என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் திருமணம் ஆன 2 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (வயது 27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மணிமேகலைக்கும், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 30-ந்தேதி மணிமேகலை தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் உடை மாற்றி வருவதாக வீட்டில் உள்ள அறைக்கு சென்ற அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    மணிமேகலைக்கு திருமணமாகி 2 நாட்களே ஆவதால், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    செமஸ்டர் தேர்வு இன்று தொடங்குவதையொட்டி கடலூர் பெரியார் கல்லூரியில் விடைத்தாள் வாங்குவதற்காக மாணவர்கள் திரண்டனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இருப்பினும் 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடந்து முடிந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் 2-வது செமஸ்டர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2-வது செமஸ்டர் தேர்வை ஜூலை 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதன்படி கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் 2-வது செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள்களை வாங்கிச் செல்வதற்காக நேற்று காலை கல்லூரிக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு சென்று தங்கள் துறைகளை சேர்ந்த பேராசிரியர்களிடம் தேர்வுக்கான விடைத்தாள்களை வாங்கிச்சென்றனர். கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலுக்கு மத்தியில் ஒரே நேரத்தில் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மொத்தம் 5500 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இதில் இளங்கலை முதலாம் ஆண்டில் மட்டும் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் அவர்களுக்கு மட்டும் நாளை (அதாவது இன்று) முதல் 9-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படுகிறது. அதற்காக இன்று (அதாவது நேற்று) மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது.அதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தேர்வு நடைபெறும் போது, ஆன்லைனில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும். பின்னர் 9-ந் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்ததும், மாணவர்கள் அனைவரும் விடைத்தாள்களை கல்லூரிக்கு வந்து அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
    சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடைக்கு படையலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்தியாத்தோப்பு:

    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் குமாரக்குடி, காவாலக்குடி, கூடலையாத்தூர் பகுதியில் 5 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.

    இதில் சேத்தியாத்தோப்பு அருகே கூடலையாத்தூரில் உள்ள ரேஷன் கடையின் மூலம் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்த கடை முறையாக திறக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு மாதத்துக்கு 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் இந்த கடையை சார்ந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போது தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்குவதற்கு கூட 3 நாட்கள் மட்டும் கடை திறக்கப்பட்டது, அதன்பின்னர் திறக்கப்படவில்லை.

    இதனால் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து, கிராம மக்கள் நேற்று ரேஷன் கடை முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், ரேஷன் கடை முன்புள்ள இரும்பு கதவுக்கு மாலை அணிவித்து, வாழைப்பழங்கள் வைத்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் ஏற்றி படையலிட்டனர். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் கடை எப்படியாவது திறக்கப்பட்டு, தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வேண்டும் என்று வேண்டி கைகூப்பி வணங்கினர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
    விருத்தாசலம் :

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 84 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருந்தது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானர்கள். புதிதாக 122 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 122 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

    இவர்களில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கடலூர், விருத்தாசலம் வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நெய்வேலியை சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 பேருக்கும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 93 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 55 ஆயிரத்து 412 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 245 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர்.

    நெய்வேலியை சேர்ந்த 53 வயது ஆண், 84 வயது முதியவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 71 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 751 ஆக உயர்ந்தது.கொரோனா பாதித்த 1031 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 182 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் 90 கட்டுப்பாட்டுப் பகுதியாக குறைந்தது.

    பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியை வெட்டி ரூ.50 லட்சம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெற்கு மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 48).முந்திரி வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கலைசெல்வன்(37). இவர் முந்திரி வியாபாரம் செய்து தொழிலில் நஷ்டம் அடைந்தார்.

    நேற்று இரவு கலைசெல்வன்,வடிவேலை நேரில் சந்தித்தார். அப்போது கலைசெல்வன் தனக்கு கடனாக ரூ.3ஆயிரம் பணம் வேண்டும் எனகூறினார். உடனே வடிவேல் அவருக்கு பணம் கொடுத்தார்.

    அதன் பின்னர் கலைசெல்வன் தனது மோட்டார் சைக்கிள் வேலங்குப்பம் பகுதியில் நிற்பதாகவும். தன்னை அந்த பகுதிக்கு அழைத்து செல்லும்படி கூறினார். இதை நம்பிய வடிவேல் மோட்டார் சைக்கிளில் கலைசெல்வனை அந்த பகுதிக்கு அழைத்து சென்றார்.

    வேலங்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பு அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது கலைசெல்வன் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேலுவின் கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி கூறினார்.

    அதன் பின்னர் உடனடியாக ரூ.50 லட்சத்தை இந்த பகுதிக்கு எடுத்து வர சொல் என்று வடிவேலுவிடம், கலைசெல்வன் கூறினார். அதற்க்கு வடிவேல் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கலைசெல்வன் கத்தியால் வடிவேலுவின் கையில் வெட்டினார்.

    இதில் பயந்து போன வடிவேல் செல்போன் மூலம் அவரது உறவினர் வினோத்குமாரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு உடனடியாக வேலங்குப்பம் பகுதிக்கு வருமாறு கூறினார்.

    உடனே வினோத்குமார் ரூ.50 லட்சத்தை ஒரு பையில் எடுத்து கொண்டு அந்த பகுதிக்கு சென்றார். அந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள மினிலாரியில் வைத்து விட்டு சிறிது தூரம் தள்ளி நிற்குமாறு கலைசெல்வன் கூறினார். அதன்படி வினோத்குமார் ரூ.50 லட்சத்தை மினி லாரியில் வைத்து விட்டு சென்றார்.

    அதன் பின்னர் கலைசெல்வன் ரூ.50 லட்சம் பணத்துடன் மினிலாரியில் தப்பி சென்றுவிட்டார். கலைசெல்வன் கத்தியால் வெட்டியதில் காயம்அடைந்த வடிவேலை அவரது உறவினர் வினோத்குமார் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வடிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார்,தவசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    முந்திரி வியாபாரி வடிவேலை கத்தியால் வெட்டி ரூ. 50 லட்சம் பணத்தை பறித்து சென்ற கலைசெல்வனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் கலைசெல்வனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஒரு சிலர் முக கவசம் அணியாமலும் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்றுநோய் பாதிப்பு நாளடைவில் குறைந்து வருகிறது. நேற்று 127 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.

    மேலும் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காண முடிந்தது.

    இதுமட்டுமின்றி கடலூர் நகர் முழுவதும் இன்று காலை முதல் இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது. மேலும் கடலூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்களிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    இதனை தொடர்ந்து இறைச்சிக் கடை முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இறைச்சி வாங்கி சென்றனர். ஆனால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் ஒரு சிலர் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், அவருக்கு கருகலைப்புக்கான மாத்திரை கொடுத்து கருவிலேயே மகளின் குழந்தையை தாய் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சோழ நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 21). இவர் தாதன்குட்டை தெருவை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு சுப்புலட்சுமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் சுப்புலட்சுமி கர்ப்பமடைந்தார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது, தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 20-ந்தேதி மணிகண்டனை அவர் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் தனது கணவர் வீட்டில் சுப்புலட்சுமி இருந்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாதது பற்றி அறிந்த சுப்புலட்சுமியின் தாய் கஸ்தூரி அங்கு சென்று, சுப்புலட்சுமியை தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளார்.

    தாய் வீட்டிற்கு சென்ற சுப்புலட்சுமிக்கு சத்து மாத்திரை எனக்கூறி அவரது தாய் கஸ்தூரி மாத்திரை கொடுத்துள்ளார். தாய் மீது உள்ள நம்பிக்கையின் பேரில், அதை சுப்புலட்சுமியும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

    சிறிது நேரத்தில் அவர் வயிற்று வலியால் துடி துடித்துள்ளார். இதுபற்றி அறிந்த அவரது கணவர் மணிகண்டன் சுப்புலட்சுமியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த சுப்புலட்சுமிக்கு அதன் பின்னர் தான் தனது தாய் தந்தது கருகலைப்புக்கான மாத்திரை என்பது தெரியவந்தது. பெற்ற தாயே தனக்கு செய்த கொடூர செயலை எண்ணி அவர் கதறி அழுதார். இதுபற்றி அவர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஸ்தூரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 54,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 742 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 138 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் சென்னையில் இருந்து மங்களூர் வந்த ஒருவருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 107 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 60 வயது பெண் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மருங்கூரை சேர்ந்த 55 வயது பெண், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 80 வயது முதியவர், பண்ருட்டியை சேர்ந்த 66 வயது நபர் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 209 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 55 ஆயிரத்து 124 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
    மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி கஞ்சா விற்பனை செய்ததாக குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அய்யப்பன் என்கிற ராஜ், கடலூர் பிள்ளையார்தொட்டி ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் முகமது ஆகிய 3 பேரையும், லாட்டரி வியாபாரிகளான சிதம்பரம் சின்னதுரை, செல்வமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கருங்குழி பன்னீர்செல்வம், ஆபத்தாரணபுரம் வெங்கடேசன், வடலூர் காமராஜ் ஆகியோரையும், மணல் கடத்தியதாக புவனகிரி சிவானந்தம், அருண், ஹரிஹரன், குறிஞ்சிப்பாடி சுகுமார், குமாரக்குடி வெற்றிவேந்தன், ஜோதி ஆகியோரையும், சூதாடி யதாக 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இது தவிர குடிபோதையில் தகராறு செய்ததாக சாலியந்தோப்பு தண்டபாணி என்பவரையும், மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்து, 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 413 லிட்டர் சாராயத்தையும், மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 151 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 78 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 54 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 739 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 151 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் வந்த 2 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 பேருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 125 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் 71 வயது முதியவர், கடலூரை சேர்ந்த 65 வயது நபர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 742 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 230 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 54 ஆயிரத்து 915 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுதவிர மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 108-ல் இருந்து 94 ஆக குறைந்துள்ளது.

    திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களில் காணிக்கை செலுத்தி செல்வார்கள்.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் எளிமையான முறையில் தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் தலைமையிலும் கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர்கள் சுபத்ரா, நரசிம்மபெருமாள் ஆகியோர் முன்னிலையிலும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு உண்டியல் மட்டும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    அதில் 14 லட்சத்து 20 ஆயிரத்து 232 ரூபாயும், 306 கிராம் தங்கமும், 118 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மீதமுள்ள 4 உண்டியல்கள் விரைவில் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×