என் மலர்
செங்கல்பட்டு
- கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
- கடல் அரிப்பால் மீன் பிடித்து வரும் படகுகளை கரைக்கு இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள கடலோர கிராமங்களான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, எடையூர், சுலேரிக்காடு பகுதிகளில் உள்ளவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடல் அரிப்பை தடுக்க மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்களிடம் கேட்டபோது:-
இந்த கடல் அரிப்பால் மீன் பிடித்து வரும் படகுகளை கரைக்கு இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது., பாறைகளை கொட்டி தூண்டில் வளைவு அமைத்தால் மீன்பிடி படகுகளை கடலின் கரையோரம் பாதுகாப்பாக கட்டி நிறுத்தி வைக்க முடியும். மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எங்களால் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்ப முடியும் என்றனர்.
- விமானங்கள், நெருக்கமாக சீறிப் பாய்ந்து பறந்து பார்வையாளர்களை கவர்ந்தன.
- விமான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தாம்பரம்:
இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் பங்கேற்ற வான்வழிக் காட்சி நடத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தள அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சுகோய் 30 ரக போர் விமானம், சூ-30 ரக விமானம், போர் ஜெட் விமானம் உள்பட பல்வேறு வகையான விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் சீறி பாய்ந்து சென்று சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

முன்னதாக விமானப்படையின் மெக்கானிக்கல் பிரிவு பயிற்சியாளர்கள், வான்வீரர் பயிற்சிக் குழுவினர் பங்கேற்று தற்காப்பு கலை, உடல் பயிற்சி மற்றும் சைக்கிள் மீது சாகசம் போன்றவை செய்து காட்டினர். பத்து வகையான விமானங்கள் இடம் பெற்ற கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- பலத்த காயம் அடைந்த வாலிபரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
- மருத்துவமனையில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகேயுள்ள மேலகண்ட கிராமத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 37). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி இரவு சமையல் வேலைக்காக சென்றார். பின்னர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வரும் வழியில் விழுதமங்கலம் கூட்டுரோடு பகுதியில் இண்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. சாலையில் திரும்பும் வழியில் பள்ளம் இருந்ததால் நசீர் அதை கவனிக்கவில்லை. இதனால் மோட்டார் சைக்கிள் பள்ளத்துக்குள் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் இன்று மதுராந்தகம்-பவுஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை சமரசம் செய்தனர்.
வாலிபர் இறந்தது தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாமல்லபுரம் முதல் முகையூர் வரையான 31 கி.மீ., தூரத்திற்கு 675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- சாலையோரம் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளும், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையான கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை 1,270 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில், 1.5 கி.மீ.,க்கு அமைய உள்ள மேம்பால பணிகளின் தூண்கள் மற்றும் தரைப்பாலம் அமைக்க அதன் அஸ்திவார பணிகளை பருவமழை தொடங்கும் முன்னர் முடிப்பதற்காக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக மாமல்லபுரம் முதல் முகையூர் வரையான 31 கி.மீ., தூரத்திற்கு 675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது., இதையடுத்து அப்பகுதி சாலையோரம் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளும், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
- 2022-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2022 ஆகும்.
- தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுபெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருதுதொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் போன்ற தகுதிகள் உடையவர்கள் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய்- தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்விதகுதி, இனம் மற்றும் ஜாதி, தொழில், சமூகநீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூகசீர்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு கலை இலக்கியம் சமூகபணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2022-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2022 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் கையில் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 27), என்பது தெரிந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- ஒரு நாள் மழைக்கே பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
செங்கல்பட்டு:
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து காலை வரை கனமழை பெய்தது.
வேண்பாக்கம், நத்தம், திம்மாவரம், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு ரெயில் நிலைய வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
- மாணவி கிருத்திகா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
- கிருத்திகாவின் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள அவுரி மேடு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மகள் கிருத்திகா (வயது 11). இவர் மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி கிருத்திகா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெரு ஓரத்தில் நடப்பட்டு இருந்த தெரு விளக்கு மின்கம்பம் திடீரென முறிந்து சிறுமி மீது விழுந்தது.
இதில் கிருத்திகா மின் கம்பத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிருத்திகாவின் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் பழுதடைந்து இருந்த அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தபோது மின்சாரம் பாயாததால் மாணவி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழுதடைந்து நிற்கும் மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்றுமுன்தினம் ஆயுத பூஜை, நேற்று விஜய தசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.
தொடர் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த 30-ந்தேதி முதலே தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று மாலை முதலே சென்னை நோக்கி ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் திரும்ப தொடங்கினர். இதனால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல் இன்று காலை அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்ததால் 2-வது நாளாக பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அதிகாலையில் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றன. காலை 8 மணிவரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.
சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியிலும் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. போலீசார் வாகன நெரிசலை சரிசெய்து அனுப்பினர். அதிகாலையில் மழை பெய்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை முதல் பயணிகள் அதிக அளவில் அரசு பஸ் மூலம் சென்னை திரும்பி வந்தனர். இதன் காரணமாக அசோக் நகர், வடபழனி நூறடி சாலை சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலைய சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீரமைக்கும் பணியில் 5 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் 20க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக பெய்து வரும் மழையால் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் கார்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் பயணிகள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி புறப்பட்டு சென்றனர்.
- மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
- மழைநீர் ஒழுகும் இடத்தை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு செங்கல்பட்டு பகுதியில் பலத்த மழை தொடர்ந்து நீடித்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதற்கிடையே கனமழை காரணமாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் மழை நீர் புகுந்தது.
மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் அங்கிருந்த நோயாளிகள் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் நோயாளிகளின் அறைக்குள் மழைநீர் வருவது அதிகரித்தது.
இதை தொடர்ந்து அவசர சிகிச்சை, எலும்பு முறிவு நோயாளிகள் அங்கிருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். உடனடியாக அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
மழைநீர் ஒழுகும் இடத்தை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.
முக்கியமான மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் லேசான மழைக்கே மழைநீர் புகுந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மழை தீவிரம் அடைந்து தொடங்குவதற்குள் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
- கிருஷ்ணன் காரணை பகுதியை சேர்ந்த தேவி ஆடுகள் வளர்த்து வருகிறார்.
- ஆடு திருட முயன்ற அடையாறு பகுதியை சேர்ந்த அஸ்வின்குமாரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன் காரணை பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இங்கு மோட்டார் சைக்கிளில் வந்து ஆடு திருட முயன்ற அடையாறு பகுதியை சேர்ந்த அஸ்வின்குமார் (21) என்பவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
- மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- வாகன சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் பிடிபட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகளான செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்த அருள், மாமல்லபுரம் அடுத்த மணமையை சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, ரூ.13 ஆயிரம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.






