என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் 2 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சியில் 892 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறைமங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.9 கோடி செலவில் 892 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் வழங்கினார்.

    விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க மலரினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டார்.பின்னர் அமைச்சர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எறையூர் கிராமத்திற்கு நேரடியாக வந்து காலனி தொழில் பூங்கா கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

    இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நம்முடைய பகுதியில் வேலை கிடைக்கும்.அரசால் அனைவருக்கும் அரசுத் துறையில் வேலை வழங்க முடியாது என்ற காரணத்திற்காக, தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை பெரம்பலூரில் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதனை அறிந்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தி வருபவர்தான் நம் முதலமைச்சர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சி.ராஜேந்திரன், வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கூலி உயர்வு கோரி நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தமிழ்நாடு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள மாவட்ட அரசு டாஸ்மாக் குடோன் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தின்போது, கூலி உயர்வு கேட்டு போராடும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களை போலீசாரை கொண்டு மிரட்டி, தொழில் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் கூலி உயர்வு பிரச்சினையில் தலையிட்டு, மதுபாட்டில்கள் பெட்டி இறக்குவதற்கான கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் அச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மதுபாட்டில்களை இறக்க முடியாமல் டாஸ்மாக் கிடங்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சேற்றில் சிக்கி விவசாயி சாவு உயிரிழந்தார்.
    • மீன் பிடிக்க ஏரிக்கு சென்றவர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 40). விவசாயி. இவர் நேற்று தழுதாழையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஏரியில் இறங்கி மீனுக்காக வலை விரித்தபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்டார். பின்னர் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
    • தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்த பிரம்மதேசத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதுபோன்று இந்தாண்டும் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 25 அடி உயர தேரை பூக்களால் அலங்கரிக்கும் தலை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமியை தலையிலும், தோளிலும் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • நம்ம ஊரு சூப்பர் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கேசவன் தாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் ஆயத்த நடவடிக்கைகள், வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துதல், பொது இடங்களில் சுகாதார மேம்பாடு, துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பான உபகரணங்களை வழங்குவது, சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் மேலாண்மை முக்கியத்துவம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் தடுப்பு மருத்துவம் மற்றும் குடும்ப நலன் குறித்து இரண்டு நாள் சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    • ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது
    • பிளஸ் -2 பொதுத்தேர்வில் சிறப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.மாணவி ரிபாயா 600க்கு 592 மதிப்பெண்னும், மாணவர் அருண்சங்கர், மாணவி அபிராமவல்லி 588-ம், மாணவர் அபிஷேக் 587 என மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 13 பேரும், உயிரியல் பாடத்தில் 12 பேரும், இயற்பியல், கணிதம், கணக்குபதிவியியல் ஆகிய பாடங்களில் தலா 2 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 7 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 5 பேரும் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்கள், 575க்கு மேல் 75 மாணவர்கள், 550க்கு மேல் 97 மாணவர்கள், 500க்கு மேல் 358 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியின்போது முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • 2 வீடுகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார்
    • 4 பவுன், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    பெரம்பலூர்.

    குன்னம் தாலுகா, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளையும், மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது தொடர்பான புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே குருவாடிபட்டி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (வயது 38) என்பது தெரியவந்தது. இவர், நல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோரது வீடுகளில் திருடியது தெரியவந்தது. பின்னர் மதியழகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

    • மாற்று திறனாளிகளிடம் இருந்து மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றுக்கொண்டார்
    • 3 மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி 7 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 5 மனுக்கள், 3 சக்கர சைக்கிள் வேண்டி 1 மனு, இலவச வீடு மற்றும் பட்டா வேண்டி 12 மனுக்கள், வங்கி கடன் வேண்டி 6 மனுக்கள், உதவித்தொகை வேண்டி 5 மனுக்கள், திருமண உதவித்தொகை வேண்டி 1 மனு, 100 நாள் வேலை முழு ஊதியம் கிடைக்க வேண்டி 2 மனுக்கள், சிறப்பு (ஏ.ஒய்.ஒய்.) குடும்ப அட்டை வேண்டி 1 மனு, உதவி உபகரணங்கள் வேண்டி 5 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் காதொலி கருவி, ஊன்றுகோல் போன்ற உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

    • போலீசார் சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் வடக்கு மாதவி கிராம பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் ஷீபா ஆகியோர் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • விடுமுறை காலம் என்பதால் குவியும் சுற்றுலா பயணிகள்
    • வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் சுற்றுலாவினர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ரஞ்சன்குடியில் கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. பகைவா்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவா்களுடன் காட்சியளிக்கும் இந்த கோட்டையானது, செஞ்சி கோட்டையை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச்சுவரில் மீன் சின்னமும், போா் வாள்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவா்களுக்கும் தொடா்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையை பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையினால் ரஞ்சன்குடி கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கோட்டைக்கு வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    • பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 10-ந் தேதி தொடங்குகிறது
    • போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில் 2 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மத்திய அரசின் பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட அளவில் நடத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகள் பிரிவு எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் மத்திய அரசின் பணிக்கான தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரெயில்வே பணி தேர்வாணையம், வங்கி பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவை நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந்தேதி தொடங்கி, தொடர்ந்து 3 மாதங்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில் 2 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூடுதல் அரங்கத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வேப்பூர் வட்டார ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 150 மாணவர்கள் அல்லது இளைஞர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள். மாணவர்கள் பதிவுகள் தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மூலம் ஆன்லைன் இணைப்பு (லிங்க்) வழங்கப்படும்.

    150 மாணவர்களுக்கு மேல் பதிவுகள் நிகழ்ந்திருந்தால், மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சுலபமாக வந்து செல்லும் வகையில் போதிய போக்குவரத்து வசதி மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் சிறப்பாக ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×