என் மலர்
விளையாட்டு
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல்-இரவாக நடக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது.
மோதிரா சர்தார் படேல் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இங்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது.
முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமர முடியும். மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. அதை அகமதாபாத் ஸ்டேடியம் முறியடித்தது.
சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்சிங் ரூம்கள் உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. சீரமைப்புக்கு பிறகு முதல் சர்வதேச போட்டி நடைபெறுவதால், அங்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியை நேரில் ரசித்தனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- 10-வது நிலையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா).
இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 2019-ம் ஆண்டு சாம்பியன் ஆன அவர் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். செரீனா 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தார்.
2-வது அரை இறுதி ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள ஜெனீபர் பிராடி (அமெரிக்கா)- 25-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இறுதி போட்டியில் ஒசாகாவுடன் மோதுவார்.
ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஜோகோவிச் (செர்பியா), கராட்சேவ் (ரஷியா), மெட்வதேவ் (ரஷியா)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.
8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணி நிர்வாகமும், தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றிவிடப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், மற்றொரு ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தை ராஜஸ்தான் அணியும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோரை பெங்களூரு அணியும் விடுவித்தன.

விடுவிக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்கள். அத்துடன் நிறைய பேர் ஏலத்திற்கு புதிதாக தங்கள் பெயரை பதிவு செய்தனர். மொத்தம் 1,114 வீரர்கள் ஏலத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஐ.பி.எல் நிர்வாகம், அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு 292 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை அறிவித்தது.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்தியர்கள் ஆவர். 65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் 17 பேரும் உள்ளனர்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த ஏலம் நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை வாங்க மொத்தம் ரூ.85 கோடி செலவு செய்யலாம். இதில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க முடியும். அந்த வகையில் அதிகபட்சமாக பெயர் மாற்றத்துடன் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் ரூ.53.2 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணிக்கு மொத்தம் 9 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரூ.19 கோடியே 90 லட்சம் இருப்பு வைத்திருக்கிறது. ஒரு வெளிநாட்டவர், 5 இந்தியர் என்று 6 பேரை சென்னை அணி எடுக்கலாம்.
ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 22 பேரும் அதிகபட்சமாக 25 வீரர்களையும் வைத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு அணியும் காலியான இடங்களை முழுமையாக நிரப்பினால் மொத்தம் 61 வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.
ஏலப்பட்டியலில் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், ஷகிப் அல்-ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், பிளங்கெட், ஜாசன் ராய், மார்க்வுட், கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகிய 10 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களை ரூ.2 கோடியில் இருந்து ஏலத்தில் கேட்பார்கள். இதில் சுமித், மேக்ஸ்வெல், மொயீன் அலி, கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகியோர் அதிக விலை போவதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை அணியில் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் சரியான கலவைக்கு அதிரடியான வெளிநாட்டு வீரர் அவசியமாகும். அனேகமாக மேக்ஸ்வெல், மொயீன் அலி, மார்னஸ் லபுஸ்சேன் (தொடக்க விலை ரூ.1 கோடி) ஆகியோரில் ஒருவரை சென்னை அணி நிர்வாகம் குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு கே.கவுதம், ஜலஜ் சக்சேனாவை கவனத்தில் கொண்டுள்ளனர்.
உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலான், அலெக்ஸ் ஹாலஸ் (தொடக்க விலை தலா ரூ.1½ கோடி), ஆரோன் பிஞ்ச், ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் (தலா ரூ.1 கோடி), கைல் ஜாமிசன், கிறிஸ் மோரிஸ் (ரூ.75 லட்சம்), ஷிவம் துபே (ரூ.50 லட்சம்) ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய வீரர் புஜாரா (ரூ.50 லட்சம்) மீது இந்த தடவையாவது அணிகள் கரிசனம் காட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏலப்பட்டியலில் ஷாருக்கான், பெரியசாமி, முகமது, அருண்கார்த்திக், ஹரி நிஷாந்த் உள்பட 8 தமிழக வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் தொடரில் அதிரடி காட்டி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த ஷாருக்கானை எடுக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் ஆகும். தெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
ஏலம் நிகழ்ச்சியை பிற்பகல் 3 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு அணிகளும் ஏற்கனவே தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவித்தன.
ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நாளை (18 ந் தேதி) நடக்கிறது. மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஏலம் நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164 பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
மொத்தம் 1114 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இதில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 292 வீரர்களாக குறைத்து இறுதிப் பட்டியலை வெளியிட்டது.
இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் ரூ196.60 கோடி வரை செலவழிக்கின்றன.
இந்தியாவை சேர்ந்த ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் மற்றும் மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), மொய்ன் அலி, ஜேசன் ராய், மார்க்வுட், சாம்பில்லிங்ஸ் பிளங்கெட் (இங்கிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) ஆகிய 10 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 12 வீரர்களுக்கு ரூ ரூ.1.5 கோடியும், 11 வீரர்களுக்கு ரூ.1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம். இருவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் கடந்த சீசனில் முறையே பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் விளையாடினார்கள்.
இதேபோல ஜேசன் ராய், ஆரோன் பிஞ்ச், டேவிட் மலன் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனாலும் அந்த அணி 18 வீரர்களை தக்க வைத்தது.
ஹர்பஜன் சிங், பியுஸ் சாவ்லா, கேதர் ஜாதவ், முரளி விஜய், மோனு சிங் மற்றும் ஓய்வு பெற்ற வாட்சன் ஆகிய 6 பேர் விடுவிக்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பா வாங்கப்பட்டார்.
சி.எஸ்.கே. விடம் ரூ.19.9 கோடி இருக்கிறது. 6 வீரர்களை தான் ஏலத்தில் எடுக்க முடியும். வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். மேக்ஸ்வெல், சுமித், ஜேசன் ராய், மொய்ன் அலி ஆகியோரில் ஒருவரை எடுக்க முயற்சிக்கும்.
பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.53.2 கோடி இருக்கிறது. ஐ.பி.எல் ஏலத்தில் ராஜஸ்தான் ரூ.37.85 கோடியும், பெங்களூர் ரூ.35.4 கோடியும், மும்பை ரூ.15.35 கோடியும், டெல்லி ரூ.13.4 கோடியும் ஐதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா ரூ.10.75 கோடியும் செலவழிக்கலாம்.






