search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்வுட்
    X
    மார்க்வுட்

    ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து மார்க்வுட் திடீர் விலகல்

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கவுள்ள நிலையில் ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார்.
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஏலம் நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164 பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

    இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் ரூ.196.60 கோடி வரை செலவழிக்கின்றன.

    பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.53.2 கோடி இருக்கிறது. ராஜஸ்தான் ரூ.37.85 கோடியும், பெங்களூர் ரூ.35.4 கோடியும், மும்பை ரூ.15.35 கோடியும், சென்னை ரூ.19.9 கோடியும் டெல்லி ரூ.13.4 கோடியும் ஐதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா ரூ.10.75 கோடியும் ஐ.பி.எல். ஏலத்தில் செலவழிக்கலாம்.

    மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம். இருவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் கடந்த சீசனில் முறையே பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் விளையாடினார்கள். மேக்ஸ்வெலுக்கும், சுமித் துக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஜேசன் ராய், ஆரோன் பிஞ்ச், டேவிட் மலன் உள்ளிட்டோரும் அதிக விலைக்கு ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலப் பட்டியலில் ஷாருக்கான், பெரியசாமி, முகமது, அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த் உள்பட 8 தமிழக வீரர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி. எல்லில் இருந்து விலகுவதாக அவர் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

    மார்க்வுட்டுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவரது விலகலால் ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் வீரர்களின் எண்ணிக்கை 291 ஆக குறைந்தது.

    மார்க்வுட்டுக்கு இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. எஞ்சிய 2 டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக அவர் அணியோடு இணைந்துள்ளார்.

    குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க வேண்டி இருப்பதால், மார்க்வுட் ஐ.பி.எல்லில் இருந்து விலகி உள்ளார். 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடினார்.

    கடந்த முறை அவரை மும்பை அணி ஒப்பந்தம் செய்ய முயன்றது கடைசி நேரத்தில் அது பலன் இல்லாமல் போனது. மார்க்வுட் 18 டெஸ்ட், 53 ஒருநாள் போட்டி மற்றும் பதினோரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.
    Next Story
    ×