என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
கோவையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவன அதிபர் மார்ட்டின் சார்பில் சம்பத்குமார் என்பவர் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
கோவையை சேர்ந்த நூர்முகமது, அஷ்பக் ஆகியோர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்திய விழாவுக்கு எனக்கும், என் குடும்பத்துக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
இதன்பேரில் என் மனைவி லீமாரோஸ் மார்ட்டின் கோவையில் நடந்த விழாவில் பங்கேற்றார். எங்கள் நிறுவனத்துக்கும், இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனால் எங்கள் நிறுவனம் தான் இதன் பின்னணியில் செயல்படுவதாக பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து கோவையில் நாங்கள் புகார் அளித்தோம். இனி எங்கள் பெயரையோ, நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்த மாட்டோம் என அவர்கள் வாக்குறுதி அளித்து மன்னிப்பு தெரிவித்தனர்.
இப்போது புதுவையில் அதேநபர்கள் விஷ்ணுவரதன் என்ற நபர் மூலம் எம்.எல்.எம். என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.
அவர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். இவர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி முதலீடுகளை பெற்று வருகின்றனர்.
எங்களுக்கும், இந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் நிறுவனம் எந்த கிரிப்டோ கரன்சிக்காகவும் முதலீடுகளை பொது மக்களிடம் கேட்கவில்லை.
இந்த நிலையில் எங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் ஆகாஷ் (வயது 20). பட்டயப்படிப்பு முடித்து விட்டு இவர் காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
இன்று அதிகாலை ஆகாஷ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றனர்.
கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கு சாலையோரம் வைத்திருந்த விளம்பர பேனர் மரக்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆகாஷ் தலையில் படுகாயமடைந்தார். ஸ்ரீபனுக்கு கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய வாலிபர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து காயமடைந்த வாலிபர்களின் குடும்பத்திற்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கட்சிக்கொடி ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோபிகா, டி.பி.ஆர்.செல்வம், என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மக்கள் ஆதரவுடன் எங்கள் ஆட்சி அமைந்துள்ளது. புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் உதவியோடு என்.ஆர்.பேரியக்கத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடக்கிறது. புதுவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டங்களை தீட்டி வருகிறோம். நாங்கள் அறிவித்த அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்துவோம்.
எங்கள் அரசின் திட்டங்கள் அனைத்து சமுதாயத்தினரின் வளர்ச்சிக்கானவையாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி அரசு காலிபணியிடங்கள் நிரப்பப்படும். அதன் அடிப்படையில் காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதவியோடு, பிரதமர் மோடியின் உதவியோடு புதுவை மாநிலம் நிச்சயமாக வளர்ச்சி பெறும். இந்த ஆட்சி அமைய பாடுபட்ட எங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரூ.1,729 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளதே?
பதில்:-மத்திய அரசிடம் ரூ.2 கோடி கூடுதலாக கேட்கப்பட்டுள்ளது.
கேள்வி:- வாரிய தலைவர் பதவி எப்போது வழங்கப்படும்?
பதில்:- வாரிய தலைவர் பதவி நிரப்பப்படும் போது உங்களுக்கு தெரியவரும்.
கேள்வி:- நடிகர் விஜய் உடனான சந்திப்பை கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளதே?
இதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
காரைக்கால் காஜியார் வீதியைச்சேர்ந்தவர் முகம்மது ஆசிக் அம்ஜா (வயது36). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2021-ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. இதனால், மனம் உடைந்து போன இவர், சென்னையில் தங்கி சில மாதங்கள் வேலை செய்து வந்தார். பின்னர் மீண்டும் காரைக்கால் வந்து விட்டார்.
காரைக்காலில் வேலை எதுவும் செய்யாமல், தினமும் மது குடித்து வந்தார். இந்த நிலையில் திருவாரூரில் உள்ள தனது பெற்றோரை பார்த்துவிட்டு காரைக்கால் வந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி காரைக்கால் பஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்துள்ளார்.
தகவல் அறிந்த அவரது உறவினர் அப்துல்கரீம், அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், முகம்மது ஆசிக் அம்ஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






