என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற சரவணன் (37). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகிவிட்டது.
இவர் தான் குடியிருக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா விசாரணை நடத்தினார்.
அப்போது கட்டிட தொழிலாளி சரவணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி., திடலில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 800-க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இங்கிருந்துதான் அனைத்து இடங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரர் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், கடந்த 5-ந் தேதி மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி விதித்த சுங்க கட்டணத்தை மட்டுமே செலுத்தவும், ரசீது வழங்கினால் மட்டுமே கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டு, சுங்க கட்டண விபரம் அடங்கிய பிளக்ஸ் போர்டும் மார்க்கெட் வளாகத்தில் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரரின் ஊழியர்கள் மார்க்கெட்டிற்குள் வியாபாரிகளின் வாகனங்களையும், காய்கறிகளை ஏற்றி வரும் 4 சக்கர வாகனங்களையும் உள்ளே அனுமதி இல்லை எனவும், நுழைவு வாயிலில் சரக்குகளை இறக்கி கடைக்குக் கொண்டு செல்லுங்கள் என கூறினர்.
இதனால் அதிருப்தி அடைந்த காய்கறி வியாபாரிகள், சரக்கு வாகன டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுங்க வசூலிக்கும் குத்தகை ஊழியர்களையும், குத்தகைதாரரையும் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சுங்க கட்டண பிரச்சனை தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வியாபாரிகள் ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர், ஒப்பந்தாரர், வியாபாரிகள் உள்ளிட்டோர், பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம், அதுவரை அமைதியாக இருங்கள் என வியாபாரிகளிடம் கூறினார்.
இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் சுங்க குத்தகைதாரரை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக துண்டு பிரசுரமும் வழங்கினர்.
அதன்படி இன்று வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனுக்களை வழங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கடையடைப்பு அறிவித்த வியாரிபாரிகளின் ஒருங்கிணைப்பாளர் மோகன் கூறியதாவது:-
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் அனைத்து வகையான வியாபாரிகளிடமும், மக்களிடமும் அதிக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்க குத்தகை நிர்வாகம் ஈரோடு மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் ஆகியோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சுங்க வசூல் சரியான முறையில் செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.
அதில், தவறுகள் நடந்தது கண்டறியப்பட்டால் குத்தகைதாரர் உரிமைத்தை ரத்து செய்து, மாநகராட்சியே நேரடியாக சுங்க வசூலை ஏற்று நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எங்களது பிரச்சனைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு எங்களுக்கு விடியல் தர வேண்டும். அதற்காக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள அம்மாபாளையத்தில் வசிப்பவர் சண்முகசுந்தரம். இவர் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் செல்லும் வழியில் வெள்ளியங்காடு தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடோனை வாடகைக்கு பிடித்து நூல் மில் தொடங்கினார்.
இங்கு பனியன் வேஸ்ட் காட்டன் பஞ்சிலிருந்து நூல் தயாரித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த இந்த மில்லில் தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் வழக்கம்போல் மில்லில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஸ்பின்னிங் எந்திரத்தில் இருந்து தீப்பொறி வந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். உடனே அது அருகிலிருந்த பஞ்சில் பற்றி எரிய தொடங்கியது. பின்னர் எல்லா இடங்களிலும் பரவியது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை.
இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இரவு வரை போரடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்களும், நூல் கோன்களும், எந்திரங்களும் எரிந்து நாசமானது. மின் கசிவால் இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 19,996 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் குறுகிய காலத்தில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் தடுப்பூசியினை செலுத்தி பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்யும் நாளில் இருந்தே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகதார நிலையங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டு கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வருவதை பொறுத்து முறையான திட்டம் வகுக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளிலும் வார்டு வாரியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தான் அரசின் நோக்கமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. எனவே தங்களது குறைகள் மற்றும் புகார்களை 1077 மற்றும் 0424- 2260211 மற்றும் 9791788852, 8870812220 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு அரசு மருத்துவமனையை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் வகையில், ரூ.64 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர் ராஜசேரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் சவுண்டம்மாள், மருத்துவ அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அரசு மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சிகிச்சைக்காக கடந்த 3-ந்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா தேவி மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் மாமா முறையான கோபியை சேர்ந்த கார்த்தி (23), சிறுமியின் சகோதரர்கள் முறையான 17வயது சிறுவர்கள் 2 பேர் சிறுமியை மிரட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்தி மற்றும் 2 சிறுவர்கள் என 3 பேர் மீதும் போக்சோ சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்தியை ஈரோடு சிறையிலும், சிறுவர்கள் இருவரையும் கோவையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாகவும் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகரம், பெருந்துறை, கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி, கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
சென்னிமலை பகுதியில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் விடாமல் கொட்டியது. 94 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னிமலை பொறையன்காடு அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட தியாகி குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததும் இரவு 11.30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீடுகளில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 150 பேரை பாதுகாப்பாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த பலத்த மழை காரணமாக சென்னிமலை- ஈங்கூர் ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. தாழ்வான பல இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றது.
பலத்த மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குளம், குட்டைகள், ஏரி, அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-26, பெருந்துறை-19, கோபி-11.80, தாளவாடி-12.40, சத்திய மங்கலம்-13, பவானி சாகர்-4.80, பவானி-11.40, கொடுமுடி-10.20, நம்பியூர்-8, சென்னிமலை-94, மொடக்குறிச்சி-92, கவுந்தப்பாடி-12.20, எலந்தகுட்டைமேடு-10.80, அம்மாபேட்டை-19.80, கொடிவேரி-29, குண்டேரிபள்ளம்-17.80, வரட்டுபள்ளம்-34.80 என மாவட்டம் முழுவதும் 427 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.






