என் மலர்
ஈரான்
- அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது
தெஹ்ரான்:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.
இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார்.
அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது. மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
- இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை.
- சபஹரை பிராந்திய வளர்ச்சி துறைமுகமாக மாற்றுவது குறித்து ஆலோசனை
ஈரான் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், தெக்ரானில் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்தியா, ஈரான் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கான ஈரான் சிறப்புத் தூதரான ஈரான் துணை அதிபர், இந்தியா, ஈரான் உறவை மேலும் வலுப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய அமைச்சரின் ஈரான் வருகைக்கு பாராட்டு தெரிவித்தார். இது மேலும், சபஹர் துறைமுகத்தின் வணிகம், வளர்ச்சி, ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
பிராந்திய வளர்ச்சிக்கான துறைமுகமாக சபஹர் துறைமுகத்தை மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சுட்டிக்காட்டினார். ஈரான் துணை அதிபருடனான சந்திப்பு, வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, ஈரான் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஈரான் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஸ்டம் காசெமியுடன், இருதரப்பு சந்திப்பில் சோனாவால் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
- அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
டெஹ்ரான்:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மகன் ஜாபர் தெரிவித்தார்.
- அவரை கொல்ல முயன்ற நபருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என ஈரான் தெரிவித்தது.
டெஹ்ரான்:
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் ஜாபர் தெரிவித்தார்.
இந்நிலையில், சல்மான் ருஷ்டியைக் கொல்ல கத்தியுடன் நுழைந்த மர்ம நபருக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என ஈரான் அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா விருப்பம்
- ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான வரைவு திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது
தெஹ்ரான்:
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில், அமெரிக்கா, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் ஆகிய நாடுகள் வியன்னாவிற்கு தூதர்களை அனுப்புவதாகக் கூறி உள்ளன. இது, உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தயை புதுப்பிக்கும் கடைசி முயற்சியாக இருக்கும் என தெரிகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தையின்போது மற்ற நாடுகள் பங்கேற்குமா? என்பது உடனடியாகத் தெரியவில்லை.
பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் என்ரிக் மோரா இதுபற்றி கூறும்போது, ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான வரைவு திட்டம் குறித்து இந்த பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்றார். அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அலி பகேரி கனியை ஆஸ்திரிய தலைநகருக்கு அனுப்புவதாக ஈரான் கூறி உள்ளது.
- ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.
- நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை.
தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக பல தசாப்தங்களாக வறட்சியை சந்தித்து வரும் ஈரானின், நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நகர ஆளுநர் யூசப் கரேகர் கூறியதாவது:-
கனமழையால் எஸ்தாபன் நகரின் ரௌட்பால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளர். ஆறு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு அவர் ஈரான், துருக்கி அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெஹ்ரான்:
ரஷியா நடத்தி வரும் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், போர் தொடுத்துள்ள ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
இதற்கிடையே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளைச் சமாளிக்க ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அதிபர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தற்போது ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெஹ்ரான்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் ஜோர்டான் சென்றுள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டம் நடந்து வருகிறது.
அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என்ற கோஷங்களுடன் திரண்ட போராட்டக்காரர்கள் இரு நாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் தேசிய கொடிகளையும் தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சியை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டார்.
- இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.
டெஹ்ரான்:
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது. இது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதை தடுக்க வகை செய்கிறது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அடுத்து அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் விலகினார். தற்போது அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் சேர்க்க முயற்சித்து வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவந்தது.
இதற்கிடையே ஈரான் தனது அணுசக்தி தளங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் கண்காணிப்பு கேமராக்களை மூடிவிட்டது. தற்போது ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தோஹா பேச்சுவார்த்தை முடிவின்றி முடிந்ததற்காக ஈரானும், அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டின. அணு உலைகளில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருவதாகவும், இதற்கான சோதனைகளை ஈரான் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்ததாகவும், உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் டெஹ்ரானில் செயல்பட்டு வரும் இங்கிலாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரி மற்றும் சில வெளிநாட்டினரை ஈரான் புரட்சிப் படையினர் கைது செய்தது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸின் தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகி உள்ளது.
இதனால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சயே கோஷ் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரானின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு 6-ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.
- நிலநடுக்கத்தால் உடனடி சேதம் இல்லை.
ஈரானின் தெற்கு கிஷ் தீவில் இன்று அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.
இதில் இரண்டு நிலநடுக்கங்கள் 4.7 ரிக்டர் அளவிலும், தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள தீவில் 5.3 ரிக்டர் அளவிலும் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயில் தடம்புரண்ட விபத்தில் மேலும் 87 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து நடந்த இடத்தில் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டன.
டெஹ்ரான்:
கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தபாஸ் நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர். மேலும் பல ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருப்பதாக மாகாணத்தின் மேலாண்மைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரானில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 87 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.






