என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
    • பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.

    லண்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

    பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.

    பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.
    • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்றார் பிரதமர் ரிஷி சுனக்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

    2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.

    தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது. ஆனாலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

    அடுத்த 12 மாதங்களிலும் இங்கிலாந்தின் பிரச்சினை தீர்வுக்கு வராது. 2023-ம் ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும். இந்த நெருக்கடியான 12 மாதங்களைக் கடந்த பின் இங்கிலாந்து மிகச் சிறந்ததாக இருக்கும்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம்.

    அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா இங்கிலாந்தை மீண்டும் ஒன்றிணைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்தனர்.
    • இந்த இடைக்கால தடைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    லண்டன்:

    ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மகள்களுக்கு தந்தையாக, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு வழங்க நிறைய இருக்கிறது. அவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுப்பது மிகப் பெரிய பின்னடைவாகும் என பதிவிட்டுள்ளார்

    இதேபோல், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.

    ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    • குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில் ஜேம்ஸிற்கு புற்றுநோய் உறுதியானது தம்பதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • கணவர் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போது மனைவிக்கும் புற்றுநோய் எப்படி வந்திருக்க முடியும் என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
    பிரிட்டனில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தம்பதிக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜேப்பர்சன் லவ்டே. இவரது மனைவி பெத்தானி.

    ஜேம்ஸிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜேம்ஸிற்கு ஹோட்கின் லிம்போமா என்கிற வகை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில் ஜேம்ஸிற்கு புற்றுநோய் உறுதியானது தம்பதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஜேம்ஸிற்கு கிமோ தெரப்பி சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதி முடிவு செய்தனர்.

    அதன்படி, பெத்தானி கர்ப்பமானார். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற பெத்தானிக்கு சில மாதங்களில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. பெத்தானி 21 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது உடல்நிலையில் அசாதரணத்தை உணர்ந்துள்ளார். இது அனைத்தும் கர்ப்பம் தொடர்பான அறிகுறிகள் என்று நினைத்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் பெத்தானியை பரிசோதனை செய்ததில் அவருக்கு நான்-ஹோட்கின் லிம்போமா என்கிற வகை புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதனால் தம்பதி அதிர்ச்சியடைந்தனர். கணவர் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போது மனைவிக்கும் புற்றுநோய் எப்படி வந்திருக்க முடியும் என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இருவரும், புற்றுநோய் சிகிச்சையில் இருந்த நிலையில், பெத்தானிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய, ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை, வொர்செஸ்டர்ஷயர் அக்யூட் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தம்பதியை நலம் விசாரித்து வரும் நெட்டிசன்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    • லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரிஷி அதுல் ராஜ் போபட் ஆய்வு மாணவராக படித்து வந்தார்.
    • இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் தெரிவித்தார்.

    லண்டன்:

    இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27).

    லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரிஷி அதுல் ராஜ் போபட் ஆய்வு மாணவராக படித்து வந்தார். மேலும் சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

    அப்போது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் கூறப்பட்ட இலக்கண புதிர் குறித்து படித்தார். அந்த புதிர் சமபலம் கொண்ட இரண்டு விதிகளை பற்றியது. இதில் எந்த விதி வெற்றி பெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் முயற்சி மேற்கொண்டார்.

    தொடக்கத்தில் அவருக்கு எந்த முடிவும் கிட்டவில்லை. என்றாலும் முயற்சியை கைவிடாத அவர் தொடர்ந்து புதிருக்கு விடை கண்டுபிடிக்க முயன்றார்.

    சமீபத்தில் அவர் அந்த புதிருக்கு விடை கண்டுபிடித்தார். இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் அவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் அவர் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிருக்கு விளக்கம் கண்டுபிடித்து அறிஞர்களின் குழப்பத்திற்கு முடிவு கட்டியதாக ரிஷி அதுல் ராஜ் போபட்டின் ஆசிரியர் தெரிவித்தார்.

    • போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார்.
    • இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது.

    லண்டன்:

    முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (54). இவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முறை வென்றவர்.

    லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். அப்போது இவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது.

    தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய அவர் அதை திருப்பிச் செலுத்தாமல் தன்னை 2017-ல் திவாலானவராக அறிவித்தார். சொத்துக்களை மறைத்து ஏமாற்றியதாக 20 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    திவால் வழக்கு என்பதால் தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், சில மாதங்கள் பெக்கர் சிறையில் இருக்க நேர்ந்து.

    இந்நிலையில், போரிஸ் பெக்கர் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலையானதும் அவர் தனது தாய்நாடான ஜெர்மன் சென்றார்.

    • நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
    • உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கேட்டு நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார்.

    லண்டன்:

    இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டதால் அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நீரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர். அதேநேரம் இந்தியாவில் நீரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.

    இந்த விசாரணையின் போது, ஐகோர்ட் நீதிபதிகள் அவரது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று தெரிவித்தனர். மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது.

    இதனையடுத்து நீரவ் மோடி தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அதற்கேற்ப தனக்கு 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும், லண்டன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரவ் மோடி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதன்மூலம், நீரவ் மோடிக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.
    • அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்.பி.க்கள் தற்போது எழுதியுள்ள கடிதம் அந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 40 எம்.பி.க்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக 'கன்சர்வேடிவ் முன்னேற்றம்' என்ற குழுவை சேர்ந்த அந்த எம்.பி.க்கள், பிரதமர் ரிஷி சுனக்குக்கு எழுதியுள்ள எச்சரிக்கை கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இங்கிலாந்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரசுப்பணத்தை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே ஆளும் கட்சிக்குள் புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அவரது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்.பி.க்கள் தற்போது எழுதியுள்ள கடிதம் அந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

    • போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    லண்டன்:

    பிரான்ஸ் அருகே ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.

    விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

    • இங்கிலாந்து அரசராக பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்துவருகிறார்.
    • முட்டையை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ், அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களைச் சந்தித்தார்.

    அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

    மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    ஏற்கனவே, கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இனவெறி பிரச்னையால் அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்ட கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.
    • கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் ராணி கமிலாவின் ஏற்பாட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இளவரசர் வில்லியமின் ஞானத்தாயும், மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளருமான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகைளைக் கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதையடுத்து அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், லண்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்கிடம் இனவெறி பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரிஷி சுனக் கூறியதாவது:

    அரச அரண்மனை தொடர்பான விஷயங்களில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்பமுடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. அத்துடன் நாம் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிறந்த எதிர்காலத்துக்கு செல்வது சரியானது என தெரிவித்தார்.

    • 2011-ம் ஆண்டு, மே 2-ந்தேதி, அமெரிக்க தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார்.
    • என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை.

    லண்டன் :

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று, காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை அரங்கேற்றினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    சரியாக 10 ஆண்டுகள் கழித்து, இந்த பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந்தேதி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    இந்த பின்லேடனின் 4-வது மகன் உமர் பின்லேடன் (வயது 41) ஆவார். இவர் ஓவியர், எழுத்தாளர், கலாசார தூதர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார்.

    இவர் பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு 1981-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறந்தவர் ஆவார்.

    இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது மனைவி ஜேன் என்ற ஜைனா பின்லேடனுடன் பிரான்சில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசிக்கிறார்.

    உமர் பின்லேடன் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிகையில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். அங்கு எனது செல்ல நாய்கள் ரசாயன ஆயுதங்களை சோதிக்க பயன்படுத்தப்பட்டன. என் தந்தையின் உதவியாளர்கள் அந்த சோதனையில் ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

    எனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை.

    எனக்கு பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார்.

    நான் என்னால் முடிந்த அளவு, அந்த மோசமான தருணங்களை மறக்கத்தான் விரும்புகிறேன்.

    நான் 2001 ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டேன்.

    கடைசியாக நான் அப்பாவிடம் பேசியது, அவரிடம் விடைபெற்றபோது 'குட்பை' சொன்னதுதான். அவரும் எனக்கு 'குட்பை' சொன்னார்.

    எனக்கு அந்த உலகம் போதும். நான் அங்கிருந்து வெளியேறியதில் அப்பா மகிழ்ச்சி அடையவில்லை. அதன்பின்னர் நான் அப்பாவிடம் பேசியதே இல்லை.

    என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை.

    எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். மக்கள் இன்னும் என்னை நியாயம் தீர்த்து வருகிறார்கள்.

    என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை.

    அவரது உடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×