search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Temples"

    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. ஆலய முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவே கொடி மரமும், பஞ்சமுக பலிபீடமும், சிங்க வாகனமும் இருக்கின்றன. இங்கு இருக்கும் பலிபீடம் ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    அடுத்து சிம்ம வாகனம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் முருகப்பெருமான், கிழக்கில் பைரவர், வட கிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். வலதுபுறம் விராட் விஸ்வபிரம்மன் வீற்றிருக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் துர்க்கை அம்மன் 18 கரங் களுடன் அருள்புரியும் அழகு நம்மை சிலிர்க்க வைக்கக்கூடியது. இந்த துர்க்கை அஷ்ட தசபுஜ துர்க்கை என அழைக்கப்படுகிறாள். கன்னிமூலை கணபதி, ஆஞ்ச நேயர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருமேனிகளும் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார சக்திகள் அருள்பாலிக்க, அடுத்து கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்னைக்கு, நான்கு கரங்கள். கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை சுமந்து காட்சி தரும் அன்னையின் கழுத்தில் திருமாங்கல்யம் இருப்பது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது எங்கும் காண இயலாத அற்புத அமைப்பு என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னையிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ள பெண்களிடம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தலபுராணம் அன்னை இங்கு வந்த கதையை சொல்கிறது.

    நிராலம்ப மகரிஷி பாரத தேசத்தில் பல இடங்களில் தவம் செய்த பின், கடைசியாக இவ்வூருக்கு வந்தார். இங்கு காவிரி நதியின் தென் கரையில் பூமியில் பாதம் படாதபடியும், அந்தரத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமலும் நின்று, அந்தர்யோக முறையில் அன்னையை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். அவரது தவத்தைக் கண்டு மனம் இளகிய பராசக்தியானவள், ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியாக அவருக்கு அந்தரத்தில் காட்சி தந்தாள்.

    அந்த காட்சியை கண்டுகளித்த நிராலம்ப மகரிஷியிடம் என்ன வரம் வேண்டுமென அன்னை வினவினாள்.

    “ஜெகன் மாதாவாகிய தாங்கள் இந்தக் கலியுகத்தில் மனித குலம், சத்தியம், தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலான நன்னெறிகளில் இருந்து விலகி பாவச் செயல்களைச் செய்து, பஞ்ச மாபாதகங்களால் பீடிக்கப்பட்டு, நிம்மதியும், சுகமுமின்றி வேதனையோடு நரக வாழ்க்கை வாழும் போது அவர்களை கருணையோடு பார்த்து தாயுள்ளத்தோடு அவர்களது பாவங்களை எல்லாம் போக்க வேண்டும். அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்” என்று நிராலம்ப மகரிஷி வேண்ட, அன்னை காளிகா பரமேஸ்வரியும் “அப்படியே அருள்கிறேன்” என அனுக்கிரகம் செய்தாள்.

    நிராலம்ப மகரிஷிக்கு அம்பாள் காட்சி கொடுத்த இடமே இந்த ஆலயம் உள்ள இடம். உலகில் எங்கும் காண இயலாத பலிபீடம் இங்குள்ள பஞ்சமுக பலிபீடமாகும். ஐந்து முகங்களைக் கொண்ட இந்த பலிபீடம், நிராலம்ப மகரிஷியால் அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் இவ்வையகத்து மக்கள் அன்னையின் கருணையால் வளமாக வாழ வேண்டி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    இங்கு அன்னையின் சன்னிதியின் முன் மாத அமாவாசை தோறும் சூலினி பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் பில்லி, சூனியம் விலகும் என்பதும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.

    சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இரவு நேரங்களில், நடுநிசியில் சன்னமான கொலுசு சப்தத்தை இந்த பகுதி மக்கள் கேட்டதுண்டு. கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அன்னை இரவில் உலா வருவதால் ஏற்படும் சப்தம் இது என்கின்றனர் கேட்டவர்கள்.

    இங்குள்ள அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆலயம் தேசிய ஒருமைபாட்டின் சின்னமாய் விளங்குகிறது என்று சொல்வது மிகையாகாது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    தன்னை நாடுவோரின் துயர் நீக்கி அவர்களை வளமுடனும் மகிழ்வுடனும் வாழவைப்பதில் அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு நிகரில்லை என்பது உண்மையே.

    அமைவிடம் :

    திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது இந்த ஆலயம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, நகரப்பேருந்தில் மரக்கடை மற்றும் காந்தி மார்க்கெட் வரை பயணித்து, அதன்பிறகு நடந்தே சென்று விடலாம்.

    ஜெயவண்ணன்
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது, அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.

    ஆங்கிலேயர் நம் நாட்டை திருச்சி ஆண்ட போது படைவீரர்கள் தங்கும் பகுதியாக இருந்த இடம்தான் கண்டோண்மெண்ட் பகுதி. அவர்களது முழுமையான ஆளுகையின் கீழ் இருந்த இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களது விருப்ப தெய்வமாக காளிகாபரமேஸ்வரியை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உருமாறியது.

    வடக்கு திசைநோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பழமையானது.

    முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால் அழகிய நுழைவு வாசல் உள்ளது. இதைக் கடந்ததும் நீண்ட மண்டபம். அதையடுத்து மகாமண்டபம் உள்ளது.

    எதிரே அர்த்தமண்டப நுழைவு வாயிலின் இடதுபுறம் ஜெயன், விஷ்ணு திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் விஜயன், ஆஞ்சநேயர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.

    மகா மண்டபத்தின் வலதுபுறம் காளிகா பரமேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க அன்னையின் சன்னிதியின் முன் சூலம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. பிரகாரத்தின் தென் திசையில் நெடிதுயர்ந்த துளசிமாடம் உள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் சொர்ண கணபதி, நாகராஜா, தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். சுந்தரேஸ்வர், மீனாட்சி இருவர் முன்பும் நந்தியம் பலிபீடமும் இருக்க இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்து சண்டிகேசுவரர் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். அடுத்து ஐய்யப்பன் மண்டபம் உள்ளது. அருள்மிகு முருகன் வள்ளி தெய்வானையுடன் தனிக் கோவில் கொண்டு அருள்கிறார்.

    இக்கோவிலின் தேவக்கோட்டத்தின் வடபுறம் காலைபரவர் தென்திசை நோக்கி இருக்கிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மயிலும் பலிபீடமும் உள்ளன. அடுத்து ராஜ கணபதியின் சன்னிதி உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தின் வலது புறம் விஷ்ணு துர்க்கை தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. துர்க்கை எட்டு கைகளுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறவும் விரைவாக திருமணம் நடக்க பிரார்த்தனை செய்பவர்களும் வெள்ளிக் கிழமை அன்று ராகு கால அர்ச்சனை செய்வதுடன் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு மாத பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்னைக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் கூட்டம் கணிசமாகக் காணப்படும். சித்திரை முதல் நாள் காளிகா பரமேஸ்வரி புறப்பாடும் நடைபெறுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை இங்கு குத்து விளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மார்கழி திருநாட்கள், கார்த்திகை, சிவராத்திரி, பொங்கல், ஆண்டு பிறப்பு போன்ற நாட்களில் இங்கு இறைவன் இறைவிக்கு சிறப்பான பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.

    பக்தர்களிடம் பணம் வசூலிக்க இந்த ஆலயத்தில் மகா உண்டியல்கள் கிடையாது. உபயமாக ஆலயத்திற்கு பொருட்கள் வாங்கித் தருபவர்களின் பெயர்களை அந்தப் பொருட்களின் மீதோ வேறு எங்கேனுமோ காண இயலாது.

    இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர் என இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குணமாக இங்குள்ள கிருஷ்ண பரமாத்மாவை வேண்டிக் கொண்டு ரோகிணி நட்சத்திரத்தில் இறைவனுக்கு பால், தயிர் மற்றும் பழச்சார் அபிஷேகம் செய்தால், அந்த குழந்தைகள் ஓரளவோ அல்லது முற்றிலுமோ குணமடைகின்றனர் என்பது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    தங்களது கோரிக்கை நிறைவேறத் தொடங்கியதும் வேண்டியவர்கள் கிருஷ்ணனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வது இங்கு சர்வ சாதாரணமாகக் காணும் காட்சியாகும்.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்தி ருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு உரியடி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அன்னதானமும் நடைபெறும். பின்னர் கிருஷ்ணர் உலா வருவது வழக்கம்.

    வெண்ணெய் திருடனான பால கிருஷ்ணன் சிறார்களின் குறைகளை இந்த ஆலயத்தில் நிவர்த்தி செய்து வைப்பது கண்கூடான நிஜம்.

    அமைவிடம் :

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது இந்த ஆலயம்.
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில் உள்ளது வாரணபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன.

    இதைக் கண்ட சிலந்தி ஒன்று பதறியது. ‘சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?’ என்று எண்ணிய சிலந்தி, அதை தடுக்க முயற்சி செய்தது. சிவபெருமானின் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் வலை பின்னி, காய்ந்த இலைகள் அவர் மேல் விழாமல் தடுத்தது.

    அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்ட அந்த யானை அந்த வலையை அறுத்து எறிந்தது. மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க, யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்து எறிந்தது.

    கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் வேகமாக அடிக்க சிலந்தி இறந்தது; யானையும் இறந்தது. இருவரையும் ஆட்கொண்டார் இறைவன்.

    இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ மன்னராகிய சுபதேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. அந்த மகனே கோச்செங்கட் சோழன். இந்த மன்னன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக் கோவில்களை கட்ட முடிவு செய்தான். யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக் கோவில்களை அமைத்தான். இத்திருப்பணி ‘யானை ஏறாதத் திருப்பணி’ என்று பெயர் பெற்றது. இந்தச் சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டினான். தான் முற்பிறவியில் வழிபட்ட திருவானைக் கோவில் ஆலயத்தை முதலில் கட்டினான்.

    இந்த மன்னன் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று தான் பனமங்கலத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் வாரணபுரீஸ்வரர். இறைவி வடிவாம்பிகை. அன்னையின் இன்னொரு பெயர் வடிவுடையம்மன். கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இறைவனை தரிசிக்க, 12 படிகள் ஏறி வலது புறம் திரும்ப வேண்டும். அங்கு மகா மண்டபம் அடுத்த கருவறையில் கிழக்கு நோக்கி, வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    சுயம்புவான இந்த மூலவர் திருமேனி 3½ அடி அளவு ஆவுடையாரின் மேல் பகுதியில் பக்தர்கள் வழிபடும் வகையிலும், பூமிக்கு அடியில் 13 அடியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 19½ அடி உயர இறைவனின் இந்த திருமேனி, உளிபடாதது ஆகும். ருத்திராட்சத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமாய் இருப்பது போல் இறைவனின் முழு மேனி அமைப்பு காணப்படுகிறது.

    சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பு இறைவனுக்கு இங்கு மிகவும் விசேஷமான நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இறைவனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அரிசி மாவு, திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் பழங்கள் என 21 வகை அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கடன் நிவர்த்தி ஆகும் என்பதும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. தீபாரதனை மட்டுமே. இங்கு சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரிகளில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது.



    இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.

    இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள்.

    ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.

    பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.

    ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    பித்ரு தோஷ பூஜை :

    இந்த ஆலயத்தில் அனைத்து திங்கட் கிழமைகளிலும் இறைவனுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி ஆராதனை நடைபெறுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், நீராடி ஈர உடையுடன் இந்த பூஜையில் கொள்வதுடன், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஈர உடையை தானம் செய்து விட்டு, புது உடை அணிந்து கொள்ள அவர்கள் தோஷம் விலகும் என்பது ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தட்டில் பூ, பழம், தேங்காய், திரிநூல், எண்ணெய், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். பித்ரு தோஷ பூஜை செய்தவர்கள், வீடு திரும்பியதும், வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

    அமைவிடம் :

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது.
    துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் பெயர் ‘சுயம்பு கோலோச்சும் முருகன் கோவில்’ என்பதாகும். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்புடன் கூடிய நுழைவுவாசல். அடுத்துள்ள மகா மண்டபத்தை அடுத்து விலாசமான அர்த்த மண்டபம் உள்ளது.

    அதை அடுத்த கருவறையில், இறைவன் கோலோச்சும் முருகன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனுக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் வேலையும் கொடியையும் தாங்கி நிற்கும் முருகனின் கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளை காட்டுகின்றன. முருகன் தனது வலது புறம் சக்தி சூரியனுடனும் இடது புறம் பக்தி சண்டிகேஸ்வரருடனும் கட்சி தருகிறார். தவிர முருகனுக்கு முன் அவரது தந்தை சிவபெருமானும், தாய் பார்வதியும், சகோதரர் வலம்புரி விநாயகரும் அமர்ந்துள்ளனர்.

    தனது குடும்ப சகிதமாய் பக்தர்களுக்கு முருகப் பெருமான் கோலோச்சும் அமைப்பு மிகவும் சிறப்பானது என்பதுடன் எங்கும் காண இயலாது என்கின்றனர் பக்தர்கள். முருகப்பெருமானின் கோஷ்டத்தில் அறுபடை வீடுகளும் மிக அழகாக வண்ணத்தில், சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தவிர கருவறையின் முன் மயில், குதிரை, நந்தி, மூஞ்சுறு, பலி பீடம் ஆகியவையும் காணப்படுகின்றன. ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கில் விநாயகர், வலம்புரி விநாயகர், ராகு-கேதுவும், மேற்கில் உற்சவ மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் வலது புறம் கொல்லிமலை அருள்வாக்கு சித்தர் ஜானகிராம் சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இந்த ஆலயத்தை கட்டியவரும் இவர் தான்.

    இந்த ஆலயத்திற்கு மேலே ஒரு தளம் உள்ளது. இறைவனின் கருவறைக்கு மேலே கோபுர கலசம் உள்ளது. இது முற்றிலும் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. கருவறையில் மூன்று ஷவர் பைப்புகள் உள்ளன. முருகனுக்கும், சண்டிகேஸ்வரருக்கும், சூரியனுக்கும் காலையில் அபிஷேகம் செய்யும் முன், இந்த ஷவரை திறந்து விடுவார்கள். தலை மேல் உள்ள ஷவரில் இருந்து தண்ணீர் பூப் பூவாய் பொழிய, முருகன் ஷவரில் நீராடுவது போன்ற அந்த நிகழ்வு, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அற்புத அமைப்பு வேறு எங்கும் உள்ளதா? என்பது சந்தேகமே!

    கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினத்தன்று, ஆலயம் முன்பு பிரமாண்டமான முறையில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழா, பக்தர்கள் முன்னிலையில் ஒளிமயமாக நடைபெறும். கந்தசஷ்டியின் போது ஆலயத்தின் முன், முருகன் வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும் போது கருவறை முருகன் முகத்தில் வெள்ளி பணித் துளிகளாய் வியர்வை துளிகள் காணப்படுவது நம்மை சிலிர்க்க வைக்கும் அதிசயமாகும்.

    இந்த ஆலயம் செவி (காது) வடிவத்தில் இருப்பதால், பக்தர்களின் அனைத்து விதமான பிரார்த்தனையையும், தன்னுடைய காதில் ஏற்று முருகப்பெருமான் அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    தினசரி மூன்று கால ஆராதனை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், நாவல் மற்றும் வன்னி மரமாகும். இந்த ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இட்லி, உப்புமா, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என தினசரி விதம் விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    கால பைரவர், குடும்ப சகிதமாக முருகப்பெருமான்

    ஆலயத்தின் வடக்குப் பகுதியில், பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. இந்த கால பைரவருக்கு ‘கலியுக குபேர காலச் சக்கர பைரவர்’ என்று பெயர். இந்த பைரவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக மலை குகை உள்ளே இருந்தார். இவரது அடி பீடத்தில் 6,646 ஸ்ரீசக்கரங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    கோவிலின் மேல் தளத்தில் குமார குரு பகவானின் சன்னிதி உள்ளது. இங்கு முருகப்பெருமானே குமார குருவாக அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சியின் போது ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் 5008 பால்குடம் சுமந்தும், 1000 காவடி சுமந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருவது பரவசத்தை கொடுக்கும் நிகழ்வாகும். அன்றைய தினம் ஆலயத்தில் மட்டுமின்றி, நகரில் உள்ள பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்படும்.

    இங்கு குருஷேத்திர சனி பகவானாக காட்சி தரும், சனீஸ்வரர், ஆலயத்தின் மேல் தளத்தில் தனிச் சன்னிதியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வேறு எந்த ஆலயத்திலும் சனி பகவான் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, ஜென்ம சனி, கண்டகச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சனீஸ்வரரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேல் தளத்தில் குபேர மூலையில் குபேர காளி, வடக்கு நோக்கி அருள்புரிகிறார். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், காலை வேளையில் இந்த குபேர காளிக்கு விசேஷ அபிஷேக ஆராதைனகள் நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான தைப்பூசம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    நினைத்ததை நடத்தி தந்து அருள்புரியும், கோலோச்சும் முருகப்பெருமானை, நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது கோலோச்சும் முருகன் ஆலயம்.

    தத்து கொடுக்கும் நிகழ்வு


    இந்த ஆலயத்தில் புதுமையான சம்பிரதாயம் ஒன்று உள்ளது, ‘தத்து கொடுக்கும் நிகழ்வு. தீராத வியாதி களால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னிதிக்கு வந்து, இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, மாலை சாத்தி, புதிய வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். பின்னர் தங்களின் நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தன்னைத் தானே முருகப்பெருமானுக்கு தத்துக் கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு அந்த நபர் தன்னுடைய பழைய உடைகளை தானம் அளித்து விட்டு, புதிய உடை அணிந்து 10 பேருக்கு அன்னதானம் அளிக்கிறார்.

    அன்னதான நிகழ்வு முடிந்ததும், மூன்று பெயர்களை எழுதி, குலுக்கிப் போட்டு அதில் ஒன்றை எடுத்து, தன்னுடைய பெயராக சூட்டிக்கொண்டு இல்லம் திரும்புவார். அப்படி அந்த தத்துக் கொடுக்கும் நிகழ்வைச் செய்யும் நபருக்கு, அவரது நோய்களும், வந்த இன்னல்களும் அகல்வது கண்கூடான உண்மை என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள்.
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான வடபத்ர காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சதாசிவமூர்த்தி, மந்திரங்களால் உருவான அருவுருவ வடிவம். இது சிவனின் ஞானமயமான வடிவினைக் குறிக்கும். எல்லாவற்றிலும் மேலானதாகவும், சிறந்ததாகவும், உயரிய தத்துவங்களைக் கொண்டதாகவும், சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வடிவினை உடையதாகவும் சதாசிவ வடிவம் விளங்குகிறது.

    சதாசிவன் - ஒருமுகம், இரண்டு முகங்கள், ஐந்து முகங்கள், இருபத்து ஐந்து முகங்கள் எனப் பல வடிவங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.

    சதாசிவன் வடிவம் சிவனுடைய மற்றைய வடிவங்கள் போன்று, பொதுவாகக் கல், செம்பு போன்றவற்றால் அமைக்கப்படுவதில்லை. அத்துடன் வழிபாட்டிலும் இவ்வடிவம் கோவில்களில் இடம் பெறுவதும் மிக அரிதே. கோபுரங்களில் சுதை வடிவில் சதாசிவமூர்த்தி அமைத்துள்ள மையை தமிழ்நாட்டுக் கோவில்களில் காணலாம். சதாசிவ வடிவம் தியான வடிவமாகும்.

    அத்தகைய சிறப்பு பெற்ற தலங்களுள் ஒன்றாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வடபத்ர காளியம்மன் ஆலயம் விளங்குகிறது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலய கருவறையில் அன்னை வடபத்ர காளியம்மன் எட்டு கரங்களுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது கரங்களில் சூலம், சக்கரம், நாகம், கோடாலி, சங்கு, சூலம், அம்பு, கிண்ணம் இவைகளைத் தாங்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள் பாலிக்கிறாள்.

    தென் திசை நோக்கி பயணம் வந்த அகத்திய முனிவர், இந்த ஆலயம் வந்து அன்னையை தரிசித்து ஆன்ம சக்தி ஆத்மதானம் பெற்று சித்த மருத்துவம் மூலம் அம்மை நோய் போன்ற நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

    ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் நின்ற கோலத்தில் அகத்தியர் சிலையும், திருமூலர் சிலையும் தனி மண்டபத்தில் காட்சி தருகின்றன. சைவ சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் கற்சிலை விக்கிரகங்களும், பஞ்சலோக விக்கிரகங்களும் நிறையவே உள்ளன. ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் இந்த மகா சதாசிவனாரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. மகா சதாசிவம் இங்கு தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

    சதாசிவனின் சிறப்பு அம்சங்கள்

    சதாசிவன் நான்கு திசைகளுக்கும் நான்கு முகங்களும், உச்சியில் ஒரு முகமுமாக ஐந்து முகங்களையும் ஒவ்வொரு முகத்திற்கும் மும்மூன்று கண்களையும் உடையவர். உச்சியிலுள்ள ஈசானமுகம் ஈசான திசையை நோக்கியதாகவும், பளிங்கு நிறம் கொண்டதாகவும் இருக்கும். கிழக்கிலுள்ள தத்புருஷ முகம் கிழக்கு திசையை நோக்கி கோங்கம் பூ நிறத்தினைக் கொண்டதாகவும், தெற்கிலுள்ள அகோரமுகம் வலது தோள் மேல் தெற்கு நோக்கி தாடியும், மிகுந்த கருப்பும், பயங்கரத் தோற்றத்தினை உடையதாகவும், வடக்கிலுள்ள வாமதேவ முகம் இடது தோள் மேல் வடக்கு நோக்கியதாக பெண் களின் முகம் போன்று சிவப்பு நிறமுடையதாகவும், மேற்கிலுள்ள சத்தியோசாத முகம் மேற்கு நோக்கியதாகப் பால் நிறமுடையதாகவும் இருக்கும்.

    வலது கரங்களில் சூலம், மழு, வாள், வஜ்ஜிரம், அபயமுத்திரை ஆகியவைகளை தாங்கியும், இடது கரங்களில் பாம்பு, பாசம், அங்குசம், மணி, வரதமுத்திரை முதலியவைகளை கொண்டவராக சதாசிவமூர்த்தி காட்சி தருகிறார்.

    சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களும் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்று பெயர்களைப் பெற்றிருந்தாலும், உண்மையில் இந்த ஐந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரம் என்றே சிவாகமங்களில் குறிப்பிடப்படுகின்றன.

    மந்திரமயமான தியான வடிவான சதாசிவ மூர்த்தியின் வடிவம் எவ்வாறு அமையலாம் என்பது பற்றி ஆகமங்கள் கூறுகின்றன. சதாசிவர் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் உடையவர். ஒவ்வொரு முகத்திலும் மும்மூன்று திருக்கண்கள் உண்டு. வலக்கரங்களில் சூலம், வஜ்ஜிரம், கத்தி, பரசு, அபயமுத்திரை ஆகியவற்றையும், இடது கரங்களில் பாசம், மணி, அக்கினி, அங்குசம் ஆகியவற்றையும் தாங்கியிருப்பவர். பாம்பினை பூணூலாக அணிந்திருப்பவர். பிறைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட சடாமகுடம் தரித்தவர். சாந்தமான தோற்றம் கொண்டவர். இவ்வாறு காமிகாகமத்தில் சதாசிவனது வடிவம் வர்ணிக்கப்பட்டுள்ளது.

    கோவில் கோபுரங்களில் சுதை வடிவிலும், ஓரிரு இடங்களில் ஓவிய வடிவிலும் காணப்படும் இவ் வடிவம், நித்திய வழிபாட்டில் கிடையாது. வெறும் காட்சிப் பொருளாகத்தான் உள்ளது.

    மகா சதாசிவ மூர்த்தி

    சதாசிவமூர்த்தி 25 முகங்களுடனும், 50 கரங் களுடனும் காணப்படும்போது, அவர் ‘மகா சதா சிவர்’ என்று அழைக்கப்படுவார். ‘ஸ்ரீதத்துவநிதி’ என்னும் நூல் மகா கயிலாயமூர்த்தி என்ற பெயரில் மகாசதாசிவ வடிவத்தை விளக்கிக் கூறுகின்றது. இவரது 50 கரங்களில் இடம் பெற்றிருக்கும் பொருட்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

    இதன்படி மகா சதாசிவ மூர்த்தியின் வலது பக்க 25 கரங்களில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், கோடாரி, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சிறுசுத்தி, கொடி, தண்டம், வஜ்ஜிரம், குந்தம், அஸ்திதம் ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் போன்ற அம்சங்களும், இடது பக்க 25 கரங்களில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், பரசுவதம், முத்கரம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்திரிக்கோல், உலக்கை, மயில் தோகை ஆகிய அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

    பஞ்ச வடிவங்கள்

    சதாசிவ மூர்த்தியை பஞ்சப் பிரம்ம மந்திரத்தினால் தியானிக்கும் போது, ஐந்து முகங்களும் தனித்தனியான முழு வடிவங்களால் குறிக்கப்படும். அவையாவன:-

    ஈசான மூர்த்தி - பளிங்கு நிறமுடையவர். முக்கண்களைக் கொண்டவர். ஞானச் சந்திரனை சடையில் அணிந்தவர். சூலம், அபயமுத்திரை தாங்கியிருப்பவர். பார்வதியுடன் காணப்படுவார். அழகும், பிரசன்னமும் உள்ளவர்.

    தத்புருஷ மூர்த்தி - பொன்னிறத்தை கொண்டவர். பீதாம்பரத்தையும், உபவீதத்தையும, சடையில் இளம் பிறையையும் தரித்தவர். மாதுளங்கனி, ருத்திராட்ச மாலை ஆகியவற்றை கரங்களில் ஏந்தி, கவுரி தேவியுடன் காட்சி தருவார்.

    அகோர மூர்த்தி - முக்கண்களைக் கொண்டவர். திருமுடியில் சந்திரனைச் சூடியவர். சாந்தத்தையும், குண்டலாலங்காரத்தையும் கொண்டவர். கீரி நிறமுடையவர். புருவம், மீசை, தாடி, கேசம், பல் என உக்கிர முகத்தினைக் கொண்டவர். வலது கரங்களில் சூலம், பரசு, வாள், தண்டம் ஆகியவற்றையும், இடது கரங்களில் கட்டுவாங்கம், கபாலம், பரிசை, பாசம் ஆகியவற்றையும் ஏந்தி, கபாலம், பாம்பு, விருச்சிகம் போன்றவற்றை ஆபரணங்களாகச் சூடியவர். சத்துருக்களை அழிப்பவர். சூல் கொண்ட முகில் போன்ற நிறமுள்ள கங்கையுடன் இருப்பவர்.

    வாமதேவ மூர்த்தி - சிவந்த நிறத்தவர். நறுமணம் பொருந்திய மாலை, வஸ்திரம், உபவீதம் ஆகியவற்றையும், உயர்ந்த மூக்கையும், சிவந்த தலைப்பாகையையும் கொண்டவர். கணாம்பிகையுடன் இருந்து அருள்பவர்.

    சத்தியோசாத மூர்த்தி - வெண்மை நிறமுள்ளவர். வெண்மையான மாலை, சந்தனம், ஆபரணம், தலைப்பாகை, வஸ்திரம் ஆகியவற்றையும், மூன்று கண்களையும் வரத அபய கரங்களையும் கொண்டவர். சந்திரனைத் தரித்தவர். அம்பிகையுடன் இருந்து அருள்பவர்.

    ×