என் மலர்
தென் கொரியா
- வடகொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது
- எல்லை பகுதியருகே வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதிலடி என தகவல்
சியோல்:
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதற்றம் உருவானது.
இதற்கு பதிலடியாக எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்களை அனுப்பியது பதற்ற சூழலை அதிகரித்துள்ளது.
இதுபற்றி தென்கொரிய ராணுவம் கூறும்போது, பரஸ்பர எல்லை பகுதியருகே வடகொரியா, 8 போர் விமானங்கள் மற்றும் 4 குண்டுவீச்சு விமானங்கள் என 12 போர் விமானங்களை அனுப்பியது. வானில் இருந்து தரையை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வடகொரிய விமானங்கள் நடத்தக் கூடும் என நம்பப்படுகிறது. எனவே, அதற்கு பதிலடி தரும் வகையில் எங்களது 30 போர் விமானங்களை எல்லையையொட்டிய பகுதிக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளது.
வடகொரியாவின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கையின் ஒரு முயற்சியாகவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டன எனவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.
- வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.
சியோல்:
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்று முன்தினம் அதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது என தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- வசிப்பிடம் அருகே கீழே விழுந்து வெடித்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
- ஏவுகணை தோல்வி குறித்து விசாரணை நடத்த கோரிக்கை
சியோல்:
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்றுஅதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. வட கொரியாவின் இந்த மிரட்டலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க படைகளுடனான பயிற்சியின் போது, தென் கொரிய ராணுவம் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஹியூமூ-2 ஏவுகணையை வீசி சோதனை செய்தது. எனினும் அது குறிப்பிட்ட இலக்கை அடையாமல் தென் கொரியாவின் கடலோர நகரமான கங்னியுங் பகுதியில் கீழே விழுந்து வெடித்ததால் அந்த பகுதியில் வசிப்போர் பீதியடைந்தனர்.
இந்த ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய ராணுவம் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் இது வடகொரியாவின் தாக்குதலாக இருக்க கூடும் என்றும் தென் கொரிய மக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து பேசிய கங்னியுங் பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதி குவான் சியோங்-டாங், ஏவுகணை தோல்வி குறித்து ராணுவம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனிடையே ஹியூமூ-2 ஏவுகணை, புறநகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் விழுந்ததாகவும், இந்த விபத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று தென் கொரிய கூட்டுப்படை தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது.
- பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
சியோல்:
தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் டோஜியோன் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது.
இதுபற்றி அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. மேலும் அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதும் வணிக வளாகம் அருகில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இரவு நேரம் இந்த தீ விபத்து நடந்ததால் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது.
- வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சியோல்:
ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அரசாங்கம் அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்த சோதனை செய்கிறது. குறிப்பாக, எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையானது கடுமையான ஆத்திரமூட்டல் என்று தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுவதாகவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகளம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
- பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
- புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹன்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.
இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
கனமழை, வெள்ளம், சூறாவளி காற்று காரணமாக தென்கொரியாவின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
- இந்த போட்டிகளில் பங்கேற்க ஆறு அணிகள் உருவாக்கம்.
- ஜோகனஸ்பர்க் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரைப் போன்று தென் ஆப்பிரிக்காவில் சி.எஸ்.ஏ. டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த லீக் தொடருக்காக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 6 அணிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதே போல் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகமும் வாங்கி உள்ளன. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணிக்கு முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீட்சனா, ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி என 5 வீரர்கள் ஜோகனஸ்பர்க் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீட்சனா ஆகியோர் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
- தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சியோல் :
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஒமைக்ரான் தொற்றின் வருகையால் உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பல மாதங்களுக்கு பிறகு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1 லட்சத்து 80 ஆயிரத்து 803 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 84,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது அங்கு கடந்த ஏப்ரல் 13-ந்தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிகையாகும். ஏப்ரல் 13-ந்தேதி 1 லட்சத்து 95 ஆயிரத்து 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்றை பாதிப்பை தொடர்ந்து தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதே சமயம் வைரசை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
- மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை
- தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
சியோல்:
தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. ஒரு மணி நேரத்தில 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சாலைகள், ஆற்றங்கரை வாகன நிறுத்துமிடங்கள், ஐந்து தேசிய மலைப் பூங்காக்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன. எட்டு பயணிகள் படகுகளில் இருந்த எண்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டனர்.
மேலும் மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தென்கொரியா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் குறித்து கண்காணித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது.
- செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சியோல்:
தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. ராக்கெட்டின் எந்திரம் திட்டமிட்டதைவிட முன்பே எரிந்ததால் சுற்று வட்ட பாதையில் நுழைய முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று 'நூரி' ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மூன்று நிலைகளில் இயங்க கூடிய நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது.
இதன் மூலம் செயற்கை கோளை புவியின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களி டம் இருப்பதாக தென்கொரிய தெரிவித்துள்ளது.
மேலும் வரும் ஆண்டுகளில் நான்கு நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும், அடுத்த தலைமுறை ஏவுகணையை உருவாக்கவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது. சொந்த தொழில் நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 10-வது நாடு தென்கொரியா ஆகும்.
- வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
- வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சியோல் :
வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.
இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.






