தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வாய்ப்பு வந்தால் நல்லது- பிரேமலதா
- தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன்.
- பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு கோவையில் இருந்து, சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட்டை முழுமையாக படித்து விட்டு, பதில் சொல்கிறேன். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் எல்லா அறிவிப்புகளையும், அமல்படுத்த முடியுமா? தேர்தல் முடிந்து புதிய அரசு அமைத்த பின் அமல்படுத்த முடியுமா? என்ற கேள்விகள் உள்ளன. தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கின்ற, ஒரு பட்ஜெட்டை செயல்படுத்தும், அரசாக இருக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.
வருகின்ற ஆட்சி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் எஜமானார்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், பார்க்கலாம். உண்மையிலேயே அதுபோன்ற ஒரு சூழல் வருகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஈசா மையத்தில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் முதல் வரிசையில் இருந்தோம். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, புதுச்சேரி மந்திரிகள் எல்லோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினேன்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அதனால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் வரவேற்போம். பிரதமர் வருவது தவறு இல்லை. அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.