என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி நகராட்சியில் 212 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. 15 இடங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற்றனர்.

    நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பா ளர்கள், சுயேட்சை வேட்பா ளர்கள் வேட்புமனுதாக்கலில் தீவிரம் காட்டினர். தங்களது வார்டுகளில் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுதாக்கல் செய்தனர். ஊட்டி நகராட்சி அலுவலகம் உள்பட 15 இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று ஒரே நாளில் ஊட்டி நகராட்சியில் 48 பேர், குன்னூர் நகராட்சியில் 70 பேர், கூடலூர் நகராட்சியில் 52 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 101 பேர் என மொத்தம் 271 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். அதிகரட்டி பேரூராட்சியில் 55 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 40 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 27 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 63 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 52 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

    கேத்தி பேரூராட்சியில் 45 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 5 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 83 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 21 பேர், ஓவேலி பேரூராட்சியில் 28 பேர், சோலூர் பேரூராட்சியில் 42 பேர் என மொத்தம் 508 பேர் மனுதாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் மொத்தம் 779 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளில் 1,382 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். ஊட்டி நகராட்சியில் போட்டியிட 212 பேர், குன்னூர் நகராட்சியில் 146 பேர், கூடலூர் நகராட்சியில் 121 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 122 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். 

    அதிகரட்டி பேரூ ராட்சியில் 76 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 53 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 78 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 76 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 71 பேர், கேத்தி பேரூராட்சியில் 76 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 59 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 126 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 46 பேர், ஓவேலி பேரூராட்சியில் 68 பேர், சோலூர் பேரூராட்சியில் 52 பேர் என மொத்தம் 1,382 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 

    இன்று இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு, சில நாட்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
    கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் கூடலூர் பகுதியில் ஆய்வு செய்தார்.

    அப்போது ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் நடை பெற்று வந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பணிகள், தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீபுரம் பகுதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் பெரியசூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். 

    அங்கு அடிப்படை வசதிகள், மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை மற்றும் சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் நாளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் தேர்தல் பார்வையாளர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சி களுக்கு 19-ந்தேதி வாக்குப்பதிவும், 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.அதனடிப்படையில் ஓவேலி பேரூராட்சி மற்றும் நெல்லியாளம் நகராட்சிக் குட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு  வசதிகள் மற்றும் வாக்கு பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

    மேலும், கூடலூர் அரசு  மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப் பதற்கு ஏதுவான முறையில் வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதனையும் நேரில் பார்வையிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடுவட்டம் பேரூ ராட்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்)  இப்ராகிம்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, கூடலூர் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஷ்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.
    உறைபனி தாக்கம் அதிகரித்ததால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பூந்தொட்டிகளில் நிரப்பப்பட்ட மண் மீது உறைபனி கொட்டி கிடந்தது. ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.
    ஊட்டி:

    மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுவதோடு, உறைபனி தாக்கம் காணப்படும்.

    கடந்த சில நாட்களாக ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது.

    பச்சை புல்வெளிகள் தெரியாத அளவுக்கு அந்த இடமே வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது. காந்தல் முக்கோணம் பகுதியில் புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருந்தது. மேலும் உறைபனி தாக்கத்தால் தண்ணீரும் ஆவியாக மாறியது.

    உறைபனி தாக்கம் அதிகரித்ததால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பூந்தொட்டிகளில் நிரப்பப்பட்ட மண் மீது உறைபனி கொட்டி கிடந்தது. ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.

    அதிகாலையில் விவசாய பணிகளுக்கு செல்கிறவர்கள் குளிரை போக்க நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தும், கம்பளி ஆடைகளை அணிந்தும் சென்றனர்.

    தொடர் பனியால் தாழ்வான பகுதிகளில் உள்ள புல்வெளிகள், வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் கருகி உள்ளன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்கள், கார்கள் மீது உறைபனி படர்ந்து உள்ளது. அதனை அகற்றினாலும் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. என்ஜின் சூடாக நீண்ட நேரம் ஆகிறது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியின் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உறைபனி காணப்பட்டது.
    294 வார்டுகளில் 409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது,
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள், 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டுகளிலும் நடைபெறவுள்ளது. 

    இத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 53,430 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 65,244 பெண் வாக்காளர்களும், இதர 7 வாக்காளர்களுமாக வாக்களிக்க உள்ளனர். மொத்தம் உள்ள 294 வார்டுகளில் 409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அவற்றில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகளில் 495 கட்டுப்பாட்டு கருவிகளும், 495 வாக்களிக்கும் எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 

    மேலும் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் துணை ஆட்சியர் நிலையில் தலா ஒருவர் வீதம் 15 உள்ளூர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலில் ஈடுபடு ம் 1980 அலுவலர்களுக்கும் 11 பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களாக 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டரின் வளர்ச்சிப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு 6 அலுவலர்கள் 24 மணி நேரம் பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு கவனித்து வருகின்றனர்.  அதேபோல, நீலகிரி மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளராக கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 
    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் 108 இடங்கள், 11 பேரூராட்சிகளில் 186 இடங்கள் என 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 

    இதையடுத்து தேர்தல் நடத்தவும், வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியை மேற்கொள்ளவும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 

    அதன் விவரம் வருமாறு:-

    ஊட்டி நகராட்சி தேர்தல் பதிவாகும் வாக்குகள் ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகின்றன. குன்னூர் நகராட்சி வாக்குகள் குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி யிலும், நெல்லியாளம் நகராட்சி வாக்குகள் பந்தலூர் பஜார் புனித பிரான்சிஸ் சேவியர் ஆரம்ப பள்ளி கட்டிடத்திலும் எண்ணப்படுகின்றன. 

    கூடலூர் நகராட்சி மற்றும் ஓவேலி பேரூராட்சி வாக்குகள் கூடலூர் ஓவேலி சாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நடுவட்டம் பேரூராட்சி வாக்குகள் நடுவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், தேவர்சோலை பேரூராட்சி வாக்குகள் தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன. 

    பிக்கட்டி பேரூராட்சி, கீழ்குந்தா பேரூராட்சி வாக்குகள் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், உலிக்கல் பேரூராட்சி வாக்குகள் சேலாஸ் சிறுமலர் ஆரம்ப பள்ளியிலும், ஜெகதளா பேரூராட்சி வாக்குகள் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சி அலுவலக கடடிடத்திலும், கேத்தி பேரூராட்சி வாக்குகள் சாந்தூர் சி.எஸ்.ஐ. மேல் நிலைப்பள்ளியிலும், கோத்தகிரி பேரூராட்சி வாக்குகள் கோத்தகிரி மாவட்ட ஆட்சியர் பயிற்சி மையத்திலும், அதிகரட்டி பேரூராட்சி வாக்குகள் அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சோலூர் பேரூராட்சி வாக்குகள் நாகர்தனை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
    102 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 184 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகள் வார்டுகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர். 

    இதனை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலும் இந்த பகுதிகளில் விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 95 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊட்டி நகராட்சியில் 33 பேர், குன்னூர் நகராட்சியில் 7 பேர், கூடலூர் நகராட்சியில் 5 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 6 பேர் என 4 நகராட்சிகளில் மட்டும் நேற்று மட்டும் 51 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    அதிகரட்டி பேரூராட்சியில் 2 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 8 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 2 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 3 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 4 பேர், கேத்தி பேரூராட்சியில் 12 பேரும் மனுதாக்கல் செய்தனர். கீழ்குந்தா பேரூராட்சில் ஒருவர், கோத்தகிரி பேரூராட்சியில் 5 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 2 பேர், ஓவேலி பேரூராட்சியில் 3 பேர், சோலூர் பேரூராட்சியில் 2 பேர் என 44 பேர் பேரூராட்சிகளில் போட்டியிட வேட்புமனு வழங்கினர்.

    வேட்பு மனுதாக்கல் தொடங்கிய 28-ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை மட்டும் நீலகிரியில் மொத்தம் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடங்களான 294 பதவிகளுக்கு 102 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 

    வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும்.  இதனால் வேட்பு மனு தாக்கல் பணி விறு,விறுப்பாக நடந்து வருகிறது. தற்போது முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அந்த கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று அல்லது நாளைக்கு வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

    இதுதவிர சுயேட்சையாக போட்டியிடுபவர்களும் மனுதாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனுதாக்கலுக்கு ஒரு நாளே மிஞ்சியிருப்பதால் இன்றும், நாளையும் தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் தலைகளாகவே காணப் படும். வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதனால் நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல்களம் களைகட்ட தொடங்கியுள்ளது.. 
    சுற்றுலா தளங்களுக்கான பார்வையிடும் நேரம் அதிகரிக்கப்பட்டது.
    ஊட்டி:
    நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 8&ந் தேதி முதல் சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட சுற்றுலா தலங்களில் மாலை 3 மணிக்கு மேல் நுழைவு டிக்கெட் வழங்கப்படவில்லை. அதற்கு முன் பெற்று உள்ளே சென்றவர்கள் சுற்றி பார்த்து விட்டு வெளியே வர கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 

    இதனால் பலர் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி தொழில் செய்து வந்த தொழிலாளர்களும் மிகவும் பாதிப்படைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பார்வை நேர கட்டுப்பாட்டில் தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பார் வை யிடும் நேரம் அதிகரிக்கப் பட்ட தகவல் அறிந்ததும் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ப்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து பூங்காக்களில் உள்ள மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். நாட்கள் செல்ல, செல்ல சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து தனது நிபந்தனை ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வாளையார் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

    தற்போது இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ், திபு, சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜூக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் ஊட்டியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அவரும் ஊட்டியில் தங்கியிருந்து கையெழுத்திட்டு வந்தார்.

    இந்த நிலையில் தனது நிபந்தனை ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வாளையார் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், ஊட்டியில் தங்கி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் எனக்கு எந்த பணியும், வருமானமும் இல்லாததால் தங்குவதற்கு இடமும், உணவும் கிடைக்கவில்லை.

    எனவே எனது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நாளை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வருகிறது.
    சமூக வலைத்தளம் மூலம் பழகி பெண்ணை மிரட்டிய வாலிபர் சிக்கினார்.
    ஊட்டி:

    விழுப்புரம் மணம் பூண்டியை சேர்ந்த மனோகர் (வயது 25). இவருக்கு சமூக வலைதளம் மூலம்  நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வசிக்கும் திருமணமான 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண்  அவருடன்   நட்பாக பழகி வந்தார். அப்போது மனோகர் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்  அவருக்கு அறிவுரை கூறி விலகி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் அந்த பெண்ணின் படத்தை  ஆபாசமாக  மார்பிங் செய்து அவருக்கு அனுப்பினார். பின்னர் அந்த படத்தை பேஸ்புக்கில்  வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார்  வழக்கு பதிவு செய்து  இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையில் தனிப்படை போலீ சார்  விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் தனிப் படை போலீசார் விழுப்புரம் மணம்பூண்டிக்கு விரைந்து சென்று மனோகரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது,

    கூடலூர் பெண் கொடுத்த புகாரின் பேரில் மனோகரை   கைது செய்தோம். அப்போது அவரின் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தோம்.  அதில் இது போன்று பல பெண்களின் படங்களை மார்பிங் செய்து அவர் மிரட்டி வந்தது தெரியவந்தது என்றனர்.
    கூடலூரில் கிராமமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இங்குள்ள போக்கர் காலனியில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தார்கலவை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. 

    இந்த ஆலையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் தூசு காரணமாக அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.இந்த ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2020&ம் ஆண்டு நவம்பவர் மாதத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையில் இயக்கத்தை தடை செய்ததுடன், ஆலைக்கும் சீல் வைத்தனர்.

    இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இந்த ஆலையை இயக்கி கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் பரவியதும், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆலையை திறக்க கூடாது என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த ஆலையை மீண்டும் திறப்பதால் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் வசிக்க கூடியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியும் ஏற்றியுள்ளனர். ஆலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆஸ்திரேலியாவில் எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் ஒருவர் நீலகிரியில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார்.
    ஊட்டி:

     நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்கிருஷ்ணன் (வயது 48). டாக்டர்.  இவர் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணம், ரிவர்டன் பகுதியில் வேலை செய்து வருகிறார். 

    இந்த நிலையில் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரிவர்டன்  தொகுதியில் தொழிலாளர் கட்சி  சார்பில்  போட்டியிட்டார். அதில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்று கொண்டார். 

    படுகர் சமுதாயத்தை சேர்ந்த இவர் பொறுப்பேற்று கொண்டபின் முதல் வெளிநாட்டு எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றார். இவர் தனது சொந்த ஊரான நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு முதல்முறையாக வருகை தந்தார். 

    அவருக்கு 19 ஊர் படுகர் இன மக்கள் சார்பில் அதன் தலைவர் ராமா கவுடர் தலைமையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  கன்னேரிமுக்கு பகுதியில் இருந்து அவரது இல்லம் வரை ஊர்வலமாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் அழைத்துச் சென்றனர்.  4 சீமை பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
    பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ஊட்டிக்கு காரில் கொண்டு வந்த ரூ.69 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஊட்டி:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குன்னூர், காட்டேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துமாரி தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் வந்தவரிடம் உரிய ஆவணமின்றி ரூ. 69 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், அவர் ஊட்டியில் வீடு கட்டி வருவதால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ. 69 ஆயிரம் பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் உரிய சான்றுகளை வழங்கினால் பணத்தை திருப்பி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×