என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, லிங்கா நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் விமர்சனம்.
    ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே செய்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது.

    தனது மாமா அருள்தாஸின் வற்புறுத்தலின் பேரில் மலேசியாவில் வேலை பார்த்து அஞ்சலி விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். மிகவும் சத்தமாக பேசக்கூடிய இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி. 

    விஜய் சேதுபதியின் காதலை மறுக்கும் அஞ்சலி பின்னர், அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்த காதலை பிடிக்காத மாமா அருள்தாஸ், அஞ்சலியை கண்டிக்கிறார். இதனால் கோபமடையும் விஜய்சேதுபதி அருள்தாஸை வெளுத்து வாங்குகிறார். 



    இந்த கோபத்தின் வெளிப்பாடாக மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை அங்கிருக்கும் லிங்கா கும்பலிடம் பணத்திற்கு விற்று விடுகிறார். இதையறியும் விஜய்சேதுபதி மலேசியாவிற்கு சென்று அஞ்சலியை மீட்க நினைக்கிறார்.

    இறுதியில் லிங்கா கும்பலிடம் சிக்கி இருக்கும் அஞ்சலியை விஜய்சேதுபதி மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகர்களுக்கே உரிய கமர்சியல் கதையில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி என சரியான நடிகர்களை நுழைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் அருண்.



    விஜய் சேதுபதி குறும்பு, காதல், காமெடி, பஞ்ச் வசனம், அதிரடி சண்டைக்காட்சிகள் என பக்காவான கமர்சியல் படத்துக்கும் நன்றாக பொருந்துகிறார். அஞ்சலியிடம் காதல் பார்வை, எதிர்பாராத விதமாக தாலி கட்டுதல், சூர்யாவுடனான எமோ‌ஷனல், இவனை அடிச்சா தப்பில்லையா? சொல்லுங்க சார் என்று கேட்டு காத்திருந்து பதில் வந்ததும் அடிப்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி ராஜ்ஜியம் தான்.

    விஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவர் மகன் சூர்யாவோ எண்பது அடி பாய்கிறார். காமெடி, எமோ‌ஷனல், பயம், சண்டை என அவரும் கலக்கி இருக்கிறார். ஜார்ஜிடம் அவர் கதை சொல்ல தொடங்கும்போது ரசிகர்கள் கைதட்ட தொடங்குகின்றனர். 

    கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலிக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மாமனை அடிக்கும் விஜய் சேதுபதியிடம் பத்தாது இன்னும் அடி என சொல்லும் காட்சி, முத்தக் காட்சி, மலேசியாவில் கடத்தல் கும்பலிடம் சிக்கி சித்தரவதை செய்யும் காட்சி, கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட வாழலைன்னா என்று கெஞ்சும் காட்சி என தன் திறமையை காட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி பொருத்தமாக இருக்கிறது. 



    மிரட்டும் வில்லனாக லிங்கா. ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி முன்பு மட்டும் அடங்கி போவது செயற்கையாக இருக்கிறது. இவரது கெட்-அப் மிரள வைக்கிறது.

    படத்தின் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. தென்காசியாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி விஜய்யின் கேமரா அழகாக படம் பிடித்துள்ளது. கோணங்களாலும் வண்ணங்களாலும் நம்மை அசர வைத்துள்ளார். யுவனின் இசையில் படம் கமர்சியலாக மாறி இருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் இன்னும் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

    முதல் பாதியில் காதல், காமெடி, ஆக்‌‌ஷன் என்று நகரும் கதை அஞ்சலி சிக்கியதும் வேகம் குறைந்து போகிறது. கமர்சியல் படத்திலும் தோல் வியாபாரம் என்ற இதுவரை யாரும் தொடாத ஒரு வி‌ஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளால் படத்தின் நீளம் மட்டும் சற்று அதிகமாக தெரிகிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் அமைந்து இருக்கிறது.

    மொத்தத்தில் ‘சிந்துபாத்’ சுவாரஸ்யம் குறைவு.
    கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி, பசங்க கிஷோர், லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஹவுஸ் ஓனர் படத்தின் விமர்சனம்.
    2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக வசிக்கும் வயதானவர்கள். கிஷோருக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இந்நோய் தீவிரமாகி மனைவியையே யார் என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஸ்ரீ ரஞ்சனி தான் அவரை பார்த்துக்கொள்கிறார்.

    கிஷோர் சிறுவயதாக இருக்கும்போது லவ்லினை திருமணம் செய்துகொண்டது நினைவுகளாக வந்து போகிறது. பாலக்காட்டு பிராமண வீடுகளில் நடப்பது போல திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது இளவயதுக்கே உரிய குறுகுறுப்பு, காதல் என படம் விரிகிறது. இன்னொரு பக்கம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி வீட்டை வெள்ளம் சூழ்கிறது. வீடு முழுக்க வெள்ளம் வர இருவரும் சிக்கி தவிக்கிறார்கள். முடிவு என்ன ஆகிறது என்பதே படம்.

    பெரிய கதாநாயகனோ, கதாநாயகியோ தேவைப்படாத ஒரு அழகான எமோ‌ஷனல் கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்டதோடு கண்கலங்க வைத்து அனுப்புகிறார் லட்சுமி. 



    கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி இருவரும் தங்களது பக்குவமான நடிப்பால் படத்தை தாங்குகிறார். அல்சைமர் நோயாளியாக எல்லாவற்றையும் மறந்துவிடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் கிஷோர். அவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் மனைவியாக ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்பும் அசத்தல். இருவரும் நமது அடுத்த வீட்டு பெரியவர்கள் போல இயல்பாக வாழ்ந்து இருக்கிறார்கள். இளம் ஜோடிகளாக வரும் பசங்க கிஷோர், லவ்லின் இருவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள். 

    ஜிப்ரானின் இசை படத்தின் கதையோடு ஒட்டி உறவாடுகிறது. பின்னணியில் நமக்குள் பதற்றத்தை கடத்தி இருக்கிறது. கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு பாலக்காட்டு பிராமண வீடுகளையும் சென்னையில் வெள்ளத்தால் சூழப்படும் வீடுகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். பிரேமின் படத்தொகுப்பும் கச்சிதம்.



    லட்சுமி எளிய கதையை அருமையான படமாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க நம்மை பதற வைக்கிறார். படம் முழுக்க அன்பு தான். இந்த காரணங்களுக்காகவே சின்ன நெருடலாக இருக்கும் பாலக்காட்டு பிராமண மொழியை மன்னிக்கலாம்.

    ஒரு உண்மைக்கதையை கையில் எடுத்து அதில் ஏராளமான அன்பையும் கணவன் மனைவி அன்யோன்யத்தையும் அழகாக சொல்லி இறுதிக்காட்சியில் கலங்க வைத்த விதத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்பதை அழுத்தமாக பதித்து இருக்கிறார். 

    மொத்தத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ சிறந்த வீடு.
    பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது என்று நடிகர் விக்ராந்த், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
    எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    விக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது. இயக்குநர் ஜெகதீசன் அவர்களோடு மீண்டும் வேலை பண்ணவேண்டும். தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு வர வேண்டும் என்றார். இமான் சார் ரூபன் போன்றவர்கள் இந்தப்படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள். 



    முருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘கூர்கா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது  ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 



    இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.
    லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுசிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். 



    இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பபில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 
    விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார்.
    இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.

    விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது.

    இதனிடையே, அமலா பால் தயாரிப்பு நிறுவனத்திடம் நட்புரீதியாக இருக்கவில்லை என கூறி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.



    இந்நிலையில், விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த அமலாபால், அது  குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். 

    இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் எனக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பினார். 

    ஆடை படத்தின் டீசரை பார்த்தபிறகு தான் தன்னை படத்திலிருந்து நீக்கியிருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். விஜய் சேதுபதி மீது தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை, தற்போதும் நான் அவரது ரசிகை" என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்களை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 

    இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான "கனா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 



    இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 3-வது படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்க உள்ளார். 

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்திற்கு ”வாழ்” என பெயரிடப்பட்டுள்ளது. 
    அதிக திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா இன்று காலமானார்.
    அமராவதி:

    ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார்.

    அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்று,  கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். 



    இதனையடுத்து 2008ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா" விருதினைப் பெற்றுள்ளார். இவரும், தெலுங்கு நடிகையான சாவித்திரியும்  மட்டுமே புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர்.

    இவர்  ‘மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 73 வயதான விஜய நிர்மலா, உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

    மறைந்த இவருக்கு, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

     
    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், ஷாயாஜி ஷிண்டே, சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் முன்னோட்டம்.
    தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடைபெற்றது.

    இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர், சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - மது அம்பட், இசை - ஸ்ரீ காந்த்தேவா, நடனம் - சிவசங்கர், சண்டை பயிற்சி - சூப்பர்சுப்பராயன், எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.
    ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி இறங்கியுள்ளார்.
    ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்து வருகிறார்.

    ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த புதிய படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே குறும்படங்களை இயக்கியுள்ள ராணா, மிகவும் பிரபலமான அவரது ‘கெக்க பெக்க’ குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. 



    இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, அடுத்து 3வது ஹிட்டுக்காக மீண்டும் இணைந்திருக்கிறோம்’ என கூறியுள்ளார்.
    புதிய படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்து வரும் கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
    நடிகர் சிம்பு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கிடையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.



    சிம்பு வில்லனாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு அழகான கூலிங் கிளாசை கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்திருக்கிறார்.

    கன்னடத்தில் உருவான 'மப்டி' படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். 
    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் ஒரு தமிழ் படத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    இசையமைப்பாளர் இளையராஜா லவ் அண்ட் லவ் ஒன்லி என்ற ஆஸ்திரேலிய படத்துக்கு ஏற்கனவே இசையமைத்து உள்ளார். இந்நிலையில் ஒரு தமிழ் படத்துக்காக ஆங்கில பாடலுக்கு இசையமைத்து உள்ளார்.

    முன் பதிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கே.எம்.துரைபாண்டியன் இயக்குகிறார். டைரக்டர் கவுதமனின் மகன் தமிழ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கிராமத்துக்கு செல்லும் கதாநாயகன், கதாநாயகி அங்கு இருக்கும் சிறுவர்களுடன் இணைந்து பாடுவது போல் இந்த ஆங்கில பாடல் அமைக்கப்பட்டுள்ளது.



    இப்படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால் செய்கிறார். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
    ×