வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்
- வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
- அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி அணைக்கட்டு தாலுகா அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் நேற்று த.வெ.க. நிர்வாகிகளிடம் வழங்கினார்.
அதனை பூர்த்தி செய்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கும்படி கூறினார்.
இந்த கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார்.
அவரை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், பாதிப்பும் இன்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.