என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ஊட்டிக்கு காரில் கொண்டு வந்த ரூ.69 ஆயிரம் பறிமுதல்
ஊட்டி:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குன்னூர், காட்டேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துமாரி தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் வந்தவரிடம் உரிய ஆவணமின்றி ரூ. 69 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், அவர் ஊட்டியில் வீடு கட்டி வருவதால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ. 69 ஆயிரம் பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் உரிய சான்றுகளை வழங்கினால் பணத்தை திருப்பி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






