கையில் பாவம் சேர்ந்தது.

    இதனால் அச்சம் அடைந்த கங்கா தேவி, சிவபெருமானிடம் சென்று அனைவரும் தங்களின் பாவங்களை என்னிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இந்த பாவங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதற்கு மாற்று வழி கூறுங்கள் என வேண்டினார்.

    எமதர்மனின் கோபம்

    உடனே சிவபெருமான், தென்னகத்தில் திருவாஞ்சியம் என்ற திருத்தலத்தில் நான் இருக்கிறேன். நீ உனது ஆயிரம் கலையில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்துவிட்டு மீதி உள்ள 999 கலைகளுடன் அங்கு குப்த கங்கையாக வீற்றிருப்பாய் என்று ஆணையிட்டார்.

    உடனே கங்காதேவி. சிவனின் ஆணைப்படி திருவாஞ்சியத்தில் புண்ணிய தீர்த்தமாக அமர்ந்தாள். சூரியனுக்கும், உஷா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் எமன். உலகின் உயிர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு நரகத்தையும், சொர்க்கத்தையும், அளித்து வருபவர் இவர்.

    கலியுகம் பிறக்கும்போது எமனுக்கு பயம் வந்து விட்டது. தனக்கு(எமதர்மனுக்கு) உயிரை எடுக்கும் கொலை பணியை சிவபெருமான் ஒதுக்கி விட்டார்களே என்று சிவபெருமான் மீது கோபம் கொண்டார். அவரது கோபம் அறிந்த சிவபெருமான் உயிரை எடுக்கும் பணியை எமனிடம் இருந்து பறித்து விட்டார். இதனால் பயந்து போன எமன், அனைத்து கோவில்களுக்கும் சென்று சிவனை வழிபட தொடங்கினார்.

    குப்த கங்கை

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எமதர்மன், சிவபெருமானை நோக்கி மனம் உருகி வேண்டியபோது திருவாஞ்சியம் சென்று வழிபடு என்று அசரீரி கூறியது. அதன்படி அங்கு சென்று பல ஆண்டுகள் தவம் புரிந்தார் எமதர்மன். மேலும் அங்கு தனது பெயரில் ஒரு தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடினார். மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிவபெருமான் எமனுக்கு காட்சி கொடுத்து எமன் கேட்ட வரங்களை வாரி வழங்கினார்.

    திருவாஞ்சியம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி விட்டு உன்னை(எமனை) வணங்கிய பிறகு தான் விநாயகரை வழிபட்டு, என்னை வணங்குவார்கள் என்றும் வரமளித்தார்.

    எம பயம் நீங்கும்

    இதனால் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சேத்திர பாலகராக இருந்து எமதர்மராஜா பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் எமதர்மராஜனுக்கு உள்ள மிக பழமையான சன்னதி இந்த கோவிலில் உள்ள சன்னதி ஆகும்.

    திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் எமனை வழிபடுபவர்களுக்கு எமபயம் இல்லை. ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் எமதர்மனை வணங்கி பின்னர் கோவிலுக்குள் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

    சூரியனின் பாவம் தீர்த்த தலம்

    தட்சன், தனது மகள் தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்தார். ஆனால் அதை ஒரு பொருட்டாக எண்ணாத சிவபெருமான் எதிர்ப்பையும் மீறி தாட்சாயினியை திருமணம் செய்தார். இதனால் கோபம் அடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். சிவபெருமானைத்தவிர மற்ற அனைத்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதனால் சிவபெருமானை தவிர அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டனர். இது பற்றி அறிந்த தாட்சாயினி தேவி கடும் கோபம் அடைந்தாள்.

    நான் எனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்துக்கு சென்று மருமகனை அழைக்காமல் யாகம் நடத்துவது தவறு என்று சுட்டிக் காட்டுகிறேன் என்று சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். ஆனால் சிவபெருமான் அதற்கு அனுமதி மறுத்ததோடு அங்கு போகக்கூடாது என்று கூறி தாட்சாயினியை தடுத்து நிறுத்தினார்.

    சிவபெருமான் கட்டளையை மீறி தாட்சாயினி யாகத்துக்கு சென்றாள். அங்கு தட்சன் அவளை அவமதித்ததால் கோபம் அடைந்த தாட்சாயினி யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள், தட்சன் ஆகியோர் விரைவில் அழிந்து போவார்கள் என்று சாபம் கொடுத்தாள்.

    இதனை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழித்து தண்டிக்கச் சொன்னார். சிவனின் கட்டளையை ஏற்று வீரபத்திரன் தன் கணங்கள் சூழ யாகசாலை சென்று அங்கு இருந்த அனைவரையும் அடித்து நொறுக்கி அளித்தார். அப்போது சூரியனின் கன்னத்தில் வீரபத்திரன் ஓங்கி அறைந்ததால் சூரியனின் பற்கள் கீழே கொட்டின. கண்கள் ஒளி இழந்தன.

    அனைவரையும் தாக்கிய வீரபத்திரனின் கோபத்தை மகாவிஷ்ணு குறைத்தார். அப்போது அங்கு தோன்றிய சிவபெருமானிடம் பற்களை இழந்த சூரியன், எனது பாவம் தீர வழி கூறுங்கள் என்று வேண்டினார். உனது(சூாியன்) பாவங்கள் தீர வாஞ்சியத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் சிவ துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார்.

    அவ்வாறே சூரியன் திருவாஞ்சியம் வந்து முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவமிருந்து இறைவனை வணங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், சூரியன் முன் தோன்றி பாவம் நீக்கி பழைய ஒளியை தந்தார். அத்துடன் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அருள்புரிந்தார்.

    வழிபடும் முறை

    வாகை சூட அருள் தரும் வாஞ்சிநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் புனித தீர்த்த குளமான குப்த கங்கையில் நீராடி கங்கை கரை விநாயகரை தரிசிக்க வேண்டும். பின்னர் சேத்திர பாலகர் எமதர்மராஜாவை வழிபட வேண்டும். அதன் பிறகு விநாயகரை வழிபட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    எமதர்மராஜா சன்னதியில் தங்களது வயதிற்கு ஏற்ப நெய் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராகுவும், கேதுவும்

    திருவாஞ்சியம் கோவிலில் ராகுவும், கேதுவும் ஒரே மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள். மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு-கேது ஆகிய இரண்டு கிரகங்களும் தனித்தனி தலங்களில் இருந்தாலும் ஒரே மூர்த்தியாக இருப்பது இங்கு மட்டும்தான். இதனால் இரண்டு கிரகங்களின் பரிகாரங்களையும் இங்கு செய்யலாம். இந்த அமைப்பு சண்டராகு என்று கூறப்படுகிறது. மேலும் துர்க்கை திருவாஞ்சியத்தில் அஷ்ட புஜங்களோடு மகிஷாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறார். துர்க்கை அம்மனுக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் திருவாரூருக்கு வந்து அங்கிருந்து நன்னிலத்துக்கு சென்று நன்னிலத்தில் இருந்து மாப்பிள்ளைகுப்பம் என்ற பகுதிக்கு சென்றால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலை அடையலாம்.

    வெளிமாவட்ட பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து நேரடியாக கும்பகோணத்துக்கு வந்து கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பஸ்சில் ஏறி அச்சுதமங்கலத்தில் இறங்கி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். அல்லது திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் பயணித்து மணக்கால் பகுதியில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    ×