என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் தூக்கு போட்டு சாவு

    உறவினர்களுக்கு தினமும் சமைத்து போடவேண்டும் என்ற வேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலம் பாலேஸ்வரர் பகுதியை சேர்ந்தவர் மனோரஞ்சன் பெகரா(வயது34). இவர் கடந்த 8 மாதங்களாக புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இதற்காக சாணரப் பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி இஸ்திரி மற்றும் 5 வயது பெண் குழந்தை பாக்கியஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இதற்கிடையே மனோரஞ்சன் பெகராவின் உறவினர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் இருந்து புதுவைக்கு வேலை தேடி வந்தனர். அவர்கள் மனோரஞ்சன் பெகராவின் வீட்டின் அருகே மற்றொரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மனோரஞ்சன் பெகரா வற்புறுத்தலின் பேரில் அவரது மனைவி இஸ்திரி தினமும் சாப்பாடு தயாரித்து கொடுத்து வந்தார்.

    இந்தநிலையில் மனோரஞ்சன் பெகராவின் உறவினர்கள் மேலும் சிலர் புதுவைக்கு வேலை தேடி வருவதாக இஸ்திரிக்கு தகவல் வந்தது. 

    ஏற்கனவே மனோரஞ்சன் பெகராவின் உறவினர்களுக்கு தினமும் சமையல் செய்து அலுத்து போனநிலையில் மேலும் சிலர் வருவதால் தனக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் என்று இஸ்திரி வேதனையடைந்தார்.

    இதுபற்றி தனது கணவரிடம் கூறி வீட்டை வேறு இடத்துக்கு மாற்றுமாறு இஸ்திரி கூறி வந்தார். அதற்கு மனோரஞ்சன் பெகராவும் சம்மதம் தெரிவித்து வேறு வீடு பார்ப்பதாக தெரிவித்து வந்தார். 

    ஆனாலும் கணவரின் சமாதானத்தை இஸ்திரி ஏற்றுக்கொள்ளாமல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் மனோரஞ்சன் பெகரா வழக்கம் போல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த போது அவரது மனைவி சமையல் செய்யாததால் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்கு சென்றார்.  

    சிறிது நேரம் கழித்து மனோரஞ்சன் பெகராவின் உறவினர்கள் வீட்டுக்கு சாப்பிட சென்ற போது அங்கு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் இதுபற்றி அவர்கள் மனோரஞ்சன் பெகராவுக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து மனோரஞ்சன் பெகரா வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மனைவி சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×