என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பெரிய மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஈரோடு பெரிய மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    வ.உ.சி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்

    ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சுங்க கட்டண பிரச்சனை தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி., திடலில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 800-க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இங்கிருந்துதான் அனைத்து இடங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரர் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், கடந்த 5-ந் தேதி மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி விதித்த சுங்க கட்டணத்தை மட்டுமே செலுத்தவும், ரசீது வழங்கினால் மட்டுமே கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டு, சுங்க கட்டண விபரம் அடங்கிய பிளக்ஸ் போர்டும் மார்க்கெட் வளாகத்தில் வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரரின் ஊழியர்கள் மார்க்கெட்டிற்குள் வியாபாரிகளின் வாகனங்களையும், காய்கறிகளை ஏற்றி வரும் 4 சக்கர வாகனங்களையும் உள்ளே அனுமதி இல்லை எனவும், நுழைவு வாயிலில் சரக்குகளை இறக்கி கடைக்குக் கொண்டு செல்லுங்கள் என கூறினர்.

    இதனால் அதிருப்தி அடைந்த காய்கறி வியாபாரிகள், சரக்கு வாகன டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுங்க வசூலிக்கும் குத்தகை ஊழியர்களையும், குத்தகைதாரரையும் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சுங்க கட்டண பிரச்சனை தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வியாபாரிகள் ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர், ஒப்பந்தாரர், வியாபாரிகள் உள்ளிட்டோர், பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம், அதுவரை அமைதியாக இருங்கள் என வியாபாரிகளிடம் கூறினார்.

    இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் சுங்க குத்தகைதாரரை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக துண்டு பிரசுரமும் வழங்கினர்.

    அதன்படி இன்று வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனுக்களை வழங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து கடையடைப்பு அறிவித்த வியாரிபாரிகளின் ஒருங்கிணைப்பாளர் மோகன் கூறியதாவது:-

    ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் அனைத்து வகையான வியாபாரிகளிடமும், மக்களிடமும் அதிக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்க குத்தகை நிர்வாகம் ஈரோடு மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் ஆகியோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சுங்க வசூல் சரியான முறையில் செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.

    அதில், தவறுகள் நடந்தது கண்டறியப்பட்டால் குத்தகைதாரர் உரிமைத்தை ரத்து செய்து, மாநகராட்சியே நேரடியாக சுங்க வசூலை ஏற்று நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எங்களது பிரச்சனைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு எங்களுக்கு விடியல் தர வேண்டும். அதற்காக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×