என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
எலி மருந்து தின்று தொழிலாளி தற்கொலை
குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே திருவாண்டார் கோவில் வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது32). இவர் கட்டிடம் இடிக்க பயன்படும் கம்ப்ரசர் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். உமா மகேஸ்வரி கதிர்காமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
லாரன்சுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாரன்சை விட்டு பிரிந்து அவரது மனைவி உமாமகேஸ்வரி குழந்தைகளுடன் கவுண்டன் பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். லாரன்ஸ் தனது தாய் அன்னபூரணியுடன் இருந்து வந்தார்.
ஆனாலும் அவ்வப்போது உமாமகேஸ்வரி திருவாண்டார் கோவிலுக்கு சென்று கணவர் மற்றும் மாமியாரை பார்த்துவிட்டு வருவார். எனினும் குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றதால் லாரன்ஸ் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த லாரன்ஸ் சாப்பாட்டில் எலி மருந்து கலந்து தின்றார். இதில் மயங்கி கிடந்த லாரன்சை அவரது தாய் அன்னபூரணி மற்றும் சகோதரி அன்னை வேளாங்கன்னி ஆகியோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த பின்னரும் உடல்நிலை மோசமானததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லாரன்ஸ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரி அன்னை வேளாங்கன்னி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






