என் மலர்
ஜெர்மனி
- ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அங்கு முனீச் நகரில் இந்திய வம்சாவளியினரிடம் பேசினார்.
- 4வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது என்றார்.
முனீச்:
ஜெர்மனியின் முனீச் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியாதான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவசர நிலை.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியுள்ளது. அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கியுள்ளோம். 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் வங்கி நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை தற்போது பெற முடியும்.
கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் பலன் அடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது அதனால்தான் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால், தற்போதுள்ள 4-வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. டேட்டா நுகர்வில் இந்தியா இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என தெரிவித்தார்.
- பொருளாதார ரீதியாக ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் ஜி7 நாடுகள் நடவடிக்கை எடுக்க திட்டம்
- ஜி7 மாநாட்டின் முதல் நாளான இன்று பணவீக்கத்தை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
எல்மாவ்(ஜெர்மனி):
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பொருளாதார ரீதியாக அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.
ரஷியாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 உறுப்பு நாடுகள் அறிவிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை ஜி7 மாநாட்டின்போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி7 மாநாடு ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பதற்கும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன.
பெர்லின்:
ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியது.
மேலும், தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் கூறினார்.
- நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் போலந்து வீரரிடம் தோல்வி அடைந்தார்.
- ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி கடந்த வாரம் முதலிடம் பிடித்தார் மெத்வதேவ்.
ஹாலே:
ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், போலந்தைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஹர்காக்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது.
- சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அண்டை நாடான பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து நீக்க மறுத்துவிட்டது.
பெர்லின்:
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு 27 நிபந்தனைகளை விதித்தது. அதன்பின், மேலும் 7 நிபந்தனைகளை விதித்தது.
மொத்தமுள்ள 34 நிபந்தனைகளில் 32 நிபந்தனைகளை தாங்கள் நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தங்கள் நாட்டை கிரே பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது. கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது. இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது.
இந்நிலையில், நான்காவது ஆண்டாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளது.






