என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி நகராட்சியில் அம்மா உணவகம் அருகிலும், ஏடிசி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஊட்டி: 

    ஊட்டி நகராட்சியில் தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட  கலெக்டர் அம்ரித்  ஆய்வு மேற்கொண்டார். 

    ஊட்டி நகராட்சியில் அம்மா உணவகம் அருகிலும், ஏடிசி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம்  ஆகிய பகுதிகளில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆய்வு மேற்கொண்ட  கலெக்டர் அதில் குடிநீரை பருகி  எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

    பின்னர்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரத்துக்கு ஒரு பொறுப்பாளர்  நியமிக்கப்பட்டு எந்திரத்தின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    முன்னதாக, நீலகிரி கலெக்டர் அம்ரித் கூடுதல் அலுவலகத்தில் தானியங்கி குடிநீர்  எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி  நகராட்சி ஆணையர் காந்திராஜ், ஊட்டி தாசில்தார் ராஜசேகர்  மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
    நீலகிரியில் இதுவரை 42 ஆயிரத்து 130 பேர் கொரோனாவால் பாதித்தனர். 41 ஆயிரத்து 897 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து உள்ளது. மேலும் 4 நாட்கள் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது கட்டாய மில்லை என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. 

    நீலகிரியில் இதுவரை 42 ஆயிரத்து 130 பேர் கொரோனாவால் பாதித்தனர். 41 ஆயிரத்து 897 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

    கொரோனா பாதிப்பால் இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்க மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி  இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு ஊட்டியில் அமைக்கப்பட்ட இறப்பை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நபரின் வாரிசுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப் படுகிறது. 
     
    இதுகுறித்து கலெக்டர் அம்ரித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-& நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 642 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 460 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. மேலும் 131 மனுக்கள் 2 முறை பெறப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது. 

    மீதமுள்ள 51 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கடந்த மார்ச் மாதம் 20&-ந் தேதிக்கு முன்னர் கொரோனாவால் இறந்தவர் களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட் களுக்குள் (அதாவது மே மாதம் 18-&ந் தேதிக்குள்) சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் அளிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும்.
     
    மேற்கண்ட காலக் கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலு வலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை தகுதி அடிப்ப டையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். 

    எனவே கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகா ட்டுதலின்படி உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    திறந்த வெளியில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவோர் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி:
     
    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட வாழைத் தோட்டம், மாவனல்ல, மசினகுடி உள்ளிட்ட கிராமப் புறங்களில் எப்போதும் மான்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
     
    இந்நிலையில் வாழைத்தோட்டம் வனப்பகுதியில் குப்பை தொட்டியில் மான் ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள உணவுகளை உண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    வனப்பகுதியில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாகவும், உணவு, குடிநீருக்காக வனவிலங்குகள் ஊருக்குள் அலைந்து அலைகின்றன. இந்நிலையில் குடியிருப்புகளை ஒட்டி யுள்ள திறந்தவெளி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. 

    இதனால் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடி வந்த மான் ஒன்று அதில் இ ருந்த பிளாஸ் டிக் கழிவுகளில் உள்ள உணவை எடுத்து உண்டது. உணவுடன் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால் மான்  உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை 
    தெரிவித்துள்ளனர். 

    எனவே திறந்த வெளியில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவோர் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    அரசு ஆரம்ப சுகாதார் நிலையம் முதல் மருத்துவ கல்லூரி வரை இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    ஊட்டி:  

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தலைமை செயலாளரின் அறிவுறுத்த லின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நம் மருத்துவமனை மகத்தா ன மருத்துவமனை முகாம் கொண்டாடப்பட்டது.

    அரசு ஆரம்ப சுகாதார் நிலையம் முதல் மருத்துவ கல்லூரி வரை அனைத்து சுகாதார வசதிகளிலும் இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனையின் ஏற்படும் தொற்றுநோயை தடுக்கவும், நோயாளிகள் மருத்துவமனைகளில் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெறும்போது மன நிம்மதியும் இருக்க வேண்டும். 
     
    மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களின் தோற்றத்தை அழகுபடுத்துதலே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    மாவட்டம் முழுவதும் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 தாலுகா மற்றும் துணை தாலுகா மருத்துவமனைகள் மற்றும் நீலகிரி மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த 1-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. 
     
    இந்த திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் மற்றும் வெளிப்புற பகுதிகள் உள்பட முழு மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக பராமரித்தல், கழிப்பறைகள் சுத்தம் செய்தல், பூச்சி மற்றும் கரையான்களை அகற்றுதல், அனைத்து குப்பை மற்றும் சேதம் அடைந்த பொருட் களை ஆஸ்பத்திரியில் இருந்து அகற்றும் பணி நடக்கிறது. தூய்மை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து செவிலியர்களுக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
    குன்னூர் அருகே இன்று காலை 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விப்பத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இருந்து இன்று காலை கோவைக்கு ஒரு கார் வந்தது.

    இந்த காரில் டிரைவர் உள்பட 3 பேர் பயணித்தனர். கார் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர் பகுதியில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் கார் தாறுமாறாக அங்கும் இங்கும் ஓடியது. சிறிது நேரத்தில் சாலையை விட்டு வெளியேறிய கார் சாலையொட்டி இருந்த 50 அடி பள்ளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.. என்று அபய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் ஓடி வந்து மீட்கும் பணியில் இறங்கினர்.

    மேலும் குன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் கயிறு கட்டி கீழே இறங்கிய தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அங்கிருந்து சிகிச்சைக்காக 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியை சேர்ந்த கணவன், மனைவி என்பது தெரியவந்தது. ஆனால் அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. மேலும் அவர்கள் 2 பேரும் தங்கள் டிரைவருடன் காரில் கோவைக்கு ஒரு வேலை வி‌ஷயமாக சென்றபோது இந்த விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயம் - கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    ஊட்டி:

     ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75- வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில்  மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட  கலெக்டர் அம்ரித்   வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:

    தமிழக முதல்&அமைச்சர்  75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடும் பொருட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அனைத்து மாவட்டங்க ளிலும் பல்துறை பணி விளக்க கண்காட்சியினை  நடத்திட தெரிவித்து இருந்தார். அதன்படி, நீலகிரி மாவட்டம் என்.சி.எம்.எஸ் மைதானத்தில்,  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை   வனத் துறை அமைச்சர்  பொது மக்கள் பார்வையிடுவ தற்காக திறந்து வைத்தார்கள். 

     மேலும், பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மராத்தான் ஓட்டம், கட்டுரை, பேச்சு, ஓவியப்பே ட்டிகள், கவிதை போ ட்டிகள் நடத்தப் பட்டது. நம்நாட்டு விடு தலைக்காக பாடுபட்டவர்களை தொடர்ந் து நினைவு கூறும் வகையில் இந்த திரு நாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி வாயிலாக சுதந்திர போராட் ட தியாகிகளின் வர லாறு குறித்து பள்ளி, கல் லூரி மாணவ, மாண விகள், இளைஞர்கள், பொது மக் கள் நன்றாக தெரிந்து கொண்டு, உங்களது உறவி னர்கள் நண்பர்கள் ஆகியார்களிடம் சுதந்திர போரா ட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளின் சுதந்திர போ ராட்டத்திற்காக மேற் கொண்ட சிறப்பு அம்சங்க ளை எடுத்து அவர்களிடையே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    குன்னூர் - மஞ்சூர் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை ஆகியவை அதிகளவில் உள்ளன. சில நேரங்களில் அவை ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகள் ரன்னிமேடு, கிளன்டல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி வருகிறது.

    தேயிலை தோட்டங்களிலும் காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. நேற்று கரிமரா எஸ்டேட் பகுதியில் யானைகள் கூட்டம் நுழைந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர். இதனால் யானைகள் தேயிலைத் தோட்டம் வழியாக வந்து காட்டேரி சாலையை கடந்தது. பின்னர் அங்கிருந்து சிறிய வனப்பகுதியில் சென்றது.

    குன்னூர் - மஞ்சூர் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகளை பார்த்ததும் பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குன்னூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருந்து 9 காட்டு யானைகள் குட்டிகளுடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தன.
    ஊட்டி:

    தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வனப் பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் என அனைத்தும் கருகி விட்டன. வறட்சி நிலவுவதால் வனத்தில் உள்ள வன வி லங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருந்து 9 காட்டு யானைகள் குட்டிகளுடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தன.

    குன்னூர் பகுதியில் உள்ள கல்லாறு, பர்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் இந்த யானைகள் முகாமிட்டன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த பகுதிகளிலேயே யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வருவதும் இல்லை.

    கடந்த ஒரு வார காலமாக கூட்டமாக சுற்றி திரிந்த இந்த யானைகள் கூட்டம் கடந்த 2 நாட்களாக 3 குழுக்களாக பிரிந்து உள்ளன. ஒரு கூட்டம் சின்னகரும்பாலம் பகுதியிலும், மற்றொரு யானை கூட்டம் கிளன்டேல் பகுதியிலும், 3&வது யானை கூட்டம் ரன்னிமேடு பகுதிகளிலும் சுற்றி வருகின்றன.

    வனத்திற்குள் செல்லாமல் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலேயே யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள்  மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறி த்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலா காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றி திரிகிறது.

    எப்போது எங்கு நிற்கிறது என்பதே தெரிவ தில்லை. தினமும் வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வரும் நாங்கள் வேலைக்கு செல்ல முடி யாமல் மிகவும் அவதிய டைந்துள்ளோம். மேலும் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்து டனேயே வாழ்ந்து வருகிறோம். 

    எனவே  இந்த பகுதிகளில் சுற்றி திரியும் யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறையினரும் குழுவாக பிரிந்து யானைகளின் நடமா ட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    குன்னூர் அருகே 200 மீட்டர் உயரம் வானில் பறந்து தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த காரை பார்த்து பதறிபோன அந்த பகுதி தேயிலை தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது தூதூர்மட்டம். இந்த பகுதியில் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.

    இங்குள்ள மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று காலையும் அப்பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் மதிய வேளையில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் உயரத்திற்கு வானில் பறந்தபடி தேயிலை தோட்ட பகுதிக்குள் வந்து விழுந்தது.

    இதனை பார்த்ததும் பதறிபோன அந்த பகுதி தேயிலை தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் பல அடி தூரம் நின்று கொண்டு, தங்கள் செல்போனில் கார் பறந்து வந்த காட்சியையும், தேயிலை தோட்டத்திற்குள் விழுவதையும் வீடியோவாக படம் எடுத்தனர்.

    பின்னர் தங்கள் கிராமத்திற்குள் சென்று கார் ஒன்று வானில் பறந்து வந்து தேயிலை தோட்டத்திற்குள் விழுந்து விட்டதாக கூறி ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் கார் விழுந்து கிடந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் கார் பறந்து வந்து விழுந்தது விபத்து அல்ல என்பதும் சினிமா படப்பிடிப்பு காட்சி என்பதும் தெரியவந்தது.

    நடிகர் நாகர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    இந்த படத்திற்காக நேற்று தூதூர் மட்டம் பகுதியில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டதும், அப்போது கார் ஒன்று பறந்து தேயிலை தோட்டத்தில் விழுவது போன்று காட்சி எடுக்கப்பட்டது குறித்தும் பொதுமக்களுக்கு படப்பிடிப்பு குழுவினர் விளக்கினர்.

    இதன் பின்னரே அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


    மதுபான கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஜெயபால், மனோஜ், சரண், கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஊட்டி:

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சாலை மதுபான கடையில் கடந்த மார்ச் 7-ந் தேதி, ஒருவர் ரூ.500 கொடுத்து மது வாங்கினார். அப்போது அந்த நோட்டை வாங்கி பார்த்த ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் விரைந்து வந்து, அந்த நோட்டை வாங்கி பார்த்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மதுபான கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஜெயபால், மனோஜ், சரண், கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த பிரதீப், ரகுபதி, நாகூர் மீரான், தமீன் அன்சாரி, சரண்ராஜ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் எங்கிருந்து கள்ளநோட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கப்பட்டது என்று விசாரிக்கப்பட்டது.

    அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அச்சகம் நடத்தி வரும் தாமஸ் அமலோற்பவ ராஜ்(39) என்பவர் கள்ளநோட்டு தயாரிக்க தேவையான எந்திரங்கள் மற்றும் மை உள்ளிட்டவற்றை வாங்கி தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சிறப்பு தனிப்படையினர் ஊட்டிக்கு வந்தனர். பின்னர் ஊட்டியில் தாமஸ் அமலோற்பவ ராஜை கைது செய்து, புதுச்சேரி அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி விட்டு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாயும் சாகச நிகழ்ச்சி, ஓடும் குதிரையில் அமர்ந்த வீரர், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு சாகச போட்டிகள் நடத்தப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது.

    இந்த பயிற்சி கல்லூரி வளாக பகுதியில் ஜிம்கானா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் மவுண்டன் ஜிம்கானா குழுவினர் சார்பில் குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நேற்று ஜிம்கானா மைதானத்தில் நடந்தது.

    குதிரைகளுக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, நான்கு ஜம்பிங், ஷோ ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் குதிரை சாகச போட்டியில் பங்கேற்றனர்.

    இதுதவிர நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாயும் சாகச நிகழ்ச்சி, ஓடும் குதிரையில் அமர்ந்த வீரர், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு சாகச போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகளும் அங்கேயே வழங்கப்பட்டது. பரிசுகளை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் மோகன் வழங்கினார்.

    இந்த போட்டிகளை ராணுவ உயர் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

    யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக ரன்னிமேடு, கிளன்டல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் நீரோடை பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்று கிளன்டல் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் வீடுகளில் வளர்க்க கூடிய வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. வாழை இலைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்துகிறது.

    யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வாழைமரங்கள் அதிகம் காணப்படுவதால் கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு வாழைமரங்களை சேதப்படுத்தி வருகிறது.

    இப்பகுதியில் தெரு விளக்குகள் சரிவர எரியாத நிலையில் உள்ளதால் இரவு வேளைகளில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.

    வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வந்தாலும் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே விரைவில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் இரவு வேளைகளில் யானைகள் சாலையை கடக்கும் சாத்தியகூறு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் இரவு நேரத்தில் அப்பகுதிமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×