என் மலர்
கோவில்கள்
- இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.
- விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கி.பி. 1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின், அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில்
தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார்.
உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்றனர். அவர்கள் கூறிய படி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில் குளத்தில் குளித்து விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் இதுகுறித்து அமைச்சர், துளசேந்திர மகாராஜாவிடம் கூறினார். உடனே மகாராஜா, நீலகண்டப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தை தானமாக கோவிலுக்கு எழுதி வைத்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நீலகண்டப்பிள்ளையார், துளசேந்திர மகாராஜாவின் கனவில் தோன்றி தனக்கு பூந்தோட்டம், பழத்தோட்டம் வேண்டும் என கேட்டதாகவும், ஆதலால் பேராவூரணி ரெயில்நிலையத்தின் அருகில் உள்ள செங்கொல்லை எனப்படும் நிலத்தினை தானமாக எழுதிக்கொடுத்ததாகவும் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சிறிய கூரைக்கொட்டகையில் இருந்த நீலகண்டப்பிள்ளையாருக்கு சிறிய கோவிலையும் அவர் கட்டி கொடுத்தார்.
தலவிருட்சம் துளசேந்திர மகாராஜாவால் சிறிய கோவிலாக அமையப்பெற்ற இந்த கோவில் பின்னர் பலரின் முயற்சியால் சிறிது, சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு விமானம், சிறிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் 2 பெரிய முன்மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோவிலாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்கு வடக்கு புறத்தில் தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடி, நீல கண்டப்பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்த பிள்ளையாருக்கு "தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப்பிள்ளையார்" என்ற சிறப்பு பெயரும் உண்டு.
பல்லி சொல்
இக்கோவிலில் சில பக்தர்கள் திருமண பொருத்தம் மற்றும் சில நல்ல காரியங்களுக்கு விடியற்காலையில் கவுளி (பல்லி சொல்) கேட்பதற்காகவே வந்து செல்வார்கள். கிழக்கு நோக்கிய இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.
கோவிலின் பின்புறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது. காரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.
விநாயகருக்கு அமைந்த தனி கோவில்களில் இது முக்கியமானது. முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.
பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழங்தைக்காவது நீலகண்டன், நீலவேந்தன், நீலா, நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் கோவில் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்ட பிள்ளையாரை வழிபடுபவர்கள்.
- ‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார்.
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.
மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.
பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.
தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.
அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்கச் செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் நிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.
'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுவதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
- கருவறை முதல் கடைசி வெளிப்பிரகாரம் வரை முழுவதுமாக கருங்கற்களால் கட்டப்பட்டது.
- இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர், தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார்.
வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ''இரசை'' என்று பெயரிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ''இரசை'' நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் 'மாரி' அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.
சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி 'நத்தம் மாரியம்மன்' என்று அழைக்கப்பட்டது. நாடி வரும் பக்தர்களின் குறையை தீர்ப்பதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
கோவில் நடை திறப்பு
நத்தம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
கருங்கற்களால் கலைக்கோவில்
புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில், கருவறை முதல் கடைசி வெளிப்பிரகாரம் வரை முழுவதுமாக கருங்கற்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் 22 கல் தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.
கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்
நத்தம் மாரியம்மன் நித்தம் அருள்பாலிக்கும் முத்திரை பதிக்கும் தெய்வமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அதன்படி இந்த மாசி பெருந்திருவிழாவில் தம்பதிகள் பலர் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நோய்களை தீர்க்கும் மூலிகை தீர்த்தம்
நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன.
அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் 'அம்மை' தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.
- இங்கு மூலவராக ஐயாறப்பர் அருள்பாலிக்கிறார்.
- மிகவும் பழமையான சிவதலங்களில் இதுவும் ஒன்றாகும்.
மூலவர்:ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்
அம்மன்/தாயார்:தரும சம்வர்த்தினி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி
ஊர்:திருவையாறு
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. காவிரி கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான சிவதலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாக இக்கோவில் விளங்குகிறது.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 51-வது தலமாகவும் உள்ளது. இங்கு மூலவராக ஐயாறப்பர் அருள்பாலிக்கிறார். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறைவியாக அறம்வளர்த்தநாயகி எனும் தர்மசம்வர்த்தினி அம்மன் அருள்புரிகிறார். இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பர் என உரக்க கூறினால் 7 முறை திரும்ப கேட்பது சிறப்பம்சமாகும். கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது.
கோவிலின் தெற்கு வாசலில் ஆட்கொண்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடமாக போற்றப்படுகிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.
சிவனுக்கு வடைமாலை:
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். ஆனால் ஈசுவரனுக்கு ஒரு கோயிலில் வடைமாலை சாத்துகிறார்கள். இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு.
தலபெருமை
இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று காலை ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு 7 ஊர்களை வலம் வர உள்ளார்.
கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவில் ஐயாறப்பருடன், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டி வேர் பல்லக்கில் வலம் வருவார். ஐயாறப்பர், நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய 6 ஊர்களை வலம் வந்து, இரவு 6 ஊர் பல்லக்குகளும், தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.
தொடர்ந்து தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து திருவையாறு தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
நன்றி செலுத்தும் பெருவிழா
நந்தியெம்பெருமான் திருமணத்திற்காக திருப்பழனத்திலிருந்து பழவகைகளும், திருச்சோற்றுத்துறையிலிருந்து உணவு வகைகளும், திருவேதிகுடியிலிருந்து வேத பிராமணர்களும், கண்டியூரிலிருந்து திருஆபரணங்களும், திருப்பூந்துருத்தியில் இருந்து மலர்களும், திருநெய்த்தானத்திலிருந்து நெய் வந்ததாகவும் அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு சப்தஸ்தான விழா நடத்தப்படுவதாகவும் ஐதீகம்.
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
- பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது.
- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த கோவில் உருவான வரலாறு குறித்த விவரம் வருமாறு:-
ஆதிபராசக்தியின் பக்தரான கோவில் தலைமை பூசாரி, பல ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூர் கோவில் தரிசனம் முடிந்து திரும்பும் வழியில், முக ஐஸ்வர்யத்துடன் ஒரு மூதாட்டியும், ஒரு இளம்பெண்ணும் பேசிக்கொண்டு இருப்பதை கண்டார். அவர்களை சந்தித்த அவருக்கு பெண்கள் பூஜை ரகசியங்களை சொல்லி கொடுத்தனர். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் தனி அறையில் அமர்ந்து தமிழில் உருக்கமாக பிரார்த்தனை செய்ய தொடங்கினார்.
அப்போது தான் குடி இருக்க தனியாக இடம் வேண்டும் என வேண்டினார். அடுத்த நாள் அவர் தந்தையின் கனவில் தோன்றிய தேவி, ஆதிபராசக்தியின் அருள் பக்தரிடம் நிறைந்து உள்ளது எனவும், ஆதலால் பக்தரின் வேண்டுதலை ஏற்று இப்போது வசிக்கும் இடத்திலேயே ஒரு சிறிய கோவில் கட்டி கொடுக்கவும் என்று கூறி கனவில் இருந்து மறைந்தார்.
பக்தர்கள் வருகை
பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அந்த பக்தர் பூசாரியாக ஆதிபராசக்திக்கு பூஜை வழிபாடுகளை நிறைவேற்றினார். பூஜைகளை முறைப்படி கற்றிராத அந்த பூசாரி நாளடைவில், முற்றும் தெரிந்த பூசாரியை போல் ஆதிபராசக்தியின் அருளால் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி வருகிறார். இந்த கோவில்தான் மாங்குளம் ஸ்ரீபராசக்தி தேவி கோவிலாக அறியப்படுகிறது. ஆதி பராசக்தியின் அருட் செயலை கேள்விப்பட்டு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வர தொடங்கினர்.
குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஆதிபராசக்தியின் பக்தனான தலைமை பூசாரி, பிரச்சினைகளுக்கு பரிகார மார்க்கங்களை சொல்லி கொடுக்க தொடங்கினார். அவர்களின் துன்பங்களுக்கு பூசாரி பல்வேறு பரிகாரங்களை பரிந்துரை செய்து வருகிறார். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து மீண்டு வரவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் தேவியை தரிசிக்க கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஸ்ரீ ஆதிபராசக்தி தேவியையும், ஸ்ரீ பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இக்கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பானவையாகும்.
ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது.மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- 160 அடி உயரம் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலை நினைத்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கோபுரங்கள் தான். இந்த கோபுரங்களில் எண்ணற்ற சிற்பங்களும் உள்ளன. சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
வெளிகோபுரங்கள்
கோவிலின் வெளி மதிலில் 4 திசைகளிலும் 4 கோபுரங்கள் உள்ளன. இவை வெளிகோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயிற் தூணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாயில்களும் உயர்ந்த உறுதியான கதவுகளை கொண்டுள்ளது.
இந்த கோபுரங்களின் அடிப்பகுதி கருங்கல்லினால் ஆனது. இவற்றின் உப பீடம், அதிஷ்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் அழகுற அமைந்துள்ளன. கருங்கல் பகுதிக்கு மேலுள்ள சிகரப்பகுதி பல நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி செங்கல், சாந்து இவற்றால் ஆனது. மேல்நிலைகளில் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிகோபுரங்கள் நான்கும் அவை அமைந்துள்ள திசைகளை கொண்ட கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் என்று அழைக்கப்படுகின்றன.
கிழக்கு கோபுரம்
சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே கிழக்கு ஆடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேல் அமையப்பெற்றுள்ளது. 4 கோபுரங்களிலும் இதுவே மிகவும் பழமையானதாகும். இதற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இது கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், கி.பி. 1251 முதல் 1278 வரை அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது 153 அடி உயரம் கொண்டது. இதன் அடித்தளம் நீளம்111 அடி அகலம் 65 அடி. கிழக்கு கோபுரம் 1011 சுதைகளுடன் 9 நிலைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு கோபுரம்
விசுவநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1559-ல் இந்த கோபுரம் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது. 4 கோபுரங்களிலும் இந்த கோபுரம் உயரமானது.இந்த கோபுரத்தின் உயரம் 160 அடி, அடி தளத்தின் நீளம் 108 அடி, அகலம் 57 அடி. 9 நிலைகளை கொண்டு அமைந்துள்ள இதில் புராண கதைகளை விளக்கும் 1511 சுதை சிற்பங்கள் உள்ளன. கட்டுமானத்தின்போது இவை அமைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான் அமைக்கப்பட்டது என்ற செய்தியை கி.பி.1798-ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.
மேற்கு கோபுரம்
கி.பி.1315 முதல் 1347 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் இதனை கட்டினான். கி.பி.1323-ல் கட்டி முடிக்கப்பெற்றது. 9 நிலைகளை கொண்டது.இதன் உயரம் 154.6 அடி. அடிதளம் நீளம் 101 அடி, அகலம் 63.6 அடி.இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. சித்திரை வீதியில் இருந்து வாகனங்களில் பொருட்களை கோவிலுக்குள் கொண்டுவர ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுரவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கோபுரம்
இந்த கோபுரத்தின் கட்டுமான பணியை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-72) தொடங்கினார். இதனை கி.பி.1878-ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார். 9 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 152 அடி. அடி தளத்தின் நீளம் 111.6 அடி. அகலம் 66.6 அடி. இந்த கோபுர வாயிலின் மேற்கு பக்கம் முனியாண்டி கோவில் உள்ளது. இது ஒரு நாட்டுப்புற காவல் தெய்வமாகும்.
இந்த கோபுரத்தை கட்டிய கிருஷ்ணப்ப நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் பல திருப்பணிகளை செய்துள்ளார். சுந்தரேசுவரர் சன்னதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதன் அருகில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், 2-ம் பிரகார சுற்று மண்டபம், அம்மன் கோவில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவை இந்த மன்னர் கட்டியது ஆகும். இவரது ஆட்சி காலத்தில் தான் அரியநாத முதலியார் கி.பி.1570-ல் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார்.
ராய கோபுரம்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் நான்குப்புற கோபுரங்கள் தவிர இத்துடன் தொடர்புடைய கோபுரம் புதுமண்டபத்திற்கு கிழக்கே ஒன்றுண்டு. இந்த கோபுரம் திருமலைநாயக்கரால் கி.பி.17-ம் நூற்றாண்டு கட்ட தொடங்கப்பட்டது. இதன் அடித்தளம் 174 அடி நீளமும், 117 அடி அகலமும் கொண்டது. மற்றைய 4 கோபுரங்களின் அடித்தளங்களோடு ஒப்பிடும்போது இந்த கோபுரத்தின் அடித்தளம் மிக நீளமாகவும் அகலமாகவும் உள்ளது.
இந்த கோபுரம் ராயகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ சில காரணங்களால் இந்த கோபுரம் முதல் தளத்துடன் நின்று விட்டது. முதல் தளத்தின் உயரம் 57 அடியாகும். இதுகட்டி முடிக்கப்பட்டிருந்தால் ஏனைய 4 கோபுரங்களை விட உயர்ந்த கோபுரமாக திகழ்ந்திருக்கும்.
வெளிகோபுரங்கள் தவிர சுவாமி கோவிலில் 5 சிறிய கோபுரங்களும், அம்மன் கோவிலில் 3 சிறிய கோபுரங்களும் அம்மனுக்கும், சுவாமிக்கும் தனித்தனியாக 2 தங்க விமானங்களும் உள்ளன.
160 அடி உயரம் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களை தாங்குகின்றன.
இத் திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்கு கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்கு கோபுரம் கி.பி. 1323-ம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559-ம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 முதல் 1572-ம் ஆண்டிலும் கட்டப்பட்டு முடிக்கப் பெறாமல், பின்னர் 1878-ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தை சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்கு கோபுரம் மிக உயரமானதாகும்.
இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப்பெற்று 1964-ம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570-ம் ஆண்டில் கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப்பட்டது.
- இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
- தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தஞ்சை மட்டும் அல்லாது, தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சினடியார்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உலக பாரம்பரிய சின்னம்
தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் 1987-ம் ஆண்டு யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறவிக்கப்பட்டது. இந்த கோவில் தமிழர்களின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியகோவில் பெயர்க்காரணம்
தஞ்சை பெரிய கோவில், பெருவுயைடார் கோவில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் ராஜராஜேஸ்வர கோவில் என்றும் ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொடக்க காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்று பின்னர் தஞ்சை பெருவுடையார் கோவில் என்றும், 17, 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
1000 ரூபாய் நோட்டு, தபால்தலை வெளியீடு
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் தஞ்சை பெரிய கோவிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.
1995-ம் ஆண்டில் மத்திய அரசு மாமன்னன் ராஜராஜசோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையும் வெளியிடப்பட்டது. மேலும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த நாணயமும் வெளியிடப்பட்டது.
தஞ்சை பெரியகோவில்விழாக்கள்
தஞ்சை பெரியகோவிலில் பிரம்மோற்சவம், மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா, அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி, தேரோட்டம் ஆகியவை கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
ஓவியங்கள்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன், விஜயராகவ நாயக்கர், 2-ம் சரபோஜி, அவர் மகன் சிவாஜி ஆகியோர் காலத்து ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள அறையில் ராஜராஜன் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் வழிபடுதல். சுந்தரரும், சேரமான் பெருமாளும் யானையிலும், குதிரையிலும் கயிலை செல்லுதல், இந்த இருவரும் கயிலையில் சிவபெருமான், உமாதேவியோடு நாட்டியம் காணுதல், கயிலையைப் பெயர்க்கும் ராவணன் போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல நாயக்கர் மற்றும் மராட்டியர் கால ஒவியங்களையும் இந்த கோவிலில் காணலாம்.
பெரியகோவில் தேரோட்டம் பற்றி மோடி ஆவண குறிப்பு
சித்திரை தேரோட்டம் பற்றிய குறிப்புகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவண குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன. இதன்மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பெரியகோவிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கி தந்தது மட்டுமல்லாமல் 4 ராஜவீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார். தஞ்சையில் கி.பி. 1776-ம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து தேர் உலா வந்ததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1818-ம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காக பல வட்டங்களில் இருந்து 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2,800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் என தேருக்காக 26,494 பேரும், வாகனங்களை தூக்குவதற்காக திருவையாறில் இருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவண குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை.
- இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது, தச்சூர் என்ற ஊர். இங்கு எல்லாவித சர்ப்ப தோஷங்களில் இருந்தும் விடுதலைத் தருகின்ற பிச்சீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த பிரபஞ்சத்தை, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த எட்டு பேரும்தான், அனைத்து நாகங்களுக்கும் தலைமையானவர்கள்.
இந்த எட்டு சர்ப்ப ராஜாக்களும், வலிமை, தலைமைப்பதவி, தீர்க்காயுள் ஆகிய வரங்கள் வேண்டி, பூமியில் இருந்த சிவாலயங்கள் பலவற்றுக்குச் சென்று சிவலிங்க பூஜை செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த எட்டு சர்ப்பங்களும் ஒன்றாக சேர்ந்து, தன் இனத்தவர்களான சர்ப்பங்கள், மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி வழிபட்டது இந்த ஆலயம் என்கிறது, ஆலய தல வரலாறு.
பழங்காலத்தில் தச்சூர் என்ற இந்த இடம், வாசனை மிகுந்த முல்லை வகையைச் சேர்ந்த பிச்சி மரங்கள் நிறைந்த பிச்சி வனமாக இருந்தது. இந்த வனத்திற்குள்தான் சுயம்புவாக தோன்றிய பிச்சீஸ்வரர் இருந்தார். அவரை அனுதினமும், எட்டு சர்ப்பங்களும் பிச்சி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், அந்த எட்டு சர்ப்பங்களின் முன்பாகவும் தோன்றி, உலகில் உள்ள அனைத்து சர்ப்பங்களின் பாவங்களையும், சாபங்களையும் போக்கி, அவர்களுக்கு என்று தனி உலகத்தை (நாகலோகம்) ஏற்படுத்திக் கொடுத்து அருளினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த எட்டு நாகங்களும் இன்றும், இத்தல ஈசனை வழிபாடு செய்து வருவதாக நம்பப்படுகிறது. பல நாகங்கள் இந்தப் பகுதியில் உலாவுவதை, இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் அதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர்.
சதா சர்வ காலமும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டிருக்கும் சித்தர்களில் ஒருவர், அகப்பேய் சித்தர். இவர் தினமும் அருவமாக இத்தலத்திற்கு வந்து, அரவங்கள் (பாம்புகள்) வழிபட்ட இவ்வாலய சிவனை வழிபட்டுச் செல்வதாக அகத்தியர் நாடி சொல்கிறது. அப்படி அகப்பேய்ச் சித்தர் வழிபடும் சமயம், சில அபூர்வ நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதாக இந்த ஊர் மக்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.
சோழர் காலத்திற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்திருந்தது. ஒருவரின் கனவில் இங்கு சிவலிங்கம் இருப்பதாக தெரியவர, இந்த புற்று அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கடப்பாரை, புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் பட்டு ரத்தம் வந்ததாகவும், ஈச்சம் கீற்றுகளைக் கொண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் தைத்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தையலூர் என்று அறியப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது 'தச்சூர்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தை முதலாம் பராந்தகச் சோழன் கட்டியிருக்கிறார். ஆனால் அந்தக் கட்டிடம் பல்வேறு காரணங்களால் வழிபாடு இல்லாமல் சிதைவை சந்தித்தது. இதனால் ஊர் மக்கள் நன்கொடையால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. தச்சூர் ஊரின் வடகிழக்கு திசையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்தின் தென்புற வாசலில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும்.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் முதலில் நிருதி மூலையில் இருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அடுத்ததாக வள்ளி-தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானை வணங்கலாம். ஆலயத்தின் மேற்கு தாழ்வாரத்தில் வீரபத்திரரும், அவருக்கு அருகாமையில் சர்ப்ப ராஜாவும் காட்சி தருகின்றனர். அழகிய சிற்பங்களுடன் கூடிய 21 தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான முன்மண்டபம், ஸ்தாபன மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. அவற்றைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் மூலஸ்தானம் இருக்கிறது.
ஆலய கருவறைக்குள் சதுர வடிவ ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், பிச்சீஸ்வரர். சிவலிங்கத்தின் இடப்பக்கம் கடப்பாரையால் வெட்டுப்பட்டத் தழும்பு பள்ளமாக உள்ளது. சீரற்ற சொரசொரப்பான லிங்கத்திருமேனியாக, இத்தல இறைவன் காட்சியளிக்கிறார். இந்த அபூர்வமான லிங்க மூர்த்திதான், தினந்தோறும் அகப்பேய் சித்தரால் வழிபடப்படும் இறைவன் ஆவார். அவ்வப்போது நாகங்களும் இவரை பூஜிக்கின்றன. ஆலயத்தை வலம் வரும் போது, வாமபாகத்தில் தனியாக சன்னிதி கொண்டு வீற்றிருந்து அருள்புரிகிறார், அன்னை பிரகன்நாயகி.
ஆலயத்தின் ஈசான திசையில் நவக்கிரகங்களும், காலபைரவரும் வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயத்தில் பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நடத்தப்படும், அனைத்து அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பிச்சி மரமும், தீர்த்தமாக, கார்கோடக தீர்த்தம் இருக்கிறது.
சர்ப்ப சாபம், சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத் திற்கு வருகை தந்து, பிச்சீஸ்வரரையும், பிரகன்நாயகி அம்மனையும் வழிபாடு செய்கின்றனர். மேலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்வதுடன், முல்லை மலர்களால் அர்ச்சித்தும், பால் பாயசம், அக்காரவடிசல் படைத்தும் வழிபட்டால், அனைத்து சர்ப்ப தோஷங்களும் நீங்குவதாக சொல்லப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பகல் பொழுதில் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை தரிசிக்க முடியும்.
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர்.
-பழங்காமூர் மோ.கணேஷ்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- இந்த கோவில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- 2½ உயரம் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் வடபுறமாக சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது.
கரூர் பஸ்நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. காமதேனு வழிபட்டதால் 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் 2½ உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாக சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.
நூறுகால் மண்டபம்
இந்த கோவில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளையும், 7 கலசங்களையும் கொண்டுள்ளது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தல விருட்சம் வஞ்சி மரம் ஆகும்.
கோவிலில் உள்ள நூறுகால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச்சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கரூருக்கு உண்டு.
எறிபத்த நாயனார்
கல்யாண பசுபதீஸ்வரருக்கு சிவகாமி ஆண்டார் முனிவர் சாமிக்கு சாற்ற பூக்கள் கொண்டு வரும் போது புகழ் சோழர் அரசனுக்கு சொந்தமான பட்டத்து யானை, முனிவர் கையில் இருந்த பூக்குடலையை தட்டி விட்டது. இதனை கண்ட அங்கிருந்த எறிபத்த நாயனார், தன் கையில் இருந்த வாளால் பட்டத்து யானையின் தும்பிக்கையை வெட்டினார். மேலும் யானையுடன் வந்த பாகனையும், அரச வீரர்களையும், யானையையும் வெட்டி கொன்றார். இதனை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு காரணமாக அமைந்த தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள் செய்தார்.
பிரம்மனின் கர்வம் நீங்கியது
இதேபோல் பிரம்மனுக்கு தன் படைப்பு திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, "புற்று ஒன்றுக்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு" என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது.
இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், "நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்", என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்பு தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்து கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
கருவூர் சித்தர்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டபெருமை பெற்றது இந்த கோவில். 18 சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
கல்யாண பசுபதீஸ்வரரை வணங்கினால் மனத்துயரம் நீங்கும், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் கல்யாண பசுபதீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். சில பக்தர்கள் தாலி, ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
-பாரதி, கரூர்.
- இக்கோவிலை திருநங்கைகள், தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.
- பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து கூடுவார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ளது, கூத்தாண்டவர் கோவில். திருநங்கைகள், இக்கோவிலில் உள்ள கூத்தாண்டவரை தங்களின் குலதெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கூத்தாண்டவர் வரலாறு
ஒரு திருநங்கையின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு என்றால், அது கூத்தாண்டவர் திருவிழாதான். அந்தளவிற்கு திருநங்கைகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாய சடங்கு அது. திருநங்கைகளின் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கென்று ஒரு வரலாறு உண்டு.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், போருக்கு முன்பாக யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகன் வேண்டும். இதற்கு தகுதியானவர்களாக இருந்தவர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே.
அர்ச்சுனனும், கிருஷ்ணனும்தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் இழக்க முடியாது என்பதால், அரவானை பலியாக்க முடிவு செய்யப்பட்டது. அர்ச்சுனனும், கிருஷ்ணனும் அரவானிடம் இதுபற்றி பேசினர். அரவானும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே பலிக்களம் புகுவேன்" எனக்கூறுகிறார். ஆனால் அரவானை கணவனாக ஏற்க, வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தவொரு பெண்ணும் முன்வரவில்லை. விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள்.
இப்படிப்பட்ட சூழலில் கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். ஓர் இரவு இல்லற வாழ்விற்கு பிறகு மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை மணமுடித்த மோகினி, விதவைக்கோலம் பூணுகிறாள். இதுதான் அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வரலாறு. இந்த கதையின் அடிப்படையில் தங்களை கிருஷ்ணரின் அவதாரமான மோகினியாக உணரும் திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா இருக்கிறது. இதனாலேயே இக்கோவிலை திருநங்கைகள், தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.
ஆண்டுதோறும் அரவானை வழிபட புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து கூடுவார்கள். அரவான் களப்பலியை நினைவுபடுத்தும் விதமாக இரவு சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கும். 18 நாள் திருவிழாவில், இது முக்கியமான நிகழ்வு. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து குவிவார்கள்.
பின்னர் கோவில் வாசலில் அனைத்து திருநங்கைகளும் தங்களை புதுமணப் பெண்கள்போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்துக்கொள்வர். கை நிறைய வளையல், தலைநிறைய பூ சூடி திருநங்கைகள், கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். பிறகு தங்கள் கணவனான அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். தொடர்ந்து, அன்று இரவு முழுவதும் அவர்கள் கும்மியடித்து ஆட்டமும், பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
மறுநாள் பொழுது விடிந்ததும், கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கப்படும். அதனை தொடர்ந்து ஊர்வலமாக அரவான் சிரசு எடுத்து வரப்படும். அப்போது திருநங்கைகள், சுற்றி நின்று கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். 108 தேங்காய், ஆயிரத்து எட்டு தேங்காய் என சூரைத் தேங்காய் அடிப்பார்கள். இதற்கிடையே கோவிலின் வடபுறத்தில் சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு, வைக்கோல் புரி சுற்றப்படும். இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படை பணியாகும்.
பின்னர் கீரிமேட்டில் இருந்து மக்கள் பூஜை செய்து அரவானின் புஜங்கள், மார்பு பதக்கம் எடுத்து வருவார்கள். சிவலியாங்குளம் கிராமத்தில் இருந்து அரசிலை, விண்குடை கொண்டு வரப்படும். நத்தம் கிராமத்தில் இருந்து பாதம், கைகள், புஜங்கள் எடுத்து வருவார்கள். தொட்டி கிராமத்திலிருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி கொண்டு வருவார்கள். இவை அனைத்தையும் வைக்கோல் புரி மீது பொருத்தி அரவான் திருவுருவம் அமைக்கப்படும். அதன் பின் தேரோட்டம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின்பேரில் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்குவார்கள்.
அது மட்டுமின்றி 20 அடி நீள பூமாலைகளையும், வள்ளவாட்டுகளையும் (நீண்ட துண்டுகள்) அரவான் மீது வீசி பயபக்தியுடன் வணங்குவார்கள். திருநங்கைகளும், பக்தர்களும் பூக்களை பந்துகளாக செய்தும், நீண்ட மாலைகளையும் அரவான் மீது வீசுவார்கள். அவ்வாறு வீசிய மலர்களால் வைக்கோல் புரி மறைக்கப்படும். தேர் ஊர்வலமாக வரும்போது திருநங்கைகள் குவியல், குவியலாக கற்பூரம் ஏற்றி சுற்றி வந்து கும்மியடித்து பாட்டுப்பாடி மகிழ்வார்கள். இவ்வாறு கும்மியடித்து பாடுவது காதுக்கு இனிமை சேர்க்கும். தேர் ஊர்வலம் புறப்பட்டு வந்த பின்னர், தேர் அழிகளம் நோக்கி புறப்படும். அப்போது புதுமணப் பெண்கள்போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்த திருநங்கைகள், தேர் அழிகளம் புறப்பட்டவுடன் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விடுவார்கள். வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டபடி தேரை பின் தொடருவார்கள்.
அங்கு அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது திருநங்கைகள், தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிவார்கள். நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழிப்பார்கள். பூசாரிகள், திருநங்கைகளின் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கி கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகளை அறுத்தெறிவார்கள். தங்கத்தாலிகளை திருநங்கைகள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுப்பார்கள்.
அப்போது திருநங்கைகள் அழுது புலம்பி ஒப்பாரி வைப்பது உருகாத நெஞ்சத்தையும் உருக்கும். சொந்த கணவன்மார்களை இழந்தவர்கள்கூட இவ்வளவு உணர்வுப்பூர்வமாக அழுவார்களா? என ஐயப்படும்படியாக இருக்கும். பின்னர் திருநங்கைகள் அனைவரும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தலைமூழ்கி வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சோகமயமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள்.
வேண்டுதல் நிறைவேற தாலி கட்டிக்கொள்ளும் பக்தர்கள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ளும் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பக்தர்கள், தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றும் கூத்தாண்டவரிடம் மனமுருக வேண்டிக்கொள்வார்கள். இந்த வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சித்திரை திருவிழாவின்போது இக்கோவிலுக்கு வந்து திருநங்கைகளைப்போல் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர் மறுநாள் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகளைப்போல் மற்ற பக்தர்களும் தாலியை, பூசாரி கையால் அறுத்துக்கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வது இங்கு சடங்காக இருந்து வருகிறது.
சுப நிகழ்ச்சியை தவிர்க்கும் கிராம மக்கள்
மகாபாரதப் போரில், அரவான் களப்பலி கொடுக்கப்படுவதை நினைவுபடுத்தும் வகையில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழாவின் 16-வது நாளில் அழிகளம் நிகழ்ச்சி நடக்கிறது. இதன் காரணமாக கூவாகம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த 18 நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்து விடுவார்கள்.
உறுமை சோறு
கூவாகம் கிராமத்தில் பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பலி சாதம் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் உப்பு, புளி, மிளகாய் எல்லாம் ஒன்றாக சேர்த்து சமைத்த உணவு படைக்கப்படும். இதனை 'உறுமை சோறு' என்பார்கள். இந்த உறுமை சோறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. எனவே மக்கள் முண்டியடித்துக்கொண்டு இந்த உறுமை சோறு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
கூத்தாண்டவர் கோவில்கள்
இந்தியாவில் உள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கி வருவது கூத்தாண்டவர் கோவில். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை தவிர விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா அருணாபுரம், வானூர் தாலுகா தைலாபுரம், கடலூர் மாவட்டம் கொத்தட்டை, தேவனாம்பட்டினம், புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம், மடுகரை ஆகிய இடங்களிலும் கூத்தாண்டவர் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது.
- 26-4-2023 கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
- இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஊரைச் சுற்றிலும் முன்காலத்தில் 'பிரம்பு' எனப்படும் முள்செடி காடாக இருந்தால் 'பிரம்பில்' என்றும், தட்சனின் யாகத்தில் பங்கேற்ற சாபம் நீங்க பிரம்மதேவன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் 'பிரம்ம மங்களபுரம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 'பிரம்பில்' என்பதே காலப்போக்கில் 'பிரம்பூர்' என்றும், பின்னர் 'பெரம்பூர்' என்றும் பெயர் பெற்றுள்ளது.
தல வரலாறு
இந்த ஆலயம் முருகப்பெருமானை மூலவராகக் கொண்டது என்றாலும், ஆதியில் இது சிவாலயமாக இருந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவபெருமானை, சூரபத்மனை சம்ஹாரம் செய்து, தெய்வானையை திருமணம் முடித்து திரும்பிய முருகப்பெருமான் வழிபட்டார். அந்த தம்பதிக்கு அருளாசி வழங்கிய ஈசன், தன் மகனை இத்தலத்திலேயே இருந்து அருள்பாலிக்குமாறு கூறினார். அதன்படியே முருகப்பெருமான் இங்கு தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.
பிரம்ம தேவன் வழிபட்ட அஷ்ட பிரம்ம தலங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி, சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.
பொதுவாக சிவன் கோவில்களில், சிவன் முதன்மை தெய்வமாக தனிச்சன்னிதியில் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிப்பார்கள். சிவன் சன்னிதிக்கு பின்புறம் அல்லது வடமேற்கு திசையில் முருகனுக்கு தனிசன்னிதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்மாவுக்கும், மயிலாக மாறிய சூரபத்மனுக்கும் ஞானோபதேசம் அளித்து ஞானகுருவாக விளங்குவதால், அவரே மூலவராக கிழக்கு நோக்கியும், தெய்வானை தனி சன்னிதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடமேற்கில் சிவனார் 'பிரம்மபுரீஸ்வரர்' என்ற பெயரில் கிழக்கு நோக்கியும், ஆனந்தவல்லி அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். தந்தை இருக்கும் இடத்தில் இருந்து மகனும், மகன் இருக்குமிடத்தில் இருந்து தந்தையும் அருள்பாலிக்கும் அமைப்பு இங்கு மட்டுமே உள்ளதாக சொல்கிறார்கள்.
இத்தல இறைவனை, திருநாவுக்கரசர் வழுவூர் கோவிலில் இருந்து பாடியுள்ளார். ஆனாலும் இந்த ஆலயம் தேவார வைப்புத்தல பட்டியலில் இடம்பெறவில்லை. ஆலயம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தலவரலாற்று கையேட்டில் அப்பாடல் இருக்கிறது. இவ்வாலயம் பற்றி சிதம்பரநாதமுனிவர், தனது ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழில் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை கோபுரத்துடன், 7 கலசத்துடன் கூடிய பிரமாண்ட கோபுரம், இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோவில் பெரியதாக அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாசலில் விநாயகர், இடும்பன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் வசந்தமண்டபம், அதன் எதிரே தீர்த்தக் குளமான கந்தபுஷ்கரணி இருக்கிறது. பிரதான ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியும், மகாமண்டபத்தில் தெய்வானை சன்னிதியும் உள்ளன. மூலவர், வள்ளி- தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானாக பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அருள்கிறார். மகாமண்டபத்தில் ராஜராஜசோழன் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயகரின் சன்னிதியைக் காணலாம்.
வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு திசையில் பக்தர்களின் கடன் நிவர்த்திக்கு அருள்பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரர் குபேரலிங்க வடிவிலும், அம்பிகை ஆனந்தவல்லி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியுள்ளனர். சிவாலய கோஷ்டத்தில் தெற்கில் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் பெருமாள், வடக்கில் துர்க்கை மற்றும் தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரர் இருந்து அருள்பாலிக்கின்றனர். சிவாலயம், முருகப்பெருமான் கோவிலுக்குள் உள்ளதால் தனிக்கொடிமரம் இல்லை. உட்பிரகாரத்தில் சனீஸ்வரருக்கு தனி சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. இவ்வாலய தட்சிணாமூர்த்தி 'குக தட்சிணாமூர்த்தி'யாகவும், சண்டிகேஸ்வரர் 'குக சண்டிகேஸ்வர'ராகவும் விளங்குகின்றனர்.
சிவன் மற்றும் முருகனுக்குரிய தலமாக இது விளங்குவதால், தினசரி ஐந்துகால பூஜைகளுடன், வழக்கமான நித்ய, வார, பட்ச பூஜைகளும், ஆண்டு உற்சவங்களாக பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை ஆகியவையும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.
இக்கோவில் பிற்கால சோழர்களால் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டில் மிளகு செட்டியார் என்னும் பக்தரால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதுடன், ராஜகோபுர திருப்பணிகளும் தொடங்கப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இதன் ராஜகோபுரத்தில் மூன்று நிலைகள் மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. பின்னர் 1960-ல் மேலும் 2 நிலைகள் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 1994-ல் அனைத்து சன்னிதிகளும் பாலாலயம் செய்யப்பட்டு, முழுமையாக திருப்பணி நடைபெற்று மீண்டும் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 26-4-2023 (புதன்கிழமை) மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
அமைவிடம்
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.
பிரார்த்தனையும் நேர்த்திக்கடனும்
இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.
இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.
-நெய்வாசல் நெடுஞ்செழியன்
- இந்த கோவிலில் அட்சய திருதியை விழா நாளை நடக்கிறது.
- ஊனம்நீக்குதல், திருமணதடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன. கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார்.
அவரே இந்த ஆலயத்தின் மூலவர். அத்துடன் சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார். மந்தா தேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளை இங்கு மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத்சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே சனி பகவான் அந்த காகத்தினையே தனது வகனமாக இங்கு ஏற்றுக் கொண்டார்.
சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும் பகை கொண்ட நேரம் நிறைய உண்டு. ஒரு சமயம் பகையினால் எமதர்மன் சனிபகவான் காலில் ஓங்கி அடிக்க, அதனால் சனிபகவானின் கால் ஊனமானது. கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான்.
ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த 'பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது.
விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
சனி பகவானின் அருள் :
அட்சய திரிதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனி பகவான் கிழக்கு பிரகாரத்தின் வடதிசையில் தனி ஆலயத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்று போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனி பகவான் அருள் பாலிக்கிறார்.
சனி தோஷம் உள்ளவர்களும், சனி கிரக பாதிப்பு உள்ளவர்களும், சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர். காக்கைகள் அந்த உணவை எடுத்து புசித்தால் அவர் களது சனி தோஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம். ஒரு வேளை அந்த உணவை உண்ண தயங்கி பறந்து போனால் அவர்களது தோஷம் விலகவில்லை என்று அர்த்தமாம். எனவே அவர்கள் மறுபடியும் சனி பகவானை தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது.
இறைவன் - இறைவி :
ஆலயத்தில் பிரகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலது புறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தண்டத்தையும், மேல் இடது கரத்தில் தாமரையையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள்.
அடுத்துள்ள மகாமண்டபத்தின் அருகில் உள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் இடது புறம் இரட்டை விநாயகரும், வலது புறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் அட்சயபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. நெய் தீபம் மட்டுமே ஏற்றி தீபாராதனை செய்கின்றனர்.
பரிவார தெய்வங்கள் :
இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருச்சுற்றில் தென் கிழக்கில் வன்னி மரமும், தென் திருச்சுற்றில் ஆலய திருக்குளமான பூச ஞான வாவி குளத்தின் நுழைவுவாயிலும் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் விநாயகர், நாகர், சுப்ரமணியர், வள்ளி, தேவசேனா ஆகியோர் சன்னிதிகளும் வடக்கு திருச்சுற்றில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகும். சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் வழிபட்ட தகவல் கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கிறது. ஆலயத்தின் தல விருட்சம் விளாமரம். ஆலயத்தின் வட திசையில் விருட்சம் உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் எதிரே அழகிய சிறிய ஆலயத்தில் விஜய விநாயகர் மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி அருள் பாலிப்பதை தனி சிறப்பாக கூறுகின்றனர் பக்தர்கள். சித்திரை திங்கள் வளர்பிறையில் வரும் திரிதியை நாள் அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அட்சய திரிதியை அன்று சனி பகவான் பலவித ஸ்தூல சூட்டும் வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம். அட்சய திருதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இங்கு அருள் பாலிக்கும் இறைவி அபிவிருத்தி நாயகி தன் பக்தர்கள் அனைத்து நிலைகளிலும் அபிவிருத்தி அடைய அருள் புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. அட்சய திருதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபடுதலும், சனி பகவானுக்கு புணுகு கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுதலும் மிகுந்த பலனைத் தரும். சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.
அட்சய திருதியை அன்று இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள் புரியக் கூடியவர் என்பது நிஜமே!
அட்சய திருதியை திருவிழா
ஊனம்நீக்குதல், திருமணதடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இத்திருக்கோவிலுக்கு வெளிநாடு, வெளிமாநிலம் வெளி மாவட்டம் போன்ற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை அன்று அட்சய திருதியை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை திருவிழா நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
கோவிலுக்கு செல்லும் வழி
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும், கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனை சாவடியில் இருந்து 2 கி.மீ தூரத்திலும், பேராவூரணியில் இருந்து ரெட்டவயல், பெருமகளூர் வழியாக 20 கி.மீ தூரத்திலும் கோவில் அமைந்துள்ளது.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional






