#TNAssemblyElection தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்- த.வெ.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பு
- வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
- கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது.
வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4 முனை போட்டிகள் கூட ஏற்படும். ஆனால் கடைசியில் இருமுனை போட்டியே பலமாக இருக்கும். அந்த வகையில் இறுதியில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் மல்லுகட்டும். கடைசியில் இரண்டில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
ஆனால் இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி விட்டு உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான்.
அது வெறும் ரசிகர்கள் கூட்டம் தான், தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்று முன்னணி கட்சிகளை உதட்டளவில் பேச வைத்தாலும் விஜய்க்கு திரளும் ரசிகர்கள் எண்ணிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மற்ற கட்சிகளை உள்ளூர யோசிக்க வைத்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்படி ஒரு கூட்டணி அமைந்திருந்தால் அதுவும் வலிமையான கூட்டணியாகவே இருந்து இருக்கும்.
இதை உணர்ந்த தி.மு.க.வும் காங்கிரசை வெளியேற விடாமல் 3 தொகுதிகளை கூடுதலாக கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இப்போதைய நிலையில் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட 26 கட்சிகள் இடம்பெற்று மெகா கூட்டணி தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன. வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே லட்சியம் என்று விஜய் கூறிவந்தாலும் அதற்கான வியூகத்தை அவர் பலமாக வகுக்கவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். காங்கிரசை இழுக்க த.வெ.க. முயற்சித்ததைபோல் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியில் த.வெ.க.வை இணைக்க நடத்தப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் முதல்வர் பதவியை விஜய் தரப்பில் விட்டுக்கொடுக்க முன்வராதது தான்.
ஆனால் இப்போது கள நிலவரம் மாறிவிட்டது. தி.மு.க. காங்கிரசை தக்க வைத்ததோடு தே.மு.தி.க.வையும் தங்கள் பக்கம் இழுத்து கூட்டணியை வலுப்படுத்தி வைத்துள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணியை எதிர்த்து தேர்தல் போட்டியில் வெற்றி பெற எதிரணியும் பலமாக இருக்க வேண்டும்.
எனவே, அ.தி.மு.க. அணியில் த.வெ.க.வும் இணைய வேண்டும் என்ற கருத்து அந்த கட்சி தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. ஏற்கனவே த.வெ.க.வுக்கு 24 முதல் 25 சதவீத வாக்குவங்கி இருப்பதாக அந்த கட்சி மதிப்பிட்டுள்ளது. அதே அளவுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்கு வங்கி உள்ளது. எனவே தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேற அ.தி.மு.க.வுடன் கை கோர்க்க வேண்டும் என்று த.வெ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதை விஜய் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே த.வெ.க.வை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க பல தரப்பிலும் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தக வல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், த.வெ.க.கட்சிக்குள்ளும் அந்த உணர்வை ஏற்படுத்தி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.