என் மலர்
நீங்கள் தேடியது "மழைநீர் வடிகால்வாய்"
- கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கவுன்சிலர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
- புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடத்தை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கடி காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் பரவி வருகின்றன.
இதையடுத்து சென்னையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கவுன்சிலர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தி வருகிறார்கள்.
முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்தது.
மழைநீர் வடிகால்வாயில் உள்ள தொட்டிகளின் மூடியை திறந்து அதில் கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.
சென்னை மாநகராட்சி ஊழியர்களின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியது. இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட சம்பவத்தை தொடர்புபடுத்தி வீடியோக்கள் பரவின.
இந்த நிலையில் மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தியது தொடர்பாக மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடத்தை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவரி டம், 'மழைநீர் வடிகாலில் கொசுவலை போர்த்திய வீடியோ வைரலாகி வருகிறதே? அது தொடர்பான விமர்சனங்கள் எழுகிறதே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, 'மழைநீர் கால்வாயில் கொசுவலை போர்த்துவது கொசுக்களுக்காக போடுவது கிடையாது. கவுன்சிலர் ஒருவர் வேண்டுகோள் வைத்ததால் போடப்பட்டது.
மாநகராட்சியில் அறிவிப்பாக வெளியிட்டு போடப்பட்டது கிடையாது. ஒரு கவுன்சிலர் ஐடியா கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போட்டு இருக்கிறார்கள். இந்த அளவுக்கு சர்ச்சையாக்கும் வகையில் அது பெரிய விஷயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை காலங்களில் பெருமளவு மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகளால் குளங்கள் நிரம்புவதில்லை.
- கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்:
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல திருகோவில்களையொட்டி பல குளங்கள் உள்ளன. மழை காலங்களில் பெருமளவு மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகளால் குளங்கள் நிரம்புவதில்லை. இதனால் தெப்பக்குளங்கள் பலவும் வறண்டு காணப்பட்டன. தற்போது, இதனை தவிர்ப்பதற்காக அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு குளங்களுக்கு மழைநீர் செல்வதற்காக பல வழிதடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளம், உலகளந்த பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளம் மற்றும் ரங்கசாமி குளம் போன்ற பகுதிகளில் மழைநீர் செல்வதற்காக புனரமைக்கப்பட்ட வழிதடங்கள் மற்றும் மேட்டு தெரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொறியாளர் கணேசன், மண்டலத்தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.பி. கார்த்திக், சுரேஷ், சுப்பராயன் ஆகியோர் உடன் இருந்தனர்.






