என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • இந்த கோவிலில் பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
    • கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார்.

    இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், குமரி பகவதி அம்மன் வீற்றிருக்கும் இடம் என்பதால் பலரும் வந்து வணங்கும் வழிபாட்டுத் தலமாகவும் இரு வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இங்கு ஏற்கனவே கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடற்கரை ஓரமாக காந்தி நினைவு மண்டபம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.

    கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல, விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால், அவரை 'ஏழுமலையான்' என்று அழைக்கிறோம். அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தலத்தை 'கடல் திருப்பதி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதியைப் போல, கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்ததற்கும் சில காரணம் சொல்லப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ்பெற்றது. சாதாரண நாட்களில் கூட, இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு மாத உண்டியல் வருமானம் மட்டும் ரூ.100 கோடியை தாண்டுகிறது. கூட்டமும் கட்டுக் கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.

    கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார். அதாவது சன்னிதியில் 12 அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே உள்ள சன்னிதியில் கருடாழ்வார் 3 அடி உயரத்திலும், மூலவருக்கு வலதுபுற சன்னிதியில் பத்மாவதி தாயார் 3½ அடி உயரத்திலும், இடதுபுற சன்னிதியில் ஆண்டாள் 3½ அடி உயரத்திலும் அருள்பாலிக்கின்றனர். இதன் மேற்புற அமைப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மேல்தளத்துக்கு செல்ல இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் ஏறிச்செல்ல சிரமமாக இருந்ததால் அவர்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மூலவருக்கு எதிரே கருடாழ்வாருக்கு பின்புறம் பலிபீடம், 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண மண்டபம், தியான கூடம், அன்னதான மண்டபம், அலுவலக அறைகள் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேல்தளத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் கீழ் தளத்தில் பூமியை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

    திருப்பதி கோவிலில் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, புஷ்கரணி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கன்னியாகுமரியில் எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதி கோவிலிலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுபோக திருப்பதி லட்டு கன்னியாகுமரியிலும் கிடைக்குமா? முடி காணிக்கை வசதி செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தரிசன நேரம், பூஜை விவரம்

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். இடையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை, மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணி வரை, மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு நடையை அடைப்பதற்கு முன்பு பள்ளியறை பூஜை நடைபெறும்.

    நடை திறக்கப்பட்ட நேரத்தில் சுப்ரபாதம், விஸ்வரூப ஸர்வ தரிசனம், தோமலை, கொலுவு, அர்ச்சனை, நைவேத்யம், பாலி, சாற்றுமுறை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, மூலவர் திருமஞ்சனம் விசேஷமாக இருக்கும்.

    தை மாதம் வருஷாபிஷேகம், கார்த்திகை மாதம் பவித்ர உத்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.


    புரட்டாசி மாத வழிபாடு சுவாமிக்கு உகந்த வழிபாடாக கருதப்படுகிறது. சத்தியலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து பிரம்மா, ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துவது பிரமோற்சவம். எந்த கடவுளுக்கும் இல்லாத வகையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு அதிக விழாக்கள் நடத்தப்படுகிறது. அங்குள்ள கோவிலில் தினமும் காலை, மாலையில் உற்சவர் மலையப்பசாமி வலம் வருவார். இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதிக்கு விழாக்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    அமைவிடம்

    கன்னியாகுமரியில் இருந்து முட்டப்பதி, சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ, வேனிலும் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவிலில் விசாலமான இடவசதி இருக்கிறது. இங்கு பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.

    குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவருந்த வசதியாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    • இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
    • இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.

    அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார்.

    அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர். பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில்.

    தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது . மேலும் இங்குள்ள குருபகவான் இந்தக் கோவிலின் சிறப்பு. இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் . ஒவ்வொரு குருப் பெயர்ச்சியும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.

    இங்கு சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் என தனித்தனி சன்னதி அமைந்திருக்கிறது.

    முகவரி

    அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில்,

    கோவில்பாளையம்,

    கோயம்புத்தூர் மாவட்டம்.

    • இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.
    • இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.

    சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

    கொல்லி மலை, கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் முதலில் கொல்லி பாவை கோவிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.

    அறப்பளீஸ்வரர் கோவிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் நன்மைகளையெல்லாம் அள்ளி வந்து கொட்டுகிறது. இந்த அருவி பின் ஆறாக ஓடி உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

    கொல்லிப்பாவை கோவில்

    தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு 'கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்" என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோவில் உள்ளது.

    சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.

    கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார். ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி" எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. அங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றிய சிவனுக்கு வல்வில் ஓரி திருத்தலம் அமைத்தான். எனவே அறப்பள்ளியில் எழுந்தருளிய ஈஸ்வரன் என்ற பொருளில் "அறப்பள்ளி ஈஸ்வரன்" என்று மக்கள் வழங்கினர். இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    மேலும் 'அறை' என்றால் மலை என்றும் பள்ளி என்றால் தங்கியிருத்தல் என்றும் பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் "அறைப்பள்ளீஸ்வரர்" என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மாறி இருக்கலாம்.

    இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அறம் வளர்த்த இறைவி பள்ளிகொண்ட தலம் என்பதால் புராண காலத்தில் இத்தலம் அறமலை மற்றும் சதுரகிரி என்றழைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

    சித்தர்கள் நிர்மாணித்த ஆருஷி லிங்கம்

    உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறைவழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், ஆங்காங்கே நதிக்கரைகளிலும் மலைகளிலும் குகைகளிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். அறத்தை (தர்மத்தை) மையமாக கொண்ட வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இயற்கை மாற்றங்களினால் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்து விட்டது.

    ஏர்க்கலப்பையில் தட்டிய லிங்கம்

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லி மலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அரசனிடம் சென்று தெரிவிக்க, லிங்கம் கிடைத்த இடத்தில் வல்வில் ஓரி சிவாலயம் நிர்மாணித்தான். லிங்கத்தின் மீது ஒரு சிறு காயம் இன்றும் காணப்படுகிறது.

    • சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.
    • கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பல ஆலயங்களில் ஆத்தூரில் அமைந்துள்ள கல்யாண வரதராஜப் பெருமாள் ஆலயம் முக்கியமானது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளதால் இந்த ஊர் `முன்னர் ஆற்று ஊர்' என்ற அழைக்கப்பட்டு பின்னர் மருவி `ஆத்தூர்' என்று வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    பிற்கால பல்லவ மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்த சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். பல கோவில்களை நிர்மாணித்தவர். சிதிலமடைந்த பல கோவில்களுக்கு திருப்பணிகள் பல செய்த பெருமை உடையவர்.

    கோப்பெருஞ்சிங்கன் காஞ்சிக்கு அருகே நடைபெற்ற ஒரு போரில் வெற்றி வாகை சூடி பின்னர் வரதராஜப் பெருமாளை வழிபட்டார். கோவிலில் வரதராஜப் பெருமாள் தரிசனம் கொடுத்தார். அப்போது கோப்பெருங்சிங்கனின் மனதில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் வரதராஜப்பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. இதே எண்ணத்துடன் காஞ்சியில் இருந்து புறப்பட்டு பாலாறு ஓரமாகத் தன் தலைநகரை நோக்கி பயணப்பட்டார்.

    வழியில் நதிபுரம் என்ற ஆத்தூரில் தனது படைகளுடன் தங்குகிறார். தனது கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கோப்பெருங்சிங்கனின் கனவில் வரதராஜர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். பக்திப்பரவசத்துடன் பெருமாளே என்று விழித்துக் கொள்ளுகிறார் மன்னர். உடனே ஆத்தூரில் கல்யாணக் கோலத்தில் வரதராஜருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரத்திற்கு அருகில் ஆத்தூர் என்ற ஊரில் கல்யாண வரதராஜர் கோவில் உருவான வரலாறு இதுதான். சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.

    ராஜகோபுரமின்றி காணப்படும் இத்தலத்திற்குள் நுழைந்தால் விளக்குத்தூண், பலிபீடம் காட்சி தருகின்றன. இத்தலத்தின் மூலவர் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். துவாரபாலகர்கள் அமைந்திருக்கும் இடத்தில் தும்பிக்கையாழ்வாரும் நாகராஜரும் காட்சி தருகிறார்கள். அர்த்த மண்டபத்தில் தேசிகர், உடையவர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் முதலானோர் சிலா ரூபங்களில் எழுந்தருளியுள்ளார்கள். அருகில் விகனச மகரிஷியின் சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே உள்ள அந்தராளத்தில் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வரதராஜர், பெருந்தேவித் தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நர்த்தனக்கண்ணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    கருவறையில் வரதராஜப் பெருமாள் கல்யாண வரதராஜராக ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இடது திருக்கரம் ஊருஹஸ்தமாகவும், கீழ் வலது திருக்கரம் அபயஹஸ்தமாகவும் அமைய பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

    சுற்றுப்பிரகாரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்த சன்னிதியில் பெருந்தேவித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். மற்றொரு புறத்தில் ஒரு தனி சன்னிதியில் ஆண்டாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தெருவில் சற்று தள்ளி ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

    வைணவ சம்பிரதாயத்தில் வைகானச ஆகமம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் இத்தலத்தில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுகிறது. இந்த ஆகம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் விகனச மகரிஷி. இவருக்கு இத்தலத்தில் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

    நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, ராமநவமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி முதலான பல உற்சவங்கள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனி மாதத்தில் கருட சேவை உற்சவமும் விகனசமகரிஷிக்கு ஆடிமாதம் திருவோண நட்சத்திரத்தில் உற்சவமும் நடைபெறுகின்றன.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பட்டாச்சார்யாரின் வீடு அருகிலேயே உள்ளது.

    செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆத்தூர் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • 12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது.
    • இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசன், உத்திரசேனன், பாடலநாதர், கரையேற்றும்பிரான் போன்ற பல்வேறு பெயர்களாலும், அம்பாளை பெரியநாயகி, லோகாம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

    12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் செப்பு தகடுகளால் வேயப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழமை வாய்ந்த மரமாக உள்ளது. இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கெடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

    இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும், அதையடுத்து 7 நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலை கடந்து உள்ளே சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம் மற்றும் நந்தியும் உள்ளது. இங்கிருந்தே இறைவனை தரிசிக்கலாம்.

    வெளிபிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, 2-வது வாசலை கடந்து இடது புறமாக திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தியும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இந்த கோவிலில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும் போது 63 நாயன்மார்கள் சன்னதியை பார்த்து தரிசிக்கலாம்.

    தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்பாலிக்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவ திருமேனிகளின் சன்னதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலீஸ்வரரை தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    திருநாவுக்கரசர் வழிபட்ட பாடலீஸ்வரர் கோவில்

    சைவ பெரியவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் பண்ருட்டி அருகே திருவாமூரில் பிறந்தவர். சமண சமயத்தை சேர்ந்த அவர் சைவ சமயத்துக்கு மாறியதால், அவரை கொல்ல சமணர்களும், சமண சமயத்தைச்சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவனும் திட்டமிட்டனர். சமணர்கள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, மகேந்திர வர்ம பல்லவன் பிடித்து துன்புறுத்தினார். இதற்கெல்லாம் சற்றும் கலங்காத அப்பர் பெருமான் சிவபெருமானை வணங்கி, அந்த துன்பங்களில் இருந்து மீண்டார். இருப்பினும் பல்வேறு துன்பங்களில் இருந்து மீண்ட, அவரை கொல்லாமல் விடக்கூடாது என்று முடிவு செய்த, சமண சமயத்தவர், அவரை ஒரு கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தனர். ஆனால் அவரோ இறைவனை நினைத்து நெஞ்சுருகி, சொற்றுணை வேதியன் சோதிவானவன் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். அப்போது அந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. பின்னர் அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார் என்று வரலாறு கூறுகிறது.

    பாதிரி மரம்

    இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படி பாடிய அடியார்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் திருக்கோவில். பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற் காக பறிக்க விரும்பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களை பெற்றார். இதனால் இவர் 'புலிக்கால் முனிவர்' என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே 'பெரும்பற்ற புலியூர்' என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் 'திருப்பாதிரிப்புலியூர்' என்றானது.

    நினைத்த காரியம் நிறைவேற பாடலீஸ்வரரை வழிபடுங்கள்

    பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேரின் சிறப்பு

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம் முடிவடைந்து, முதன் முதலில் கடந்த 22.5.2005-ம் ஆண்டு வைகாசி மாத பெருவிழாவையொட்டி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இந்த தேர் 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டது. இந்த தேரின் அமைப்புகள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

    தேர் சக்கரத்தின் மேல் தாமரை வடிவத்தில் பூலோகம் பஞ்சபூதமாக காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சூரியன், சந்திரன் 2 தேர் சக்கரங்களாக உள்ளது. மண்ணுலகம் பரந்த காட்சியை விளக்குகிறது. ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில், அதில் உள்ள இலுப்பை, காட்டு வாகை, தேக்கு, வேங்கை மரங்கள் உணர்த்துகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் தேரில் ஒரு நாள் வலம் வரும் காட்சியை குறிக்கிறது. இறைவன் இருப்பிடம் ஆகாய லோகமாகவும், கும்ப கலசங்கள் ஈர்ப்பு சக்தியாக உள்ளது. கும்ப கலசம் தாமிரத்தால் உருவாக்கப்பட்டது. தாமிரம் இழுக்கும் சக்தி, கடத்தும் சக்தியை குறிக்கிறது.

    தேரின் மொத்த எடை 45 டன் ஆகும். 4 சக்கரங்கள் 5 டன் எடை கொண்டது. இரண்டு அச்சுகள் 2½ டன் எடை, நீளம், அகலம் தலா 25 அடி, வடம் 200 அடி வரை உள்ளது. தேரின் 57 கால்கள் 57 தத்துவங்களை குறிக்கிறது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இறைவனே நேரில் வந்து காட்சி அளிக்கும் வகையில் இந்த தேர்த்திருவிழா நடக்கிறது.

    பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

    சித்திரை- இளவேனில் வசந்த விழா (அப்பருக்கு 10 நாட்கள் விழா)

    வைகாசி - வைகாசி பெருவிழா

    ஆனி - மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் விழா

    ஆடி - அம்பிக்கைக்கு ஆடிப்பூர விழா (10 நாட்கள்)

    புரட்டாசி - நவராத்திரி விழா

    ஐப்பசி - அன்னாபிஷேகம்

    கார்த்திகை - சோமவார விழாக்கள்

    மார்கழி - திருவாதிரை மற்றும் தனுர்மாத விழா

    தை - பெண்ணையாற்றில் தீர்த்தவாரி மற்றும் தை அமா வாசை கடல் தீர்த்தவாரி

    மாசி - மாசி மக தீர்த்தவாரி

    உபமன்னியர் முயல் வடிவம் நீங்கப்பெற்ற தலம்

    பாதிரியை தல விருட்சமாகவும், புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு உபமன்னியர் முனிவர் வழிபட்டு, தன்னுடைய முயல் வடிவத்தில் இருந்து சாப விமோசனம் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. இது தவிர அக்தியர், மங்கணமுனிவர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலமாகவும் உள்ளது.

    வைகாசி பெருவிழாவும், எல்லை கட்டுதல் நிகழ்ச்சியும்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதில் பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் குறிப்பிட்ட தூரம் வரை 4 திசைகளிலும் ஓடிச்சென்று எல்லை கட்டுவர்.

    அதாவது, பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவைகளுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    பாடலீஸ்வரருக்கு அபிஷேகம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. குறிப்பாக சாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோசாலையின் பாலில் இறைவனுக்கு அபிஷேகம்

    பாடலீஸ்வரர் கோவிலில் கோசாலை உள்ளது.இந்த கோசாலையில் பசு, கன்றுகள் என 85 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளில் இருந்து கறக்கும் பாலை பாடலீஸ்வரருக்கு 5 கால பூஜைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவற்றை கன்று குட்டிகள் குடிப்பதற்காக விட்டு விடுகிறார்கள். இதனால் இந்த பால் கோவிலை தாண்டி எங்கும் கொடுப்பதில்லை.

    இந்த கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பக்தர்கள் பசுந்தீவனம், வைக்கோல் வழங்கி பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்தி கீரைகளை பக்தர்கள் வழங்கி வருகின்றனர். விரும்பும் பக்தர்கள் கோவில் திறந்திருக்கும் நேரம் பசுகளுக்கான தேவையான தீவனங்களை வழங்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தோஷம் நீக்கும் பாதிரி மரம்

    கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.

    இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

    தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    • இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • சுமார் 16 ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்லை நகரமாக விளங்கிய சிங்கம்புணரியில் அமைந்துள்ள இக்கோவிலில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதாகவும் உள்ளது. இப்பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்கு பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சுமார் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனி கருவறைகளும், தனி விமானங்களும் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் திருவிழாவின் போது நடைபெறும் கழுவன் திருவிழாவும், 9-ம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவும், 10-ம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் இக்கோவிலுக்கு மட்டுமல்ல சிங்கம்புணரி நகருக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.

    அதிலும் தேர்த்திருவிழா அன்று சுற்று வட்டார 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனிதான். குறிப்பாக தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடி படிக்கட்டுகளில் பக்தர்கள் வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் இக்கோவிலில் நடைபெறும் மற்றொரு மணிமகுட விழாவாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம்

    இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராசன், சேவுகன், சேதுபதி என பல்வேறு திருநாமங்களில் போற்றப்பட்டு வருகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் இந்த சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் என்னும் பெயர் கொண்ட போதிலும் சைவ கடவுளாகவே போற்றப்பட்டு வருகிறார்.

    கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்த பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏதும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தால் இந்த கோவில் காளைகளுக்குதான் முதல் மரியாதை செலுத்தப்படுவது இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இவ்வாறு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருப்பார்.

    அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்வேத்தியம் கொண்டு விநாயகருக்கு படையல் படைக்கப்படும். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்த கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 10 நாட்களும் அவருடன் சேவுகபெருமாளும் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    மற்ற நாட்களில் இந்த கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தியை மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாக கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் முன்னிலையில்தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படும். அப்போதுதான் பொய் சொல்லமாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

    இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்க கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

    தங்கமாக ஜொலிக்கும் கோவில்

    இக்கோவிலில் வெள்ளி தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளி தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலில் உள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளி தகடு பதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம.அருணகிரியின் முயற்சியின் காரணமாக கோவிலில் உள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு தங்க கோவிலாக காட்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

    • தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இத்தலம் உள்ள ஊரான திருக்கோடிக்காவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு, சுடுகாடு கிடையாது.

    எம பயம் போக்கி பித்ரு தோஷங்களை நீக்கும் சிவாலயங்களில் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது.

    வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்படுத்தும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் தீராத வினைகளை தீர்த்து பக்தர்கள் மனதில் நி்ம்மதியை நிலையாக இருக்க செய்கிறார்.

    இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்பிகை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு வாய்ந்தது இக்கோவில்.

    புண்ணிய பூமி

    இங்குள்ள ஈஸ்வரனை முப்பத்து முக்கோடி தேவர்களும் 4 வேதங்களும் வழிபட்டதாகவும், எமதர்மர் மற்றும் சித்ரகுப்தருக்கு சனி தோஷத்தை இக்கோவிலில் உள்ள இறைவன் நீக்கியதாகவும் புராண வரலாறுகள் கூறுகிறது.

    இத்தலம் உள்ள ஊரான திருக்கோடிக்காவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு, சுடுகாடு கிடையாது. காவிரி ஆறு வடக்கு நோக்கி உள்ளது. நந்தி பெருமானின் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் இக்கோவிலின் வாசலில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி திருக்கோடீஸ்வர பெருமானை வழிபடுவோருக்கு எம பயம் , பிதுர் சாபம் நீங்கி புத்திர பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சன்னதிகள்

    கோவிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் காணப்படுகின்றன. இடது புறம் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மர கணபதி, பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சமூர்த்தி அலங்கார மண்டபம், திரிபுர சுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. எதிரே நர்த்தன விநாயகர் உள்ளார். அம்மன் சன்னதியின் வலப்புறம் ஆடிப்பூர அம்மன் உள்ளார். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அடுத்து நடராஜர் சன்னதி உள்ளது.

    உள் மண்டபத்தில் வலப்புறம் சித்திரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வெளித்திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலியார், கணபதி, நாகர்,விசுவநாதர் விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகேசர் சன்னதிகள், கரையேற்று விநாயகர் சன்னதிகள் உள்ளன.

    கரையேற்று விநாயகர்

    அடுத்து ரிக்வேத லிங்கம், யஜுர் வேத லிங்கம், சாமவேத லிங்கம், அதர்வணவேத லிங்கம் உள்ளன. தொடர்ந்து கஜலட்ஜமி, ஷேத்ரபாலகர்கள், வடுக பைரவர், சூரியன், சந்திரன், நாகேஸ்வரர், சண்டபீடேஸ்வரர், கஹானேஸ்வரர் உள்ளனர். பால சனீஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. கருவறை கோஷ்டத்தில் நடராஜர், சிவகாமி, கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிட்சாடணர், அஷ்டபுஜ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், அடுத்து சூரிய மண்டல பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

    கோவில் பிரகாரத்தில் வலதுபக்கம் வீற்றிருக்கும் பிள்ளையார் பல்வேறு சிறப்புகளை உடையவர்.

    முற்காலத்தில் காவிரி வெள்ளத்தில் மூழ்கிய முனிவர்களை கரையேற்ற வேண்டி துர்வாச முனிவர் மணலால் விநாயகரை செய்து வழிபட்டார். பின்னர் காவிரி வெள்ளத்திலிருந்து முனிவர்களை விநாயகர் மீட்டார் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த விநாயகருக்கு கரையேற்று விநாயகர் என்ற பெயர் வந்தது. இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் மட்டுமே சாற்றி வழிபட்டு வருகின்றனர்.

    வடுகபைரவர்

    இதைப்போல துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வடுகபைரவர் பெருமானை வழிபடுவோருக்கு வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு வந்து எமதர்மர், சித்ரகுப்தரை வணங்குவோருக்கு மரண அவதி, எமபயம் இல்லை என கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பிரம்பு ஆகும்.

    இக்கோவிலின் மூலவரான திருக்கோடீஸ்வரருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட நாகாபரணம் சாற்றப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    கல்வெட்டு சிற்பங்கள்

    இக்கோவில் ராஜகோபுரத்தின் இருபுரத்திலும் தேரோட்ட நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான வடிவத்தில் தேர்காட்சிகளும், நமது பாரம்பரிய நடன அபிநயங்களை சித்தரிக்கும் வகையில் நடன காட்சிகளும், யானை போர் போன்ற காட்சிகளும், கருங்கல்லில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவாமி சன்னதியினை சுற்றி கல்வெட்டுகளும் காணப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலில்

    ஆண்டுதோறும் சித்தரை மாதத்தில் பிரம்மோற்சவம் மற்றும் சித்ராபவுர்ணமி உற்சவம், புரட்டாசி மாதத்தில் அம்பாள் வேங்கடாஜலபதியாய் காட்சிதருதல், ஐப்பசி அன்னாபிஷேகம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவில் சன்னதியில் நுழைவுவாயில் சுமார் 60அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100 அடி உயரத்தில் பிரதான ராஜகோபுரமும், 50 அடி உயரத்தில் சுவாமியின் நுழைவு ராஜகோபுரமும், சுவாமி, அம்பாள் விமானங்கள், பஞ்சமூர்த்தி மண்டபங்கள், மடப்பள்ளி பெரியகருங்கல் மதில் சுவர்கள் கொண்ட பிரகாரங்களும் காணப்படுகிறது. கோவிலின் 4 வீதிகளிலும் விநாயகருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

    கோவிலுக்குசெல்வது எப்படி?

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 18 கி.மீட்டர் பயணித்து திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம்.
    • கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

    முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். வயலூரின் சிறப்பே அருணகிரிநாதருக்கு, முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். அவர் நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு குன்றில்லாத சமவெளியில் முருகன் குடிகொண்டுள்ளார்.

    அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான், முதன்முதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் பாடிய பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. காட்டு விலங்குகளை வேட்டையாட சென்ற ஒரு சோழ மன்னன், அங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலை தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தார். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

    ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோவிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் 'மறப்பிலி நாதர்' என்றும், அக்னி பகவான் வழிபட்டதால் 'அக்னீசுவரர்' என்றும், விடங்கப்பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளி பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறார் வயலூர் முருகன். அதனால் கோவிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே. இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி 'பொய்யாக்கணபதி' என்று பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சன்னிதிக்கு அருகே இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னிதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார்.

    எதிர்புறம் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சன்னிதியை அடுத்து முத்துக்குமாரசாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனை காண கண் கோடி வேண்டும். முத்துக்குமாரசாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி.

    மூலஸ்தானத்தில் முருகனின் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய், தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

    சிவன் சன்னிதிக்கு பின்புறம் தான் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். கந்த சஷ்டியின்போது முருகன்-தெய்வானைக்கும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோவில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக காட்சி தருவார்.

    வயலூரில் முருகன் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். கோவிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை 'இடும்பன் கோவில்' என்றும், 'கிராம தேவதைக் கோவில்' என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோவிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் "முத்தைத் திரு" பாடியபின்பு "வயலூருக்கு வா" என்று முருகன் சொல்ல, அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும், அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய ெபரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம். அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7-வது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    எண்ணினாலும், தரிசித்தாலும் எண்ணிலடங்கா பேறுகளையும், வரங்களையும் அள்ளித்தரும் வயலூரானை நேரில் தரிசித்தால், நலம் பெருகும். வளம் தழைக்கும் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.

    வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். அருணகிரிநாதருக்கு திருமண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோவிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோவிலில் செலுத்த முடியாது. அசலோடு வசூலித்து விடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    • சதுரகிரி மலை ஏறுவது கடினமானது.
    • இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.

    சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

    1) மகாலிங்கம்

    2) சுந்தரமூர்த்தி லிங்கம்

    3) சந்தன மகாலிங்கம்

    4) இரட்டை லிங்கம்

    5) காட்டு லிங்கம்

    மலையில் வாழும் பளியர் சாதியைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வந்த இந்தக் கோயில் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்த ராமசாமி காட்டைய நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. 1940 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

    வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

    சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

    சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

    சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

    இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

    கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

    இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

    இரட்டை லிங்கம்:

    ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

    ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

    லிங்க வடிவ அம்பிகை:

    சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

    • குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன.
    • திருமணத்தில் தடை ஏற்படுபவர்கள் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும்.

    இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார்.

    இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத் தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..

    • முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார்.
    • சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.

    இந்து கடவுளர்களில் இளம் வயது கடவுள், முருகப்பெருமான் மட்டுமே. 'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான 'கவுமாரம்' என்பதன் தெய்வமும் முருகனே ஆவார். மேலும் இவர் தமிழ்க் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.

    சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப்பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்புஆறு குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று சமய நூல்கள் கூறுகின்றன. இவருக்கு கந்தன், கடம்பன், வேலாயுதன், சரவணபவன், குமரன், வேலவன், தண்டாயுதபாணி போன்ற பல பெயர்கள் உள்ளன.

    ஒருநாள் நாரதர், கயிலாயம் சென்று சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்தார். அந்த பழம் தனக்கு வேண்டும் என முருகனும், விநாயகரும் முரண்டுபிடித்தனர். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் 'தாய் தந்தையரே உலகம்' என்று கருதி அவர்களை மும்முறை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

    உலகை சுற்றிவந்த முருகன் இந்தச் செயலால் கோபம் கொண்டு, பழனி மலை மீது ஆண்டிக்கோலமாக அமர்ந்தார். அதனடிப்படையில் மலை தோறும் முருகன் கோவில்கள் உருவானது. தென்னிந்தியாவில் மலைகள் அதிகம் என்பதால் முருகன் கோவில்களும் அதிகமானது, அவரை வழிபடும் பக்தர்கள் கூட்டமும் உயர்ந்தது. முருக பக்தர்கள் அதிகரிக்க மலைகளைத்தாண்டி சமவெளிப் பகுதிகளிலும் முருகன் கோவில்கள் உருவானது. இப்படி உருவான முருகன் கோவில்களில் ஒன்றே வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்.

    தலவரலாறு

    புராண காலத்தில், ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. அதனுடைய அடையாளமாக ஆலயத்தைச் சுற்றி இன்றளவும் அதிக ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள வள்ளிமலைக்கு வந்துவிட, தேவர்களும் முனிவர்களும் பெருமானைத் தேடி பூலோகம் வந்து அலைந்து திரிந்தனர். பல இடங்களில் தேடியும் அவர்களால் முருகனை காணமுடியவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் துவண்டு வருத்தமுற்றனர். அப்போது அருவமாக தோன்றிய முருகன், "இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நான் உங்களுக்கு காட்சி தருவேன்" என்று கூறினார்.

    அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் ஆகியோர் சூழ ஒரு அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவமாக காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் கண்டுகளித்தனர். ஆனால் அதில் நிறைவு கொள்ளாத அவர்கள் மீண்டும் அருட்காட்சி தரவேண்டும் என்று வேண்டினர். அதை ஏற்ற முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார். அதனால் இத்தலம் 'வில்லுடையான்பட்டு' என பெயர் பெற்றது. பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு 'சரவண தீர்த்தம்' என்று பெயரிட்டார். இவ்வாறு முருகன் காட்சியளித்து தனது வேலையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் 'வேலுடையான்பட்டு' என்று அழைக்கப்பட்டது. அனைவருக்கும் காட்சியளித்த முருகப்பெருமான் அந்த இடத்தில் கல்லுருவமாய் மாறி பூமியில் நிலைத்தார்.

    இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்தது. அதன்பின்னர் இப்பகுதியை ஆட்சிசெய்த சித்திரகாடவன் என்னும் பல்லவ வம்சத்து அரசன், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது. கி.பி. 13-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அம்மன்னனின் பசுக்கள், இந்தப் பகுதியில் மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களை பின் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். வியப்புற்ற மன்னன் அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பீறிட்டு எழவே திடுக்கிட்டு அந்த இடத்தில் இருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் சிலையாக முருகப்பெருமான் காட்சி தந்தார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உரு வானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோவில்.

    மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலிலிருந்து கிடைத்தவர். ஆம்! இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆனால் எங்கு எப்போது கிடைத்தது என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை.

    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் கோபுரமின்றி தெய்வானை திருமண சிற்பத்துடன் கூடிய தோரண வாசலுடன் அமைந்துள்ளது. அதை அடுத்து முகப்பு மண்டபத்தில் ஐந்து சூலாயுதங்களும், பலிபீடமும், கொடிமரமும், மயில் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திற்கு வெளிப்புறத்தில் இடது பக்கத்தில் விநாயகர், ஆதிலிங்கம், வலது பக்கத்தில் தண்டாயுதபாணி ஆகியோரின் சிறு சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் உட்புறம் இடது பாகத்தில் அருணகிரிநாதர், நால்வர் சன்னிதிகளும், அதற்கு நேர் எதிரில் தூணில் ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி நடராஜர் சபையும் அமைந்துள்ளது.

    கருவறைச் சுற்றிலும் விநாயகர், விசாலாட்சி, விசுவநாதர், அகத்தியர்-லோபமுத்ரா, துர்க்கை ஆகிய சன்னிதிகளும், சனிபகவான், ஐயப்பன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அர்த்தமண்டபத்தைத் தாண்டி உள்ளே செல்ல கருவறையில் சுயம்புவான மூலவர் வள்ளி- தெய்வானை உடனாய சிவசுப்ரமணியசுவாமியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிரகாரச் சுற்றில் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சுந்தரேசுவர பெருமான் சன்னிதியும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்பாள் சன்னிதியும், மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதியும் அதனை ஒட்டி முருகப்பெருமானின் வாகனமான மயில்கள் வாழுமிடமும் இடம் பெற்றுள்ளது.

    ஆலயத்தின் வாசலை ஒட்டி வலதுபுறம் நவக்கிரக சன்னிதியும், தலவிருட்சங்களும், தேர் வடிவ வசந்த மண்டபமும் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே முருகப்பெருமானை நோக்கியவாறு இடும்பன் உள்ளார். அவருக்குப்பின்னால் முருகன் தன் சூலாயுதத்தை நட்டு உருவாக்கிய சண்முக தீர்த்தம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. தீர்த்தத்தின் படித்துறையில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி செல்வ விநாயகர் அமர்ந்துள்ளார்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடைபட்ட வடக்குத்து என்ற ஊரிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். வடலூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்.

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய ஆலயமாக நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முற்காலத்தில் வாழ்ந்த கவுரவ குல கவரை செட்டியார்கள் குதிரை மீது வளையல் வைத்து நாள்கணக்கில் பல ஊர்களுக்கும் சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சக்தி திருத்தலமான சமயபுரத்தில் பங்குனி பெருவிழாவில் வணிகம் செய்தனர்.

    கனவில் வந்த அம்மன்

    அப்போது ஒரு நாள் அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் சமயபுர மாரியம்மன் இளம் பெண் வடிவத்தில் தோன்றி தனது கைகளுக்கு வளையல் அணிவிக்க கூறினார். பெரியவரும் மகிழ்ந்து அப்பெண்ணின் பொன்நிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். அப்போது வளையல்கள் உடைந்து கீழே விழுந்தன.

    இதனால் அவர் செய்வதறியாது திகைத்து "அம்மா உன் அழகிய கைகளுக்கு போட வளையல்கள் என்னிடம் இப்போது இல்லை. என் ஊருக்கு வந்தால் வகை, வகையாக வளையல்களை அணிவித்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு அம்மன் வடிவில் இருந்த பெண் சிரித்து மறைந்தாள்.

    அம்மை நோய்

    தெய்வத்தாயை கனவில் கண்ட அந்த பெரியவர் விழித்து எழுந்தபோது அவருடன் வந்தவர்களை அம்மை நோய் தாக்கி இருந்தது. இதைக்கண்டு அந்த பெரியவர் மனம் வருந்தினார். அப்போது அங்கு வந்த சமயபுரம் கோவில் அர்ச்சகர் அந்த பெரியவரிடம் உடைந்த அவரது வளையல்களுக்கு பதிலாக பொற்காசுகளை அளிக்க அம்மன் உத்தரவிட்டதாக கூறினார்.

    மேலும் அம்மை நோய் தாக்கியவர்களுக்கு அன்னையின் அருட்பிரசாதமாக திருநீறு வழங்கினார். இந்த திருநீறை தங்கள் உடலில் அவர்கள் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்தது.

    சமயபுரம் மாரியம்மன்

    அப்போது தனது கனவில் வந்த பெண் சமயபுரம் மாரியம்மன் என்ற உண்மை முதியவருக்கு புலப்பட்டது. இதைக்கேட்ட சக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கும்(சக வியாபாரிகளுக்கும்) அன்னை காட்சி அளிக்க வேண்டும் என கேட்டு சமயபுரம் அன்னையை மனமுருகி வேண்டினர்.

    அப்போது ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தோன்றி பக்தா்களுக்கு காட்சி தந்தார், மாரியம்மன். தங்களது தாய் ஆகாயத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஆகாச மாரி... ஆகாச மாரி..." என போற்றிப் புகழ்ந்து வணங்கி துதித்தனர்.

    வசந்த கால வைபவம்

    இதைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் ஆகாச மாரியம்மனை தங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதை கேட்ட அம்மன் உங்கள் ஊர் எது? என(தனக்கு தெரிந்தும் தெரியாதது போல) கேட்டார். அப்போது வளையல் வணிகர்கள் தங்கள் ஊர் நறையூர்(நாச்சியார்கோவில்) என கூறினர். உடனே மாரியம்மன் தான் முல்லைக்கும், மல்லிகைக்கும், முன்கை வளையலுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன்" என கூறினார்.

    இதன்படி ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசைக்குப்பின் வரும் வெள்ளிக்கிழமை இரவில் சமயபுரத்தில் இருந்து ஆகாச மார்க்கமாக நறையூர் என்ற நாச்சியார்கோவிலுக்கு வருகை தந்து வசந்த கால வைபவம் கண்டு, அங்கு தேரோடும் திருவீதியின் ஈசான்ய பாகத்தில் கோவில் கொண்டு, அலங்கார வல்லியாக காட்சி தருகிறார் சர்வசக்தி ஆகாச மாரியம்மன்.

    ராஜராஜேஸ்வரி அம்மன்

    நிறைமங்கல நாயகியாக குறைதீர்க்கும் தெய்வமாய் அரசாட்சிக் கோலம் கொண்ட அன்னை, தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும், எல்லா பரம்பொருளும் தன்னுள் அடக்கம் எனக் காட்டவும், ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு அலங்காரத்தை ஏற்று காட்சி அளிக்கிறார்.

    அன்னையின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துக்கு வெண்பட்டு சேலை பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. அன்று இரவு அன்னையின் அருட்திறம் காட்டும் நீரில் விளக்கு எரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சனிக்கிழமை ஏக இறைவி ஏகாந்த வைபவமும், ஞாயிறு அன்று பெரிய திருவிழா கண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்களின் பாவங்களை களைந்து, உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளித்து, தீராத வினைகள் தீர்த்து சகல பாக்கியங்களையும் அருளுகிறார்.

    வேறு விழாக்கள் இல்லை

    திருநறையூரில் திருவிழா நாட்களில் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படிகள், அதற்கான பிரத்யேக பிரசாத படையல்கள், கனி வர்க்கங்கள், காணிக்கை சீர்வரிசைகள், பெருமாலை சாத்துபடி, கூட்டு வழிபாடு நடக்கிறது.

    நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் சாம்பிராணி புகையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, பலவகை காவடிகள் எடுத்து அங்கப்பிரதட்சணம், மாவிளக்கிடல் என பல வகை வழிபாடுகளை செய்கிறார்கள். சமயபுரம் மகா மாரியம்மன் நாச்சியார் கோவிலுக்கு வசந்த விழா காண வரும் நாட்களில் வேறு எந்த விழாவையும் அவ்வூரில் மக்கள் நடத்துவது இல்லை.

    அகல் விளக்கு சுடர்

    விழா நாட்களில் அம்மன் 6 நாட்கள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து வரும் புதன்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடக்கிறது. சமயபுரம் மாரியம்மன் இந்த கோவிலில் குடி கொண்ட அடையாளமாக கோவிலில் பேரகல் விளக்கின் சுடர் 24 மணி நேரமும் காட்சி அளிக்கிறார்.

    பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற நாச்சியார்கோவிலுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆலயத்துக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நடக்கிறது.

    சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுதல்

    27-ந் தேதி(சனிக்கிழமை) வீற்றிருந்த திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார் 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரம், 29-ந் தேதி(திங்கட்கிழமை) சரஸ்வதி அலங்காரமும், 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மதன கோபால அலங்காரமும், 31-ந் தேதி(புதன்கிழமை) மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், ஜூன் 1-ந் தேதி(வியாழக்கிழமை) ஸ்ரீ சேரசயன அலங்காரம், 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அம்பாள் அந்தம் வரை வளர்ந்தும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் காட்சி அளிக்கிறார்.

    அன்று இரவு அருள் தீபம் ஏற்றுதல் நடக்கிறது. 3-ந் தேதி(சனிக்கிழமை) ஏகாந்த வைபவம் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளிக்கிறார். 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை செய்கிறார்கள்.

    5-ந் தேதி(திங்கட்கிழமை) மற்றும் 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருகிறார். நின்ற திருக்கோலத்தில் வெள்ளி குடம் சுமந்தவாறு சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுகிறார். 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்தை அடைந்து அங்கிருந்து திருவாரூர் மார்க்கத்தில் 10 கி.மீட்டர் தூரம் பயணித்தால் நாச்சியார்கோவிலை அடைந்து ஆகாச மாாியம்மன் கோவிலை அடையலாம். இதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    ×