என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மலேசியா நாட்டின் முதன்மையான மலை வாசஸ்தலமாக விளங்கும் ஆலயம், குன்றக்குடி குமரனை நினைவுபடுத்தும் கொடிமலை முருகன், ஆடிக் கிருத்திகைக்கும், கந்தசஷ்டி விழாவிற்கும் புகழ்பெற்ற கோவில், புதுமையான கயிற்றிழுவை ரெயில் கொண்ட மலை, தமிழர்களின் அபிமான முருகன் தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில்.

    ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் கால் பதித்து கெடாரம் கொண்ட பூமி. சோழ மன்னன் வென்ற கெடாரம், இன்று பினாங்கை அடுத்து ‘கெடா’ என்ற பகுதியாக அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழர்கள் குடியேற்றம் நடந்து, தமிழ் மக்கள் நிறைந்த தீவாக இந்தப் பகுதி விளங்கி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூமி, மலேசியாவின் கவுரவமாகத் திகழும் மாநிலமாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும்.

    ஆலய வரலாறு :

    பல்லாண்டு காலமாக, இந்த மலையின் உச்சியில், முருகப்பெருமானின் ஆயுதமான வேல் ஒன்று நிறுவப்பட்டு, மலைவாழ் அடியவர்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடத்தில், கோவில் கட்டிக்கொள்ள மலேசியா அரசு இடமளித்து அனுமதியும் வழங்கியது. 1971-ம் ஆண்டில் கொடை வள்ளலாகவும், தொழிலதிபராகவும் விளங்கிய மலேசியத் தமிழரான ஆறுமுகம் பிள்ளை என்பவரை தலைவராகக் கொண்டு, ஆதிமூலம் மற்றும் சிங்காரம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் எழிலான முருகன் கோவில் அமைக்கப்பட்டது. அந்த ஆலயம் கொடிமலை அருளொளி திருமுருகன் திருக்கோவிலாக இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

    தொடர்ந்து 1988-ம் ஆண்டு அரசின் மானியத்துடன் சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோரது சிலை வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டு மலேசியா கொண்டு செல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தல இறைவனான கொடிமலை முருகன், கிழக்கு முகமாய் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானாக பன்னிரு கரங்கள் கொண்டு அருளாட்சி புரிகிறார். வடக்கு நோக்கிய அசுர மயில் மீது எழிலாக அமர்ந்து அருள் வழங்குகிறார். இந்த முருகப்பெருமானை முருகனை மத வேறுபாடின்றி அனைத்து மதத்தவரும் வழிபட்டுச் செல்வது, இவரின் அருளாற்றலை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை, கார்த்திகை, சஷ்டி திதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவை தவிர, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலட்சுமி நோன்பு, கார்த்திகை தீபம் உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடிக்கிருத்திகை விழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதேபோல, கந்தசஷ்டி விழாவும் ஏழு நாட்கள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

    இத்தலம் குன்றக்குடி குமரனின் தலத்திற்கு இணையாகத் திகழ்வதாக, இங்கு வந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் உளமாரப் பாராட்டியுள்ளார். தீராத நோய் உள்ளவர்களுக்கு இங்கே தீர்வு கிடைப்பதாக, இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

    பினாங்கு தீவின் பெருமைமிக்க இடமாகத் திகழ்வது, பினாங்கு மலை. இதனைத் தமிழர்கள் ‘கொடிமலை’ என்று அழைக்கின்றனர். ராணுவத்தின் கொடி, இந்த மலை மீது ஏற்றப்பட்ட காரணத்தால், இதனை கொடிமலை என்று அழைப்பதாக கூறப்படுகிறது. மலேசிய நாட்டின் முதலாவது மலை வாசஸ்தலமாக விளங்கும் பெருமை பெற்றது, இந்த மலை.

    மாநிலத் தலைநகரான ஜார்ஜ் டவுனில் இருந்து மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில், பினாங்கு மலை அமைந்திருக்கிறது. இந்த மலையின் உயரம் 2,733 அடி ஆகும்.

    பிரான்சிஸ் லைட் என்பவர் இந்த மலையையும், இதன் சிறப்பையும் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தினார். இந்த மலையில் அருளொளி முருகன் கோவில், புத்தர் கோவில், மூலிகைப் பூங்கா, பயணிகள் தங்கும் விடுதிகள் என பல உள்ளன. இம் மலையின் தட்பவெப்பம் மற்றும் இழுவை ரெயில் போன்றவை அனைவரையும் கவர்ந்திழுப்பதாக இருக்கிறது.

    கொடிமலை ரெயில் :

    ஆயர் ஈத்தாம் அடிவாரத்தில் இருந்து, 6550 நீளத்திற்கு கயிற்று இழுவை ரெயில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில் நடைபயணமாகவும், குதிரைகள் மீது ஏறியும், முடியாத நபர்களை டோலியின் மீது அமர வைத்தும் மலையேறி வந்தனர். கி.பி. 1897-ம் ஆண்டு இருப்புப்பாதை போடும் திட்டம் உருவானது. 1906-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1923-ம் ஆண்டு அந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தது. அந்த ஆண்டில் இருந்து கயிற்று இழுவை ரெயில், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது மீண்டும் 2010-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உருமாறியிருக்கிறது.

    பனையபுரம் அதியமான்
    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. ஆலய முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவே கொடி மரமும், பஞ்சமுக பலிபீடமும், சிங்க வாகனமும் இருக்கின்றன. இங்கு இருக்கும் பலிபீடம் ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    அடுத்து சிம்ம வாகனம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் முருகப்பெருமான், கிழக்கில் பைரவர், வட கிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். வலதுபுறம் விராட் விஸ்வபிரம்மன் வீற்றிருக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் துர்க்கை அம்மன் 18 கரங் களுடன் அருள்புரியும் அழகு நம்மை சிலிர்க்க வைக்கக்கூடியது. இந்த துர்க்கை அஷ்ட தசபுஜ துர்க்கை என அழைக்கப்படுகிறாள். கன்னிமூலை கணபதி, ஆஞ்ச நேயர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருமேனிகளும் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார சக்திகள் அருள்பாலிக்க, அடுத்து கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்னைக்கு, நான்கு கரங்கள். கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை சுமந்து காட்சி தரும் அன்னையின் கழுத்தில் திருமாங்கல்யம் இருப்பது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது எங்கும் காண இயலாத அற்புத அமைப்பு என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னையிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ள பெண்களிடம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தலபுராணம் அன்னை இங்கு வந்த கதையை சொல்கிறது.

    நிராலம்ப மகரிஷி பாரத தேசத்தில் பல இடங்களில் தவம் செய்த பின், கடைசியாக இவ்வூருக்கு வந்தார். இங்கு காவிரி நதியின் தென் கரையில் பூமியில் பாதம் படாதபடியும், அந்தரத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமலும் நின்று, அந்தர்யோக முறையில் அன்னையை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். அவரது தவத்தைக் கண்டு மனம் இளகிய பராசக்தியானவள், ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியாக அவருக்கு அந்தரத்தில் காட்சி தந்தாள்.

    அந்த காட்சியை கண்டுகளித்த நிராலம்ப மகரிஷியிடம் என்ன வரம் வேண்டுமென அன்னை வினவினாள்.

    “ஜெகன் மாதாவாகிய தாங்கள் இந்தக் கலியுகத்தில் மனித குலம், சத்தியம், தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலான நன்னெறிகளில் இருந்து விலகி பாவச் செயல்களைச் செய்து, பஞ்ச மாபாதகங்களால் பீடிக்கப்பட்டு, நிம்மதியும், சுகமுமின்றி வேதனையோடு நரக வாழ்க்கை வாழும் போது அவர்களை கருணையோடு பார்த்து தாயுள்ளத்தோடு அவர்களது பாவங்களை எல்லாம் போக்க வேண்டும். அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்” என்று நிராலம்ப மகரிஷி வேண்ட, அன்னை காளிகா பரமேஸ்வரியும் “அப்படியே அருள்கிறேன்” என அனுக்கிரகம் செய்தாள்.

    நிராலம்ப மகரிஷிக்கு அம்பாள் காட்சி கொடுத்த இடமே இந்த ஆலயம் உள்ள இடம். உலகில் எங்கும் காண இயலாத பலிபீடம் இங்குள்ள பஞ்சமுக பலிபீடமாகும். ஐந்து முகங்களைக் கொண்ட இந்த பலிபீடம், நிராலம்ப மகரிஷியால் அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் இவ்வையகத்து மக்கள் அன்னையின் கருணையால் வளமாக வாழ வேண்டி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    இங்கு அன்னையின் சன்னிதியின் முன் மாத அமாவாசை தோறும் சூலினி பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் பில்லி, சூனியம் விலகும் என்பதும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.

    சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இரவு நேரங்களில், நடுநிசியில் சன்னமான கொலுசு சப்தத்தை இந்த பகுதி மக்கள் கேட்டதுண்டு. கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அன்னை இரவில் உலா வருவதால் ஏற்படும் சப்தம் இது என்கின்றனர் கேட்டவர்கள்.

    இங்குள்ள அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆலயம் தேசிய ஒருமைபாட்டின் சின்னமாய் விளங்குகிறது என்று சொல்வது மிகையாகாது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    தன்னை நாடுவோரின் துயர் நீக்கி அவர்களை வளமுடனும் மகிழ்வுடனும் வாழவைப்பதில் அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு நிகரில்லை என்பது உண்மையே.

    அமைவிடம் :

    திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது இந்த ஆலயம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, நகரப்பேருந்தில் மரக்கடை மற்றும் காந்தி மார்க்கெட் வரை பயணித்து, அதன்பிறகு நடந்தே சென்று விடலாம்.

    ஜெயவண்ணன்
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடும்பு என்ற இடத்தில் அமைந்திருக்கும் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.




    வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி
    கோவில் தோற்றம்










    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடும்பு என்ற இடத்தில் அமைந்திருக்கும் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

    தல வரலாறு :

    செங்குந்த முதலியார் குடும்பத்தினர் சிலர், காஞ்சிபுரத்தில் இருந்து பாலக்காடு அருகிலுள்ள கொடும்பு என்ற இடத்திற்குச் சென்று நெசவுத் தொழிலைச் செய்து வந்தனர். அவர்கள், நெசவு செய்த துணிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள அவினாசியில் விற்றுவிட்டு, அங்கிருந்து நெசவுக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.

    ஒரு முறை அவர்கள் அவினாசி வந்து விட்டு ஊர் திரும்பிய போது, கோழிமாம்பட்டி என்ற இடத்திற்கு அருகில், திடீரென்று “நானும் வருகிறேன், நானும் வருகிறேன்” என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டுக் கீழே இறங்கிய அவர்கள், சுற்றிலும் பார்த்தனர். அங்கு ஒருவரையும் காணவில்லை. பின்னர், அவர்கள் மீண்டும் வண்டியில் ஏறிப் புறப்படத் தயாரானார்கள்.

    ஆனால், அந்த மாட்டு வண்டி அங்கிருந்து முன்னோக்கிச் செல்லாமல் நின்றது. அவர்கள், எவ்வளவோ முயற்சித்தும், மாடு முன்னோக்கிச் செல்ல மறுத்தது. அப்போது மீண்டும், “நானும் வருகிறேன், நானும் வருகிறேன்” என்ற குரல் தெளிவாகக் கேட்டது. அவர்கள் குரல் வந்த திசையில் சென்று பார்த்தனர். அங்கேயிருந்த புதரில் கல் ஒன்று மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    ஒளிமயமான அந்தக் கல்லைக் கண்டு திகைத்த அவர்கள், அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வந்து, தங்களுடைய நூல் மூட்டை ஒன்றில் பாதுகாப்பாக வைத்தனர். அடுத்த நிமிடம், அந்த மாடு முன்னோக்கி நகரத் தொடங்கியது.

    கொடும்பு திரும்பிய அவர்கள், அங்கிருந்த சிவன் கோவிலில் தனிச்சன்னிதி ஒன்று அமைத்து, அந்தக் கல்லை வைத்து, அதனுடன் ஒரு வேலையும் நிறுவி, சுப்பிரமணிய சுவாமியாக வழிபடத் தொடங்கினர். அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் பூஜைப் பணிகளைச் செய்து வந்த குரூர் மனை அச்சுதன் நம்பூதிரி என்பவர், சிவபெருமானுக்குச் செய்து வரும் கேரள முறையிலான பூஜையைப் போன்றே, சுப்பிரமணிய சுவாமிக்கும் தானே பூஜை செய்வதாகச் சொன்னார்.

    ஆனால், அதைச் செங்குந்த முதலியார் குடும்பத்தினர் ஏற்கவில்லை, தமிழ்நாட்டில் இருந்து வந்த முருகப்பெருமானுக்குத் தமிழ் முறையிலான பூஜையே செய்ய வேண்டும் என்றனர். அதற்கு நம்பூதிரி ஒப்புக் கொள்ளவில்லை. அந்த நம்பூதிரி, பாலக்காடு அரசரிடம் சென்று முறையீடு செய்தார்.

    பாலக்காடு அரசர் அவ்விடத்திற்கு வந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பார்த்தார். இருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ‘கோவிலின் வடக்கு வாசலில் இரண்டு பிரிவினரும் கும்பங்களை வைக்க வேண்டும். அந்தக் கும்பத்தை யார் எடுக்கிறார்களோ, அவர்கள் முறைப்படியே முருகப்பெருமானுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும்’ என்று மன்னன் உத்தரவிட்டார்.

    செங்குந்த முதலியார் சார்பில் மதுரையில் இருந்து மாணிக்கவாசகர் வரவழைக்கப்பட்டார். அவர் தமிழில் பாடி ஒரு கும்பத்தை வைத்தார். நம்பூதிரி சில மந்திரங்களைச் சொல்லி ஒரு கும்பத்தை வைத்தார். மாணிக்கவாசகர் வைத்த கும்பத்தை நம்பூதிரியால் எடுக்க முடியவில்லை. ஆனால், நம்பூதிரி வைத்த கும்பத்தை மாணிக்கவாசகர் எடுத்து விட்டார். அதனைக் கண்ட அரசர், கோவிலில் தமிழ் முறைப்படியே பூஜை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.

    தோல்வியடைந்த நம்பூதிரி தனது நிலத்தின் ஒரு பகுதியை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தானமாக எழுதிக் கொடுத்தார். அவர் அளித்த தானத்திற்கு ஈடாக, தைப்பூசம், சூரசம்ஹாரம், கோவிலில் முருகப்பெருமான் நிறுவப்பட்ட நாள் மற்றும் நவராத்திரி என்று ஆண்டுக்கு நான்கு முறை சுப்பிர மணிய சுவாமியின் திருமஞ்சனக் கலசம் அச்சுதன் நம்பூதிரியின் குரூர் மனையைச் சுற்றி வருவதற்குச் செங்குந்த முதலியார்கள் ஒப்புதல் அளித்தனர். இவ்வாறு ஆலயம் அமைந்த தல வரலாறும், அதன் வழிபாட்டு முறைக்கான வரலாறும் சொல்லப்படுகின்றன.

    கோவில் அமைப்பு :

    இக்கோவில் கோபுரம், தேர்கள், தேர்கள் நிறுத்தி வைக்கப்படும் மண்டபங்கள் போன்றவை தமிழ்நாடு கட்டுமான முறையில் அமைந்திருக்கின்றன. இக்கோவிலுக்கான கருவறையில் சுப்பிரமணிய சுவாமி, இரு மனைவிகளான வள்ளி, தெய்வானை ஆகியோருடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், உமாதேவி, பரசு ராமர், கிருஷ்ணர், சாஸ்தா, கால பைரவர் சன்னிதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. செண்பக மரம், ஆலய தலவிருட்சமாக இருக்கிறது.

    இத்தலத்தில் முருகப்பெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தை மாதம் பரணி நட்சத்திர நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரையிலான ஆண்டு விழாவாகத் தைப்பூசம் விழா கொண்டாடப்படுகிறது. இதே போல் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் தொடங்கி கந்தசஷ்டி வரையிலான சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும். மாதம் தோறும் வரும் சஷ்டி, கிருத்திகை நாட்களும், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் போன்றவைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. பழனி முருகன் கோவிலில் நடைபெறும் விழாக்கள், தேரோட்டம் போன்றவை இக்கோவிலிலும் நடைபெறுவதால், இந்த ஆலயத்தை ‘பழனியில் பாதி கொடும்பு’ என்று போற்றி மகிழ்கின்றனர்.

    கருவறையிலிருக்கும் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி- தெய்வானை சிலைகள் ஒரே சிலையில் செதுக்கப்பட்டவை. இங்கு திருமணம் செய்து கொள்வது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால் இத்தல இறைவனை ‘கல்யாண சுப்பிர மணிய சுவாமி’ என்றே அழைக்கின்றனர். திருமணம் செய்த தம்பதியர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நிலையில், இக்கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால், அவர்களின் மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தின் அருகே ஓடும் நதியை ‘சோகநாசினி’ என்று அழைக்கின்றனர். இந்நதியில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை வழிபடுபவர்களின் சோகங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்கின்றனர். இந்த நதியில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. கும்பகோணத்தில் நடக்கும் மகாமக நாளிலேயே, இங்கும் மகாமகத் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொடும்பு எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பாலக்காடு நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    தேனி மு.சுப்பிரமணி
    சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில் வரலாறு :

    சித்திமதி - மதங்க முனி தம்பதியரின், கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள், அன்னை மாதங்கி. அவளது பச்சைநிறம், இந்த மண்ணையே மகிழ்வடையச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை, ‘சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி’ என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீ கரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் ஆகியவற்றை அள்ளித்தருபவள் ராஜமாதங்கி.

    இந்த அன்னை அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும். ஒரு பிரளய காலத்தில் பிரம்ம தேவன், சிவபெருமானை நோக்கி மதங்கம் என்னும் யானை வடிவத்தில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார்.

    அவரும் தவம் செய்ய விருப்பம் கொண்டு இடம் தேடினார். அது பிரளய காலம் அல்லவா? எங்கும் ஒரே வெள்ளம். தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர் தோன்றி, “மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் உள்ளது. அங்கு சென்று தவமியற்று” என்று அருளினார். ஊழி காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்கர் அங்கேயே தவமியற்றத் தொடங்கினார்.

    அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி, மதங்க முனிவருக்கு ஆசி வழங்கினார். அதே போல் விநாயகரும் மதங்கருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ என்ற பெயரிலும், திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர்.

    தவமிருந்த மதங்க முனிவருக்கு அம்பிகையுடன் சிவபெருமான் திருக்காட்சி நல்கினார். அப்போது மதங்கர் அம்மையப்பனிடம், “அம்பிகையே எனக்கு மகவாய் வந்து பிறக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

    உடனே பார்வதி தேவி “மதங்கரே! யான் அறிவு வடிவான சித்ரூபி. ஆதலால் உமக்கு மகளாக தோன்றுதல் இயலாது. எம் வடிவான மந்திரிணியான சியாமளாதேவியை உமக்கு மகளாக வந்து பிறக்கச் செய்கிறேன்” என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்து உதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர் அந்தக் குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து, பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கி உடன் சிவபெருமான் எழுந்தருளி ரிஷபத்தில் திருக்கல்யாண சேவை நல்கி அருளினார்.

    அந்த ரிஷப சேவை, இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மதங்கர், அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், இத்தல இறைவி ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்து ஆட்கொண்டதால் இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    மதங்கீஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் எதிரில் இரண்டு நந்திகள் உள்ளன. அதில் மதங்க நந்தி ஈசனை நோக்கியவாறும், சுவேத நந்தி மறுபக்கம் திரும்பியும் இருப்பதைக் காணலாம். மாதங்கி - மதங்கீஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது ஈசனின் கட்டளைக் கிணங்கி இங்குள்ள நந்தி, திருக்கயிலாயம் சென்று அன்னை மாதங்கி சார்பாக சீர் அளித்ததாம்.

    பிரதோஷத்தின் போது இந்த இரண்டு நந்தி களுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், திருமணத் தடை உள்ளவர் களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்த நிலை நீங்கி, நுண்ணறிவைப் பெறுவார்கள் என்கிறார்கள். மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணைசெய்யும்.

    அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர். தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட கோபத்தால், சிவபெருமான் இங்கு உள்ள உபயகாவேரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடினார். அப்போது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு நேருமென்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்தனர்.

    மகா விஷ்ணு, ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவனையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார். மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் அமைந்த இடங்கள்தான், திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்துள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில், திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11 கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுபோல 11 சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அந்த காலத்தில் இங்கு நடந்து வந்துள்ளது.

    கால ஓட்டத்தில் இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி விழா, பல வருடங்கள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் தற்போது சிலவருடங்களாக தொடர்ந்து வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நன்னாளில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும், அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்வதைக் காண்பது, நம் பாவங்களை விலக்கி முக்தியைப் பெற வழி வகுக்கும் என்கிறார்கள்.

    அமைவிடம்

    சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் திருநாங்கூர் அமைந்துள்ளது.
    மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோவில் (அ) யோக நரசிம்மர் கோவில் தமிழகத்தின் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள நரசிங்கம் எனும் இடத்தில் அமைந்த தொன்மையான குடைவரைக் கோவில்.

    தலவரலாறு :

    ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி யானை மலையிலுள்ள சக்கர தீர்த்ததில் நீராடி யாகம் செய்தார். அப்போது நரசிம்ம பெருமாள் அவதாரத்தில் இருந்ததைப் போல கண்ணுற ஆசை கொண்டார். அதனால் பெருமாள் மீண்டும் உக்கிர நரசிம்மராக தோன்றினார். அவருடைய கோபத்தால் உலகம் வெப்பமயமானது. பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரின் உக்கிரத்தினை தணித்தனர்.

    வரலாறு :

    இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன் இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார்.

    சிறப்பு :

    நரசிங்கம் யோக நரசிம்மர் கோவில் கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர்.

    கோவிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோவிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோவிலாகும். இக்கோவிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.

    செல்லும் வழி :

    மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்து வசதி உள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

    அமைவிடம் :


    திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் - வள்ளிமலை - சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி - திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.

    தணிகை :

    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று கொள்ளுதலும் பொருந்தும்.

    திருத்தணிகை மலை :

    இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் "பிண்ணாக்கு மலை" என்றும் கூறப்படுகின்றன.

    ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. "சரவணப் பொய்கை" என வழங்கும் புகழ்மிக்க "குமார தீர்த்தம்" என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு "மடம் கிராமம்" என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.

    திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

    அருணகிரிநாதர் தனது பாடலில் "அழகுத் திருத்தணிமலை" என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

    தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு :


    திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

    தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று பாடியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

    தலச்சிறப்பு :

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.

    இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

    முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

    வள்ளலார் பெற்ற அருள் :

    19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆந்திர மாநிலத்தில் அகோபிலத்தில் நவநரசிம்மர், சிங்கப்பெருமாள்கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர், பழைய சீவரத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் என நரசிங்கப்பெருமாள் பல தலங்களில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களைக் காத்தருள்கிறார். ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை; அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்’ என்பது ஆன்றோர் வாக்கு.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ள சித்திரவாடி, மலைகள் நிறைந்த ஒரு சிறிய கிராமம். இங்குள்ள சிம்மகிரி மலையில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 250 படிகளைக் கடந்து சென்றால் சிங்கமுக வடிவில் அமைந்த நரசிம்மர் கோயில் நம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. இந்த தலத்தில் ஸ்ரீநரசிம்மர் லட்சுமிபிராட்டியைத் தன் மடிமீது அமர்த்தி அணைத்த கோலத்தில் தரிசனமளிக்கிறார். ஒரு கையில் சங்கும் மற்றொரு கையில் சக்கரமும் ஏந்தியிருக்கிறார்.  
     
    2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது இந்த மலைக்கோயில். மலையில் ஆஞ்சநேயரின் அம்சமான குரங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆனால், இவை பக்தர்களை எந்தவிதத்திலும் தொந்தரவும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குகைக்கு வெளியே ஒரு பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டி வெளிப்புறத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மருக்கு வலதுபுறத்தில் கருடாழ்வார், இடதுபுறத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரவாடிக்கு வரும் வயதான பக்தர்கள் ஸ்ரீலட்சுமிநரசிம்மரைத் தரிசிக்க வசதியாக மலை அடிவாரத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மருக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

    முதலில் கொடிமரமும் அதைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பக்கத்தில் ஸ்ரீஆனந்தவல்லித் தாயார் , மற்றொரு பக்கத்தில் ஸ்ரீபாவன நரசிம்மர் அருகில் ஸ்ரீசனீஸ்வர பகவான் என தனித்தனி சந்நதிகள் உள்ளன. சனீஸ்வர பகவான், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சனிசிங்கனாப்பூர் சனீஸ்வரரை நினைவு படுத்துகிறார். இந்த திருத்தலம் நவகிரக தோஷ பரிகாரஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த வெகு அபூர்வமாக நவநரசிம்ம நவகிரகப்பீடம் அமைந்துள்ளது.

    ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதியாக ஒன்பது நரசிம்மர்களுடன் நவகிரக சந்நதி திகழ்கிறது. இந்த நவகிரக பீடத்தை தரிசித்து பக்தர்கள் தம் நவகிரக தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். மலையடிவாரக் கோயிலுக்கு சற்று தொலைவில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும். ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் தானே விரும்பி ஆலயம் அமைத்துக் கொண்ட காரணத்தினால் இந்த இடம் ‘நயா திருப்பதி’ எனப்படுகிறது.

    இங்கு பத்மாவதித் தாயாரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் தனித்தனிச் சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். விநாயகர், தன்வந்திரி, ராகு-கேது, காளிங்க நர்த்தனக் கண்ணன் ஆகியோரையும் தரிசித்து மகிழலாம். ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயிலின் பின்புறத்தில் கிரிவலப்பாதையில் ஸ்ரீஏகாந்தஈஸ்வரர் என்ற பெயரில் இரட்டை லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற அமைப்பு வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இந்தக் கோயிலிலேயே தங்கியிருந்து வழிபாடுகளை நடத்தி வைக்கிறார்கள்.

    மதுராந்தகம் - செய்யூர் வழியில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன. மதுராந்தகத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. 
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு

    எட்டுக்கெட்டு என்று அழைக்கப்பெற்ற குடும்பத்தின் தலைவர், வயலுக்குத் தேவையான விதை நெல் வாங்குவதற்காகப் படகு ஒன்றில் ஆலப்புழை சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதைக் கண்டார். விதை நெல்லை வாங்கிக் கொண்டு உடனே ஊர் திரும்ப வேண்டும் என்பதால், அந்தச் சிறுமியைக் கண்டுகொள்ளாமல் சென்றார்.

    விதை நெல்லை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போதும், அதே இடத்தில் அந்தச் சிறுமி அழுது கொண்டிருந்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட அவர், சிறுமியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அந்தச் சிறுமியைத் தன் வீட்டிலேயேத் தங்க வைத்து வளர்த்துப் பின்னர் திருமணமும் செய்து கொடுத்தார்.

    சில தலைமுறைகளுக்குப் பின்பு, அவரது குடும்பத்தின் மரபுரிமையினருக்குக் கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டது. அதனால் அவர்கள் துன்பத்தில் தவித்தனர். ‘தங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இப்படி ஒரு நோய் வருவது ஏன்?’ என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர்கள், ஒரு ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அந்த ஜோதிடர், ‘முந்தையக் காலத்தில் அக்குடும்பத்தின் தலைவர் அழைத்து வந்த சிறுமி, இந்த உலகைக் காக்கும் தேவி’ என்றும், ‘அவளைப் பிற்காலத்தில் வந்தவர்கள் மறந்து போய்விட்டதால், அக்குடும்பத்தினருக்கு நோயும் துன்பமும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது’ என்றும் கூறினார்.

    உடனே அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் பகுதியில் ஒரு சிறிய கோவிலை உருவாக்கி, அதில் தேவியின் சிலையை நிறுவி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வந்த நோய் நீங்கியதுடன், அவர்கள் வாழ்வில் வளமும் செல்வமும் அதிகரிக்கத் தொடங்கின என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    ஒரு பகுதியில் அரபிக்கடல். மறுபகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து சோரனூர் செல்லும் கால்வாய். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு தீவு போன்று இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலில் பத்ரகாளி நின்ற நிலையில் காட்சி தருகிறார். மேக்கத்தில் எனப்படும் வனப்பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவே இத்தல தேவியை ‘காட்டில் மேக்கத்தில் தேவி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் பத்ரகாளி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் அம்மா’ என்றும் அழைக்கின்றனர்.

    கோவில் வளாகத்தில் நாகராஜா, கணபதி, சுடலை மாடன், யோகீஸ்வரர் மற்றும் யட்சி சன்னிதிகளும் உள்ளன. கடற்கரையில் இக்கோவில் அமைந்திருந்தாலும், கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் இரு கிணறுகளில் மிகவும் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த நீரைப் புனித நீராகப் பெற்று அருந்திச் செல்கின்றனர்.

    இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மணிக்கெட்டு, அருநாழி, புடவை சமர்ப்பித்தல், புஷ்பாஞ்சலி என்பது போன்ற சில சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் பெறுகின்றன. கார்த்திகை மாதம் ‘12 விளக்கு உற்சவம்’ என்று அழைக்கப்படும் 12 நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இவ்விழாக் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் பக்தர்கள் தங்கிப் பஜனைப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டிற்காகக் கோவிலுக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மணி கட்டி வழிபடும் ஆலமரம்

    ‘மணிக்கெட்டு’ வழிபாடு

    ஆலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் மணியைக் கட்டி வழிபட்டால், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இதனை ‘மணிக்கெட்டு’ என்றும், ‘மணிச்சூடல்’ என்றும் அழைக்கின்றனர். இந்த ‘மணிகெட்டு’ வழிபாடு நடைபெறுவதற்கு, இக்கோவிலில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாக அமைந்திருக்கிறது.

    ஒரு சமயம், தேவியின் சன்னிதிக்கு எதிரே இருக்கும் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளில் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதனைக் கண்டெடுத்த பக்தர் ஒருவர், அதைப் பக்தியுடன் எடுத்து, ஆலய வளாகத்தில் இருந்த ஆலமரக் கிளை ஒன்றில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார். அப்போது, அவருக்குள் மிகுந்த பக்தியும், இறையுணர்வும் தோன்றி இருக்கிறது. அதற்குப் பின்னர், அவருடைய கோரிக்கைகள் அனைத்தும் தேவியின் அருளால் நிறைவேறி இருக்கின்றன.

    இதற்கிடையே கொடிமரத்தில் இருந்த மணி கீழே விழுந்ததால் அதற்கான பரிகார பூஜை செய்ய தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் தனக்கு மணிகளைக் காணிக்கையாக்கி இந்த ஆலமரத்தில் கட்டினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தேவி தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து, கோவிலில் இருக்கும் ஆலமரத்தில் மணிகளைக் கட்டும் வழிபாடு, முதன்மை வழிபாடாகி விட்டது என்கின்றனர்.

    இதற்காக சிவப்பு நிறத்திலான கயிற்றில் கட்டப்பட்ட, 15 முதல் 20 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான மணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மணிகளை வாங்கி, ஆலமரத்தினை ஏழு முறை வலம் வந்து மரத்தின் விழுது அல்லது கிளையில் அந்த மணியைக் கட்டிவிட்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், நூறு பக்தர்களாவது மணியைக் கட்டி வழிபடுகிறார்கள். சிறப்பு விழாக்களின்போது இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    ஒளியாக காட்சி தந்த தேவி

    திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, ஒரநாடு ராஜா என்பவரைச் சந்தித்துவிட்டு, கடல் வழியாகக் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேற்பரப்பில் நின்றிருந்த அவருக்கு, கடற்பரப்பின் மேலே திடீரென்று ஒரு ஒளி தோன்றி, மீண்டும் கடலினுள் சென்று மறைவது தெரிந்தது. தைப்பூச நாளில் தனக்குக் காட்சியளித்த அந்த ஒளி என்னவென்று தெரியாமல், அதை வணங்கியபடி நாடு திரும்பினார்.

    அதன் பிறகு, ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய தேவி, கடலில் ஒளியாகத் தோன்றி மறைந்தது தானே என்றும், அங்கிருக்கும் கோவிலில் தான் பத்ரகாளியாக இருப்பதையும் தெரிவித்தாள். உடனே மன்னர், அந்தக் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டார். அங்கு தேவியானவள், மன்னனுக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகளின் வடிவில் காட்சியளித்தாள்.

    அதன் பின்னர், மன்னன் அந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டியதுடன், அவ்வப்போது அங்கு வந்து தேவியை வழிபட்டுச் சென்றார். மன்னர் இக் கோவில் வழிபாட்டுக்கு வரும் போது தங்குவதற்காகச் சிறிய அரண்மனை ஒன்றும் கட்டப்பட்டது. அந்த அரண்மனையை அங்குள்ளவர்கள் ‘கொட்டாரக்கடவு’ என்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், காயங்குளம் எனும் ஊரிலிருந்து 26 கிலோ மீட்டர், கருநாகப்பள்ளி எனும் ஊரிலிருந்து 17 கிலோ மீட்டர், சவரா எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஜாநகர் என்னும் இடத்திலிருந்து கோவிலுக்குச் செல்ல இலவசப் படகு வசதியும் செய்யப் பட்டிருக்கிறது.

    தேனி மு.சுப்பிரமணி

    தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

    இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

    பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள். இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.

    பூவரசங்குப்பம் :

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.
    தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கோவில் அலைபேசி எண்: 95851 78444.

    சிங்கிரிக்குடி :

    பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

    இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

    கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.
    இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்ம உற்சவ விழா 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம். வருகிற 17--ந் தேதி (வெள்ளிக்கிழமை) நரசிம்மர் ஜெயந்தி மற்றும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடை பெற உள்ளது.

    இதனையட்டி காலை 4 மணி அளவில் விஸ்வ ரூப தரிசனமும், 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று தேரில் அமர்த்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6 மணிக்கு பக்தி கோஷத்துடன் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதி வழியாக கொண்டு செல்கிறார்கள். பின்னர் தேர் நிலையை அடைகிறது. மாலை வரை சாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    6 மணிக்கு நரசிம்மருக்கு மீண்டும் சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். இரவு 9 மணிக்கு நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடை பெற உள்ளது. அதன் பின்னர் கொடிஇறக்கம் செய்யப்படுகிறது.

    கோவில் தொலைபேசி எண்: 04142-224328.

    பரிக்கல் :

    இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.

    யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

    சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

    இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருகிற 17-ந் தேதி நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையட்டி காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. 9 மணிக்கு சாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    10 மணிக்கு சாமிக்கு வைரகிரீடம் சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

    மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு வீதிஉலா நிறைவு பெறுகிறது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் அலைபேசி எண்: 96776 42002.

    சோளிங்கர் :

    சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.

    விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

    சிங்கப்பெருமாள் கோவில் :

    ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் :

    திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.

    கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

    அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    கோவில் அர்ச்சகர் ராஜா பட்டாச் சாரியார் கூறியதாவது:-

    நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையட்டி நாமக்கல் நரசிம்மர் கோவி லில் 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூலவர் தரிசனம் கிடையாது.
    உற்சவ மூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்யப்படும். மூலஸ்தான நரசிம்மமூர்த்திக்கு சுமார் 9 மணி அளவில் ஆரம் பித்து மாலை 5.30 மணி வரை நடக்கும் தைலகாப்பு நிகழ்ச்சியில் நல்லெண்ணையால் சுத்தம் செய்து, வேறு புதிய வஸ்திரங்கள் சாத்துப்படி செய்து எம்பெருமானிடத்தில் நித்யபடி உள்ள கவசங்களை தேவஸ்தான பொற்கொல்லர் மூலம் சுத்தம் செய்து, அதை மறுபடியும் சாமியிடம் சமர்ப்பிக்கப்படும். பிரதோஷ நேரமான மாலை 6 மணி அளவில் விஷேசமான தீபாராதனை நடைபெறும்.

    ஜெயந்தி தினத்தில் மாலை 6 மணிக்கு பிறகு சாமியை தரிசிப்பவர்களுக்கு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி, தோஷங்கள் நிவர்த்தியாகும். உத்யோகம், வாழ்வியலில் நம்முடைய நேர்மையான கோரிக்கைகளை சாமி அனு கிரகம் செய்து கொடுப்பார்.

    சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக உபாதைகள் தங்களிடம் குறையும். கிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் குறையும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும். எந்தவித பிரார்த்தனைகளும் உடனே அனுகிரகமாக கூடிய தினம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் தொடர்பு எண்:04286-233999

    சிந்தலவாடி :

    ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

    திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    அந்திலி :

    நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.
    எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

    திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலிதிருத்தலம்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், ஸ்கந்த புராணம் புகழும் கோவில், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.

    மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகத் விளங்குவது, நரசிம்மர் அவதாரம். மனித உடலும், சிங்க முகமும் கொண்ட தோற்றம். தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்றுவதற்காக, அவனது தந்தை இரணியனை வதம் செய்ய இறைவன் எடுத்த அவதாரம் இது. அந்த வகையில் காத்தருளும் தெய்வமாக, யாதகிரியில் இருந்து அருள்கிறார் பஞ்ச நரசிம்மர்.

    புராண வரலாறு :

    ரிஷியஸ்ருங்கா- சாந்தா தேவியின் புதல்வராக பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாக தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு அருள்காட்சி தந்தருளினார்.

    முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, “தாயார் லட்சுமியோடு காட்சியருள வேண்டும்” என வேண்டி நின்றார். தொடர்ந்து உடனடியாக லட்சுமியோடு, லட்சுமி நரசிம்மராக தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாக போற்றப் படுகிறது.

    நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில், தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. யாத ரிஷி முத்தியடைந்த பின்பு இப்பகுதிவாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை. இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார்.

    இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர். அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் இருப்பிடத்தைக் கூறினார். மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறப்படுகிறது.

    கி.பி.1148-ல் நாராயணசுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில், திரிபுவன மல்லுடு மன்னர், தான் போரில் வென்றோருக்காக போன்கிரில் கோட்டை கட்டியதாகவும், அங்கிருந்து யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டு தரிசித்துச் சென்றதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதேபோல, விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே, நரசிம்மர் அமர்ந்த குகைக்குள், பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர். பிரதானமாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக, லட்சுமியோடு அருள்காட்சி வழங்குகிறார். மேல் இரு கரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் காணப்படுகிறது.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

    அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

    குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில், தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது. இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) பதினோரு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள், மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

    தினந்தோறும் திருக்கல்யாணம் நடைபெற்று, நித்திய கல்யாண நரசிம்மராக விளங்கும் இந்த ஆலயம், காலை 4 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாக கவனித்து வருகிறது.

    அமைவிடம் :

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் - வாரங்கல் வழித் தடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது. போன்கிர் என்ற ரெயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தை சென்றடையலாம்.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்ப்பு எனும் ஊரில் பசி தாங்காத கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    தல வரலாறு :

    பன்னிரண்டு ஆண்டு வனவாச காலத்தின் போது வழிபடுவதற்காக, தனது உருவச் சிலை ஒன்றை பாண்டவர்களுக்கு, கிருஷ்ணர் கொடுத்திருந்தார். பாண்டவர்களும் தங்களது வனவாசக் காலம் முழுவதும் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.

    அவர்கள் வனவாசம் முடிந்து, நாட்டிற்குத் திரும்ப இருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள், அந்தக் கிருஷ்ணர் சிலையைத் தங்கள் வழிபாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி பாண்டவர்களிடம் கேட்டனர். பாண்டவர்களும், அச்சிலையை அவர்களிடம் கொடுத்தனர்.

    சிலையைப் பெற்றுக் கொண்ட சேர்தலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதனை ஓரிடத்தில் நிறுவி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், அவர்களால் அந்தச் சிலையைத் தொடர்ந்து வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் அந்தச் சிலையைக் கடலில் போட்டுவிட்டனர்.

    நீண்ட காலத்திற்குப் பின்பு முனிவர் ஒருவர், அந்தப் பகுதியின் வழியாகப் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகு, ஓரிடத்தில் நகராமல் நின்றது. திடீரென்று கடல் நீர் வற்றியதுடன், கிருஷ்ணர் சிலை ஒன்று தென்பட்டது. முனிவர் சிலையை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்பட்டார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், தானாகவே கிழக்குப் பகுதியில் உள்ள குன்னம், பள்ளிக்கரா வழியா பயணித்து, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை அடைந்து நின்றது.

    படகில் இருந்து இறங்கிய முனிவர், அங்கு சிலை எதுவும் நிறுவப்படாமல் இருந்த கோவில் ஒன்றைக் கண்டார். அங்கு அச்சிலையை நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கடற்கரைப் பகுதியில் உள்ள மீனாட்சி ஆற்றின் கரை அருகில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு கருவறையில் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்கிறார். இச்சிலையின் முன்புறத்தில் இருக்கும் வலது கையில் உணவு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் இரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி, கணபதி, சுப்பிரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னிதிகளும் உள்ளன.

    கம்சனைக் கொன்று விட்டு, மிகுந்த கோபத்துடனும், அதிகப் பசியுடனும் இருந்த கிருஷ்ணர் தோற்றமாக இச்சிலை கருதப்படுகிறது. எனவே ஆலயத்தில் அதிகாலை வேளையில், மூலவருக்கு அபிஷேகம் முடிந்தவுடன் முதலில் மூலவரின் தலையை உலர்த்தி அவருடைய கோபம் குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது பசியைத் தீர்க்கும் வகையில் அவருக்கு உசா பாயசம் எனும் உணவு படைக்கப்படுகிறது. அதன் பிறகே, உடல் பகுதி உலர்த்தப்படுகிறது.

    இந்தக் கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் பசியைத் தாங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாலை வேளையில் கோவில் திறக்கப்படும் போது, அர்ச்சகர் கோடரி ஒன்றை வைத்துக் கொண்டே கோவில் நடையைத் திறக்கிறார். கோவில் பூட்டைத் திறக்கத் தாமதம் ஏற்பட்டால், அவர் கையில் வைத்திருக்கும் கோடாரியைக் கொண்டு கதவை உடனடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பசியுடன் இருக்கும் கிருஷ்ணருக்குக் கால தாமதமின்றி, உணவு படைத்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்பதற்காக, இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

    இந்து சமயக் கோவில்கள் அனைத்தும் சூரிய கிரகண வேளைகளில் மூடப்பட்டு விடும். அதே போன்று, இக்கோவிலும் ஒரு முறை சூரிய கிரகணத்தின் போது மூடப்பட்டது. கிரகணக் காலம் முடிந்த பிறகுக் கதவைத் திறந்திருக்கின்றனர். அப்போது மூலவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்து போயிருந்தது. அதனைக் கண்ட அர்ச்சகரும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிசங்கரர், இங்கிருக்கும் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்றும், இனி கிரகண வேளைகளில் கோவிலை அடைக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார். அன்றில் இருந்து கிரகணத்தின் போது இத்தலம் மூடப்படுவது இல்லை.

    இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிடும் பக்தர்களுக்கு, அவர்களது வாழ்நாளில் பசிப் பிணி ஏற்படாது என்கிறார்கள். இதற்காகவே, இக்கோவிலில் இரவு வேளையில் கோவிலின் நடைசாத்துவதற்கு முன்பாகப் அர்ச்சகர், ‘இங்கு யாராவது பசியோடு இருக்கிறீர்களா?’ எனக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    இந்த ஆலயம் தினமும் அதிகாலை 2 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். கேரளாவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும் ஒரே ஆலயம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கோட்டயம் நகரில் இருந்து வடமேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவார்ப்பு என்னும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. கோட்டயத்தில் இருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.
    திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ளது மேலஓமநல்லூா் பிரணவேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு எந்த அளவுக்கு சிறப்பு மிக்கதோ, அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை. சித்தாறும், கடனா நதியும், பச்சையாறும் பெருமை பல பெற்றவை. இவற்றுள் பச்சையாற்றை ‘சியமளா நதி’ என்று போற்றி புகழ்கிறார்கள். கங்கையே, சியமளா நதியாக ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    திருநெல்வேலி தல புராணத்தில் மந்திரேசுரச் சருக்கம் என்னும் பகுதியில் பச்சையாற்று பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த நதி தோன்றும் முன்பு, இப்பகுதியில் இருந்த கந்தர்ப்ப நகரத்தில் பெரும் தவசியான ரேணு என்ற முனிவர், சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். ‘கங்கை தேவியே, தனக்கு மகளாக பிறக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு, அவர் சிவனை நோக்கி தவம் இருந்தார்.

    ஒரு முறை கயிலை மலையில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி வந்த கங்கை, அவரது ஆதரவு வேண்டி நின்றாள். பின்னர், தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்தாள். சிவபெருமானும், கங்கை மீது அன்பு கொண்டு அவளது வேண்டுகோளுக்கு தலையசைத்தார்.

    ஆனால் இதைக் கண்டு பார்வதி தேவி ஆவேசம் அடைந்தாள். தன் கணவனை, கங்கை அபகரித்து செல்வதா? என்று நினைத்தவள், “நீ பூலோகத்தில் மானிடராய் பிறப்பாய்” என்று கங்கைக்கு சாபம் கொடுத்தாள்.

    தெய்வ காரியங்கள் ஒவ்வொன்றும், காரண காரியத்துடனேயே நடைபெறுகின்றன. அது போலவே கங்கையின் மானிட பிறப்பும் ஒரு காரியமாகவே நடைபெற்றது.

    அதன்படி ரேணு முனிவர் தன்னிடம் வேண்டிக்கொண்ட வேண்டுதலை நிறைவேற்ற, கங்கையை பயன்படுத்திக் கொண்டார், சிவபெருமான். ஒரு நாள் ரேணு முனிவர் தனது தர்மபத்தினியுடன் துயிலும் போது, அவர்கள் இருவரின் நடுவே குழந்தையாக வந்து விழுந்தாள், கங்கை தேவி. அழகு மிளிரும் அந்தப் பெண் குழந்தையைக் கண்டு, ரேணு முனிவர் தம்பதியர் மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்களுக்கு மகளாக கிடைத்திருப்பது, சந்தேகமே இல்லாமல் கங்கை தாய்தான் என்று நினைத்து மகிழ்ந்த அந்த தம்பதியர், அந்தக் குழந்தையை அன்பொழுக வளர்த்து வந்தனர்.

    குழந்தைக்கு ‘ஆதிரை’ என்று பெயரிட்டனர். அந்தப் பெண் குழந்தை, பிறை நிலவு போல, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். அவளுக்கு எட்டு வயதை எட்டியபோது, ஒரு சம்பவம் நடந்தது.

    களந்தை (தற்போதைய களக்காடு) பகுதியை தலைநகராகக் கொண்டு, ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தான். அவர் ஒரு முறை ரேணு முனிவரை சந்தித்தான். அப்போது அவரது கையில் ஒரு அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டான். புத்திர பாக்கியம் இல்லாத அந்த அரசனுக்கு, ஆதிரையை பார்த்ததும் மிகவும் பிடித்துப் போயிற்று. அவன் முனிவரிடம், “எனக்கு தங்கள் மகளை, தத்து தந்து என் வாழ்வை முழுமை அடையச் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.

    குழந்தை இல்லாத தவிப்பை ஏற்கனவே உணர்ந்திருந்த ரேணு முனிவர், அரசனின் கவலையை புரிந்து கொண்டார். அவனுக்கு தன்னுடைய மகளை தத்து கொடுக்க சம்மதித்தார். அரசனும், அரசியும் ஆதிரையை முறையாக தத்து பெற்று, அரச மாளிகைக்கு கொண்டு சென்று நல்ல முறையில் வளர்த்து வந்தனர். ஆதிரை பருவ மங்கை ஆனாள்.

    அவளது பிறப்பு சிவனுக்காகவே நிகழ்ந்தது அல்லவா? அதனால் அவள் அனுதினமும் சிவனையே வேண்டி நின்றாள். ஆதிரைக்கு அரசின் மீதோ, பொன், பொருள் மீதோ கொஞ்சமும் பற்று இல்லை. அவள் எப்போதும் தன் சிந்தனையால், சிவபெருமானையே பற்றிக் கொண்டிருந்தாள். தினமும் நறுமண மலர் கொண்டு சிவபெருமானை பூஜித்து வந்தாள். ஆயிரம் பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து, ஈசனுக்கு அணிவித்து வணங்கினாள்.

    அவளது வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு காட்சி தர முடிவு செய்தார். ஒரு நன்னாளில் தேவர்கள் படைசூழ, அரம்பையர்கள் முன் ஆடி வர, ஆயிரம் கோடி சூரியர்கள் பிரகாசிப்பது போல், வெள்ளி ரிஷபத்தின் மேல் சிவபெருமான் தோன்றி, ஆதிரைக்கு காட்சி கொடுத்தார்.

    சிவபெருமானைக் கண்டதும், ஆதிரையின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. ஈசனைத் துதித்தபடி ஆடிப்பாடி ஆனந்தப் பரவசமானாள். அதைக் கண்ட ஈசன், “ஆதிரையே உனக்கு என்மேல் இருக்கும் அன்பால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன்” என்று கூறி அவளை மந்திரேசுரம் அழைத்து வந்து, அங்கே இருவரும் அன்பாய் வீற்றிருந்தனர்.

    இந்த நிலையில் மகளைக் காணாமல், பல இடங்களிலும் தேடினான், அரசன். அப்போது சிவபெருமான், அவளைக் கூட்டிச் சென்றது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த மன்னன், “சிவபெருமான் எனது மகளை முறைப்படி மணம் முடித்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும். எப்படி அபகரித்து செல்லலாம். என் மகளை என்னிடம் காட்டாவிட்டால், என் உயிரை விட்டு விடுவேன்” என்று, அதற்கான செயலில் ஈடுபட முயன்றான்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “மன்னா, பொருநை நதிக்கரை அருகே மந்திரேசுரத்தில் சிவன் ஆதிரையோடு வீற்றிருக்கிறார். நீ அங்கு சென்று யாகம் ஒன்று செய். உன் மகள் உனக்கு தெரிவாள்” என்றது அந்தக் குரல்.

    மன்னனும் அந்த இடத்திற்குச் சென்று, அங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். அப்போது தூய ஓமகுண்டத்தில் இருந்து ஓங்கி ஒலித்த பிரணவ மந்திரத்தோடு விரிசடை பரமன், ஆதிரையுடன் தோன்றினார்.

    அரசன், அந்தக் காட்சியைக் கண்டு அசையாது நின்றான். பின்னர் இறைவனை துதித்து பல மந்திரங்களைச் சொல்லி, “இறைவா, ஆதிரையை என் முன்பு கரம் பிடியுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். இறைவனும் அப்படியே வரம் தந்தார்.

    அதன்படி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வானவர்களின் தச்சனான மயன் அங்கு தோன்றினான். அவர் அழகிய பிரமாண்ட ஆலயம் ஒன்றை அமைத்தான். திருமால், பிரம்மன், தேவர்கள் தங்குவதற்கான இடங்களையும் வடிவமைத்தான். குறிப்பிட்ட நாளில் திருமணம் நடந்தது. ஆதிரையின் கரத்தை, சிவபெருமானின் கையில் அரசனே பிடித்துக் கொடுத்தான்.

    எல்லாம் முடிந்து அனைவரும் விண்ணுலகம் செல்ல தயாரான நிலையிலும், அரசனால் தன்னுடைய மகளைப் பிரிய மனம் இல்லை. அவன் தேம்பி நின்றான். அதைக் கண்ட சிவபெருமான், ஆதிரையை பாதியாக பிரித்து ஒரு பாகத்தை தன் தலையில் வைத்துக் கொண்டார். மற்றொரு பாகத்தை அரசன் ஆட்சிக்குட்பட்ட வயிரமலையில் விட்டார். அங்கிருந்து புறப்பட்ட கங்கை, தாமிரபரணி நதியில் கலந்து, மந்திரேசுர ஆலயத்தின் அருகே வந்து சேர்ந்தது.

    ஆதிரை நதியாய் ஓடிய காரணத்தால் அந்த நதிக்கு ‘ஆத்திரா நதி’ என்று பெயர் வந்தது. இந்த நதியைத்தான் ‘பச்சை ஆறு’ என்றும் அழைக்கிறார்கள்.

    சிவனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்க தேவதச்சனால் கட்டப்பட்ட ஆலயம், திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ள மேலஓமநல்லூா் என்ற இடத்தில் இருக்கிறது. இக்கோவிலில் தற்போதும் சித்தர்கள் வந்து சிவனை பூஜிப்பதாக நம்பப்படுகிறது.

    லட்சுமணன், இந்திரஜித்தை கொன்ற பாவத்தைப் போக்க இங்கு கருநாகமாக இருந்து சிவனை வழிபட்டு வருவதாக ஐதீகம். இங்குள்ள பனங்காட்டு கீற்றுகள் இசைக்கும் இசை பிரணவ மந்திரத்தை நினைவு படுத்துவதுபோல் இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் அகத்திய பெருமான், உரோமச மகரிஷி போன்றவர்கள் தங்கி யாகம் செய்து சிவனருள் பெற்றுள்ளனர். இத்தல இறைவனின் பெயர் ‘பிரணவேஸ்வரர்.’ அம்பாளின் திருநாமம் ‘செண்பகவல்லி.’ தற்போது உள்ள ஆலயத்தில் சிவலிங்கம், மேல் பகுதி சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த நிலையிலேயே இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    இந்த ஆலயத்தை 16 முறை வலம் வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும். மேலும் இந்த ஆலயம் எம பயம் நீக்கும் ஆலயமாகவும் திகழ்கிறது.

    மேலஓமநல்லூர் செல்ல திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆலயம் அமைந்த பகுதிக்குச் செல்ல ஆட்டோ வசதி இருக்கிறது.
    ×