காமேனிக்கு குறி.. ஈரான் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி கொலை? - தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
- காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்து தாக்குதல்.
- ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
தெஹ்ரானில் ஈரான் உச்சந்தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. காமேனியின் நிலை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று வெவ்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசிர்சாதே ஈரான் புரட்சிகர ராணுவத்தின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
எனினும், இந்தச் செய்திகளை ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் ராணுவம் மறுத்துள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனது பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் மிக உயரிய ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல்கள் தொடர்கின்றன.
தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.