என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது.
அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் அருகே உலா வருவது வழக்கம்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் அடுத்த தமிழகம் ஆய்வு மாளிகை அருகே நீலகிரி மாவட்ட கலெக்டரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் உள்ளது. இங்கு தற்போது கலெக்டராக உள்ள அம்ரித் வசித்து வருகிறார்.
இந்த பங்களாவில் நுழைவு வாயில் பகுதியில் இருந்து சாலை மற்றும் இருபுறமும் புல்வெளிகளுடன் கூடிய சிறு பூங்கா உள்ளது. சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவிற்கு அருகே வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கலெக்டர் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலையில் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தது.
கலெக்டரின் கார் பார்க்கிங் வரை சாவகாசமாக நடந்து வந்த சிறுத்தை அங்கேயே சுற்றி திரிந்ததுடன், சிறிது நேரம் அங்கு ஒய்வெடுத்தது.
இதையடுத்து பங்களாவில் இருந்த மலர் செடிகளுக்கு நடுவே ஏறி தடுப்புசுவரை தாண்டி வெளியில் சென்று மறைந்தது.
சிறுத்தை நடமாடிய காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த சிறுத்தை புலிக்கு 7 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 14-ந் தேதியில் இருந்தே ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலை, பச்சை பசேல் என காணப்படும் காடுகளின் இயற்கை அழகுகளை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து மகிழ்வதுடன், படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.
ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்படுவதுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கி.மீ. தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 19 ஆயிரம் பேரும், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 9 ஆயிரம் பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 6,000 பேரும், தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு 4,000 பேரும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 6,000 பேரும் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலைக்கு ஊட்டிக்கு வந்தார்.
பின்னர் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் நேற்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இந்தநிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊட்டி- கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.
ஓட்டபயிற்சியை முடித்ததும், கட்டபெட்டுவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது டாக்டர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை உடனடியாக நிறைவேற்றி கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ் புத்தாண்டு உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 12 ஆயிரம் பேர் வந்திருந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்தது. ரோஜா பூங்காவுக்கு நேற்று முன்தினம் 5,500 பேர் வந்த நிலையில் நேற்று 8,500 வந்திருந்தனர்.
தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு 6 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 4 ஆயிரும் பேரும் நேற்று 5 ஆயிரம் பேரும் வந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு நேற்றுமுன்தினம் 10 ஆயிரம் பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 7 ஆயிரம் பேரும் வந்திருந்தனர்.
மேலும் பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம், மேல்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தாவரவியல் பூங்காவை 29 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
கோடை வறட்சி காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
குன்னூர் வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி, பர்லியார் மரப்பாலம், காட்டேரி, கிளன்டேல், பில்லிமலை, உலிக்கல் பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்த்து வரக் கூடிய வாழைமரங்கள், மலர்த்தொட்டிகளை சேதப்படுத்தி அட்டகாசத்திலும் ஈடுபடுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிகளில் இந்த யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் யானைகளை அங்கிருந்து வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் இறங்கினர். அப்போது அருகே உள்ள காட்டேரி பூங்காவில் நின்றிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் யானைகளை கண்டதும் ரெயில் நிலையத்துக்கு வந்து யானைகளை புகைப்படம் எடுக்க முயன்றனர்.
வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு காட்டு யானை ஆவேசம் அடைந்து வனத்துறையினரை நோக்கி வேகமாக ஓடி வந்தது.
இதனை பார்த்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் யானையிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு யானை கூட்டம் அங்கிருந்து ரன்னிமேடு பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்று விட்டது.






