பிரதமர் தொடங்கி வைக்கும் திட்டங்களை முதலமைச்சர் வீடு வீடாக சென்று சொல்வாரா? தமிழிசை கேள்வி
- ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.
- மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது?
நெல்லை:
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று வீட்டுக்கு வீடு சென்று சொல்லுங்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரூ.4800 கோடி திட்ட பணிகளை பிரதமர் தமிழகத்திற்கு வழங்க உள்ளார்.
இதனை வீடு வீடாக சென்று தமிழக முதலமைச்சர் சொல்வாரா? ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் வாங்கிய சுமார் 14 லட்சம் மக்கள் இன்னும் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றும் விதமாக தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தையும் தொடங்கி மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.
தமிழகத்தில் சுகாதாரத்துறை மிக சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினம்தோறும் தெரிவித்து வருகிறார். அப்படி என்றால் ஒவ்வொரு மருத்துவமனையும் சிறப்பாக இருப்பதாக தான் அர்த்தம். ஆனால் தமிழக முதலமைச்சர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருந்தால் ஏன் அவர் நேரடியாக அங்கே சென்று சிகிச்சை பெற்று இருக்கலாமே?. மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது? பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் இருப்பதும், பிறந்த குழந்தைகளை கூட தரையில் படுக்க வைப்பதும் என்ற நிலையில் தான் தமிழகத்தில் சுகாதாரத்துறை நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பெண்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. தற்போது காவல்துறை டி.எஸ்.பி.க்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.