என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது.
    • தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், தேசிய நெடுஞ்சாலையில் சத்தியன் கிராண்ட் சொகுசு விடுதி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று காலை 5 தொழிலாளர்கள் வந்தனர்.

    அவர்கள் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது.

    இதில் அருகில் நின்று கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் 3 தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனால் பலியான 3 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    பலியான 3 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (50), திருமலை (18), நவீன் (30) என்பது தெரிய வந்துள்ளது.

    கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பாதுகாப்பாக முழுவதும் வெளியேற்றி உடல்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    உரிய பாதுகாப்பு இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ததால் 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கியமல்ல, அவர்களுக்கு வழங்கப்படுகிற கல்வியின் தரம், அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தார் காமராஜர்.
    • பள்ளிகளில் பாடம் நடத்துகிற ஆசிரியர் நன்கு பயிற்சி பெற்று வர வேண்டும் என்பதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும், பல்வேறு இடங்களில் ஏற்படுத்தினர் காமராஜர்.

    எல்லோரும் படித்துவிட்டால்... வேலைக்கு எங்கே போவது? என்று கேட்டவர்தான் ராஜாஜி. அதனால் தான் பாதிநாள் பள்ளிக்கூடம், மீதிநாள் குலத்தொழில் செய்வது என்று திட்டமிட்டார் ராஜாஜி. ஆனால் எல்லா மக்களும் படிக்க வேண்டும். அதற்கான வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தவர்தான் காமராஜர். அதனால் தான் பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக ஏற்கனவே 1937-39 வரை ராஜாஜி பதவியில் இருந்த போது மூடிய 2 ஆயிரத்து 500 ஆரம்ப பள்ளிகளையும், இரண்டாம் தடவையாக பதவி வகித்தபோது மூடிய 6 ஆயிரம் பள்ளிகளையும் திறந்திட உத்தரவிட்டார் காமராஜர். அடுத்த கட்டமாக 14 ஆயிரம் பள்ளிகளை படிப்படியாக திறந்தார். மூன்று மைல் தொலைவில் நடுநிலைப் பள்ளியையும், 5 மைல் தொலைவில் உயர்நிலைப்பள்ளிகளையும் திறந்து கொண்டே வந்தார்.

    14 ஆயிரமாக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை 1957-ல் 15 ஆயிரத்து 800 ஆக உயர்ந்தது. 1962-ல் 29 ஆயிரம் பள்ளிகளாக ஆனது. 1951-ல் உயர்நிலைப்பள்ளிகள் 637 என்றளவில் தான் இருந்தன. காமராஜர் பொறுப்பேற்றதற்கு பின்னர் அவை 814 ஆகவும், அதற்கு பின்னர் 1962-ல் 1995 ஆகவும் உயர்ந்தன. பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது போல், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1952-ல் 3 லட்சத்து 33 ஆயிரமாக இருந்தது. 1956-ல் இந்த எண்ணிக்கை 4,36,000 ஆக இருந்தது. 1957-ல் 4 லட்சத்து 73 ஆயிரமாகவும் 1962-ல் 9 லட்சமாகவும் உயர்ந்தது.

    காமராஜர் பதவி ஏற்றபோது மொத்த பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) ரூ.47.18 கோடிதான். காமராஜர் பதவி விலகுவதற்கு முன் அதாவது 1962-63-ல் மொத்த பட்ஜெட் ரூ.121.81 கோடி மட்டுமே. இந்த தொகையை வைத்துக்கொண்டுதான் இத்தனை புரட்சிகளையும் செய்தார் காமராஜர்.

    இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 45-வது பிரிவின்படி 14 வயதிற்குட்பட்ட எல்லா பிள்ளைகளுக்கும் கட்டாய இலவச கல்வியை வழங்கிடுமாறு வற்புறுத்துகிறது. ஆனால் இதனை இந்தியாவில் எந்த மாநில முதல்வரும், ஏறெடுத்து பார்க்கவில்லை. உள்வாங்கிக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காமராஜர் மட்டுமே இதுகுறித்து சிந்தித்தார். இதனை அமல்படுத்தினால் ஏழைகள் முன்னேறுவார்கள். இந்த நாடும் முன்னேறும் என்பதை தொலைநோக்கு பார்வையில் சிந்தித்ததோடு மட்டுமல்ல தமிழகத்தின் தலைசிறந்த கொடையாளராகவும், கல்வி வள்ளலாகவும் திகழ்ந்த டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து கட்டாய இலவச கல்வி வழங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு உத்தரவிட்டார் காமராஜர்.

    அந்த குழு வழங்கிய அறிக்கை காமராஜருக்கு உற்சாகத்தையும், உந்து சக்தியையும் கொடுத்தது. அதன் அடிப்படையில் சிந்திக்கவும், செயல்படவும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றார் காமராஜர். அரசு பள்ளிகளை கவனிப்பது மட்டுமே அரசின் கடமை என்று எண்ணி இருந்திடாமல் தனியார் பள்ளிகளையும் ஊக்குவிக்க தவறவில்லை காமராஜர். அப்போது தனியார் உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 1,769 ஆக இருந்தன. இவற்றில் 9 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெற்றனர்.

    மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கியமல்ல, அவர்களுக்கு வழங்கப்படுகிற கல்வியின் தரம், அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தார் காமராஜர்.

    வேதங்களின் சிறப்பு கீர்த்தனைகளின் கீர்த்தி மனை சாஸ்திரம், ஜோசியத்தின் பெருமை என்றெல்லாம் சிந்திக்காமல், விஞ்ஞானம், பொறியியல், விவசாயம், நூற்பாலை தொழில் நுட்பம், கணக்கு, சமூகவியல் போன்ற வாழ்க்கையை மேம்படுத்தும் பாடங்களையே, பள்ளிகளில் இடம்பெறச் செய்தார் காமராஜர்.

    இந்த பாடத்திட்டங்களை எல்லாம் வகுப்பதற்காக பிரபல கல்வியாளர்களாக திகழ்ந்திட்ட டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு குழுவையும் ஏற்படுத்தினார் காமராஜர். அவர்கள் கொடுத்த அறிக்கையினை ஆராய்ந்து பார்த்து அனைத்தையும் செயல்படுத்தினார்.

    பள்ளிகளில் பாடம் நடத்துகிற ஆசிரியர் நன்கு பயிற்சி பெற்று வர வேண்டும் என்பதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும், பல்வேறு இடங்களில் ஏற்படுத்தினர் காமராஜர். 'கட்டாய இலவசக்கல்வி' என்ற திட்டத்தினை கையிலே எடுத்துவிட்டோம். அரசின் நிதிநிலைமையோ பெரிதாக இல்லை. ஆனால் இதனை மக்கள் நலன் கருதி நாட்டு நலன் கருதி நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்து நாளும் நாளும் சிந்தித்தார் காமராஜர்.

    அதனுடைய விளைவுதான் இந்த கல்வித்திட்டத்தில் பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வது என்று முடிவு செய்தார் காமராஜர். அதன்படி ஒவ்வொரு ஊர் மக்களும் விருப்பமுள்ளவர்கள், வசதி வாய்ப்புள்ளவர்கள், தங்களால் இயன்ற உதவிகளை பள்ளிகளுக்கு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள், பணம் ரொக்கமாகவும், உதவிகள் வந்து குவிந்தன. சிலர் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்தனர். சிலர் வாடகை பெறாமலேயே தங்கள் கட்டிடங்களை வழங்கினர். இதற்கு கிடைத்த மகத்தான ஆர்வம், பரவலாக பேசப்பட்டு மக்கள் இயக்கமாகவே இது மாறியது. இந்த பணியில் பங்கேற்று பணியாற்றுமாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.

    கவிஞர் இரவிபாரதி

    கவிஞர் இரவிபாரதி

     பள்ளிகளுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள் என்று மூன்றாக வகுக்கப்பட்டு, பட்டியல்கள் உருவாக்கப்பட்டு அதன்படி தேவையான பொருட்கள் எவை எவை என்று திட்டமிட்டு அறிவிக்கப்பட்டன. அதன்படி பொதுமக்கள் பங்கேற்கும் "பள்ளி வளர்ச்சித் திட்டம்" தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து ஆங்காங்கே மாநாடுகளும் நடத்தப்பட்டன.

    28.7.1958 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற "பள்ளி வளர்ச்சித் திட்டம்" மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. அங்கு அப்போது முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். மாநாட்டில் பெறப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் ஆகும். ஆக ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட தொகைக்கு இணக்கமாகவே பொருள்கள் குவிந்ததில் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய முதல்-அமைச்சர் காமராஜர், இது பொதுமக்களின் சக்திக்கு உட்பட்டதுதான். "சுமை"அல்ல என்று உருக்கமாகவும், பொருட்களை வழங்கிய மக்களைப் வெகுவாகப் பாராட்டியும் நன்றியும் தெரிவித்துப் பேசினார்.

    இதே போன்ற ஒரு மாநாடு 22.11.1958 அன்று செங்கல்பட்டு நகரத்திலே நடந்தபோது, அப்போது இந்தியக் கல்வி மந்திரியாக இருந்த கே.சி.பந்த் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டில் 826 பள்ளிகள் கலந்து கொண்டன. முன் வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு 23 லட்சமாகும். இந்தத் தொகை அப்பகுதியில் உள்ள பொதுமக்களி டம் இருந்து, ரொக்கமாகவும், பொருட்களாகவும் வசூலிக்கப்பட்டு, தேவையான பள்ளிகளில் அவை சேர்க்கப்பட்டன.

    இந்த மாநாட்டில் மத்திய மந்திரி கே.பி.பந்த் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டில் 826 பள்ளிகள் கலந்து கொண்டன. முன் வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ. 23 லட்சமாகும். இந்தத் தொகை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரொக்கமாகும், பொருட்களாகவும் வசூலிக்கப்பட்டு, தேவையான பள்ளிகளில் அவை சேர்க்கப்பட்டன.

    இந்த மாநாட்டில் மத்திய மந்திரி கே.சி.பந்த் உரையாற்றும்போது, இந்தியாவிற்கே முன் மாதிரியான திட்டம் இது. பிற மாநிலங்கள் இதைப்பற்றி சிந்திக்காத வேளையில் காமராஜர் இதுபற்றி சிந்தித்து வெற்றி கண்டுள்ளார். இது எனக்கு மிக மிக வியப்பாக இருக்கிறது. நான் டெல்லி சென்றவுடன் இத்திட்டத்தின் பெருமையினை நமது பாரதப் பிரதமர் நேருவிடம் எடுத்துரைப்பேன் என்று சொல்லிச் சென்றார்.

    அதன்படியே டெல்லி சென்றவுடன் நேருவைச் சந்தித்து காமராஜரின் கல்வி வளர்ச்சித் திட்டத்தின் மகத்துவம் பற்றி கே.சி.பந்த் எடுத்துக் கூறினார். ஏற்கனவே காமராஜர் மீது அதிக மதிப்புக் கொண்டிருந்த நேரு, நானும் இந்தத் திட்டத்தை நேரில் காண வேண்டும் என்று கூறி ஆவலுடன் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார்.

    அதன்படி காரைக்குடி அருகே உள்ள ஆ.தெக்கூரில் 15.1.1959 அன்று நடைபெற்ற பள்ளி சீரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, காமராஜரைப் பாராட்டிப் பேசினார் நேரு. இன்னும் இது போல் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்டம் அடைக்கலாபுரம் மாநாட்டிலும் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பேசினார் நேரு.

    பாரதப் பிரதமரின் வருகையும், இந்தத் திட்டம் பற்றிய அவரது பாராட்டும், பட்டி தொட்டி எங்கும் பரவி, காமராஜர் எடுத்த முயற்சிகளுக்கு கை கொடுத்தது. அதனால் தான் அவரது ஆட்சிக் காலத்தில் இது போல 167 பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

    இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டு டெல்லி சென்ற நேரு, முதல் காரியமாக இந்தத் திட்டத்தைப் பற்றி எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியதோடு காமராஜரைப் பின்பற்றுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

    காமராஜர் மேற்கொண்ட இந்தப் புரட்சிகரமான திட்டத்தின் பயனாக, 6 வயதில் இருந்து 11 வயது வரை பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 45 சதவீதத்தில் இருந்து அது 80 சதவீதமாக உயர்ந்தது. இளஞ்சிறார்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிட்டால் 18 லட்சத்தில் இருந்து அது 47 லட்சமாக இருந்தது.

    தொடக்கக் கல்வியிலும், உயர்நிலைக் கல்வியிலும் கவனம் செலுத்திய காமராஜர், கலைக்கல்லூரிகளையும் ஆங்காங்கே தோற்றுவித்தார்.

    1957-ல் தொழிற்சங்க இயக்கு நரகத்தைத் தோற்றுவித்து அதன் மூலம், பாலிடெக்னிக்குகளையும் பொறியியல் கல்லூரிகளையும் தோற்றுவித்தார். 1954-ல் 9 ஆக இருந்த பாலிடெக்னிக்குகள் 1963-ம் ஆண் டில் 30 ஆக உயர்ந்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்கல்வியில் சிறந்து விளங்குமாறு சென்னையிலும், மதுரையிலும் பெண்கள் பாலிடெக்னிக்குகள் தோற்றுவிக்கப்பட்டன.

    பள்ளிகளைத் திறந்தால் மட்டும் போதுமா? மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டும் போதுமா? இவற்றுக்கு அடிப்படை காரணமாக விளங்குவது கல்வியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தானே. மாணவர் நலனில் காட்டப்படும் அக்கறை உணர்வு பூர்வமாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களின் மனநிறைவும் முக்கியமல்லவா என்று சிந்தித்து ஆசிரியர் நலன்காக்கும் மூன்று திட்டங்களை செயல்படுத்தினார் காமராஜர்.

    அதன்படி நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுக்கால ஊதியம் இவற்றுடன் இணைந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்று 3 வகைத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆசிரியர்களின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டது. ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதினை 55-ல் இருந்து 58 ஆக உயர்த்தவும் உத்தரவிட்டார் காமராஜர். "கல்விப் புரட்சி செய்த காமராஜர்" என்று ஒருவரியில் அவரைப் புகழ்ந்து பாராட்டுவதோடு நாம் நின்று விடுகிறோம். இந்தப் புரட்சியைச் செய்வதற்காக அவர் ஆற்றிய பணிகளின் பங்களிப்பு நம்மை மட்டுமல்ல உலகையே வியக்க வைக்கிறது.

    அடுத்த வாரம் பார்ப்போம்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை.
    • நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

    ஆலந்தூர்:

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று வள்ளுவர்கோட்டம் அருகே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் இதற்கு அனுமதி அளிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை பி டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

    நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரன் கார்த்திக் கவனித்தபோது கலாநிதிக்கு வரும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து இருந்ததாக தெரிகிறது.
    • டாக்டர்கள், செவிலியர்களின் கவனக்குறைவால் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு செல்லும் ஆக்சிஜனில் ஏற்பட்ட கோளாறால் 2 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலாநிதி (வயது64). இவர் காஞ்சிபுரம் அருகே அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சுவாசக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த வாரம் காச நோய் இருந்ததாக மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கலாநிதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த வாரம் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் பேரன் கார்த்திக் கவனித்தபோது கலாநிதிக்கு வரும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அவர் அங்கிருந்த செவிலியரிடம் தெரிவித்தார். இதற்குள் கலாநிதி பரிதாபமாக இறந்தார்.

    ஆக்சிஜன் வரும் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் கலாநிதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதேபோல் அங்கு சிகிச்சை பெற்று வந்த பூச்சிவாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(70) என்ற நோயாளியும் ஆக்சிஜன் கோளாறால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கலாநிதியின் மகன் சீனிவாசன் கூறியதாவது:-

    என்னுடைய தாய் கலாநிதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நன்றாக பேசினார். மதியம் உணவு வாங்கி வர கூறினார். இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். மதியம் வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் உணவு வாங்கி விட்டு வந்து பார்க்கும்போது ஆக்சிஜன் வருவதில் ஏற்பட்ட கோளாறால் இறந்து போனார். ஆக்சிஜன் அளவு குறைந்து வருவது குறித்து அங்கிருந்த ஆண் செவிலியர் ஒருவரிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தாயை இழந்து உள்ளோம். டாக்டர்கள், செவிலியர்களின் கவனக்குறைவால் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். என்னுடைய தாய்க்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மழை காலங்களில் பெருமளவு மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகளால் குளங்கள் நிரம்புவதில்லை.
    • கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல திருகோவில்களையொட்டி பல குளங்கள் உள்ளன. மழை காலங்களில் பெருமளவு மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகளால் குளங்கள் நிரம்புவதில்லை. இதனால் தெப்பக்குளங்கள் பலவும் வறண்டு காணப்பட்டன. தற்போது, இதனை தவிர்ப்பதற்காக அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு குளங்களுக்கு மழைநீர் செல்வதற்காக பல வழிதடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளம், உலகளந்த பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளம் மற்றும் ரங்கசாமி குளம் போன்ற பகுதிகளில் மழைநீர் செல்வதற்காக புனரமைக்கப்பட்ட வழிதடங்கள் மற்றும் மேட்டு தெரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொறியாளர் கணேசன், மண்டலத்தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.பி. கார்த்திக், சுரேஷ், சுப்பராயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • 15-வது மானிய பொதுநீதியின் கீழ் ரூ.18½ லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தரக் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது மானிய பொதுநீதியின் கீழ் ரூ.18½ லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டான்லி, ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று திடீரென இடி இடித்தது.
    • விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென இடி இடித்தது.

    அந்த பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியார் விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதைகளை வினியோகம் செய்யும்போது அதன் தரத்தை அறிந்து விற்பனை செய்வது மிகவும் அவசியமாகும்.
    • நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுக்கும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் விதை பரிசோதனை அதிகாரி ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதைகளை வினியோகம் செய்யும்போது அதன் தரத்தை அறிந்து விற்பனை செய்வது மிகவும் அவசியமாகும். விதை வினியோகம் விதை சட்டம் 1986 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பகுப்பாய்வு முடிவுகள் கைவசம் வைத்திருப்பது நன்மை‌ பயக்கும். நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுக்கும். எனவே, விற்பனை செய்யப்படும் அனைத்து விதை குவியலுக்கும் மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பி ரூ.80-ஐ கட்டணமாக செலுத்தி பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவி படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சாருமதியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனஞ்சேரி பெரியார் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகள் சாருமதி (வயது 18). இவர் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்

    நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை தாழிட்டு மின்விசிறியில் புடவையில் தூக்குமாட்டிக் கொண்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சாருமதியை மீட்டு சிகிச்சைக்காக பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாருமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், மகள் சாருமதி சரியாக படிக்கவில்லை என தாய் சுமதி கண்டித்ததாகவும் இதனால் சாருமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது புதுக்கோட்டை மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
    • மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இன்று அதிகாலை அவர்கள் 8 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.

    ஆலந்தூர்:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டனர்.

    மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இன்று அதிகாலை அவர்கள் 8 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் 8 மீனவர்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    • தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 20.10.2022 ஆகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், "மகளிர் சக்தி விருது" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narishaktipuraskar.wcd.gov.on. என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    தகுதிவாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 20.10.2022 ஆகும்.

    இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசு தலைவரால் தேசிய விருது வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா தலைமைதாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மொத்தம் ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரான புண்ணியகோடி, துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×