என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. இந்த பகுதியில் அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி செல்வார்கள்.
மேலும் அந்த பகுதியில் மயானம் உள்ளதால் இறந்தவர்களை அடைக்கம் செய்து விட்டு வருபவர்கள் ஆற்றில் குளித்து விட்டு செல்வது வழக்கம். அதே பகுதியில் ஈம காரியங்களும் செய்யப்படுகிறது.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பலர் ஆற்றில் குளித்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து திதி மற்றும் தர்ப் பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட சகதியில் இறங்கி சென்று குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பலர் புனித நீராட முடியாமல் சென்றனர்.
தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்ததால் முதியவர்கள் சிலர் சேற்றில் கால் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இன்னும் சிலர் சிரமப்பட்டு உள்ளே இறங்கி புனித நீராடினர். இதே நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
எனவே கருங்கல்பாளையம் காவிரி கரையோர பொதுமக்கள் இறங்கி புனித நீராட அந்த பகுதியில் படித்துறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 5 நபர்கள் இருந்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை அச்சன் புதூர் பகுதியை சேர்ந்த சமீர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், முகமது இஸ்மாயில், ஷாஜஹான் மற்றும் சபேர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் கணக்கில் வராத ரூ.51 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் சில நகைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். முதலில் பறிமுதல் செய்யப்பட்டது தங்கநகை என்று நினைத்த பறக்கும் படையினர் அந்த நகையை நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதனையிட்டனர். சோதனை செய்ததில் அது கவரிங் நகை என தெரியவந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கவரிங் நகைகள் வாங்கி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகையை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த ரூ.51 ஆயிரம் சத்தியமங்கலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






