என் மலர்tooltip icon

    தேனி

    • ஆண்டுக்கு 12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.
    • விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேசன்கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

    சமத்துவப் பாதையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் என 2 முக்கிய நோக்கங்களை கொண்டது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து தந்துள்ளது. இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவற்காக அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முகாம் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு பணிகளையும், முகாம் நடைபெறும் நாளன்று தேவையான குடிநீர், இருக்கை வசதிகள், இணைய வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் 517 ரேசன் கடைகள் உள்ளன. இக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர்களால் வீடு வீடாக சென்று நேரில் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேசன்கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப தலைவிகள் முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் பொழுது, குடும்ப அட்டை அசல், ஆதார் அட்டைஅசல், வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் மின்சார கட்டண ரசீது ஆகிய 4 வகையான அடையாள அட்டைகளை அசலாக எடுத்து செல்ல வேண்டும்.

    விண்ணப்பத்தோடு எந்தவிதமான ஆவணங்களின் நகலினையும் இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு மையத்திலோ அல்லது விண்ணப்பங்களுக்கோ எந்த விதமான கட்டணங்களும் செலுத்த தேவையில்லை.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரிபார்த்திட விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு சென்றவுடன் உதவி மையங்களில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விண்ணப்பப் பதிவு பணியாளரிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

    ஒரு குடும்ப அட்டையில் உள்ள பெண்களில் ஒருவர் மட்டுமே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பப் பதிவு மையத்திற்கு நேரில் எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள எண் கொண்ட கைப்பேசியினை எடுத்து செல்வது விண்ணப்பத்தினை பதிவு செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    • தனது கணவருக்கு அருகில் வசிக்கும் உறவினர்கள் சேர்ந்து 2-ம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • சம்பவத்தன்று செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வீடு புகுந்து ஷீலாவை கடுமையாக தாக்கினர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி ஷீலா (வயது 35). செல்லப்பாண்டிக்கு அருகில் வசிக்கும் உறவினர்களான மயிலம்மாள், செல்லம்மாள், சூர்யா, ஈஸ்வரபாண்டியன் ஆகியோர் சேர்ந்து 2-ம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    இதற்கு ஷீலா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வீடு புகுந்து ஷீலாவை கடுமையாக தாக்கினர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டனர்.

    படுகாயமடைந்த ஷீலா தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர்சுந்தரம் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அறிவுத்திருக்கோவில் நிர்வாகத் தலைவர்சிவராமன் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

    சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி வனிதா, ஆடிட்டர் மித்ராதேவி , அறிவுத்திருக்கோவில் செயலாளர் தயாளன், பொருளாளர் சந்திரன், திட்ட அலுவலர்சுகந்தி ,மக்கள் தொடர்பு அலுவலர் சங்கரேஸ்வரி, பசுமை பங்காளர் அமைப்பின் நிறுவனர் பனை முருகன், சீனிவாசா நகர் நலச்சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ராஜ்மோகன், காஞ்சனா, அனீஷ், சில்லை அஜித்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    இதில் தி கிரீன் லைப் பவுண்டேசன் உறுப்பினர்கள் சேகர், செந்தில்ராஜ், அர்ச்சுனன்,சந்திரசேகர், ஹரி கிருஷ்ண பாண்டியராஜ், உதயா ரத்தினம் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர். வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • கணவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.
    • போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், அவரது குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தரவி மனைவி அனுஷா(25). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 35 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனந்தரவிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.

    மேலும் அனுஷாவிடம் கூடுதலாக 20 பவுன் நகையும், ரூ.5 லட்சம் பணம் வாங்கி வரவேண்டும் என கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வீட்டைவிட்டு துரத்தியதால் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அனுஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஆனந்தரவி, அவரது குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வாகனம், பைக் மற்றும் தனியார் பஸ் மோதி 3 பேர் பலி.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விஜய்(25). இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். சக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த விஜய் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் வழியிலேயே விஜய் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சகோதரர் அஜித் அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜபாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணிக்கு செல்வதற்காக சின்னமனூர்- உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரவணக்குமாரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(70). தேவாரம்- போடி சாலையில் கோணம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மாரியப்பன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
    • குழாயை சீரமைக்க மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கி 22 மாதங்களுக்கு பிறகு தற்போது ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, ஹைேவவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு என 5 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேங்கும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக இரவங்கலாறு அணையில் இருந்து சுமார் 2000 மீ தொலைவில் உள்ள சுருளி நீர்மின்நிலையத்திற்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    இதன்மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

    இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மதுரை தலைமை வனபாதுகாவலர் தலைமையில் இரவங்கலாறு அணைப்பகுதியில் 220 மீ குழாயை சீரமைக்க மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கினர். இதனைதொடர்ந்து 22 மாதங்களுக்கு பிறகு தற்போது ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    விரைவில் பணிகள் முடிந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கயத்தாறு மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • குடும்ப பிரச்சினைகள் காரணமாக 3 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). இவர் பைப் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நாகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    நாகேஸ்வரி கோபித்துக் கொண்டு திண்டுக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மேலும் மது குடித்து விரக்தியில் இருந்த பாண்டி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்து விட்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே தே.லெட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். தேவாரத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அபிநயா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது. அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

    அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

    • தமிழக பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் வைகை அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 505 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த வாரம் தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை பெய்தது. குறிப்பாக கேரளாவில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.

    மழை தொடர்ந்து பெய்து அணையின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. தமிழக பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் வைகை அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரளாவில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 505 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49 அடியாக உள்ளது நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 0.8, தேக்கடி 3, சண்முகா நதி அணை 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மொத்தம் ரூ.44,000 மதிப்புள்ள காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி "தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

    மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் எஸ்.ஆர்.ஜி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அஸ்விதா முதல் பரிசும், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் மோகன்பாபு 2-ம் பரிசும், சில்லமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜனனி 3-ம் பரிசும் பெற்றனர்.

    மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 55 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் உத்தமபாளையம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி காயத்ரி முதல் பரிசும், கெ.கல்லுப்பட்டி, புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு அப்ராபானு 2-ம் பரிசும், வைகை அணை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி ரூபிகா 3-ம் பரிசும் பெற்றனர்.

    கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10000, 2-ம் பரிசாக ரூ.7000, 3-ம் பரிசாக ரூ.5000 என்ற வகையில் மொத்தம் ரூ.44,000 மதிப்புள்ள காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    • டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றுகூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் பெண்கள் கழிப்பிடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றுகூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

    போடி டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் திடீரென சின்னமனூர்-கம்பம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×