என் மலர்
கடலூர்
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் நேற்று சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்கப் பெருமாள் தலைமையில், உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.
தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 10 லட்சத்து 83 ஆயிரத்து 448 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 20, பக்ரைன் தினார் 1 ஆகியனவும் காணிக்கையாக பெறப்பட்டு இருந்தது தெரியவந்தது. இப்பணியின் போது, கோவில் பணியாளர்கள் வாசு, ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன்பேட்டையில் உள்ளது அருந்ததியர் தெரு. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதியில் தவிடன் என்பவருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு தொகுப்பு வீடு, நேற்று காலை 8.20 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அந்த பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் வெடிகுண்டு வெடித்து விட்டது என்று நினைத்து அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
வெடி வெடித்ததில் தவிடனின் ஓட்டு வீடு தரைமட்டமானது. மேலும் அருகே உள்ள அருண், ரவி மனைவி வெண்ணிலா ஆகியோரது வீடும் சேதடைந்தது.
அதிர்ஷ்டவசமாக தவிடனின் வீட்டில் யாரும் இல்லாததால், உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்கள் நிகழவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், எல்லப்பன்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்(வயது 41) என்பவர் தவிடனின் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்தது.
மேலும், செந்தில் நாட்டுவெடி தயாரிப்பதற்கான வெடிமருந்தை(சல்பர்) வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்கென உரிய அனுமதி பெற்று அங்குள்ள ஏரிக்கு அருகே குடோன் ஒன்றையும் வைத்து இருக்கிறார். ஆனால், அனுமதிக்கான கால அவகாசம் முடிந்ததை அடுத்து அவர் அதை இன்னும் புதுப்பிக்கவில்லை.
இதற்கிடையே தான், தவிடன் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வெடி மருந்துகளை வைத்திருந்ததுடன், தானே நாட்டு வெடிகளை தயாரிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அங்கு வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து விபத்து நேர்ந்தது தெரியவந்தது.
இதனிடையே சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்தவர்களிடம் விபத்து நேர்ந்தது குறித்தும், யாருக்கேனும் பாதிப்புகள் நேர்ந்ததா என்றும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் தாசில்தார் சையத் அபுதாஹீர் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பார்த்த சாரதி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்திலின் சகோதரர் ராஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் மூலமாக தினசரி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் நம் மாவட்ட மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.
கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை வரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்காக மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தாய்மார்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால் மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளது. மீண்டும் அதிகரிக்காமல் இருக்க மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.5.5 கோடி மதிப்பில் 1493 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் மேல்தளத்துடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் இருப்பு வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இக்கட்டிடத்தில் பாதுகாப்பு அம்சங்களான தீயணைப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு காவலர் அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முதல், இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளும் அறை, எந்திரங்கள் இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றின் அமைவிடம் குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், கடலூர் தாசில்தார் பலராமன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் கோவிந்தசாமி (வயது 51). இவர் சேப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவர் வேப்பூர் சேப்பாக்கம் எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கோவிந்தசாமியை கைது செய்தனர். அவரிடம் 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் 4-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தெருக்கூத்து மேடை நாடக மிருதங்க கலைஞர். இவர் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனை தொடந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பண்ருட்டியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






