என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    சிவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வந்தாலும், அவர் விரும்புவது என்னவோ ‘ரிஷபம்’ என்னும் காளை வாகனத்தைத் தான். அந்தளவுக்கு நந்தியம்பெருமான், சிவனின் நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் உரியவர் ஆவார். தன்னை நம்பும் அடியார்களுக்கு எல்லாம் அருள்பாலிக்கும் சிவபெருமானை, எருதுவாக மாறி தாங்கி சுமக்கலாமே என்ற எண்ணம், தருமதேவன், நான்முகம், திருமால் ஆகியோருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக காளை வாகனமாக மாறி, ஈசனை தாங்கிச் சுமக்கும் பேறினைப் பெற்றனர்.

    முதலில் தருமதேவனே காளை வடிவத்திற்கு மாறி, சிவனை சுமக்கும் பேறு பெற்றார். எவரும் செய்திராத செயலை செய்ததால், தருமதேவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் நான்முகனும், திருமாலும் கூட, காளை வடிவம் எடுத்து சிவபெருமானைச் சுமந்தனர். அதனால் தருமதேவன் மகிழ்ச்சியை இழந்தார்.

    மீண்டும் ஒரு தன்னிகரற்ற சேவையை இறைவனுக்கு செய்ய விரும்பிய தருமதேவன், சிவனை நோக்கி தவம் இருந்தார். அந்த தவத்தின் இறுதியில் சிவபெருமானின் அருளால் குன்றாக மாறி, அவரை தாங்கும் பேறினைப் பெற்றார். அந்தக் குன்றின் பெயர் ‘எருதுமலை.’ குன்றின் மேல் குடிகொண்ட இறைவன் பெயர் சந்திரசூடேஸ்வரர். இந்தக் குன்றானது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ளது. இத்தல இறைவன் ‘செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டவர்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

    இத்தலத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி உமையவள் மற்றும் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தராக காட்சி தருகிறார். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன. தல விருட்சம் வில்வம், தல தீர்த்தம் மரகதசரோவம் எனப்படும் பச்சைக் குளம்.

    தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தலவரலாறு :

    இந்த ஆலயத்தைப் பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஒரு தொண்மக் கதையின் அடிப்டையில் கூறப்படும் வரலாறு வழக்கில் உள்ளது.

    முன்னொரு காலத்தில் தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். தவத்தின் பயனாக தனக்கு காட்சியளித்த இறைவனிடம், தன்னை வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி தருமதேவன் வேண்டுகோள் வைத்தார். அதன்படியே தருமதேவனை, தன்னுடைய வாகனமாக, காளையாக மாற்றிக் கொண்டார். இதனால் மகிழ்ந்த தருமதேவன் இந்த இடத்தில் தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி, அதில் உமையுடன் எழுந்தருள வேண்டும் என்று சிவனைப் பணிந்தார். சிவபெருமானும், ரிஷப வடிவில் ‘விருஷபாசலம்’ என்னும் மலையை உருவாக்கி, அங்கு தங்கினார்.

    தான் தங்கிய இடத்திற்கு தேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார், ஈசன். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.

    இதற்கிடையில் பார்வதியுடன் வந்த தோழிகள், அவரைப் பிரிந்து கானகம் முழுவதும் அலைந்தனர். தாகம் அவர்களை வாட்டியது. கண்ணுக்கு எந்த ஆறோ, குளமோ தென்படவில்லை. அவர்கள் பார்வதியை நினைத்து தங்கள் தாகத்தைத் தீர்க்க வேண்டினர். உடனே பார்வதி தேவி, ஒரு குளத்தை உருவாக்கினாள். அதில் தன் தோழிகளுடன் பார்வதி இறங்கி நீராடினாள். அப்போது அந்தக் குளமே பச்சை நிறமாக மாறியது.

    பார்வதி நீராடியபோது அவள் கண்களை விட்டு மறைந்த உடும்பானது, அருகில் உள்ள மலைமீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி, அதைப் பின்தொடர்ந்து அந்த மலைமீது ஏறினாள். மலை உச்சியில் இருந்த செண்பக மரத்தில் உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முத்கலன் என்ற முனிவர் உடும்பைப் பார்த்தார். அவர் சற்று தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணனை கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் உடும்பை பிடிக்க முயன்றபோது அது மறைந்தது. அதனால் பார்வதி திகைத்தாள்.

    பொன்னிற உடும்பு மறைந்ததற்கு, முனிவர்கள் இருவர்தான் காரணம் என்று நினைத்த பார்வதிதேவி, அவர்கள் மீது கோபம் கொண்டாள். உடும்பைக் கண்டு கூவியவரை ஊமையாகும்படியும், சத்தம் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவர்கள் இருவரும் வேடுவ குலத்தில் பிறக்கும்படியும் சாபமிட்டாள். அதைக் கேட்டு முனிவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பார்வதி தேவியிடம் தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டினர்.

    பார்வதியும் கோபத்தில் சிவ பக்தர்களை சபித்ததை எண்ணி வருந்தினார். பின்னர் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தாள். அப்போது ஈசன் அங்கு தோன்றி, “தருமதேவனுக்கு அளித்த வாக்கின்படி, சில காலம் தங்கி இருக்கவே நான் உடும்பு வடிவில் வந்தேன். அதோடு தேவியும் என்னோடு இங்கு தங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திருவிளையாடல் நடத்தினேன். நீங்கள் சாபம் பெற்றாலும், வேடுவ குலத்தில் பிறந்து வேட்டையாடிவரும் போது, உடும்பாக என்னைக் காணும்போது சாப விமோசனம் பெறுவீர்கள்” என்று முனிவர்களுக்கு அருளினார்.

    அதன்படி வேடுவர்களாக பிறந்த அந்த இரண்டு முனிவர்களும், அதே மலை மீது உடும்பைக் கண்டு, சாபத்தில் இருந்து மீண்டனர். பின்னர் அவர்கள் ஈசனுக்காக அங்கு ஆலயத்தை எழுப்பினார்கள்.

    ஆலய ராஜகோபுரம்

    ஆலய அமைப்பு:

    ஆலயம் மலைமீது இருந்தாலும், மூன்று ஏக்கர் பரப்பளவில் இரண்டு திருச்சுற்றுக்களுடன் விஸ்தாரமாக அமையப்பெற்றிருக்கிறது. இக்கோவிலானது, கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், உற்சவர் மண்டபம், மரகதாம்பிகை கருவறை, ஏழு கலசங்களைக் கொண்ட ஐந்துநிலை ராஜகோபுரம் ஆகியவற்றைக் கொண்டு கம்பீரமாக திகழ்கிறது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக முதல் திருச்சுற்றுக்குச் சென்றால், வலதுபுறம் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்கலாம். முதல் பிரகாரத்தை இடமாகச் சுற்றி மேற்கு வாசல் வழியாக இரண்டாம் திருச்சுற்றுக்குள் வந்தால், பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமானை வழிபடலாம். இவர்களைத் தொடர்ந்து அர்த்த மண்டபத்தின் இருபுறத்திலும் விநாயகர், முருகன் வீற்றிருக்கிறார்கள். அடுத்ததாக கருவறைக்குள் மூலவர் சந்திரசூடேஸ்வரர் சூரிய- சந்திர பிரகாசத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    கருவறைக் கோட்டத்தில் மகாகணபதி, ஸ்ரீகணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். திருமாளப்பத்தி மண்டபத்தில் கிழக்கில் சந்திரன், இந்திரன், அக்னி, தெற்கில் சப்தமாதா, எமன், அறுபத்துநால்வர் ஆகியோரும், மேற்கில் உற்சவர், ராஜகணபதி, வருணன், சரஸ்வதி, கஜலட்சுமி, வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதியில் இருந்து அருள்கிறார்கள்.

    மூலவர் கருவறைக்கு இடதுபுறம் மரகதாம்பிகை உட்கோவில் அமைந்துள்ளது. அம்பாளுக்கு முன்பாக ஸ்ரீசக்கரம் இடம்பெற்றுள்ளது. திருமாளப்பத்தி மண்டபத்தின் வடக்குப் பகுதியில் குபேரர், 16 லிங்கங்கள், ஈசானியர், உற்சவர், பஞ்சலிங்கங்கள், காலபைரவி, வீரபத்திரர், சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளன. ஆலயத்திற்குச் செல்லும் மலைப்பாதையில், இந்த ஆலயத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காளிகாம்பாள் சமேத காமாட்சீஸ்வரர் கோவில் இருக்கிறது.

    சந்திரசூடேஸ்வரர் ஆலயத்தில், சிவாலயங்களுக்கே உரித்தான அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. தவிர ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி அன்று தேர்த் திருவிழா நடக்கிறது. அம்பாள் முன்பாக உள்ள ஸ்ரீசக்கரத்துக்கு, ஆடி மாதம் நவசண்டி யாகம் நடத்தப்படுகிறது. முதல் பிரகாரத்திலுள்ள ஜலகண்டேஸ்வரர், தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் உள்ளே இருக்கிறார். மழை இல்லா காலங்களில் தண்ணீர்தொட்டி போன்ற அமைப்பில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி நிரப்பப்படுகிறது. இப்படி தொடர்ந்து பதினாறு நாட்கள் செய்து, பின்னர் கற்பூரம் காட்டி பிரார்த்தனை செய்கின்றனர். தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீர் குறையாமல் இருந்தால் அடுத்த சில தினங்களில் மழை வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அமைவிடம் :

    கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 49 கிலோமீட்டர் தொலைவிலும், ஓசூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது சனசந்திரம் என்ற கிராமம். இங்குள்ள மலை மீதுதான் சந்திரசூடேஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார்.

    நெய்வாசல் நெடுஞ்செழியன்
    கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் என்னும் ஊரில் இருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    ராமபிரான் இலங்கைக்குச் சென்று, சீதை இருக்கும் இடத்தைக் கண்டுவர வேண்டி, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன் தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூற, அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோகவனத்தில் கண்டார்.

    ராமபிரான் அளித்த கணையாழியை, சீதையிடம் கொடுத்து விவரங்கள் கூறினார். மகிழ்ந்த சீதாதேவி கொடுத்த சூளாமணியை பெற்றுக்கொண்டார். பின்னர் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு, ராவண தர்பாரில் ராமபிரானின் ஆற்றலை எடுத்துக்கூறி எச்சரித்தார். அப்போது அனுமனின் வாலுக்கு அசுரர்கள் தீயிட்டனர். அத்தீயைக் கொண்டு இலங்கையை எரித்தார்.

    பின்னர் அனுமன் நற்செய்தி கொண்டுவருவான் என ஆவலுடன் காத்திருந்த ராமபிரானிடம், சீதை கொடுத்த சூளாமணியைக் கொடுத்து “கண்டேன் அந்த கற்பினுக்கணியை” என்றார். அதைக் கேட்டு ராமபிரானின் முகம் மலர்ந்தது. பின்னர் ராமபிரான் தனது பரிவாரங்கள் மற்றும் வானர வீரர்களின் உதவியோடு, கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று போர் தொடுத்தார். அந்தப் போரின் இறுதியில் ராவணன் கொல்லப்பட்டான்.

    இதையடுத்து ராவணனின் தம்பி விபீஷணனுக்கு முடிசூட்டி விட்டு, புஷ்பக விமானத்தில் சீதாதேவி, தம்பி லட்சுமணன் ஆகியோருடன் அயோத்தி புறப்பட்டார் ராமபிரான். அங்கு சீதாதேவி, அனுமன், தன் சகோதரர்கள், சுக்ரீவன், விபீஷணன் உள்ளிட்டோர் சூழ்ந்திருக்க ஸ்ரீராமர் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.

    மேற்கூறியவை தான் ராமாயணம் சுந்தர காண்டத்தின் ரத்தினச் சுருக்கமாகும். சுந்தர காண்டத்தின் அனைத்துச் சர்க்கங்களையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள், சுந்தர காண்டச் சுருக்கத்தை அனுதினமும் தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை பாராயணம் செய்து வந்தால் எந்த நற்காரியத்தை மனதில் நினைத்திருந்தாலும், அது தடங்கலின்றி சுபமாக விரைவில் நிறைவேறும்.

    வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், துளசிதாசர் எழுதிய ராமசரித மானஸ், ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என ராமாயணம் பற்பல பெரியோர்களால் எழுதப்பட்டதை அறிந்திருப்போம். அகத்திய மாமுனிவராலும் ராமாயணம் எழுதப்பட்டது. ஆம்! இதனைப் பற்றிய புராணக்குறிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவண்பரிசாரம் திருத்தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    விடிந்தால் திருக்கயிலை மலையில் உலகாளும் ஈசனுக்கும், அன்னை உமையவளுக்கும் திருக்கல்யாணம். அங்கே தேவர்களும், முனிவர்களும் மட்டுமன்றி உலகமே திரண்டிருந்தது. அதுசமயம் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. தன் திருமணம் காண வந்த அன்பர்களின் கனம் தாங்காது, பூமி தாழ்ந்து விட்டதை உணர்ந்த சிவபெருமான், அகத்தியரை அழைத்தார். பூமியை சமப்படுத்த வேண்டி தென்பகுதிக்குச் செல்ல ஆணையிட்டார்.

    “தென்பகுதிக்கு நான் சென்றுவிடுவதால் தங்களின் திருமணக்கோலத்தை தரிசிக்க முடியாமல் போகுமே” என அகத்தியர் சொல்ல, அகத்தியர் விரும்பும் தலங்களில் எல்லாம் தமது திருமணக்கோலத்தை காட்டியருளுவதாக கூறியருளினார் சிவபெருமான். அதன்பிறகு அகத்தியர் தென்பகுதிக்குப் புறப்பட்டார். பூமி சமன் ஆனது.

    அப்படி அகத்தியர், பொதிகையை கடந்து தெற்கில் வந்தபோது குமரியில் சிவலிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டார். அங்கேயே மீண்டும் ஈசனின் திருமணக்காட்சியை காணவேண்டி அகத்தியர் ஈசனை வேண்ட, அங்குள்ள அத்திமரத்தின் கீழ் அகத்தியருக்கு ஈசன் தமது திருமணக் கோலக் காட்சியை காட்டியருளினார்.

    பின்னாளில் வந்த பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் இங்கு கோவில் எழுப்பினான். அகத்தியர் வழிபட்ட ஈசன் ‘அகஸ்தீஸ்வரர்’ என்றும், இத்தலம் ‘அகத்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அகத்தியர் இத்தலம் வந்தபோது அவரை, அருகிலுள்ள திருவண்பரிசாரம் எனும் திருப்பதிச்சாரம் திருத்தலத்தில் அனுமன் சந்தித்தார். பின்னர் அகத்தியரிடம், ராமாயணம் இயற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அகத்திய மாமுனிவர், திருப்பதிச்சாரம் திருத்தலத்தில் ராமாயணம் இயற்றியருளினார்.

    அகத்திய முனிவர் எழுந்தருளிய அகஸ்தீஸ்வரம் திருத்தலத்தில் ராமபிரானுக்கும் தனித் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராமர் ஆலயமும் பல ஆண்டுகள் கடந்த பழமையானது ஆகும். கோவில் கருவறையில் ஸ்ரீராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் கண்டிப்பாக அருள்பாலிப்பார். இங்கு பக்தர்கள் ‘அனுமன் சாலிசா' மற்றும் ‘சுந்தர காண்டம்', ‘ஸ்ரீராம நாமம்’ ஆகியவற்றை பாராயணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கும் சுந்தரகாண்டம் கூட்டுப் பாராயணம் மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திர நாட்களில் வெகுச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் அஷ்டமி, ஏகாதசி, நவமி திதி நாட்களிலும், புதன்கிழமைகளிலும் பக்தர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்தும், சுந்தரகாண்டம் பாராயணம் செய்தும் வழிபட்டு தத்தமது கோரிக்கைகள் நிறைவேறப் பெறுகிறார்கள்.

    இங்குவந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வழிபட்டு வந்தால் எளிதில் எண்ணங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

    ராமாயணத்தின் பெருஞ்சிறப்புகளை வளரும் தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஆண்டுதோறும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவிலில் ‘ராமாயண ஞானவேள்வி' தொடர்ந்து பத்து நாட்கள் நடத்தப்படுகிறது. விழாநாட்களில் தினமும் மூலவர் ராமபிரானுக்கு திருமஞ்சனமும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. அதோடு தினமும் ராமாயணத்தின் அனைத்து காண்டங்களையும் சுருக்கி, பக்தர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் பேருரையும் நிகழ்த்துகிறார்கள்.

    அமைவிடம் :

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் என்னும் ஊர் வரும். அங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி
    வேண்டும் வரங்களை தரும் தாயாகவும், திருமண வரம் அருளும் தெய்வமாகவும் மாங்காட்டில் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறாள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    உலகை காக்கும் பரம்பொருளான அந்த சிவபெருமானை நாம் வணங்கி வந்தாலும், அவருக்கு இணையாக அவருக்கு அருகில் அமர்ந்து உலக மக்களுக்கெல்லாம் அருள் வழங்கும் பார்வதியும் பல்வேறு அம்சங்களோடு இந்தப் பூவுலகில் சிறப்பான வழிபாட்டைப் பெற்றிருக்கிறாள்.

    சென்னை நகரை பொருத்த வரை மாங்காடு காட்சி அம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் மற்றும் காளிகாம்பாள் கோவில் ஆகியவை மிகவும் சிறப்பு பெற்ற அம்மன் கோவில்கள். அவற்றில் மிகவும் அற்புதமான திருத்தலம் மாங்காடு காமாட்சியம்மன் கோவில். வேண்டும் வரங்களை தரும் தாயாகவும், திருமண வரம் அருளும் தெய்வமாகவும் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறாள்.

    மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் ‘மாங்காடு’ என்னும் காரணப் பெயர் பெற்றது. அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம் இந்த மாங்காடு திருத்தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காடு வந்து நெருப்பில் தவமிருந்தாள்.

    மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை, ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும், ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரிந்தாள். இதனால் அம்மை இத்தலத்திலே ‘தபசு காமாட்சி’ என்று அழைக்கப்படுகின்றாள்.

    மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரியும், மலையரசன் மகளுமான தன் தேவியின் மேல் கருணை கொண்ட சிவபெருமான், அம்மைக்கு அருள் செய்ய வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அதே தலத்தில் தன்னை பூஜித்து வந்த சுக்ராச்சாரியாருக்கு முதலில் ஈசன் காட்சி தந்தார். அதோடு, அன்னையிடம் அசரீரியாக, காஞ்சிக்கு செல்லும்படியும், அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

    தவத்தில் ஆழ்ந்திருந்த அன்னை, தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். அப்போது கம்பாநதியை பெருகிவரச் செய்து, பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான்.

    ஈசனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டாள் அன்னை. அதனால் அந்தத் தீயின் வெப்பம் தாங்காமல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் தவித்தனர். உயிரினங்கள் துன்பத்தில் துவண்டன.

    பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. ஆதிசங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது.

    இது சோழர் காலக் கட்டிடக்கலையை காட்டுகிறது. தற்போதே ராஜகோபுரம் கட்டப்பட்டது. நுழைவு வாசலுக்கு அருகே விநாயகர் சிலை உள்ளது. கோவிலின் நடுவில் அர்த்த மேரு மகா சக்கரம் உள்ளது. இங்கு மாங்காடு அன்னை காமாட்சி வீற்றிருக்கிறாள். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இந்தக் கோவிலில் விசேஷ நாட்கள் ஆகும். பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சுக்ரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம்.

    ஆலயத்தில் எல்லா நாளும் நல்ல நாள் என்றாலும், ஆடி மாதம் பிறந்து விட்டால் சென்னை மக்களுக்கு இங்கு திருவிழாக் கோலம்தான். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பவுர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீசக்கரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு செய்யப்படும் குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

    மூலஸ்தானத்தில் இருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஒரு கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமான அம்மனை காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். மாவடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

    மாங்காடு காமாட்சி அன்னையை தரிசனம் செய்து வேண்டும் வரம் யாவும் பெற்று வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.

    அறந்தாங்கி சங்கர்
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் அருகே, காவச்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, பரக்காட்டு பகவதி தேவி ஆலயம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் அருகே, காவச்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, பரக்காட்டு பகவதி தேவி ஆலயம். இந்த அன்னை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பல சமுதாயத்தினரின் குல தெய்வமாகவும் இருந்து வருகிறாள். பக்தர்கள் வேண்டிய அனைத்தையும் பரக்காட்டு பகவதி தந்தருளுவாள் என்கிற நம்பிக்கை இப்பகுதி மக்களிடத்தில் நிறைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    முன்பொரு காலத்தில் மூகாசுரன் எனும் அசுரனை அழிக்க முயன்றாள் துர்க்கா தேவி. ஆனால் அந்த அசுரனின் உடலில் இருந்து கீழே சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும், ஒரு அசுரன் தோன்றிக் கொண்டே இருந்தான். அந்த அசுரன்களை எல்லாம் தேவி அழித்துக் கொண்டேயிருந்தாள். அப்படித் தோன்றிய அசுரன்களில் ஒருவன் பெயர், ‘பரா.’ அவனைத் தேவி, தற்போது கோவில் கொண்டிருக்கும் காட்டுப் பகுதியில்தான் அழித்திருக்கிறாள்.

    அதன் பின்னர், அவள் அங்கிருந்து பரச்சேரி என்னும் இடத்தில் சென்று அமர்ந்திருக்கிறாள். அந்த இடத்தில் தங்கியிருப்பதில் அவளுக்கு அதிருப்தி தோன்றியதால், அவள் அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல நினைத்தாள். அப்போது, உன்னிக்குமாரத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, நெற்கதிர்களைக் கொண்டு தீப்பந்தம் ஒன்றைத் தயார் செய்து கொடுக்க, அந்தத் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அங்கிருந்து கிளம்பி, தற்போதுள்ள பரக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் என்பது தல வரலாறு.

    இது தவிர இங்கு பரக்காட்டு அம்மன் வந்து அமர்ந்ததற்கான செவி வழிக்கதைகள் இரண்டும் சொல்லப்படுகிறது. அவற்றையும் காண்போம்.

    கதை ஒன்று :

    பள்ளிக்காடி, பரக்காடி, குன்னைக்காடி மற்றும் கொடிக்காடி ஆகிய நான்கு தேவியர்கள், திருவடி என்ற இடத்தில் இருந்து தங்களுக்கேற்ற இடத்தைத் தேடிச் செல்லத் தொடங்கினர். அவர்களது நீண்ட பயணத்திற்குப் பின்பு, பள்ளிக்காடி தேவிக்குப் பருவச்சேரி என்ற இடம் பிடித்துப் போக அங்கேயேத் தங்கிக் கொண்டாள். குன்னைக்காடி தேவி தென்னிலாபுரம் என்ற இடத்திலும், கொடிக்காடி தேவி வடக்கஞ்சேரியிலும் தங்கிக் கொண்டனர்.

    கடைசியாக, பரக்காடி தேவி பரயா என்ற இனத்தவர் வசித்த பகுதிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கினாள். அங்கிருந்தவர்களிடம் அவள், தனக்குப் பூஜை மற்றும் வழிபாடுகளைச் செய்து விழாக்கள் எடுத்துக் கொண்டாடும்படி சொன்னாள். ஆனால், அங்கிருந்த ஏழை மக்கள், நாங்கள் பூஜை மற்றும் வழிபாடுகளைச் செய்ய முடியாத நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம். எங்களால் பணம் செலவழித்துப் பூஜை வழிபாடுகளைச் செய்ய இயலாது என்று தெரிவித்தனர்.

    அதனைக் கேட்ட தேவி, அவர்களிடம் குழல் என்னும் ஒரு இசைக்கருவியும், அதனுடன் சேர்ந்திசைக்கும், சில கூடுதல் இசைக்கருவிகளையும் கொடுத்து, அதனைக் கொண்டு இசைத்தால், வழிபாட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருளுதவியும் கிடைக்கும் என்று சொன்னாள். அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் அப்படியேச் செய்வதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதன் பிறகு, தேவி அங்கிருந்து புறப்பட்டுத் தற்போதிருக்கும் இடத்திற்கு வந்து கோவில் கொண்டாள் என்று மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

    கதை இரண்டு :

    பரக்காட்டு தேவி அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்த போது, சக்தி மிகுந்த ரக்சா ஒன்றை அணிந்திருந்த மந்திரவாதி ஒருவன் தேவியைச் சந்தித்தான். அவன் தேவியை மிரட்டி, தான் வைத்திருந்த மீன் கூடையை எடுத்துக் கொண்டு, தன்னுடன் மீன் பிடிக்க வரும்படி சொல்லி அவளை அழைத்தான். அவன் அணிந்திருந்த சக்தி மிகுந்த ரக்சாவிற்குக் கட்டுப்பட்ட தேவியும், வேறு வழியின்றி அவனுடன் சென்றாள்.

    குளங்கரா இல்லத்தைச் சேர்ந்த சாத்து அம்மாமன் எனும் அந்த மந்திரவாதி, மற்றொரு நாள் மீன் பிடிக்கச் சென்ற போது, அவன் அணிந்திருந்த ரக்சாவைத் தொலைத்து விட்டான். அந்நிலையில், தேவி அவனை அழித்து, அவனது உடலை 18 துண்டுகளாகப் பிரித்து அப்பகுதியில் வீசி எறிந்தாள். அதன் பிறகு, தற்போதிருக்கும் இடத்தில் தேவி கோவில் கொண்டாள் என்றும் சொல்கின்றனர்.



    கோவில் அமைப்பு :

    காவச்சேரி பசுமைக் காடுகளின் நடுவில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மரத்தால் செய்யப் பெற்ற பரக்காட்டு பகவதி தேவி வடக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். ஆலய வளாகத்தில், மகாகணபதி, நாகர் உள்ளிட்ட சில தெய்வங்களுக்கான சன்னிதிகளும் உள்ளன. இங்கு நவராத்திரி நாட்கள், ஐயப்பனுக்குரிய மண்டல நாட்கள் மற்றும் அம்மனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    கேரள மக்களால் ராமாயண மாதம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் கோவில் வளாகத்தில் ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் கதிர்வேலா, கார்த்திகை மாதத்தில் மண்டலம் களமெழுத்துப் பாட்டு, தை மாதத்தில் பொன்னின் பூவு, மாசி மாதத்தில் கூத்து, வைகாசி மாதத்தில் ஆலுவேலா, ஆனி மாதத்தில் தாலப்பொலி, ஆடி மாதத்தில் ஈஸ்வர சேவா எனும் வேறு சில விழாக்களும் நடக்கின்றன.

    பரக்காட்டு பகவதி தேவி ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள், அத்திப்பேட்டிலுள்ள தனது சகோதரியான மாங்கோட்டு பகவதி கோவிலுக்குச் சென்று விடுகிறார். இந்நாட்களில், பரக்காட்டு பகவதி கோவிலில் வழிபாடு இருக்காது.

    பரக்காட்டு தேவி கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையுடன் கோவிலுக்கு வந்து, ‘குரவா’ எனும் ஒலி எழுப்பி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

    பூரம் திருவிழா :

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நடசத்திர நாளில் தொடங்கி பூரம் நட்சத்திரம் நாள் வரையிலான ஏழு நாட்கள் ‘பூரம் திருவிழா’ நடைபெறுகிறது. இவ்விழாவினை இங்குள்ளவர்கள் ‘மாமாங்கம்’ என்று சொல்கின்றனர். இவ்விழாவின் போது, கேரள மரபு வழியிலான பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம், குத்துவிளக்கு புறப்படல், இரட்டை தாயம்பகா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. இவ்விழாவில் குதிரை உருவப் பொம்மை அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

    இவ்விழாவில், அம்மனால் அழிக்கப்பட்ட மந்திரவாதி சாத்து அம்மாமன் உடல் விழுந்ததாகச் சொல்லப்படும் 18 இடங்களிலும், பூரம் நட்சத்திர விழாவிற்கு முந்தைய ஏழு நாட்கள் கொடி மரங்கள் நடப்படுகின்றன. அந்தக் கொடி மரங்கள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் குளங்கரா இல்லத்தைச் சேர்ந்த பெண்கள் சூழ தேவியின் சிலையைக் கொண்டு சென்று, சாத்து அம்மாமன் செயல்பாட்டுக்குப் பரிகாரமாக வழிபடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனை ‘ஊர்வலம்’ என்று சொல்கின்றனர். உன்னிக்குமாரத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், இந்த ஊர்வலத்தின் முன்பாக ஜோதியை எடுத்து செல்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து 22 கிலோமீட்டர், ஆலத்தூர் என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்உள்ள காவச்சேரியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல பாலக்காடு நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    தேனி மு.சுப்பிரமணி
    புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூரை அரசாண்ட நமனத்தொண்டைமான், குளத்தூரில் ஒரு அழகிய பெருமாள் கோவிலைக் கட்டினார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூரை அரசாண்ட நமனத்தொண்டைமான், குளத்தூரில் ஒரு அழகிய பெருமாள் கோவிலைக் கட்டினார். அவர் ஆண்ட வருடம் 1685 முதல் 1750 வரை. அந்த ஆலயமே குளத்தூரில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் நெடிதுயர்ந்த திருமதில் சுவர்கள். முகப்பில் சிறிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிரகாரம். எதிரே கொடிமரம், பலி பீடம், வலதுபுறம் ஏகாதசி மண்டபம் உள்ளது. இடதுபுறம் திரும்பி நடந்தால் தெற்கு நோக்கியபடி நுழைவுவாசல் இருக்கிறது. அதனுள் நுழைந்ததும் கொலு மண்டபம் காணப்படுகிறது.

    இதன் வட திசையில் அனுமன் சன்னிதியும், ஆழ்வார்கள் சன்னிதியும் உள்ளது. கீழ் திசையில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார்.

    இங்குள்ள கல்யாண அனுமனுக்கு ரோஜா மாலை சூட்டி வேண்டிக் கொள்ளும் பெண்களுக்கு, விரைவாக திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். இந்த அனுமனுக்கு, அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டப்படுகிறது. அன்று முதல் 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் பலநூறு பக்தர்கள் தரிசிக்க வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அத்துடன் அன்று மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் பிற ஹோமங்களும் ஏகாதசி மண்டபத்தில் வைத்து நடைபெறும்.

    வடக்கு திருமதில் சுவரின் நடுவே ஒரு வாசல் உள்ளது. அது எப்போதும் பூட்டியே இருக்கும். ஏகாதசி திருவிழா அன்று இந்த வாசல், சொர்க்க வாசலாக திறக்கப்படும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த வாயில் வழியே வந்து அன்று பெருமாளையும், தேவியர்களையும் தரிசிப்பார்கள். சித்திரை முதல் நாள் இங்கு பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமாக உள்ளது. அந்த ஆண்டின் பலாபலன்களையும் பக்தர்கள் சூழ அமர்ந்திருக்க படிப்பார்கள்.

    21.6.2013 அன்று இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஆனி மாதம் வரும் இந்த கும்பாபிஷேக நாள் வருஷாபிஷேக தினமாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாளுக்கும் தேவியர்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி வெள்ளியில் இங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆவணி மாதம் ஸ்ரீஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படும்.

    புரட்டாசி நவராத்திரியின் போது 10 நாட்களும் தாயாருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இறைவனுக்கு தோசை நைவேத்தியம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவது எங்குமில்லா புதுமையாக உள்ளது. இந்த பிரசாதத்தை பெற நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருக்கிறது.

    கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு, ஆலயம் ஒளிமயமாக காட்சி தரும். ஆலயம் முன் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. மார்கழி 30 நாட்களும் தனுர் பூஜையும் சிறப்பாக நடந்தேறுகிறது. தை பொங்கல் அன்று தேங்காய் பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், செங்கரும்பு முதலியன மூலவருக்கு படைக்கப்படுவதுடன் அன்று பெருமாளுக்கும் தேவியருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ஆலயத்தில் தினசரி 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் அருளும் இத்தல வரதராஜப்பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் நாமும் ஒரு முறை தரிசிப்போமே.

    அமைவிடம் :


    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். குளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ½ கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயத்தை அடையலாம்.

    மல்லிகா சுந்தர்
    சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.

    இங்கு சிவன் சிலைகளும் உண்டு, சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.

    ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர். இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு கூடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது.

    கூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள். அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள். பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிட்டாள்.

    பிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து, தான் லட்சுமி என்றும் உங்களுடன் பெல்லாரி என்னும் பகுதியில் இருந்தே உங்களுடனே வந்துவிட்டேன் என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது தான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோவில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது. அதன்பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர்.

    கூரையினால் சிறிய அளவில் கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோவில் பிறகு கம்பளத்து பாளைய கட்டுப்பாட்டில் வந்ததும் இக்கோவில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர்.

    கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிசேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ளது பாலதண்டாயுதபாணி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம், சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.

    தல வரலாறு :

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கெம்ப நாயக்கன் பாளையத்தில் குப்பண்ணக் கவுண்டர் என்ற பிரம்மச்சாரி வாழ்ந்து வந்தார். இவர் தன் பிழைப்பிற்காகத் தேனீர் கடை நடத்தி வந்தார். ஒருநாள் முருக பக்தரான இவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றினார். “இவ்வூரின் வடக்கே ஊஞ்ச மரங்கள் நிறைந்த வனத்தில் என் காலடிபட்ட தலம் உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பு, நான் மக்களைக் காத்தருள்வேன்” என்றார்.

    அதன்படி அந்த இடத்தை குப்பண்ணன் தேடி கண்டுபிடித்தார். அங்கே ஓரிடத்தில் ஐந்து முழம் பூ, அருகே ஆறு முழம் பூவும், அதன் அருகே ஒன்பது முழம் பூவும் குவியலாக இருந்தன. அவ்விடத்தில் விநாயகர், முருகர், நவக்கிரகங்கள் சன்னிதி அமைக்க விரும்பினார். வசதியில்லாத நிலையிலும், முருகப்பெருமான் விருப்பத்திற்கு இணங்க, அதற்கான முயற்சியில் இறங்கினார். அவரது ஆர்வத்தைக் கண்ட பலரும் பொருளுதவி அளித்தனர்.

    ஆலயத் திருப்பணிக்குத் தங்கள் நிலத்தில் விளைந்துள்ள மரங்களை வெட்டிக்கொள்ள, இருட்டிப்பாளையம் தாசமாதய்யாவும், ஜடையருத்ரே கவுண்டரும் சம்மதித்தனர். மரங்களை வெட்டி கெம்பநாயக்கன் பாளையம் வரும் வழியில் கடம்பூர் வன அலுவலரான ஜம்பையர் என்பவர் மாட்டு வண்டியைப் பறிமுதல் செய்து மரங்களை கைப்பற்றினார். முருகன் கோவில் திருப்பணிக்காக கொண்டு செல்வதாக எடுத்துரைத்தும் வன அலுவலர் கேட்கவில்லை.

    மாடுகள் பூட்டிய வண்டியை அவிழ்த்துவிட வந்தபோது, அவரின் இரு கண்களும் பார்வையிழந்தன. உடலில் இனம்புரியாத எரிச்சல் ஏற்பட்டது. பதற்றம் அடைந்த அந்த அதிகாரி, குப்பண்ணனிடம் சரணடைந்தார். அதற்கு அவர் “இது முருகப்பெருமான் செயல். மன்னிப்பை அவனிடம் மனமுருகி கேளுங்கள். கருணை செய்வார்” என்றார்.

    அதன்படியே வன அலுவலர், முருகப்பெருமானை நினைத்து மன்னிப்பு வேண்டினார். அடுத்த நொடியே அவரது உடலில் ஏற்பட்ட எரிச்சல் நின்றது. கண்பார்வையும் திரும்பக் கிடைத்தது. அதன்பின்னர் அந்த வன அலுவலரே, தன்னுடைய சொந்தப் பொறுப்பில் மரங்களையும் வண்டியையும் கெம்பநாயக்கன் பாளையம் கொண்டு போய் சேர்த்தார். அதன்பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெற்று கோவில் சிறப்பாக எழுந்ததாக தல வரலாறு சொல்லப்படுகிறது.

    திருப்பணிகள் நடைபெற்று, ஆலயத்தில் தெய்வச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வந்தது. அதற்காக திருமுருகன்பூண்டியில் இருந்து விநாயகர் மற்றும் மூலவர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட சிலைகளைக் கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் ஆலயத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக, பஸ் கண்டக்டர் அந்த சிலைகளை பஸ்சில் ஏற்ற மறுப்பு தெரிவித்தார். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், ஏற்கனவே வன அலுவலர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையைப் பற்றி எடுத்துரைத்தார். உடனே தன்னுடைய தவறை உணர்ந்த பஸ் கண்டக்டர், தெய்வ விக்கிரகங்களை பஸ்சில் ஏற்றி பத்திரமாக கொண்டு செல்ல உதவி புரிந்தார்.

    கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் இரண்டு யானைகள் அங்குள்ள நீர்நிலையில் தண்ணீர் பருக வந்தன. ‘யானைகளால் சிலைகள் சேதமடைந்தால் எப்படி கும்பாபிஷேகம் நடத்துவது?’ என்று ஊர்மக்கள் பயந்தனர். அப்போது ஒரு பக்தர் “முருகா, முருகா” என கோஷமிட யானைகள் அங்கிருந்து அகன்று, காட்டிற்குள் ஓடி மறைந்த அதிசயமும் இந்த ஆலயத்தில் நடந்திருக்கிறது.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னிதி எதிரே மேற்கு நோக்கிய பால தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி அமைந்துள்ளன. இது தவிர சிவன், பார்வதி, ஏகபாத மூர்த்தி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, காலபைரவர், நவக்கிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. குலதெய்வமான செல்வநாயகிக்குத் தனி சன்னிதி உள்ளது. கல்லால மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமைந்துள்ளார்.

    மேற்கு பார்த்த முருகன் சன்னிதி மிகவும் அபூர்வமானது. பழனி, கோபி பச்சை மலை, மயிலை கபாலீஸ்வரர் கோவில் என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படும் அமைப்பு ஆகும் இது. சுமார் இரண்டடி உயரத்தில் வலது கையால் தண்டம் ஊன்றி, இடது கையை இடுப்பில் வைத்து அருளாசி வழங்கும் கோலம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு இவர் சாட்சியாக விளங்குகிறார். பழனி தண்டாயுதபாணியை நினைவுபடுத்தும் கோலத்தில் காட்சி தருகிறார், பாலதண்டாயுதபாணி.

    திருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.

    இதேபோல, ஆண்டுதோறும் வைகாசி 26-ந் தேதி இலவசமாக நடைபெறும் பார்வதி சுயம்வர யாகத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஜாதகத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்பவருக்கு ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுதிக்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது.

    பார்வதி சுயம்வர யாகம்:

    ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர். மலையடிவாரக் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், சலசலப்பு ஏதும் இன்றி வழி படுவதும் வியப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்பதும், அன்னதானம் நடைபெறுவதும் கூடுதல் சிறப்பு. சின்ன சின்ன விழாக்களுக்கெல்லாம், கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு நடுவில், ஒரு கிராம மக்கள் இலவசமாக இந்த யாகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இக்கோவில் புதுப்பொலிவுடன் திகழ, முருகன் அடியார்கள் ஆதரவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அமைவிடம் :

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - கடம்பூர் வழித்தடத்தில், நால்ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    பனையபுரம் அதியமான்

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சாஸ்தா கோவிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.
    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சாஸ்தா ஆலயம் உள்ளது. இக்கோவிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார். இந்தியாவிலே நரசிம்மர் தன் தங்கையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.  

    காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் நரசிம்மருக்கு வடைமாலை சாற்றியும், அவரது உக்கிரத்தைப் போக்க வெட்டிவேர் மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

    இந்த ஆலய பிரகாரத்தில் மகாகணபதி, பாலசுப்ரமணியர், அகத்தியர், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.   
     
    பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஐஸ்வரியம் கிடைக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.  இந்த ஆலயம் 1500 ஆண்டுக்கு முற்பட்டது. இத்தல வரலாறு வருமாறு:-

    மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார்.

    அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார்.

    தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார்.

    நரசிம்மர் தோன்றியதற்கு காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை.

    நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன.

    அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது. இக்கோவிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார்.

    இதனால் இவ்வூரில் உள்ள லிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும்; இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோவில் கோவில் என்றும் பெயர் பெற்றது. ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோவிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்தது.

    அப்போது அருகில் புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர்.

    தினமும் இந்த ஆலயத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
    ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்கு பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது.

    இத்தலத்துக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகி தாணுவை 9443979794 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பூஜை நேரம் உள்ளிட்ட தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு செல்லலாம்.
    தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் நரசிம்மருக்கு புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
    நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக உள்ளது. நரசிம்ம சுவாமி இந்தியாவெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:

    நவநரசிம்மர் :

    அகோபிலம்
    நவநரசிம்மர். (இரண்டாவது அகோபிலம்)

    பஞ்ச நரசிம்ம தலங்கள் :

    கேதவரம்
    மங்களகிரி பானக நரசிம்மர்
    மட்டப்பல்லி
    வாடப்பல்லி
    வேதாத்திரி

    அட்ட நரசிம்ம தலங்கள் :

    அந்திலி
    சிங்கரி கோவில்
    சிங்கப்பெருமாள் கோவில்
    சிந்தலவாடி
    சோளிங்கர்
    நாமக்கல்
    பரிக்கல்
    பூவரசன்குப்பம்

    ஆந்திரப் பிரதேசம் :

    அகிரபள்ளி வியாக்ர நரசிம்மர்
    எர்ரகுண்டா நரசிம்மர்
    கதிரி லட்சுமி நரசிம்மர்
    கம்மம்
    சிம்மாசலம்
    யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்

    கர்நாடகம்

    அகர பஞ்சமுக நரசிம்மர்
    கர்பரா நரசிம்மர்(அரசமரம்)
    கனககிரி லக்ஷ்மி நரசிம்மர் (லிங்கம்)
    நரசிப்பூர் குஞ்சால நரசிம்மர்
    பாண்டவபுரம் :யோக நரசிம்மர்
    ஹம்பி லட்சுமி நரசிம்ஹர்

    தமிழ்நாடு :

    நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோவில் யானைமலை மதுரை

    ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் திருக்கோவில், இங்கு லட்சுமி தேவி நரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்து நரசிம்மரை இரு கைகள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத சிறப்பு, திண்டிவனம்
     
    கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோவில்
     
    நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்

    நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோவில், யானைமலை மதுரை
     
    காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில், திருவரங்கம்
     
    ஸ்ரீ நவனித கிருஷ்ணன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் (1500 ஆண்டுகள் முன் கட்டபட்டது), நங்கநல்லூர், சென்னை.
     
    ஸ்ரீ நரசிம்மர் கோவில், வேளச்சேரி, சென்னை.
     
    சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீ உக்கர நரசிம்மர், தாம்பரம், சென்னை.

    ஸ்ரீ அழகிய நரசிங்க பெருமாள் கோவில், எண்ணாயிரம், பாண்டிசேரி.
     
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி கோவில், இராமாபுரம்|சென்னை
     
    ஸ்ரீ நரசிம்மர் கோவில், பரிக்கல்
     
    ஸ்ரீ யோக லட்சுமி நரசிங்கப் ஸ்வாமி கோவில் சோளிங்கர்
     
    ஸ்ரீ யோக நரசிம்மர் கோவில் சிந்தலவாடி
     
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம்,|கோயம்புத்தூர்
     
    ஸ்ரீ உக்கர நரசிம்மர் கோவில், நாமக்கல்
     
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருகோவில்,பொள்ளாச்சி
     
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம்,கோயம்புத்தூர்
     
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், காவேரிப்பட்டணம் கிருட்டிணகிரி

    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், அளேபுரம் - பென்னாகரம் தருமபுரி.

    நரசிம்மர்

    திருகோஷ்டியூர்
    திருநீர்மலை சாந்த நரசிம்மர்
    திருவல்லிக்கேணி அழகியசிங்கர்
    திருவாலி லக்ஷ்மி நரசிம்மர்
    நாகப்பட்டினம் அஷ்டபுஜ நரசிம்மர்
    வேளுக்கை அழகியசிங்கர்
    ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர்
     
    இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
    இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.

    மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது. அதையடுத்து உள்ள கருவறையில் இறைவன் மாங்களீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் கருவறை தேவக் கோட்டத்தில் தெற்கில் பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் சன்னிதி உள்ளது. அந்த சன்னிதியின் இடதுபுறம் மாங்கல்ய மகரிஷியின் திருமேனி உள்ளது. மகரிஷி தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து சுப்பிரமணியர் சன்னிதியும், வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் தனிச்சன்னிதி உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அழகான உயரமான திருமதில் சுவற்றுடன் அமைந்திருப்பதே தனி அழகுதான்.

    2006-ம் ஆண்டு ஜூன் முதல் நாள் இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்கு மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் மாங்கல்ய மகரிஷி இந்த ஊரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். இவர் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் செய்து வைத்தவர் என்றும் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    இந்த மாங்கல்ய மகரிஷி கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். திருமணமாகாதவர்கள் உத்திர நட்சத்திரத்தில் இந்த மகரிஷிக்கும், இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப்பொருள்களை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி வழிபடும் கன்னியரின் கல்யாணக் கனவு பலிக்கிறது. மனதிற்கு பிடித்த மணாளனை அவர்கள் கரம் பற்றுகின்றனர்.



    மணமானதும் அவர்கள் தம் கணவருடன் இந்த ஆலயம் வந்து, மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், கேசரி, அக்கார வடிசல் போன்ற இனிப்பு பிரசாதங்களை அவருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர அந்தக் கன்னியர்கள் தங்களது வேண்டுதல் பலித்து, திருமணம் நிச்சயமாகி, பத்திரிகை அடித்ததும், அந்த முதல் பத்திரிகையை சமர்பிப்பது மாங்கல்ய மகரிஷியின் பாதத்தில்தான்.

    இந்த மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் - இறைவியை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதனை செய்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கக்கூடும் என்பது ஐதீகம். இதுதவிர இந்த ஆலயத்தில் வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம், நவராத்திரி, விஜய தசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை, சோமவாரங்கள், கார்த்திகை தீபம், திருவாதிரை, சங்கராந்தி, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மகத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருச்சி - அன்பில் சாலையில் உள்ள லால்குடி பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம் என்ற தலம்.
    இரண்யகசிபுவை அழிப்பதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அகோபிலம் ஆகும். அந்த நரசிம்ம மூர்த்தி தமிழகத்திலும் 8 தலங்களில் தன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இவை ‘அஷ்ட நரசிம்மர்’ தலங்களாக போற்றப்படுகின்றன.
    தமிழகத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் கோவில்களை பார்க்கலாம். இரண்யகசிபுவை அழிப்பதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அகோபிலம் ஆகும். அந்த நரசிம்ம மூர்த்தி தமிழகத்திலும் 8 தலங்களில் தன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இவை‘அஷ்ட நரசிம்மர்’ தலங்களாக போற்றப்படுகின்றன.

    பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி, பரிக்கல், அந்திலி, சோளிங்கர், சிங்கப்பெருமாள்கோவில், நாமக்கல், சிந்தலவாடி ஆகியவை அஷ்ட நரசிம்மர் தலங்கள். இதில் முதன்மையானதும், அஷ்ட நரசிம்மர் தலங்களில் நடுநாயகமாகமானதுமாக உள்ளது பூவரசங்குப்பம். இதன் கிழக்கில் சிங்கிரிக்குடியும், மேற்கில் பரிக்கல் மற்றும் அந்திலியும், வடக்கில் சோளிங்கர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவிலும், தெற்கில் நாமக்கல் மற்றும் சிந்தலவாடியும் உள்ளன.

    பூவரசங்குப்பம் :

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.

    தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    சிங்கிரிக்குடி :

    பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

    இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

    கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.

    பரிக்கல் :

    இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.
    யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

    சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

    சோளிங்கர் :

    சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.

    விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

    சிங்கப்பெருமாள் கோவில் :

    ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார். காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் :

    திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.
    கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

    அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    சிந்தலவாடி :

    ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார். திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    அந்திலி :


    நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார். எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார். திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலி திருத்தலம்.
    நரசிம்மரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் விரைந்து நிறைவேறுகிறது. சென்னையில் உள்ள நரசிம்மர் கோவில் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பேராகிமடம், சவுகார்பேட்டை: இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.

    திருவல்லிக்கேணி யோக நரசிம்மர்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.

    ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு மாம்பலம்: 900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி, வேளச்சேரி: இங்கு சிறுவன் பிரகலா தனுடன் உரையாடுவதற்கு ஏற்றவாறு சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதாழ்வார் நிற்கிறார். பகவான் யோக நரசிம்மர் சிறந்த வரப்பிரசாதி.

    பொன்னிமேடு நரசிம்மர்: சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடையிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று.

    நங்கநல்லூர் நரசிம்மர்: மகாலட்சுமி (நங்கை) இப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கோவில் கொண்டிருக்கிறாள். நங்கை நல்லூர் என்பதே மருவி நங்கநல்லூர் ஆகிஇருக்கிறது.அந்தக் கோவில்தான் நரசிம்மர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவில் புதையுண்டு போயிற்று, தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.

    இத்தலம் ஆதிகாலத்தில் தட்ஷண திபாலயா என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டபடி நரசிம்மர் இங்கேயே தங்கி அருள் பாலிக்க ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது. உள்ளே சக்கரத்தாழ்வார் தனது பதினாறு கைகளில் விதவிதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். கச்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்களும் பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கின்றன. இவரின் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா விக்ரகம் உள்ளது. அடுத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது.

    5 அடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் கிரீடம். கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை, நான்கு கரங்களின் மேலே உள்ள கரங்களில் சங்கும். சக்கரமும் உள்ளன. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்காரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. சோளிங்கரில் உள்ளது போல் இங்கும் சடாரியல் நாகம் காணப்படுகிறது.

    செங்காடு- யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் : யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டுமானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும்.

    மறைமலைநகர் நரசிம்மர்: சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்ட் மோட்டார் கம்பெனி அருகில் உள்ளது இந்த அபூர்வ நரசிம்மரின் கோவில். ஆதிசேஷன் பீடத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளது அற்புதமாக உள்ளது. ஆதிசேஷன் குடை பிடித்த மாரி உள்ளது. தாயாரும் பெருமாளும் இருவரும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்த மாதிரி இருக்கின்றனர்.

    நரசிம்மரின் மந்திரத்தால் செய்யப்பட்ட அட்சர மாலையும் சாளக்கிராம மாலையும் நரசிம்மருக்குச் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சந்நிதியில் தாயாருக்கு மகாலட்சுமி மந்திரத்தால் அட்சய மாலை செய்து சாற்றப்பட்டுள்ளது. மூலவரும் தாயாரும் தாமரை மலர்கள் மேல் பாதங்களை வைத்துள்ளனர். இது ஒரு பரிகாரத்தலம்.
    ×